Friday, November 2, 2012

குழந்தைக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கணுமா ?


குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கிறதுக்குள்ள போதும் போதும்ன்னு ஆயிடுது. வெகு சகஜமாக அம்மாக்கள் சலித்துக் கொள்வது இது. குழந்தைகளுக்கு எதையாவது கற்றுக் கொடுப்பது ஒரு மாபெரும் கலை. சில அம்மாக்கள் அதில் வெகு கெட்டிக்காரர்கள். பல அம்மாக்களுக்கு அந்த சூட்சுமம் பிடிபடுவதில்லை.  குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுப்பதைப் போல சுவாரஸ்யம் வேறு எதிலும் இல்லை. “அம்மா..” என குழந்தை மழலை வாயால் அழைக்கும் போது சிலிர்க்காத அம்மாக்கள் இருக்கவே முடியாது. 
சில பிள்ளைகள் வெகு சீக்கிரம் பேசி விடுவார்கள். சிலர் ரொம்ப லேட்டா தான் பேசவே ஆரம்பிப்பார்கள். தாத்தா பாட்டி இருக்கும் வீடுகளில் பிள்ளைகள் சீக்கிரம் பேசுவார்கள். காரணம் பாட்டிகள் குழந்தைகளுக்கு எதையாச்சும் சொல்லித் தந்து கொண்டே இருப்பது தான். குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கும் கலையைப் பற்றி அமெரிக்காவின் என்.ஐ.எஃப்.எல் (National Institute for Literacy ) சுவாரஸ்யமான பல விஷயங்களை விளக்குகிறது.
ஒரு இடத்தில் உட்கார்ந்து படிப்பதெல்லாம் குழந்தைகள் விஷயத்தில் ஒத்து வராது. அவர்களுக்குக் கற்றுக் கொடுக்க நாமும் குழந்தைகளாக மாற வேண்டும். தாத்தா. பாட்டி, மாமா என உறவுகளில் ஆரம்பித்து, பார்க்கின்ற பொருட்களின் பெயர்களையெல்லாம் முதலில் சொல்லிக் கொடுக்க வேண்டும். குழந்தையின் கண்ணுக்குத் தட்டுப் படும் பொருட்கள் பற்றியெல்லாம் சொல்வது தான் கல்வியின் முதல் நிலை.
சில குழந்தைகள் தெளிவாகப் பேசுவார்கள். சிலருக்கு வார்த்தைகள் தெளிவாய் வராது. சிலருக்குத் தொடர்ச்சியாய் பேச வராது. எந்தக் குழந்தைக்கு என்ன தேவை என்பதை அறிந்து கொள்வது பெற்றோரின் சாமர்த்தியம். அதற்குத் தக்கபடி குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்க எக்கச் சக்கப் பொருட்கள் எல்லார் வீட்டிலும் உண்டு. டிவி முதல் மிதியடி வரை எல்லாம் சொல்லிக் கொடுங்க. அவர்களுக்கு நிறைய விஷயங்கள் மனதில் தங்கி விடும்..
வார்த்தைகள் பழக்கியாச்சா ? இப்போது குழந்தைகளே வீட்டுக்குள் உள்ள பொருட்களின் பெயரை சொல்லிச் சொல்லி சந்தோசப்படும். இப்போது அவர்களுக்கு கதைகள் சொல்லிக் கொடுங்கள். கதை பேசுவது கற்காலக் கலை. பலர் இதில் நடிகையர் திலகங்கள் தான். ஏற்ற இறக்கமாய், ஆக் ஷனுடன், தாள லயத்துடன் கதை சொல்வார்கள். கணவர்களே குழந்தைகளாய் மாறி ரசிப்பார்கள். குழந்தைகளுக்கோ சுவாரஸ்யம் தாங்காது. திரும்பத் திரும்ப கதைகளைக் கேட்பார்கள். குழந்தைக் கல்வியின் மிக முக்கியமான சங்கதி குழந்தைகளிடம் ஆர்வத்தைத் தூண்டுவது தான் !
கதையை சொல்லிக் கொடுத்தாச்சா. இப்போ அவர்களிடம் கதைகளைத் திரும்பச் சொல்லச் சொல்லுங்கள். அவர்கள் அப்படியே உங்களை இமிடேட் பண்ணுவார்கள். ரசியுங்கள். தடுமாறும் இடத்தில் சொல்லிக் கொடுங்கள். கதை சொல்லி முடித்து விட்டு எதையோ சாதித்ததாய் குழந்தைகள் கர்வத்துடன் பார்ப்பார்கள். அவர்களைப் பாராட்ட மறந்து விடாதீர்கள், அது ரொம்ப முக்கியம்.
குழந்தைகளை அடிக்கடி வெளியே அழைத்துச் செல்லுங்கள். அப்படிப் போகும்போது அவர்களுடைய மூளைக்கு சுவாரஸ்யமான வேலை கொடுங்கள். அதாவது தோட்டத்துக்குப் போகிறீர்கள் என்றால், இங்கே என்னென்ன பச்சை கலர் பொருட்கள் இருக்கிறது ? சதுர வடிவில் என்னென்ன இருக்கின்றன ? இப்படி கொஞ்சம் கேள்விகளைக் கேளுங்கள். இங்கே என்னென்ன பொருட்கள் “A” எனும் எழுத்தில் ஆரம்பிக்கின்றன என ஒரு புதிர் போடுங்கள். அவர்களுக்குத் தெரியவில்லையெனில் நீங்கள் துவங்கி வையுங்கள். எறும்பு என்றால் Ant – A யில் தான் ஆரம்பிக்கும் என எறும்பு தேடுங்கள்.  
குழந்தைகள் பள்ளிக்கூடம் போக ஆரம்பித்து விட்டார்களா ? இப்போது அடுத்த நிலைக்குத் தாவி விடுங்கள். பள்ளியில் என்னென்ன நடந்தது என கேளுங்கள். அவர்கள் உற்சாகமாய் கதை பேசுவார்கள். நீங்களும் அதே உற்சாகத்தில் கேளுங்கள். இங்கே நீங்கள் வாக்கியங்களைக் கவனியுங்கள். குழந்தைகளுக்கு “இது தப்பு” என்று சொல்வதை விட சரியானதை நீங்கள் பேசிக் காட்ட வேண்டும். அது தான் சரியான வழிமுறை என்கிறார் ஷானன் எம் கேனன் (Shannon M. Cannon) எனும் எழுத்தாளர்.
பள்ளிக்குப் போக ஆரம்பிச்சாச்சு. இனிமேல் வீட்டுப் பாடம் தான் தலையாய கடமை என முடிவு கட்டி விடாதீர்கள். குழந்தைகள் வந்ததும் வராததுமாக வீட்டுப் பாடம் கொடுத்து மிரட்டாதீர்கள். அவர்களுக்கு அது வெறுப்பைத் தந்து விடக் கூடும். இன்னும் சொல்லப் போனால், நீங்கள்கூப்பிடும்போதெல்லாம் குழந்தை வந்து படிக்க வேண்டும் என நினைக்கவே கூடாது. குழந்தைகளுக்குப் படிக்க வேண்டும் என தோன்றும் போதெல்லாம் நீங்கள் தயாராய் இருக்க வேண்டும். அதனால் தான் கல்வியை அவர்கள் விரும்பும் வகையில் நீங்கள் தரவேண்டிய அவசியம் வருகிறது.
சில குழந்தைகள் சாப்பிடாமல் அடம் பிடிக்கும். உடனே அம்மா ஓடிப்போய் ஒரு புது பிளேட் எடுத்து வருவார். அதில் மிக்கியின் படம் போடப்பட்டிருக்கும். இதோ பாரு மிக்கி பிளேட், சாப்பிடலாமா என அழைத்தால் குழந்தை ஓடி வரும். அடுத்த நாள் “மம்மி மிக்கி பிளேட்ல சாப்பாடு கொடு” என குழந்தையே கேட்கும். கல்வியும் அப்படித் தான். அவர்களுக்குப் பிடித்த வகையில் சொல்லிக் கொடுத்தால் விரும்பிக் கற்பார்கள். 
இரண்டும் இரண்டும் நான்கு என்று சொல்லிக் கொடுப்பது ஒரு வகை. தோட்டத்தில் போய் நான்கு கற்கள் எடுத்து வா என்பது இன்னொரு வகை. முடிவு ஒன்று தான் வழிகள் தான் வேறு வேறு. பெற்றோர் கற்றுக் கொள்ள வேண்டியது குழந்தைகளின் ரசனையை !. டிவிடி பிளேயரில் சினிமா பாடல்களைக் கட் பண்ணிவிட்டு. ரைம்ஸ் போடுங்கள். ஆடியோ நூல்கள் வாங்கிப் போடுங்கள்.  புத்தகத்தைக் கொடுத்து படம் வரையச் சொல்லுங்கள். இவையெல்லாம் சில எளிய வழிகள் என்கிறார் கேரி டிரன்பெல் (Gary Direnfeld) எனும் குழந்தைகள் நல நிபுணர்.
ஒருவேளை குழந்தை ஏதாவது கிறுக்கிக் கொண்டு உங்களிடம் வரும். உங்களுக்குத் தலையும் புரியாது வாலும் புரியாது. “என்னடா வரஞ்சிருக்கே.. ஒண்ணுமே புரியலையே..” என்று சொன்னால் எல்லாமே அவுட். “அழகா இருக்கே. என்ன வரைஞ்சிருக்கே சொல்லு” என ஆரம்பிக்க வேண்டும். குழந்தை தனது படைப்பை விவரிப்பதன் வழியாகப் படத்தைப் புரிந்து கொள்ளவேண்டும் ! 
குழந்தைகளுக்கு ஈகோ உண்டு. அவர்களுடைய முயற்சிகளை கிண்டலடிக்கவே செய்யாதீர்கள். கிண்டல், கேலி, விமர்சனம் எல்லாம் குழந்தைகளுடைய சிந்தனையை மழுங்கடிக்கும். உதாரணமா, ஒரு படத்தில் எப்படி கலர் அடிக்க வேண்டும் என்பதைச் சொல்வது தான் உங்கள் வேலை. அப்புறம் தன்க்கு விருப்பமான கலரை அடிப்பது குழந்தையோட சாய்ஸ். அதுல போய் “மூக்குக்கு நீலக் கலர் அடிக்கிறியே சேச்சே… “ என்று நக்கலடிக்காதீர்கள். மம்மி… ஒரு எட்டுத் தலை பூனை வந்து, சைக்கிளைக் கடிச்சுக் கடிச்சு தின்னுச்சு” என குழந்தை கதை சொன்னால் ரசித்துக் கேளுங்கள். லாஜிக் எல்லாம் பார்க்காதீங்க.
இசையை ரசிக்காத குழந்தைகளே இருக்காது. அவர்களுக்கு நல்ல பாட்டுகள் மூலம் கல்வியைச் சொல்லிக் கொடுங்கள். ஒரு பாட்டு சொல்லிக் குடுங்க. அப்புறம் அந்த பாட்டிலுள்ள வார்த்தைகளையெல்லாம் மாற்றி வேறு வார்த்தைகள் போட்டு பாடுங்க. குழந்தைகளையும் அந்த உற்சாகம் தொற்றிக் கொள்ளும். அவர்கள் தங்களுக்குப் பிடித்த வார்த்தைகளைப் போட்டுப் பாட ஆரம்பிப்பார்கள்.
குழந்தைகளுக்கு வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டியது ரொம்பவே அவசியம். அது கொஞ்சம் கஷ்டமான வேலை. காரணம் ஹால்ல சம்மணம் போட்டு அமர்ந்திருக்கும் டி.வி. ! அதனால வாசிப்பதற்கு குழந்தைகளுக்கு தனியா, அமைதியா, காற்றோட்டமா ஒரு அறை இருப்பது ரொம்பவே அவசியம்.
குழந்தைகள் வாசிக்கும் போது சிறு சிறு பகுதிகளாக வாசிக்கச் சொல்லுங்கள் அவர்கள் சுவாரஸ்யமாக வாசிப்பார்கள். ஏனோ தானோன்னு இருக்காம ரொம்பக் கவனமாய் கேளுங்கள். அவர்கள் தடுமாறும் இடங்களை திரும்பத் திரும்ப வாசிக்கச் சொல்லுங்கள். அதிகமாக வாசிக்கும் போது அவர்களுடைய உச்சரிப்பும் அழகாகும். பொருளும் தெளிவாகும். வாசித்த கதையிலிருந்து ஏதாச்சும் கேள்விகள் கேளுங்கள். கதையை மீண்டும் சொல்லச் சொல்லுங்கள். கதையின் வரிசை, கதாபாத்திரங்களின் வரிசையைச் சொல்லச் சொல்லுங்கள். இவையெல்லாம் குழந்தைகளின் அறிவை ஷார்ப்பாக்கும்.
இன்னொரு முக்கியமான விஷயம், கதை சொல்லும் போதே கதாபாத்திரங்கள் வழியாக குழந்தைகளுக்கு மனித மதிப்பீடுகளையும் சொல்லிக் கொடுப்பது. “அந்த குருவி தன்னோட குஞ்சுக்கு தீனி கொடுத்துச்சு. ஏன்னா குஞ்சுங்க மேல அம்மாக்கு ரொம்ப அன்பு. அன்புன்னா என்னான்னு தெரியுமா ?” என அன்பைப் பற்றிச் சொல்ல ஆரம்பியுங்கள். கல்வி வார்த்தைகளைப் படிப்பதல்ல, வாழ்க்கையைப் படிப்பது தான் என்கிறார் கரோலின் வார்னிமுன்டே (Carolyn Warnemuende )எனும் குழந்தைகள் நல நிபுணர்.
குழந்தைகளுக்குப் பரிசு கொடுக்கறேன் பேர்வழின்னு குர்குரே, சிப்ஸ், சாக்லேட் என அடுக்கித் தள்ளாதீங்க. ரொம்பத் தப்பு. அதற்குப் பதிலாக குழந்தைகளுக்கு புத்தகங்கள் பரிசாகக் கொடுங்கள். டிராயிங், கலரிங், ஸ்டோரி என எதுவானாலும் பரவாயில்லை. குழந்தைகளின் கல்வி ஆர்வம் அதிகமாகும். குழந்தைகளின் விருப்பம் வீடியோ கேம்ஸ் என்று வைத்துக் கொள்ளுங்களேன். அவர்கள் காமிக் புத்தகத்தை விரும்பிப் படிப்பார்கள். ஸ்போர்ட்ஸ் ஆர்வம் அதிகமாய் இருந்தால் ஸ்போர்ட்ஸ் புத்தகங்களை வாங்கிக் கொடுங்கள். அனிமல்ஸ் பிடிக்குமெனில் அப்படிப்பட்ட புத்தகங்களை வாங்கிக் கொடுங்கள். 
வீக் எண்ட் வந்தாச்சுன்னாலே தியேட்டருக்கு ஓடாதீங்க. அப்பப்போ லைப்ரரிக்குப் போங்க. பிள்ளைங்க லைப்ரரியில் நேரம் செலவிடட்டும். குழந்தைகளுக்கு வெரைட்டியாய் புத்தகங்களும் கிடைக்கும். அப்பார்ட்மெண்ட் வாசிகளென்றால் ரொம்ப வசதி. பக்கத்திலுள்ள பிள்ளைகள் எல்லாம் சேர்ந்து ஒரு புக் கிளப் ஆரம்பிக்கலாம். பெற்றோர்கள் அதற்கு வகை செய்தால், நட்பும் அறிவும் விரிவடையும். 
குழந்தைகளை மார்க் வாங்கும் மிஷினான பார்க்கவே பார்க்காதீர்கள். அது கல்வியின் மீது குழந்தைக்கு வெறுப்போ பயமோ வரக் காரணமாகி விடும். “குழந்தைகளை கட்டாயப்படுத்தி எதையும் கற்க வைக்காதீர்கள். அவர்கள் போக்கில் அவர்களைக் கற்க நீங்கள் வழிகாட்டுங்கள். அது தான் அவர்களுக்குள்ளே உள்ள அறிஞரை வெளிக்கொணரும்”. இதைச் சொன்னவர் வேறு யாருமல்ல, உலகையே வசப்படுத்திய பிளாட்டோ தான்.
கடைசியாய் ஒன்றே ஒன்று. கல்வி என்பது ஒரு சீசன் கிடையாது. அது எப்போதும் தொடரும் சமாச்சாரம். அதனால் முதலில் காட்டும் உற்சாகம் கடைசி வரை இருக்கட்டும்.
*

   நன்றி:  சேவியர் 

Point of Sale –( POS )


“சார், லைஃப் டைம் ஃபிரீ கிரெடிட் கார்ட் சார்.. வாங்கிக்கிறீங்களா ?” என வசீகரிக்கும் குரலில் உங்களுக்கு பல முறை அழைப்புகள் வந்திருக்கலாம் ! காரணம் கார்ட்களுக்கு இருக்கக் கூடிய மார்க்கெட் மற்றும் தேவை. காய்கறி வாங்குவதற்குக் கூட கிரடிட் கார்ட் எடுத்துக் கொண்டு போவது நகர்ப்புறங்களில் இன்றைக்கு சர்வ சாதாரணம். கிரடிட் கார்ட் வேண்டாம் என நினைப்பவர்களிடமும் இருக்கவே இருக்கும் ஒரு டெபிட் கார்ட்.
மிச்சம் வைக்காமல் மாதா மாதம் பணம் கட்டுபவர்களுக்கு கிரடிட் கார்ட் ரொம்பவே வசதி. மாதா மாதம் ஒழுங்காகக் கட்டாமல் மிச்சம் மீதியை அடுத்த மாதத்துக்குத் தள்ளி வைப்பவர்களுக்கு அதுவே வட்டி மேல் வட்டி வந்து இரத்தம் உறிஞ்சும் அட்டையாக மாறிவிடும் அபாயமும் உண்டு என்பதை சொல்லத் தேவையில்லை.
கடைக்குச் சென்று பொருட்களை வாங்குவீர்கள். பிறகு பணம் செலுத்துவதற்காக உங்களுடைய அட்டையைக் கடையில் கொடுப்பீர்கள் இல்லையா ? அதை ஒரு சின்ன கருவியில் அதைத் தேய்ப்பார்கள். உங்களிடம் இருப்பது “ஸ்மார்ட் கார்ட்” எனில் அந்தக் கருவியில் சொருகுவார்கள். பார்த்திருப்பீர்கள். அந்தக் கருவியின் பெயர் தான் பாயின்ட் ஆஃப் சேல் ( Point of Sale – POS ). பி.ஓ.எஸ் என அதைச் சுருக்கமாக அழைப்பார்கள். ஹார்ட்வேர் மற்றும் சாஃப்ட் வேர் இரண்டும் இணைந்து ஒரு விற்பனை பரிமாற்றம் நடத்துவது தான் இது ! அதைப் பற்றிக் கொஞ்சம் தெரிந்து கொள்ளலாமா ?
1973ல் ஐ.பி.எம் (IBM) நிறுவனம் அறிமுகப்படுத்திய ஐபிஎம் 3650 மற்றும் ஐபிஎம் 3660 இரண்டும் தான் இவற்றின் முன்னோடி ! 1974ம் ஆண்டு மெக்டானல்ஸ் உணவகம் இதே போன்ற ஒரு கருவியை அறிமுகம் செய்தது. ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு பட்டன் இருக்கும். என்னென்ன பொருட்கள் தேவையோ அதற்கு எதிரே இருக்கும் பொத்தான்களையெல்லாம் ஒவ்வொன்றாய் அமுக்க வேண்டும். கடைசியில் கருவி மொத்தம் எவ்வளவு பணம் செலுத்த வேண்டும் எனும் “பில்”லை எடுத்து நீட்டும். அப்போது எல்லோரும் வாய் பிளந்து பார்த்த அந்தக் கருவி, இன்றைக்கு அருங்காட்சியகத்துக்குப் போய்விட்டது ! இப்போதைய பி.ஓ.எஸ் கள் அதி நவீனம் !
கம்ப்யூட்டர், மொபைல் போன்றவற்றுக்கெல்லாம் ஏகப்பட்ட மென்பொருட்கள் உண்டு. அதே போல பி.ஓ.எஸ் கருவியில் செயல்படுவதற்கென்றும் ஏகப்பட்ட மென்பொருட்கள் உண்டு. 1992ம் ஆண்டு மார்ட்டின் குட்வின் மற்றும் பாப் ஹென்றி எனும் இருவரும் இணைந்து ஐ.டி ரிடெயில் ( IT Retail) எனும் ஒரு மென்பொருளை உருவாக்கினார்கள். மைக்ரோசாஃப்ட் வின்டோஸ் செயலியில் செயல்படக் கூடிய அந்த மென்பொருளை இன்றைய “பி.ஓ.எஸ்” மென்பொருட்களின் பிதாமகன் என்று சொல்லலாம்  ! தப்பில்லை !
“பார் கோட்” (Bar Code) தெரியும் தானே ? பொருட்களின் பின்னால் புரியாத வகையில் கருப்பு நிறத்தில் கோடு கோடாய் இருக்குமே !. அது வந்த பிறகு பி.ஓ.எஸ் கருவிகளின் முகமும், அகமும் மாறிப் போய்விட்டது.
இன்றைக்கு வழக்கமாக இருக்கும் முறை இது தான். நீங்கள் பொருட்களை வாங்கிக் கொண்டு கார்டைக் கொடுக்கும் போது விற்பனையாளர் அந்த கார்டை பி.ஓ.எஸ் கருவியில் தேய்க்கிறார். கருவி அந்த கார்டில் உள்ள எண்ணை ஸ்கேன் செய்து கொள்கிறது.
சில பி.ஓ.எஸ் கருவிகளில் தானாகவே எண் எடுத்துக் கொள்ளப் படுவதில்லை. அதை டைப் செய்ய வேண்டும் ! அதன் பிறகு எவ்வளவு பணம் செலுத்த வேண்டும் எனும் விஷயத்தையும் கொடுத்தால் கருவி ஒரு “செய்தி”யை நெட்வர்க்கிற்கு அனுப்பும். அந்த நெட்வர்க் “சுவிட்ச்”(Switch Software) எனப்படும் மென்பொருளுக்கு அந்தத் தகவலை அனுப்பும்.
சுவிட்ச் தான் நம்முடைய வங்கிக் கணக்கில் கை வைக்கும். கார்ட் நல்லது தானா ? அப்படி ஒரு வங்கிக் கணக்கு உண்டா ? என பல சோதனைகளுக்குப் பிறகே அது வேலை பார்க்கத் துவங்கும். டெடிட் கார்டாய் இருந்தால் உடனடிப் பணக் குறைப்பும், கிரடிட் கார்ட் எனில் கணக்கில் வரவு வைக்கவும் சுவிட்ச் தான் முடிவு செய்யும். ஒவ்வொரு செய்திக்கும் ஒவ்வொரு பொருள் உண்டு. பெரும்பாலானவை “ஃபைனான்ஸியல் டிரான்ஸாக்சன்ஸ்” தான்.
உதாரணமாக, ஒரு ஹோட்டலுக்குச் சென்று வயிறுமுட்டச் சாப்பிடுகிறீர்கள் என வைத்துக் கொள்ளுங்கள். கடைசியில் பில் வரும். உங்களுடைய கார்டை வைப்பீர்கள். அவர்கள் அதை பயன்படுத்தி “பில்” கொண்டு வைப்பார்கள். ஒருவேளை நீங்கள் ரொம்ப தாராள மனம் படைத்தவராக இருந்தால் என்ன செய்வீர்கள் ? அந்த பில்லில் “டிப்ஸ்” 50 ரூபாய் என எழுதி கையெழுத்துப் போடுவீர்கள், பின் கார்டை எடுத்துக் கொண்டு போய் விடுவீர்கள். அவர்களுக்கு அந்தப் பணம் எப்படிப் போய் சேர்கிறது ? நீங்கள் தான் உங்கள் கார்டை இரண்டாவது முறை கொடுக்கவேயில்லையே ? யோசித்ததுண்டா ?
இந்த டிப்ஸ் – டிரான்சாக்ஸன் “பிரி ஆத்” (Pre Auth) எனப்படும். பிரி ஆத்தரைசேஷன் ( Pre Authorization) என்பதன் சுருக்கம் தான் அது ! ஏற்கனவே ஒரு அனுமதி தகவல் பகிர்வை உங்கள் கார்டைப் பயன்படுத்தி வாங்கி வைத்திருப்பார்கள். நீங்கள் டிப்ஸ் கொடுத்தால் பயன்படுத்திக் கொள்வார்கள். இல்லையேல் அது டம்மி டிரான்சாக்ஸனாக மாற்றப்பட்டுவிடும்.
வேகமான செயல்பாடு, பணத்தை நாலு தடவை எச்சில் தொட்டு எண்ணும் அவஸ்தையிலிருந்து விடுதலை, கணக்கு இடிக்குதே என தலையைச் சொறிவதிலிருந்து எஸ்கேப், எளிய பயன்பாடு, கள்ள நோட்டுப் பிரச்சினை இல்லை என ஏகப்பட்ட பயன்கள் இந்த பி.ஓ.எஸ் பயன்பாட்டில் உண்டு.
ஒரே ஒரு சிக்கல், இந்த கருவியின் பயன்பாட்டு அடிப்படையில் உரிமையாளர் பணம் கட்ட வேண்டும் என்பது தான். அந்தப் பணம் மென்பொருள் தயாரிப்பவர்கள், மெயின்டென்ய் செய்பவர்கள், இணையப் பயன்பாடு கொடுப்பவர்கள் என பலருக்கும் போய்ச் சேரும். அதற்கெல்லாம் சேர்ந்து பொருட்களில் விலை ஏற்றி உங்களிடமிருந்து கறந்து விடுவார்கள் என்பது சொல்லக் கூடாத தொழில் ரகசியம்.
இந்த பி.ஓ.எஸ் கருவிகளில் வயர் இணைக்கப்பட்டது, வயர்லெஸ் என இரண்டு வகைகள் உண்டு. இணைப்பு கருவிகள் டெலபோன் வயருடன் இணைக்கப்பட்டிருக்கும். வயர்லெஸ் கருவிகள் ‘கம்பியில்லாத் தந்தி’ தொழில் நுட்பத்தில் இயங்குவது ! போகும் வழியில் டிராபிக் போலீஸ்காரர் உங்களை வழிமறித்து “ஃபைன் “ கொடுக்கிறார் என வைத்துக் கொள்ளுங்கள். அவரிடம் இருக்கும் பி.ஓ.எஸ் மெஷின் வயர்லெஸ் வகையைச் சேர்ந்ததாய் இருக்கும் !
வெளிநாடுகளில் வயர்லெஸ் பி.ஓ.எஸ் கருவிகள் தான் பெரும்பாலும் பயன்பாட்டில் இருக்கின்றன. குறிப்பாக அமெரிக்கா போன்ற நாடுகளில் நீங்கள் வண்டியை பார்க்கிங் செய்யும் இடமானாலும் சரி, பயணிக்கும் டேக்ஸி ஆனாலும் சரி, காய்கறி கடை ஆனாலும் சரி, ஹோட்டல் ஆனாலும் சரி எல்லா இடங்களிலும் வயர்லெஸ் மயம் தான் ! ரேடியோ அலைகள் மூலமாக தகவல்கள் அனுப்புவது தான் இவற்றின் அடிப்படை. இந்த கருவி ஒரு மாஸ்டர் கணினியுடன் இணைக்கப்பட்டு தகவல்கள் சேமிக்கப்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
இவற்றின் முதல் அங்கீகரிக்கப்பட்ட நியமம் உருவானது 1996ம் ஆண்டு. OPES எனும் இந்த   நியமத்தை மைக்ரோசாஃப்ட், எப்ஸன், என்.சி.ஆர் கார்பரேஷன், ஃபுஜிஸ்டு போன்ற பெரிய நிறுவனங்களெல்லாம் ஒன்று கூடி உருவாக்கின. 1996ம் ஆண்டு இதன் முதல் பாதம் மண்ணில் பதிந்தது ! OPES வேறொன்றுமில்லை (OLE – Object Linking and Embedding for POS ) பி.ஓ.எஸ் கருவிகளுக்கான இணைப்பு என்பது தான் பொருள். அதற்குப் பிறகு சன் மைக்ரோசிஸ்டம்ஸ், ஐ.பி.எம் மற்றும் என்.சி.ஆர் கார்பரேஷன் இணைந்து ஜாவா பி.ஓ.எஸ் உருவாக்கினார்கள். கருவி சாரா தொழில் நுட்பம் இது ! இது 1999ல் வெளியானது.
பி.ஓ.எஸ் கருவி வழியாகச் அனுப்பப்படும் ஒவ்வொரு தகவலையும் டிரான்ஸாக்சன் ( Transaction) என்று பொதுப்படையாக சொல்வார்கள் என்பது உங்களுக்குத் தெரிந்தது தான். இந்த தகவல்கள் ஒரு பி.ஓ.எஸ் கருவியிலிரிந்து இன்னொரு நெட்வர்க் வழியாக சுவிட்ச் நோக்கிப் போகும் இடம் பாதுகாப்புப் பிரச்சினை உடையது !  திருட்டுப் பயல்களால் திருடப்பட்டுவிடும் அபாயம் உண்டு. அதற்காக பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை அமைத்திருப்பார்கள்.
டெஸ், டபிள் டெஸ், டிரிப்பிள் டெஸ்( DES, Double DES, Tripple DES ) போன்றவையெல்லாம் பிரபலமானவை . DES என்பது Data Encryption Standard என்பதன் சுருக்கம். பி.ஓ.எஸ் கருவி தகவல்களை சங்கேத முறையில் அனுப்புவதும், மறுமுனையில் அந்த செய்தி மீண்டும் சரியான படி வாசிக்கப்படுவதும் தான் இதன் அடிப்படை. அதை எத்தனை அடுக்கு சங்கேதமாக்குகிறார்கள் என்பதன் அடிப்படையில் அதை டபிள், டிரிப்பிள் என்றெல்லாம் அழைக்கிறார்கள்.
இன்னொரு பாதுகாப்பு முறை உண்டு. அது தான் இப்போது மிகப் பிரபலம். அதாவது ஒவ்வொரு செய்தியுடனும் ஒரு சங்கேதக் குறியீடு இருக்கும். எனவே திருடுவது ரொம்பக் கஷ்டம். அப்படியே தகவலைத் திருடினாலும் பியூஸ் போன பல்ப் போல அவர்களால் அதைப் பயன்படுத்த முடிவதில்லை. இந்த முறையை டக்பிட் ( DUKPT – Derived Unique Key Per Transaction) என்கின்றார்கள்.
சில கடைகளுக்கு பல மாடிகள் இருக்கும். ஒவ்வொரு மாடியிலும் சிலப் பல பி.ஓ.எஸ் டிவைஸ் கள் இருக்கும். அவற்றில் எல்லாம் மொத்தம் என்னென்ன விற்பனை நடந்திருக்கின்றன என்பதை எளிதில் அறிந்து கொள்ளும் வசதியையும் “பி.ஓ.எஸ்” மென்பொருட்கள் தருகின்றன. அதே போல நாட்டின் பல இடங்களில் இருக்கும் தொடர் கடைகளின் பி.ஓ.எஸ் டிவைஸ் கள் எல்லாவற்றையும் கூட்டிக் கழித்து கணக்கு பார்க்கும் வசதியும் மிக எளிதிலேயே கிடைக்கும் ! இவை வெப் பேஸ்ட் கருவி இணைப்பாய் இருக்க வேண்டும் என்பது மட்டுமே ஒரே நிபந்தனை !
பி.ஓ.எஸ் டிவைஸ் கள் பல வகை உண்டு. சில கருவிகள் மானிடர், பண டிராயர் போன்றவற்றுடன் இணைக்கப்பட்டிருக்கும். சிலவற்றில் “கையொப்பம்” போடும் வசதி இருக்கும். சிலவற்றில் கிரடிட் கார்ட், டெபிட் கார்ட், ஸ்மார்ட் கார்ட் என எல்லா வகைகளையும் பயன்படுத்த முடியும், சிலவற்றில் செக்களைக் கூட ஸ்கேன் செய்ய முடியும். சில பி.ஓ.எஸ் டிவைஸ்களில் டிஸ்கவுண்ட் கூப்பன் போன்றவைகளைப் பயன்படுத்த முடியும் !  தேவைக்குத் தக்கபடி கிடைக்கும் என்பதே சுருக்கமாய் சொல்ல வந்த விஷயம்.
அடுத்த முறை கடைக்காரர் கார்டை ஸ்வைப் செய்யும்போ, “சார் இதுல என்ன செக்யூரிடி செக் யூஸ்பண்றீங்க ? டெஸ்ஸா ? இல்லை டக்பிட்டா ?” என கேட்டு அவரை மிரளச் செய்யுங்கள் !
நன்றி : தினத்தந்தி – மவுஸ் பையன்

மைக்ரோசாப்ட்டுக்கு எதிராக விண்டோஸ் 8ஐ உரிமை கோரும் சர்ப்காஸ்ட் நிறுவனம்

                  Microsoft vs Sarfcast


கடந்த வாரம் மைக்ரோசாப்ட் தனது புதிய விண்டோஸ் 8 இயங்கு தளத்தைக் களமிறக்கியது. கடந்த செவ்வாய் வரை இந்த விண்டோஸ் 8 இயங்கு தளத்தை 4 மில்லியனுக்கும் அதிகமானோர் அப்க்ரேட் செய்துள்ளனர். அதனால் மைக்ரோசாப்ட் மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த சர்ப்காஸ்ட் என்ற ஒரு நிறுவனம் மைக்ரோசாப்ட்டுக்கு புது தலைவலியை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது விண்டோஸ் 8ல் உள்ள லைவ் டைல்ஸ்கள் தமக்கு சொந்தமானவை என்றும் அவற்றை 90களிலே தாங்கள் வெளியிட்டிருப்பதாகவும், அவற்றை மைக்ரோசாப்ட் காப்பி அடித்திருப்பதாகவும் இந்த சர்ப்காஸ்ட் நிறுவனம் மைக்ரோசாப்ட் மீது புகார் எழுப்பி இருக்கிறது.
இந்த லைவ் டைல்ஸ்களை மைக்ரோசாப்ட் தனது விண்டோஸ் 8 இயங்கு தளத்தில் இருந்து நீக்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருக்கிறது. மேலும் இந்த லைவ் டைல்ஸ் தனது நிறுவனத்திற்கு சொந்தமானது என்றும் அதை மைக்ரோசாப்ட் உரிமை கொண்டாட முடியாது என்றும் சர்ப்காஸ் தெரிவித்திருக்கிறது.
தற்போது இந்த சர்ப்காஸ் நிறுவனம் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு எதிராக நீதிமன்றத்திலும் புகார் செய்திருக்கிறது. ஒருவேளை நீதிமன்ற தீர்ப்பு மைக்ரோசாப்ட்டுக்கு எதிராக இருந்தால், சர்ப்காஸ்ட் நிறுவனத்திற்கு இழப்பீடாக ஒரு பெரிய தொகையை மைக்ரோசாப்ட் வழங்க வேண்டும். அப்படி ஒரு பெரிய தொகையை வழங்க வேண்டியதாக இருந்தாலும் மைக்ரோசாப்ட்டுக்கு அது ஒரு பெரிய இழப்பாக இருக்காது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

thanks      :Greynium Information Technologies Pvt. Ltd.

பேரிடர்களின் போது மீட்பு பணிகளில் ஈடுபடும் புதிய பறக்கும் ரோபோ


Ashutosh Saxena
கார்னல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இந்திய அமெரிக்க கணினி அறிஞரான ஆஸ்டோஸ் சாக்ஸேனா ஒரு புதிய பறக்கும் ரோபோவைக் கண்டுபிடித்திருக்கிறார். இந்த ரோபோ பார்ப்பதற்கு பறவை போன்று மிக அழகாக இருக்கிறது. இந்த ரோபோ இயற்கை இடர்பாடுகளின் போது பறந்து சென்று மீட்பு பணிகளில் அழகாக ஈடுபடும். மேலும் காணாமல் போனவற்றை மிக எளிதாக் கண்டுபிடித்து கொடுக்கும்.
இந்த ரோபோ ஒரு மேசையின் பரப்பு அளவிற்கு இருக்கிறது. காடுகள், மற்றும் கணவாய்கள் மற்றும் இடந்த கட்டிடங்கள் ஆகியவற்றிற்குள் மிக எளிதாக இந்த ரோபோ பறந்து செல்லும் சக்தி கொண்டது என்று சாக்ஸேனா தெரிவித்திருக்கிறார்.
மேலும் ரேடியோ சிக்னல்களுக்கு மனிதர்கள் விரைவாக பதில் கொடுக்க முடியாது. ஆனால் இந்த பறக்கும் ரோபோ மிக வேகமாக பதில் கொடுக்கும் என்ற அவர் தெரிவித்திருக்கிறார்.
இந்த சாக்ஸேனா கான்பூரில் உள்ள ஐஐடியில் 2004 ஆம் ஆண்டு பிடெக் முடித்தவர். இதற்கு முன் இவர் சாதாரண வீடியோ கேமராவை 3டியாக மாற்றும் முறைகளைக் கண்டுபிடித்தார்.
இந்த பறக்கும் ரோபோ ஏற்கனவே 53 ஆளில்லாத விமானங்களில் வைத்து பரிசோதனை செய்து பார்க்கப்பட்டுவிட்டது. இதில் 51 முறை வெற்றியைப் பெற்றிருக்கிறது. ஆனால் இரண்டு முறை மட்டும் பலமானி காற்றின் காரணமாக தோல்விகளைச் சந்தித்தது.
தற்போது இந்த பறக்கும் ரோபோவின் திறனை அதிகரிக்கும் பணிகளில் சாக்ஸேனா மிகத் தீவிரமாக இருக்கிறார். அதாவது காற்று மற்றும் இயற்கை சக்திகளை எதிர்கொள்ளும் அளவிற்கு இந்த ரோபோ இருக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.
கடந்த மாதம் போர்ச்சுக்கல்லில் நடைபெற்ற உலக கருத்தரங்கில் இந்த பறக்கும் ரோபோவை சாக்ஸேனா அறிமுகம் செய்து வைத்தார்.

thanks:     Information Technologies Pvt. Ltd. 

Related Posts Plugin for WordPress, Blogger...

உலகிலேயே அதிக ஆண்டுகள் தம்பதிகளாக உள்ள பெருமையைப் பெற்றுள் ளபஞ்சாப் தம்பதி:திருமணமாகி 87 ஆண்டுகள் ஆகிறது.

                                         World S Longest Married Couple Is From Punjab


லண்டன்: இங்கிலாந்தில் வாழும் பஞ்சாபைச் சேர்ந்த கரம் சந்த், கத்தாரி தம்பதிக்கு திருமணமாகி 87 ஆண்டுகள் ஆகிறது. உலகிலேயே அதிக ஆண்டுகள் தம்பதிகளாக உள்ளவர்கள் என்ற பெருமையை அவர்கள் பெற்றுள்ளனர்.
கலாச்சாரத்திற்கு பெயர் போன இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளில் விவாகரத்து என்பது சகஜமான ஒன்றாகிவிட்டது. சின்ன சின்ன காரணங்களுக்காக எல்லாம் விவாகரத்து பெறும் காலமாகிவிட்டது. இந்நிலையில் உலகிலேயே அதிக ஆண்டுகள் தம்பதிகளாக உள்ள பெருமையை பஞ்சாபைச் சேர்ந்த கரம் சந்த், கத்தாரி தம்பதி பெற்றுள்ளனர்.
இங்கிலாந்தில் உள்ள பிராட்போர்டில் வசிப்பவர் கரம் சந்த்(107). அவரது மனைவி கத்தாரி(100). கடந்த 87 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான அவர்களுக்கு 8 குழந்தைகளும், 28 பேரக்குழந்தைகளும் உள்ளனர். உலகிலேயே அதிக ஆண்டுகள் தம்பதிகளாக உள்ள பெருமையைப் பெற்றுள்ள அவர்கள் விரைவில் கின்னஸ் சாதனைபுத்தகத்தில் இடம் பெற உள்ளனர்.
இது குறித்து கரம் சந்த் கூறுகையில், கத்தாரியை சிரிக்க வைத்துக் கொண்டே இருப்பேன். அவரை ஜோக்ஸ் சொல்லி சிரிக்க வைப்பேன். இது தான் என்னுடைய ரொமான்ட்டிக் வழி என்றார். கத்தாரி கூறுகையில், நான் இளமையாக இருக்கையில் தினமும் இரவு அவருக்கு சுடச் சுட சமைத்துக் கொடுப்பேன். நாங்கள் சைவம் என்பதால் நிறைய காய்கறிகள் வாங்குவேன். அவருக்கு சத்தான உணவு கிடைக்கும்படி பார்த்துக் கொள்வேன் என்றார்.

“ஊருக்கு போனதும் மறக்காம கடுதாசி போடுப்பா” என்று இப்போது யாராவது சொல்கிறார்களா ?


ஒவ்வொரு புதிய தொழில் நுட்பம் வரும்போதும் பழைய தொழில் நுட்பத்துக்கு அச்சுறுத்தல் எழும் என்பதை மறுக்க முடியாது. “ஊருக்கு போனதும் மறக்காம கடுதாசி போடுப்பா” என்று இப்போது யாராவது சொல்கிறார்களா ? அவர்களுக்கு செல்போனும், எஸ்.எம்.எஸ் ம் பக்க துணையாய் இருக்கின்றன.
பிறந்தநாள், தீபாவளி, பொங்கல் என வரிசையாய் வரும் பண்டிகைகளுக்காக கடைகளில் போய் வாழ்த்து அட்டைகள் வாங்குவது பழைய பல்லவி. இப்போது எல்லாம் மின்மயம். ஏதோ ஒரு இணையப் பக்கத்தில் போய் ஒரு வாழ்த்தை கிளிக் பண்ணி மெயில் பண்ணிவிட்டால் விஷயம் முடிந்தது !
தந்தி, தந்தி என்றொரு சமாச்சாரம் இருந்தது ஞாபகம் இருக்கிறதா ? அதை இனிமேல் அரசியல் தலைவர்களின் பேட்டிகளில் தான் கேட்க முடியும். எந்த பிரச்சினையானாலும் “பிரதமருக்கு தந்தி கொடுப்பது” அவர்கள் மட்டும் தான். மற்ற எல்லோருமே மின்னஞ்சல், போன், எஸ்.எம்.எஸ், 3ஜி என எங்கேயே போய்விட்டார்கள்.
இப்படியே வழக்கொழிந்து போன விஷயங்கள், அல்லது புதுமையான வகையில் உருமாறிய விஷயங்கள் நிறையவே உண்டு. இப்போது அந்தப் பட்டியலில் நமது புத்தகங்களும் இணைந்து விடுமோ எனும் நிலை உருவாகி வருகிறது.
மென்புத்தகங்களின் வருகையும், அதை வாசிக்க வசதியாக வந்திருக்கின்ற ரீடர்கள், டேப்லெட்கள் போன்றவையும் அச்சுப் புத்தகங்களின் வளர்ச்சியை அசைக்கத் துவங்கியிருக்கின்றன. உலக அளவில் அச்சுப் புத்தகங்களின் விலை பெருமளவு குறைக்கப்பட்டிருப்பதாய்ச் சொல்கிறது இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று.
ஒரு புத்தகத்தைச் சுமக்கும் எடையில் ஒரு புக் ரீடரை நீங்கள் தூக்கிச் சுமக்கலாம். சொல்லப் போனால் ஒரு நாவல் சுமார் 300 கிராம் எடை உண்டு. ஆனால் பொதுவான ரீடர்கள் 200 கிராம் எடையை விடக் குறைவு தான். அதில் சுமார் 1400 நாவல்களைச் சேமிக்கலாம். இப்படி மிக எளிமையான வாய்ப்பு வந்திருப்பதால் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக புத்தகங்களை விட்டு விட்டு மென் பக்கமாய் தலை சாய்க்கத் துவங்கியிருக்கிறார்கள்.
பயணத்தின் போதெல்லாம் ரீடர்கள் ரொம்பவே உதவியாக இருக்கும் என்பதைச் சொல்லவும் தேவையில்லை. இந்த ஆண்டைய முதல் காலாண்டு புள்ளி விவரம் என்ன சொல்கிறது தெரியுமா ? சுமார் 25% அச்சுப் புத்தகங்கள் விற்பனைச் சரிவு ஏற்பட்டிருக்கிறதாம். நீல்சனின் அறிக்கைபடி கடந்த ஆண்டில் சுமார் 11% அச்சுப் புத்தக விற்பனை வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது !
“அச்சுப் புத்தகங்களின் வீழ்ச்சி கண்கூடு. 2020ல் அச்சுப் புத்தகங்கள் ரொம்பக் கொஞ்சமே இருக்கும். மென்புத்தகங்களே ஆட்சி புரியும்”  என்கிறார் புகழ் பெற்ற எழுத்தாளர்களில் ஒருவரான ஜி.பி.டெய்லர்.
இசை உலகை எடுத்துக் கொண்டால் இன்றைக்கு சிடிக்களின் விற்பனை ரொம்பக் கம்மி. அதுவும் ஆப்பிள் தயாரிப்புகளான ஐபாட் போன்றவை அறிமுகமானபின் வெளிநாடுகளில் சகட்டு மேனிக்கு சரிவு ஏற்பட்டது. காரணம் மக்கள் பெரும்பாலும் இணையத்திலிருந்து தரவிறக்கம் செய்வதை விரும்பியது தான்! ஐ-டியூன் போன்ற பணம் கொடுத்து இறக்குமதியாகும் தளங்களில் விற்பனை ஜோராக நடக்கிறது. இதே நிலை இனிமேல் புத்தகங்களுக்கும் வரும்.
எப்போது வேண்டுமானாலும் பிடித்தமான நூலை தரவிறக்கம் செய்து வாசிக்கலாம் எனும் நிலை வரும். இதனால் நூலுக்காக கடை கடையாய் ஏறி இறங்க வேண்டிய அவசியம் இல்லை. ஆர்டர் கொடுத்து விட்டு வாரக் கணக்கில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.
புத்தம் புதிய நாவல்களும் மென்வடிவமாகவே தயாரானால் “ஹாரி பாட்டர்” கணக்கான ரசிகர்கள் கொட்டும் பனியில் புத்தகத்துக்காகக் காத்திருக்க வேண்டிய அவசியமும் இல்லை. சுற்றுப்புறச் சூழலுக்கும் இது ரொம்ப நல்லது. மரங்கள் பிழைக்கும். பெரிய பெரிய அச்சு நிறுவனங்களெல்லாம் ஓய்வெடுக்கும் !
ஹாரிபாட்டர் என்று சொன்னதும் நினைவுக்கு வருகிறது. சமீபத்தில் ஹாரிபாட்டர் நாவல்கள் மென் வடிவம் பெற்றன. சில நாட்களிலேயே சுமார் 8 கோடி ரூபாய்களுக்கான நூல்கள் விற்றுத் தீர்ந்தன ! ஒவ்வொரு நிமிடமும் சுமார் 20,000 ரூபாய்க்கான விற்பனை ஹாரிபாட்டர் மூலம் நடந்து கொண்டிருக்கிறதாம் !
மென்புத்தகங்களின் விலை மிகவும் குறைவாக இருப்பதால் அதன் விற்பனை எண்ணிக்கையும் மிக அதிக அளவில் இருக்கிறது. புத்தக வாசனை வேண்டும், சேமிக்க வேண்டும் எனும் எண்ணம் உடையவர்கள் இன்னும் அச்சுப் புத்தகங்களையே நாடி வருகின்றனர்.
மென்புத்தகங்களின் வளர்ச்சி வரவேற்கப்பட வேண்டியதே ! படிக்கும் பழக்கம் அதன் மூலம் அதிகரித்தால் இரட்டை மகிழ்ச்சி !

நன்றி : மவுஸ் பையன், தினத் தந்தி

புளூடூத் : தெரிந்ததும், தெரியாததும் !




 
நிறைய விஷயங்களை நாம் அடிக்கடி பேசுவோம். ஆனால் அதன் பின்னணியில் என்ன நடக்கிறது ? அதன் தொழில் நுட்ப நுணுக்கங்கள் என்ன என்பது பலருக்கும் தெரியாது.
புளூடூத் பற்றித் தெரியுமா ? என சில ஆண்டுகளுக்கு முன்னால் கேட்டால் அது ஏதோ பல் சம்பத்தப்பட்ட விஷயம் என நினைத்திருப்போம். அந்த நிலையைத் தாண்டி இப்போது புளூடூத் என்பது என்ன என்பது நமக்குத் தெரியும்.
தெரியும் என்றால், எந்த அளவுக்குத் தெரியும் என்பது கேள்விக்குறிதான். “அதான் போன்ல இருக்குமே… பாட்டு எல்லாம் ஷேர் பண்ணலாமே” எனுமளவுக்குத் தான் பெரும்பாலானவர்களுடைய புளூடூத் அறிவு இருக்கும். அதில் தப்பில்லை. நமக்கு பயன்பாட்டு அளவிலான அறிவே போதும். இருந்தாலும் இந்தக் கட்டுரையில் புளூடூத் என்றால் என்ன அதன் தொழில் நுட்பங்கள் என்ன என்பதை எளிமையாய் பார்ப்போம்.
பல்லுக்கும் இதுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை, எதுக்காக புளூ டூத் ன்னு பெயரை வெச்சாங்க ? எனும் குழப்பம் பலருக்கும் உண்டு. இந்த பெயருக்கும் பல்லுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்த வார்த்தை பிலாட்டென்ட் அல்லது பிலாட்டன் எனும் ஸ்கான்டினேவியன் வார்த்தையின் ஆங்கில வடிவம்.
பத்தாம் நூற்றாண்டுகளில் டென்மார்க்கையும், நார்வேயின் சில பகுதிகளையும் ஆண்டு வந்த மன்னன் முதலாம் ஹெரால்ட் பிலாட்டன் கோர்ம்ஸன். ஆங்கிலத்தில் அவரது பெயரை ஹெரால்ட் புளூடூத் கோர்ம்ஸன் என்பார்கள். பிரிந்து கிடந்த நாட்டை ஒன்றாய் சேர்க்கவேண்டுமென முயற்சி எடுத்த மன்னர் அவர் ! அதனால் தான் நமது “இணைக்கும் தொழில்நுட்பத்துக்கும்” அவருடைய பெயரான புளூடூத் எனும் பெயரை வைத்தார்கள். இதுவே சுருக்கமான பெயர் புராணம் ! புளூடூத் சிம்பலை உற்றுப் பார்த்தால் ஒரு “B” தெரியும். அது அவருடைய கையெழுத்தின் பழங்கால ரூனிக் வடிவம் தான் !
புளூடூத் ஒரு குறுகிய எல்லைக்குள் கம்பியில்லா இணைப்பு மூலம் தகவல்களைப் பரிமாற்றும் முறையே. அது நமக்குத் தெரிந்தது தான். உதாரணமாக அருகருகே இருக்கும் இரண்டு மொபைல் போன்களிலிருந்து பாடலையோ, படத்தையோ பரிமாறிக் கொள்வது இந்த முறை தான். இதற்காக குறைந்த அலைவரிசையுடைய ரேடியோ அலைகள் பயன்படுத்தப்படுகின்றன. பொதுவாக 2400 முதல் 2480 மெகா ஹெட்ஸ் அளவு !
PAN தெரியுமா என்றால், “தெரியுமே. அதன் விரிவாக்கம் பெர்மனன்ட் அக்கவுண்ட் நம்பர். வருமான வரி செலுத்துபவர்கள் அனைவரும் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்பது இந்திய அரசின் சட்டம்.” என்பீர்கள். நல்லது ! புளூடூத் விஷயத்தின் இன்னொரு PAN உண்டு. அது பெர்சனல் ஏரியா நெட்வர்க் என அழைக்கப்படும். பாதுகாப்பான இந்த குறுகிய நெட்வர்க் தான் தகவல் பரிமாற்றத்தின் ஏரியா.
புளூடூத் ஸ்பெஷல் இன்டரஸ்ட் குரூப் (Bluetooth Special Interest Group  ) என்றொரு குழு இருக்கிறது. சுமார் 15000 நிறுவனங்கள் இதில் இணைந்திருக்கின்றன. இந்த குழு தான் புளூடூத் தொடர்பான எல்லா தரம், லைசன்ஸ், சட்ட திட்டங்கள் எல்லாவற்றையும் நிர்ணயிப்பவர்கள். ஆனால் இவர்கள் புளூடூத் பொருட்களைத் தயாரிப்பதில்லை என்பது குறிப்பிடத் தக்கது !
ஒரு தகவலை அனுப்ப வேண்டுமெனில் முதலில் இரண்டு கருவிகளுக்கு இடையேயான பாதுகாப்பான தொடர்பு உருவாக்கப்படுகிறது. பிறகு அனுப்ப வேண்டிய தகவல் சின்னச் சின்னதாக வெட்டப்படுகிறது. வெட்டப்பட்ட துண்டுகள் ஒவ்வொன்றாக பரிமாறப்படுகின்றன. இதை பாக்கெட் பேஸ்ட் புரோடோகால் (packet-based protocol) என்கிறார்கள். அதாவது ஒரு தகவலை பாக்கெட் பாக்கெட்டாக வெட்டி வைப்பது.
இதன் பரிமாற்ற முறை மாஸ்டர் ஸ்லேவ் ஸ்ட்ரக்சர் (master-slave structure ) படி இயங்கும். ஒரு மாஸ்டர் தலைவராக இருப்பார். அவரிடமிருந்து பல கருவிகளுக்கு தகவல் பரிமாறப்படும். இவை குறிப்பிட்ட கால இடைவெளியில் நடக்கும். இதனால் தகவல் பரிமாற்றத்தில் ஒழுங்கான மற்றும் சீரான இயக்கம் நடைபெறும்.
தகவல் பரிமாற்றத்துக்கான அடிபடை கடிகாரத்தை மாஸ்டர் நிர்ணயிக்கும். ஒவ்வொரு கடிகார இடைவெளியும் 312.5 மைக்ரோ செகன்ட் இடைவெளி இருக்கும். இரண்டு இடைவெளிகளுக்கு 625 மைக்ரோ செகன்ட் இப்படி நீளும். ஒன்று இரண்டு மூன்று நான்கு என நீளும் இடைவெளிகளில் “இரட்டை எண்” இழைகளின் வழியாக மாஸ்டர் தகவல்களை அனுப்பும். “ஒற்றை எண்” இழைகளின் வழியாக தகவல்களை பெறும். இது தான் அடிப்படை !
பெரும்பாலும் இந்த பகிர்ந்தல் “ரவுண்ட் ராபின்” முறையில் நடக்கும். ரவுண்ட் ராபின் என்பது எல்லோரையும் கொஞ்சம் கொஞ்சமாய் கவனிப்பது ! சீட்டி குலுக்கிப் போடும் போது ஆளுக்கு ஒன்று போடுவது போல வைத்துக் கொள்ளலாம். இருக்கின்ற நேரத்தையும், இழைகளையும் இணைக்கப்பட்டுள்ள கருவிகளையும் பொறுத்து தகவல்களை பல்லாங்குழி போல ஒவ்வொருவருக்காய் கொடுத்துக் கொண்டே இருப்பது.
இந்த இடைவெளி ரொம்ப ரொம்பச் சின்னது என்பதால் எல்லா கருவிகளும் ஒரே நேரத்தில் தகவல்களைப் பெறுவது போன்ற ஒரு தோற்றம் உருவாகும். ஆனால் உண்மையில் அதற்கிடையே மைக்ரோ செகன்ட் இடைவெளி இருக்கும் !
கருவிகளில் இணைக்கப்பட்டுள்ள மலிவான டிரான்ஸீவர் மைக்ரோசிப்கள் இந்த தகவல் பரிமாற்றத்தைச் செய்யும். இதற்கு மிகவும் குறைவான சக்தியே செலவாகும். இதன் பரிமாற்ற எல்லை கிளாஸ் 1, 2, 3 என வகைப்படுத்தப்பட்டுள்ளது. முதல் வகை 100 மில்லிவாட்  சக்தியுடன் சுமார் நூறு மீட்டர் அளவில் செயல்படும். மூன்றாவது கிளாஸ் அமைப்பில் இந்த அளவு வெறும் ஐந்து மீட்டர்கள் எனுமளவிலேயே இருக்கும் !
புளூடூத் இன்றைக்கு பல கருவிகளில் இயங்குவது அறிந்ததே. மொபைல் போன்களின் இதன் பயன்பாடு அதிகம். அதை இன்டர்காம், கார் ஆடியோ போன்றவற்றுடன் இணைக்கும் நுட்பங்களெல்லாம் இன்று இருக்கின்றன. கணினியில் புளூடூத் டெக்னாலஜி மவுஸ், விசைப்பலகை, பிரிண்டர் என பல கருவிகளை இணைக்கிறது !
புளூடூத்துக்கான அடிப்படைக் கட்டமைப்பை 1994ம் ஆண்டு ஸ்வீடனிலுள்ள எரிக்ஸன் நிறுவனத்தின் ஜேப் ஹார்ட்சென் மற்றும் மேட்டிசன் அமைத்தனர். அதன் பின்னர் அது எஸ்.ஐ.ஜி யால் 1998ம் ஆண்டு நெறிப்படுத்தி அறிவித்தனர். அதன் வெர்ஷன் 1.0ல் ஆரம்பித்து இன்றைக்கு அதன் வளர்ந்த வடிவமான 4.0 எனும் நிலையில் இருக்கிறது.
எல்லா டெக்னாலஜிகளையும் போலவே இதுவும் மாறுபடும் என்பது நிச்சயம். இப்போதைக்கு உள்ள நுட்பத்தில் அதிக வேகம், குறைந்த எனர்ஜி செலவு எனுமளவில் அது நிலைபெற்றிருக்கிறது ! அதே போல ஒலி அலைகளை கடத்த A2DP (Advanced Audio Distribution Profile எனும் நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.
துவக்க காலத்தில் பாதுகாப்பு அம்சங்கள் ரொம்பவே குறைவாய் இருந்தது. இப்போது பாதுகாப்பு விஷயங்களில் பல மடங்கு முன்னேறியிருப்பது கண்கூடு. ஒரு மொபைல் விண்ணப்பம் அனுப்ப, இன்னொரு மொபைல் அதை ஏற்றுக் கொள்ள கடவுச் சொல்  பயன்படுத்து முறை இந்த பாதுகாப்பு அம்சங்களில் ஒன்று ! இரண்டு கருவிகள் இப்படி இணைவதை “பெயரிங்” என்பார்கள், இதை புளூடூத்தின் “பாண்டிங்” நுட்பம் செயல்படுத்துகிறது.
எஸ்.எஸ்.பி (Secure Simple Pairing ) முறை தான் பரவலாக பயன்படுத்தப்படும் பாதுகாப்பு முறை. இதில் வார்த்தைகள், எண்கள் போன்ற ஏதோ ஒன்று அடையாள எண்ணாகப் பயன்படுத்தப்படும். இந்த வார்த்தையை தயாரிப்பதற்கு ஒரு ஸ்பெஷல் பார்முலா அல்லது அல்காரிதம் பயன்படுத்தப்படுகிறது. அதை இ22 அல்காரிதம் என அழைப்பார்கள்.
புளூடூத் மைக்ரோவேவ் ரேடியோ அலைகளைப் பயன்படுத்துவதால் புளூடூத் போன்ற கருவிகளை காதில் மாட்டித் திரிவது ஆரோக்கியத்துக்குக் கொஞ்சம் கெடுதல் விளைவிக்கும் என்பது பொதுவான ஒரு பாதுகாப்பு எச்சரிக்கை. ரொம்பக் கம்மியான அளவு தான் என ஆதரவாளர்கள் கூறினாலும், உஷாராய் தேவையான நேரம் மட்டுமே அதைப் பயன்படுத்துவது நல்லது !
மொபைலில் இருந்து கணினிக்கு தகவல்களை அனுப்புவது, இன்னொரு மொபைலுக்கு தகவல் அனுப்புவது, விசிடிங் கார்ட் போன்றவற்றை அனுப்புவது, பிரிண்டருக்கு தகவல் அனுப்புவது, டிவி போன்ற எலக்ட்ரானிக் பொருட்களுக்கு சிக்னல்கள் அனுப்பி இயக்குவது என இதன் பயன்பாடு இன்றைக்கு எல்லா இடங்களிலும் உண்டு.

நன்றி : (மவுஸ் பையன் ) தினத்தந்தி

திகில் படங்களைப் பார்த்தால் கலோரி காலி!: ஆய்வில் தகவல்


உடற்பயிற்சி செய்தால் உடலில் கலோரி குறையும் என்பார்கள். ஆனால் திகில் படங்களைப் பார்ப்பதன் மூலம் உடலில் கலோரி குறையும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
watch horror movies burn calories
உடல் பருமன் பிரச்சினை இன்றைக்கு பலரையும் வாட்டி வதைக்கிறது. உடலை இளைக்க வைக்க டயட்டில் இருக்கின்றனர் பலர். உடற்பயிற்சி செய்து கலோரியை குறைக்க முயற்சி செய்கின்றனர் ஏராளமானோர். ஆனால் புதிதாக திகில், திரில்லர் படங்களை பார்ப்பதன் மூலம் உடல் இளைக்கும் என்று கூறி ஆச்சரியப்படத்தக்க செய்தியை வெளியிட்டுள்ளனர் ஆய்வாளர்கள்.
90 நிமிடங்கள் திகில் படங்கள் பார்த்தால் 113 கலோரி காலியாகிறதாம். 1980ம் ஆண்டு வெளியான ­‘தி சைனிங்' என்ற திரைப்படத்தைப் பார்த்தால் 184 கலோரிகள் காலியாகிவிடுமாம். ‘ஜாஸ்' படத்தை பார்த்தவர்களுக்கு 158 கலோரிகள் காலியானதாக தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் 10 திகில்படங்களை பார்வையிட பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர். அவர்களின் இதயத்துடிப்பு, ஆக்ஸிஜன் எடுத்துக்கொள்வது, கார்பன் டை ஆக்ஸைடு வெளியேற்றம் போன்றவைகளின் செயல்பாடு கண்காணிக்கப்பட்டது. திரில்லர் படங்களைப் பார்க்கும் போது உடல் நிலையில் ஏற்படும் மாற்றங்களினால் அவர்களின் கலோரி எரிக்கப்படுவது கண்டறியப்பட்டது. திகில் படங்களினால் மனிதர்களின் நாடித்துடிப்பு அதிகரிக்கிறது இதயத்துடிப்பை எகிறுகிறது என்கிறார் வெஸ்ட்மினிஸ்டர் பல்கலைக்கழக பேராசிரியர் ரிச்சர்ட் மெக்கன்சி. இதனால் ரத்த ஓட்டம் உடலில் வேகமாக செலுத்தப்படுகிறது. தேவையற்ற கலோரிகள் காலியகின்றன என்கின்றனர் ஆய்வாளர்கள்.
திகில் படம் பார்ப்பவர்கள் சீட்டு நுனிக்கு வந்து விடுவார்கள். தலைமுடி கூட சிலருக்கு குத்திட்டு நிற்கும். தலையணையை அழுத்தமாக பிடித்துக்கொள்வார்கள். இதுபோன்ற செயல்கள் உடலுக்குள் மாற்றத்தை ஏற்படுத்தி அவர்களின் உடலில் தேவையற்ற கலோரிகளை காலி செய்கின்றனவாம்.

TAMIL ISLAMIC LINKS



Post image for குர்ஆனை விளக்கும் ஹதீஸ்கள்




TAMIL ISLAMIC LINKS


http://ibnubasheer.blogsome.com/
http://muslimpage.blogspot.com/
http://suvanappiriyan.blogspot.com/
http://luluwalmarzan.blogspot.com
http://naanjsilan.blogspot.com/
http://niduronline.com
http://dailyreadquran.blogspot.com
http://islamparvai.com
http://islamkural.com/
http://nihalvu.blogspot.com
http://chudar.blogspot.com/
http://albaqavi.com/
http://suvatukal.blogspot.com/
http://ennodu.blogspot.com
http://nilamellam.blogspot.com
http://copymannan.blogspot.com
http://fazilbaqavi.blogspot.com
http://nalladiyar.blogspot.com
http://islamicdress.blogspot.com/
http://tamil.worldmuslimmedia.com
http://kuddusa35.blogspot.com/
http://www.islamiccollections.blogspot.com/
http://vidiyalvelli.blogspot.com/
http://kalvi.blogspot.com
http://www.nellaieruvadi.com/islam/tamilmuslims1.asp
http://www.readislam.net/avpage.htm
http://egathuvam.blogspot.com/
http://www.suvanathendral.com/
http://www.sathyapathai.com/
http://www.islamkalvi.com/reader/
http://wahhabipage.blogspot.com/
http://suttuviral.blogspot.com/
http://www.islamkalvi.com/media/
http://masdooka.blogspot.com
http://islamicreply.blogspot.com
http://www.islamkalvi.com/
http://www.idhuthanislam.com/
http://www.google.com/Top/World/Tamil/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/

http://www.tmmkonline.org
http://tntj.net
http://www.iftchennai.org
http://www.jaqh.net
www.docterislam.blogspot.com