Monday, September 10, 2012

அனுபவம் பேசுகிறது!: ஒரு பெரும் 'பொருளாதாரப் புயலை' நோக்கி உலகம்!!


Experts Warn Perfect Storm Global Economy


உலகப் பொருளாதாரம் ஒரு மாபெரும் புயலை சந்திக்கவுள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இத்தாலியின் கோமோ ஏரியின் அருகே உள்ள செர்னோபியோ நகரில் ஆண்டுதோறும் உலகப் பொருளாதார நிபுணர்கள் கூடி விவாதிப்பது வழக்கம். Ambrosetti Forum என்று அழைக்கப்படும் இந்த மாநாட்டில் உலகத் தலைவர்களும், சர்வதேச நிதி விவகாரங்களில் முக்கிய பங்கு வகிக்கும் நிபுணர்கள் கலந்து கொள்வர். இந்த ஆண்டுக்கான கூட்டம் நேற்று தொடங்கியது.
இதில் பேசிய பெரும்பாலான சர்வதேச நிபுணர்களும், உலகம் ஒரு மாபெரும் பொருளாதாரப் புயலை சந்திக்கப் போவதாக எச்சரித்துள்ளனர்.
ஐரோப்பாவில் நிலவும் பொருளாதார தேக்கம் தொடரப் போகிறது, அமெரிக்க பொருளாதாரத்தை அந் நாட்டு அரசியல் போட்டி கீழே தள்ளிவிடப் போகிறது, இந்தியா, சீனா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட வளரும் நாடுகளின் பொருளாதார வளர்ச்சி விகிதம் குறைய ஆரம்பித்துவிட்டது, இத்தோடு ஈரானின் அணு ஆயுத விவகாரத்தால் நிலவும் ஆபத்தான சூழல்.. இவை அனைத்தும் சேர்ந்து உலகை ஒரு புரட்டு புரட்டி போடப் போகின்றன என்றனர் இந்த மாநாட்டில் பேசிய பல நிபுணர்களும்.
இப்போது நிலவும் அசாதாரணமாக சூழ்நிலையில் தனியார் நிறுவனங்களும் முதலீட்டாளர்களும் தங்களது பணத்தை முதலீடு செய்வதை நிறுத்த ஆரம்பித்துள்ளனர். அத்தோடு நுகர்வோரும் வீண் செலவுகளை கட்டுப்படுத்த ஆரம்பித்துவிட்ட நிலையில், பல்வேறு நாடுகளும் தேக்க நிலைக்குள் போய்விட்டன.
அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் அதிகரித்து வரும் கடன் சுமையும் அந் நாடுகளின் அரசியல் நிலவரமும் உலகை வாட்டும் முக்கியமான கவலைக்குரிய விஷயங்கள் என்று கூறும் நிபுணர்கள், இதனால் யூரோ கரன்சியின் மதிப்பு அதிவேகமாக சரிந்து வருவதையும் சுட்டிக் காட்டினர்.
இந் நிலையில் உலகின் பணக்கார நாடுகளின் கூட்டமைப்பு (இதில் பல 'முன்னாள்' பணக்கார நாடுகள்... இப்போது கையேந்திகள்) என்று அழைக்கப்படும் OECD (Organisation for Economic Co-operation and Development) அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சர்வதேச பொருளாதார வளர்ச்சி சரிய ஆரம்பித்துவிட்டது. அடுத்த சில காலத்துக்கு உலகின் டாப் 7 பணக்கார நாடுகளின் வளர்ச்சி விகிதம் வெறும் 0.3 சதவீதமாகத் தான் இருக்கும் (கிட்டத்தட்ட பூஜ்யம்!). இதனால் சர்வதேச அளவில் முதலீடுகளும் வர்த்தகமும் ஸ்தம்பிக்கும். இதன் எதிரொலியாக வேலைவாய்ப்புகளும் குறையும் என்று கூறப்பட்டுள்ளது.
சரி, ஐரோப்பிய பொருளாதார சிக்கலை தீர்க்க என்ன தான் வழி என்ற கேள்விகளும் எழுப்பப்பட்டு விவாதிக்கப்பட்டன. அப்போது, பலரும் கிரீஸ் நாட்டின் தவறான கொள்கைகளை தாக்கினர். ஜெர்மனி போன்ற பலமான நாடுகள் கிரீஸ் போன்ற நாடுகள் மீது கொஞ்சம் கூட இரக்கம் காட்டாமல் மூர்க்கத்தனமாக நடந்து கொள்வதாக குற்றச்சாட்டுகளும் அடுக்கப்பட்டன.
இந்த விஷயத்தில் துருக்கி நாட்டின் துணைப் பிரதமரான அலி பபிகான் ஒரு தீர்வைக் கூறினார். அது சாத்தியம் அல்லாத ஒன்று என்றாலும் கூட அவர் சொன்ன தீர்வுக்கு பலத்த வரவேற்பு இருந்தது.
யூரோ என்ற ஒரே கரன்சிக்குள் வந்துவிட்ட ஐரோப்பிய நாடுகள், தாங்கள் ஒரு கரன்சியின் மதிப்பை காக்க வேண்டியவர்கள் என்பதை மறந்துவிட்டு, சுயநலத்தோடு நடந்து கொள்கின்றன. இதனால், எல்லா யூரோ நாடுகளுக்கும் என பொதுவாக ஒரு நிதியமைச்சர் இருக்க வேண்டும். யூரோ ஒன்றியத்தில் உள்ள எந்த நாடும் பொருளாதார தவறுகள் செய்யாமல் அவர் தடுக்க வேண்டும் என்றார்.
இதற்கு கைத் தட்டல்கள் எழுந்தாலும், கிரீஸ் நாட்டுக்கு இணையாக பெரும் கடனில் மூழ்கியுள்ள ஸ்பெயின் நாட்டின் பிரதமரிடம் இருந்து இந்தக் கருத்துக்கு கடும் எதிர்ப்பு உடனடியாகக் கிளம்பியது.
நீங்கள் சொல்வதைப் பார்த்தால், ''United States of Europe'' என்ற ஒரு கூட்டமைப்பு நாடு தான் உருவாக வேண்டும். இது அமெரிக்கா அல்ல. ஐரோப்பாவில் ஒவ்வொரு நாட்டுக்கும் தனி வரலாறும், தனி கலாச்சாரமும் உண்டு என்று அலி பபிகான் மீது பாய்ந்தார்.
ஐரோப்பாவாவது பரவாயில்லை, அங்கு அடுத்து என்ன நடக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். (அதாவது இப்போதைக்கு அங்கு எந்த மாயாஜாலமும் நடக்கப் போவதில்லை. தேக்க நிலை தொடரத் தான் போகிறது.) ஆனால், அமெரிக்கப் பொருளாதாரம் தான் உண்மையிலேயே உலகை அச்சுறுத்துகிறது என்றார் பபிகான்.
அங்கு அதிபர் தேர்தலையொட்டி நடந்து வரும் அரசியல் போட்டியில் பொருளாதாரம் மாட்டிக் கொண்டுள்ளது. இந்த ஆண்டு அந் நாட்டு பட்ஜெட் குறித்து யாருக்கும் விவரம் தெரியாது.. அடுத்த ஆண்டு யார் பதவிக்கு வரப் போகிறார்கள்.. என்ன செய்யப் போகிறார்கள் என்பதும் தெரியாது.. ஒரு மலை உச்சியில் பெரும் பள்ளத்தாக்கை நோக்கி நகர்வதைப் போல இருக்கிறது அமெரிக்காவின் நிலைமை என்றார்.
அடுத்துப் பேசிய தீன பொருளாதார வல்லுனரான லி செங் முதல்முறையாக தனது நாட்டின் நிலைமை மோசமாக உள்ளதை வெளிப்படையாக ஒப்புக் கொண்டார். சீனா 7 சதவீத பொருளாதார வளர்ச்சி அடைந்து வருகிறது என்று நீங்கள் எல்லாம் (அமெரிக்கா-ஐரோப்பா) வேண்டுமானால் கொண்டாடலாம். ஆனால், 11 சதவீத வளர்ச்சியில் இருந்து 7 சதவீதத்துக்கு சரிந்துள்ளது சீனா. இது எங்கள் மக்களுக்கும் நாட்டுக்கும் நல்லதல்ல. பொருளாதாரம் மீழ்ச்சி அடையாவிட்டால் எங்கள் நாட்டில் கோடிக்கணக்கான வேலைவாய்ப்புகள் காணாமல் போகும். வேலைவாய்ப்புகள் இல்லாவிட்டால் என்ன நடக்கும் என்பது உங்களுக்கே தெரியும். ஒரு கம்யூனிச நாட்டில் வேலைவாய்ப்புகள் இல்லாவிட்டால் ரத்தப் புரட்சி தான் ஏற்படும் என்று மிரட்டினார் செங்.
இப்போதுள்ள பொருளாதார நிலைமையில் இந்த உலகம் மேலும் ஒரு பெரிய பிரச்சனையை சந்திக்கும் நிலையில் இல்லை. ஆனால், அதையும் மீறி ஈரான் மீது அமெரிக்காவோ அல்லது இஸ்ரேலோ தாக்குதல் தொடுத்தால், உலகளவில் கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத அளவுக்கு உயரும். இது உலக நாடுகளின் பொருளாதாரத்துக்கு மரண அடியாக இருக்கும் என்றனர் சில நிபுணர்கள்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசினார் 89 வயதான இஸ்ரேல் அதிபர் ஷிமோன் பெரஸ். அவர் கூறுகையில், இங்கே அமர்ந்திருக்கும் பெரும்பாலானோருக்கு முடி நரைத்துவிட்டது. நாம் நமது வாழ்நாளில் எத்தனையோ பொருளாதார பிரச்சனைகளை சந்தித்துவிட்டோம். ஆனால், இப்போது உலகம் சந்திப்பது புது மாதிரியான பொருளாதார சிக்கல். இதைச் சந்திக்கும் அளவுக்கு நாம் நம்மை தயார்படுத்திக் கொள்ளத் தவறிவிட்டாம். இது பொன்ற நெருக்கடியை சமாளிக்க நம்மிடம் ஒரு ஆழமான மாற்றம் தேவை. வயதைத் தாண்டிவிட்ட நாம் மாறுவது சாத்தியமில்லை.
இதனால் இந்த விவகாரங்களை இளைய தலைமுறையிடம் ஒப்படைத்துவிட்டு நாம் ஒதுங்குவதே நல்லது.
அவர்களுக்கு நம்மைவிட உலக பார்வையும், கல்வியும், அறிவும் அதிகம் என்றார்.
அனுபவம் பேசுகிறது!

No comments:

Post a Comment