Thursday, November 12, 2015

பூமியில் மட்டும் உயிரினங்கள் இருப்பதற்கு இங்கு உள்ள விசேஷத் தன்மையே காரணம்

        



     
   
 
 


       


1938 அக்டோபர் 30. ஞாயிற்றுக்கிழமை. இரவு சுமார் 8 மணி. அமெரிக்காவின் என்.பி.சி. ரேடியோவில் ஒரு பிரபல நிகழ்ச்சி. அதைக் கேட்டு முடித்தவர்கள் அடுத்ததாக சி.பி.எஸ். ரேடியோவின் நிகழ்ச்சிக்கு மாறுகின்றனர். அதில் ஏற்கெனவே நிகழ்ச்சி தொடங்கிவிட்டிருந்தது. அந்த அலைவரிசையில் செய்தி அறிவிப்புகள்போல அடுத்தடுத்து முக்கிய அறிவிப்புகள் வெளியாகிக்கொண்டிருந்தன.

“செவ்வாய் கிரகவாசிகள் நியூயார்க்கில் இறங்கி தாக்குதல் நடத்துகின்றனர். விஷப் புகையை வீசி மக்களைக் கொன்றுகொண்டிருக்கின்றனர். 7,000 ராணுவப் படையினர் இதுவரை மடிந்துவிட்டனர். சிகாகோ, செயின்ட் லூயி உட்பட பல நகரங்களும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன...” மேலும் சிறிது நேரம் இப்படியாக அறிவிப்புகள் வெளியாகின்றன.

இதைக் கேட்டவர்கள் நிஜமாகவே செவ்வாய் கிரகவாசிகள் பூமி மீது படையெடுத்துவிட்டதாக நினைத்து, அலறியடித்துக்கொண்டு பதுங்குமிடங்களை நோக்கி ஓடினர். கார் ரேடியோவில் இந்த அறிவிப்புகளைக் கேட்டவர்கள் ஆங்காங்கு கார்களை நிறுத்திவிட்டு, எங்காவது பதுங்குவதற்கு ஓடினர். பல நகரங்களில் ஒரே பீதி.

வருத்தம் தெரிவித்த வெல்ஸ்
சில நிமிடங்களுக்குப் பின்னர்தான் இது ஒரு ரேடியோ நாடகத்தின் எடுப்பான ஆரம்பம் என்று அவர்களுக்குப் புரிகிறது. மெதுவாக, ஆங்காங்கு சகஜ நிலை திரும்புகிறது. செவ்வாயிலிருந்து பூமி மீது படையெடுப்பு நடப்பதுபோல இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல நாவலாசிரியர் எச்.ஜி.வெல்ஸ் 1897-ல் ஒரு கதை எழுதினார். அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல இயக்குநரும் நடிகருமான ஆர்சன் வெல்ஸ் அந்தக் கதையைத்தான் ரேடியோ நாடகமாக்கியிருந்தார். அதன் தொடக்கம் செய்தி அறிவிப்புகள் பாணியில் இருந்தது. அதன் விளைவாகத்தான் பெரும் பீதி ஏற்பட்டது. இதனால் பலரும் பலவித இன்னல்களுக்கு உள்ளானார்கள். ஆர்சன் வெல்ஸ் பின்னர் இதுகுறித்து வருத்தம் தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் இரண்டு விஷயங்களைக் காட்டியது. செவ்வாய் கிரகத்தில் யாரோ இருக்கிறார்கள் என்று மக்கள் கருதினர். செவ்வாய் கிரகவாசி களால் பூமி மீது படையெடுக்க முடியும் என்று அவர்கள் நம்பினர். அதன் விளைவாகவே ரேடியோ நாடகத்தில் வெளியான அறிவிப்புகளை அவர்கள் நிஜம் என நம்பினார்கள்.

பச்சை நிறமனிதர்கள்

கிட்டத்தட்ட சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவில் வெள்ளி, செவ்வாய், சந்திரன் அல்லாமல் கற்பனையான கிரகங்களில் நிகழ்வதாகக் கூறும் நாவல்களும், திரைப் படங்களும் நிறையவே வந்தன. இவற்றில் பலவும் பூமியின் மீது வேற்றுலகவாசிகள் படையெடுப்பதுபோல் அமைந்திருந்தன. எனவே, பூமியின் மீது வேற்றுலகவாசிகள் ஒரு வேளை படையெடுத்துத் தாக்க வாய்ப்பு உள்ளதாக அமெரிக்காவில் பலரும் நினைக்க ஆரம்பித்தனர்.

செவ்வாய் கிரகத்தில் பச்சை நிற மனிதர்கள் இருப்பதாகவும் ஓர் எண்ணம் ஏற்பட்டது... அது எப்படி?

டார்ஸான் பற்றித் தெரியாதவர்கள் இருக்க முடியாது. டார்ஸான் படக் கதை, டார்ஸான் காமிக்ஸ் (படக்கதைப் புத்தகம்) டார்ஸான் சினிமா என நிறையவே உண்டு. டார்ஸான் கதாபாத்திரத்தை உருவாக்கியவர் அமெரிக்காவைச் சேர்ந்த எட்கார் ரைஸ்பரோ ஆவார். ராணுவ அதிகாரிகள் பயிற்சிக் கழகத்தில் சேர முடியாமல் போன பின், அவர் ஏதேதோ வேலையில் சேர்ந்து பின்னர் எழுத்தாளரானார்.

ரைஸ்பரோவின் முதல் நாவலே செவ்வாய் கிரகத்தைப் பற்றியதுதான். ‘செவ்வாய் கிரகத்தின் சந்திரன்கள்’என்பது அதன் தலைப்பு. முதலில் அது ஒரு வார சஞ்சிகையில் தொடராக வந்தது. பின்னர் அது, ‘செவ்வாயின் இளவரசி’என்ற தலைப்பில் புத்தகமாக வந்தது. செவ்வாய் கிரகத்தை மையமாக வைத்து மட்டும் அவர் சுமார் 10 புத்தகங்களை எழுதினார்.

செவ்வாய் பற்றிய தமது முதல் நாவலில் ரைஸ்பரோ செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் இருப்பதாகவும் அவர்கள் பச்சை நிறத்தில் இருப்பதாகவும் வருணிப்பார். காலப்போக்கில் செவ்வாய் பற்றிய திரைப் படங்களிலும் செவ்வாய் ‘மனிதர்கள்’ பச்சை நிறத்தில் காட்டப்பட்டனர். படக் கதைகள் மற்றும் சினிமாப் படங்களின் விளைவாக செவ்வாயில் மனிதர்கள் இருக்கின்றனர் என்றும் அவர்கள் பச்சை நிறத்தவர் என்றும் மேற்கத்திய நாடுகளில் மக்களிடையே ஆழ்ந்த கருத்து வேரூன்றியது.

ஹெர்ஷலும் லுனாரியன்ஸும்

சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னர் விஞ்ஞானிகளில் சிலரும் வேறு கிரகங்களில் மனிதனைப் போன்றவர்கள் இருக்கலாம் என்று நம்பினார்கள். சிலர் அக்கருத்தை பகிரங்கமாக வெளியிட்டனர். சிலர் அக்கருத்துகளை வெளியிடத் தயங்கினர். அப்படியான விஞ்ஞானிகளில் ஒருவர் சர் வில்லியம் ஹெர்ஷல் ( 1738-1822) ஹெர்ஷல் மாபெரும் விஞ்ஞானிகளில் ஒருவர். டெலஸ்கோப் மூலம் யுரேனஸ் கிரகத்தைக் கண்டுபிடித்தவர். ஹெர்ஷல் சொந்தமாகப் பல டெலஸ்கோப்புகளை உருவாக்கியவர். அவர் வடிவமைத்த டெலஸ்கோப் ஒன்று அக்காலகட்டத்தில் உலகில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு மிகப் பெரியதாக இருந்தது. கிரகங்களையும் நட்சத்திரங்களையும் தமது டெலஸ்கோப் மூலம் ஆராய்ந்த அவர் சந்திரனையும் ஆராய்ந்தார்.

சந்திரனில் வட்ட வடிவிலான சிறிய டவுன்கள் உள்ளதாகவும் அவற்றில் மக்கள் இருப்பதாகவும் அவர் கருதினார். ஹெர்ஷல் அவர்களை லுனாரியன்ஸ் என்று வர்ணித்தார். அவர் சந்திரனோடு நிறுத்திக்கொள்ளவில்லை. சூரியனிலும் மனிதர்களைப் போன்றவர்கள் இருக்கலாம் என்று நம்பினார். ஆனால், வேற்றுலகவாசிகள் பற்றிய தமது கருத்துகளை ஹெர்ஷல் தமது குறிப்புகளில் எழுதி வைத்தாரே தவிர, பகிரங்கமாக அறிவிக்கவில்லை. பின்னர்தான் அவை தெரியவந்தன.

சந்திரனும் வால்வெர்க் நகரும்

சமகாலத்தவரான ஜெர்மன் வானவியல் விஞ்ஞானி குருய்தூசியன் தமது டெலஸ்கோப் மூலம் சந்திரனை ஆராய்ந்தபோது, சந்திரனில் ஓரிடத்தில் கட்டிடங்களும் தெருக்களும் இருப்பதாக அவருக்குத் தோன்றியது. அந்த நகருக்கு அவர் வால்வெர்க் என்று பெயரிட்டார். வெள்ளிக் கிரகத்தையும் ஆராய்ந்த அவர் அக்கிரகம் சூரியனுக்குச் சற்று அருகில் இருப்பதால் பூமியில் பிரேசில் நாட்டில் இருப்பதைக் காட்டிலும் வெள்ளியில் மிக அடர்ந்த காடுகள் இருந்தாக வேண்டும் என்றார். அவரது கருத்துகள் அடங்கிய நூல் 1824-ல் வெளியானது.

இவர்களுக்கு முன்னதாக வாழ்ந்த பிரெஞ்சு விஞ்ஞானி போண்டெனெல்லி 1486-ல் எழுது ம்போது வெள்ளிக் கிரகத்தில் வாழும் வேற்றுலகவாசிகள் கருப்பு நிறத்தவர்களாக இருப்பர் என்றார். அவர்கள் இசையிலும் கவிதையிலும் அதிக நாட்டம் உள்ளவர்களாக இருப்பர் என்றும் அவர் கூறினார். இத்தாலியைச் சேர்ந்த நிக்கோலஸ் குசானஸ் 1439-ல் எழுதும்போது சூரியனில் வசிப்போர் அதி புத்திசாலிகளாக இருப்பர் என்றார். சந்திரனில் இருப்பவர்கள் மரை கழன்றவர்களாக இருப்பர் என்று குறிப்பிட்டார். இவை எல்லாமே அறிவியல் ஆராய்ச்சி என்ற அடிப்படையில் கூறப்பட்டவை.

ஆனால், விண்வெளி யுகம் தொடங்கிப் பல்வேறு கிரகங்களுக்கும் ஆளில்லா விண்கலங்களை அனுப்பி ஆராய்ந்தபோது, சூரிய மண்டலத்தில் உள்ள ஒன்பது கிரகங்களில் பூமியைத் தவிர வேறு எங்கும் மனிதரைப் போன்றவர்கள் இல்லை என்பது தெரியவந்தது. பூமியில் மட்டும் மனிதன் உட்பட பல்வகையான உயிரினங்கள் இருப்பதற்கு பூமியில் உள்ள விசேஷத் தன்மைகளே காரணம்

நன்றி :தி இந்து: 

Monday, November 9, 2015

மழைக்கால நோய்கள்... தடுக்கும் வழிகள்!

ழைக்காலம் ஆரம்பம் ஆனாலே, சாதாரண சளி, காய்ச்சல் முதல் டெங்கு ஜுரம், தொற்றுநோய்கள் வரை படையெடுக்க ஆரம்பித்துவிடும். நோய்க்கிருமிகள் பரவ, மிகவும் சாதகமாக இருக்கும் குளிர்ச்சியான மற்றும் ஈரப்பதமான சூழ்நிலைதான் இதற்குக் காரணம்.
ஆங்காங்கே நீர் தேங்குவதால், கொசு மற்றும் ஈக்கள் மூலம் பரவும் பாதிப்புகளும் அதிகரித்துவிடுகின்றன. மழைக்காலப் பாதிப்பில் இருந்து தப்புவதே ஒவ்வோர் ஆண்டும் மிகப் பெரிய சவால்.  இந்த நேரத்தில் வரக்கூடிய நோய்கள் என்னென்ன?  அவை ஏன் வருகின்றன? அவற்றை எப்படித் தவிர்ப்பது?
சளி, இருமல்
பருவநிலையில் மாற்றம் ஏற்பட்டு, காற்றில் ஈரப்பதம் அதிகரிப்பதால், குளிர்ச்சியான சூழ்நிலை சிலருக்கு அலர்ஜியை உண்டாக்கும்; சளி மற்றும் இருமல் பிரச்னைகளால்  அவதிப்படுவார்கள். இன்ஃப்ளூயன்சா வைரஸ் காரணமாகவும்  சளி இருமல் வரும். இந்தப் பிரச்னைகள் வராமல் இருக்க, வெளி இடங்களில் சுகாதாரமற்ற தண்ணீர் மற்றும் குளிர்பானங்கள் அருந்துவதையும் ஐஸ்க்ரீம் சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும். அடிக்கடி ஆவி பிடிப்பது, மூச்சுப் பயிற்சியில் ஈடுபடுவதன் மூலம் சளி, இருமல் பிரச்னைகளில் இருந்து தப்பிக்கலாம்.
நுரையீரல் தொந்தரவுகள்
மழைக்காலம் மற்றும் குளிர்காலங்களில் உலர்ந்த மற்றும் குளிர்ந்த காற்றை மாறி மாறி சுவாசிக்கும்போது, நுரையீரல் மற்றும் தொண்டைப் பகுதிகளில் எரிச்சல் ஏற்படும். இதனால், தொண்டைக் கரகரப்பு வரலாம், நெஞ்சுச்சளி கட்டிக்கொள்ளும். ஆஸ்துமா, நாள்பட்ட மூச்சுக்குழாய் அடைப்பு நோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு  மூச்சுவிட மிகவும் சிரமமாக இருக்கும். நெற்றி மற்றும் கன்னங்களில் இருக்கும் சைனஸ் அறைகள், தொற்று காரணமாக பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகம். இதனால், சைனஸ் தலைவலி வரலாம்.
காலையில்  படுக்கையில் இருந்து  எழும்போது, பயங்கரமாக தும்மல் வரும். கன்னங்களில் வலி இருக்கும். நுரையீரலில் ஏற்படும் வைரஸ், பாக்டீரியா, பூஞ்சைத்தொற்று போன்றவற்றால், நிமோனியா காய்ச்சல் வரலாம். நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த குழந்தைகள், முதியவர்களுக்கு இந்த காய்ச்சல் வருவதற்கான வாய்ப்பு அதிகம்.
கொசு
நீர் நிலைகள் இருக்கும் இடத்தில் கொசுக்கள் கட்டாயம் இருக்கும். அதுவும் மழைக்காலத்தில், எல்லா இடங்களிலும் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்திக்கு உதவுகின்றன. இதில், முக்கியமானது மலேரியா காய்ச்சலை உருவாக்கும் கொசு.
‘அனோபீலஸ்’ என்ற பெண் கொசுதான் மலேரியா காய்ச்சலுக்கு மிக முக்கியக் காரணம். இந்தக் கொசு ஒருவரைக் கடித்து, மற்றொருவரைக் கடிக்கும்போது, அதன் எச்சில் வழியாக கிருமிகள் பரவி, மலேரியா காய்ச்சல் ஏற்படுகிறது. மலேரியா காய்ச்சலை ஏற்படுத்தும் ஒட்டுண்ணி, உடலுக்குள் சென்று, சாதகமான காலம் வரும் வரை காத்திருக்கும். நோய் எதிர்ப்பு சக்தி குறைந்ததும் காய்ச்சல் வரும்.
மலேரியாவுக்கு அடுத்தபடியாக நாட்டையே பயமுறுத்தும் கொசு, டெங்குவைப் பரப்பும் ‘ஏடிஸ் எஜிப்டி’. இந்தக் கொசு, அசுத்தமான நீர் நிலைகளில் வாழாது. எனவே, சாக்கடைகளில் இந்தக் கொசு உற்பத்தி ஆவது இல்லை. வீட்டைச் சுற்றி இருக்கும் தேங்காய்ச் சரடுகள், ஓடுகள், பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் போன்றவற்றில் தேங்கும் மழைத் தண்ணீரில் இருந்துதான்  இந்தக் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. வீட்டைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொண்டாலே, டெங்கு காய்ச்சலைத் தவிர்க்க முடியும்.
‘ப்ளேவி வைரஸ்’ என்ற வைரஸ் காரணமாக ஏற்படும் நோய், ‘யெல்லோ ஃபீவர்’.  இதுவும் ஏடிஸ் எஜிப்டி கொசு மூலம்தான் பரவுகிறது. காய்ச்சல், தலைவலி, தசைகள் வலி, வாந்தி எடுக்கும்போது ரத்தம் வருவது போன்றவை இந்தக் காய்ச்சலின் அறிகுறிகள்.
சிக்குன்குனியா காய்ச்சல் வருவதற்கும் ஏடிஸ் ஏஜிப்டி வகை கொசுதான் காரணமாக இருக்கிறது. சிக்குன்குனியா வந்தால், காய்ச்சல் மற்றும் உடலில் உள்ள மூட்டு இணைப்புகளில் கடுமையான வலி போன்றவை ஏற்படும். எலியின் சிறுநீர் வழியாக எலிக்காய்ச்சல் பரவுகிறது. இந்தக் கிருமித்தொற்று உள்ள சிறுநீர், மழை நீரில் கலக்கும்போது, அது மனிதர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்திவிடும். இதனால், வெளியே சென்று வீடு திரும்பியதும், வெதுவெதுப்பான நீரில் கால்களை நன்கு கழுவ வேண்டும். வீட்டைச் சுற்றி நடப்பதாக இருந்தாலும், காலணி அணியாமல் செல்லக் கூடாது.
மெட்ராஸ் ஐ
‘மெட்ராஸ் ஐ’ என அழைக்கப்படும் கண்நோய் மழை சீசனில் அதிகமாகப் பரவும். கண்ணுக்குள் இருக்கும் ‘கஞ்சக்டைவா’ எனும் பகுதியை அடினோ  வைரஸ் தாக்குவதால் கண் சிவந்துவிடும். இதனால், சில நேரங்களில் கண்ணீர் கசிந்துகொண்டே இருக்கும். அடினோ வைரஸ் எளிதில் மற்றவர்களுக்கும் பரவும்.
வயிற்றுப்போக்கு
மழைக்காலத்தில் தண்ணீரில் கழிவுநீர் கலக்க வாய்ப்பு அதிகம். இதனால், காலரா போன்ற வயிற்றுப் போக்கைப் பரப்பும் கிருமிகள் இந்தப் பருவத்தில் வேகமாகப் பரவும். சுகாதாரம் அற்ற முறையில் தயாரித்து விற்கப்படும் உணவுப் பொருட்களை உண்பதன் மூலமும், ஈ மொய்த்த பொருட்களைச் சாப்பிடுவதன் மூலமும் வயிற்றுப்போக்கு ஏற்படலாம். பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகளுக்கு இந்தப் பாதிப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். தெருவோர உணவுகள் மட்டும் இன்றி வீட்டிலும் சுத்தமான உணவு, காய்ச்சி வடிகட்டிய சுத்தமான நீரைப் பருகவில்லை எனில், டைபாய்டு காய்ச்சல் வரலாம்.
மழைக்காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்...
மழைக்காலத்தில் முடிந்தவரை வெளியில் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
தினமும் இரண்டுமுறை வெது வெதுப்பான நீரில் குளிக்க வேண்டும். அதிக சூடும் ஆபத்து.
நன்கு தேய்த்துக் குளிக்கும்போது, நம் உடல் சருமத்தில் இருக்கும் இறந்த செல்கள் நீங்கும்.
சைனஸ், ஆஸ்துமா முதலான தொந்தரவுகள் உள்ளவர்கள், மருத்துவர் அறிவுரையின் பேரில் தாராளமாகத் தலைக்குக் குளிக்கலாம். தலைக்குக் குளித்ததும் உடனடியாக நன்றாகக் காயவைப்பது அவசியம்.
காய்ச்சல், சளி, இருமல், நுரையீரல் தொந்தரவுகள் இருப்பவர்களைத் தவிர, அனைவரும் கண்டிப்பாகக் குளிக்க வேண்டும்.
ஆடையை நன்றாகத் துவைத்துப் பயன்படுத்துவது அவசியம்.
குறிப்பாக, உள்ளாடைகளை தினமும் மாற்ற வேண்டும். மழைக்காலத்தில்  துணி துவைத்தால் காயாது என, சாக்குப்போக்கு சொல்லக் கூடாது. பகல் வேளையில் வெயிலில் துணிகளைத் துவைத்து உலர்த்தினால்தான் கிருமிகள் அழியும். உள்ளாடைகளைத் துவைக்காமல் அணியும்போது, தோல் நோய்கள் வரும்.
வருடத்துக்கு ஒருமுறை ‘இன்ஃப்ளூயன்சா’ (Influenza) தடுப்பூசி போட்டுக்கொள்வது, ஃப்ளூ காய்ச்சலில் இருந்து காப்பாற்றும். குழந்தைகளுக்கு  நிமோனியா காய்ச்சலைத் தடுப்பதற்கான  நியூமோகோக்கல் தடுப்பூசி போட வேண்டும். நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்த முதியவர்கள் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம்.
மழை மற்றும் குளிர்காலத்தில் செரிமானம் சற்று மந்தமாக இருக்கும். இதனால், காரம் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வதைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.
காய்கறி, பழங்களை அதிக அளவில் எடுத்துக்கொள்ளலாம். பழங்களை பகல் வேளையில் சாப்பிட வேண்டும்.
கொய்யா, மாதுளை, பப்பாளி, ஆப்பிள், அன்னாசி, பேரிக்காய், நெல்லிக்காய், ஆரஞ்சு  முதலானவற்றில் வைட்டமின் சி நிறைவாக உள்ளன. இவை, நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச்  செய்யும்.
சாலை ஓரங்களில் விற்கப்படும்  ஃப்ரூட் சாலட், நறுக்கப்பட்ட பழங்கள் போன்றவற்றில் கிருமித்தொற்று இருக்கக்கூடும். எனவே அவற்றைச் சாப்பிடக் கூடாது.
காலை, மதியம், இரவு என மூன்று வேளைகளிலும் புதிதாகச் சமைத்து சாப்பிட வேண்டும். எல்லோராலும் மதியம் சுடச்சுட வீட்டு சாப்பாட்டைச் சாப்பிட முடியாது. ஆனால், காலையில் சமைத்த உணவை ஐந்தாறு மணி நேரங்களுக்கு உள்ளாகச் சாப்பிட்டுவிட வேண்டும்.
நார்ச்சத்து, புரதச்சத்து, மாவுச்சத்து, வைட்டமின்கள், தாதுஉப்பு, கொழுப்புச் சத்து என அனைத்தும் நிறைந்த சரிவிகித உணவைச் சாப்பிட வேண்டும்.
மூலிகை சூப், ரசம், கிரீன் டீ முதலியவற்றை அருந்தலாம்.
மழைக்காலத்தில் அதிகமாக  காபி, டீ குடிக்கத் தோன்றும். ஆனால், அளவுக்கு அதிகமாக அருந்தக் கூடாது.  ஒரு நாளைக்கு இரண்டு மூன்று கப் மட்டுமே காபி, டீ அருந்த வேண்டும்.
சூடாக சத்துமாவுக் கஞ்சியை வீட்டில் தயாரித்துச் சாப்பிடலாம்.
மழைக்காலத்தில் தண்ணீர் தாகம் அதிகம் இருக்காது. அதனால், தண்ணீர் அருந்தாமலேயே இருக்கக் கூடாது. சூப், ரசம், பால், டீ, காபி  எனத் திரவ உணவுகள் மற்றும் இரண்டு லிட்டர் தண்ணீர் அருந்துவது அவசியம்.
சிறுநீரை அடக்கக் கூடாது. சிறுநீர் கழிக்கும் உணர்வு வந்தால் சிறுநீர் கழிப்பது அவசியம்.
பள்ளி செல்லும் மாணவர்கள் வீட்டில் கொதிக்கவைத்து, ஆறவைத்த தண்ணீரை எடுத்துச் சென்று குடிக்க வேண்டும்.
சுற்றுப்புறத்தைச் சுத்தமாக வைத்திருப்பது அவசியம். வீட்டிலும் வீட்டைச்  சுற்றியும் தண்ணீர் தேங்கவிடக் கூடாது. வீட்டைச்சுற்றி அவ்வப்போது பிளீச்சிங் பவுடர் தூவி சுத்தமாக வைத்திருக்கலாம்.
குப்பைகளை அவற்றுக்கு உரிய தொட்டிகளில் கொட்டவேண்டும். பிளாஸ்டிக் பைகள், தேங்காய் ஓடுகள், டயர்கள் போன்றவற்றை வீட்டிலும் வீட்டுக்கு அருகிலும் இருந்து அகற்ற வேண்டும்.
வெளியில் இருந்து வீட்டுக்கு வரும்போது வாசலிலேயே கை, கால், முகம் போன்றவற்றை கழுவிவிட வேண்டும்.
செருப்பு, ஷூ போன்றவற்றை சுத்தம் செய்ய வேண்டும். வீட்டுக்குள் வந்ததும் முதலில் உடைகளை மாற்றுவது அவசியம்.
இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால், கைவைத்தியமோ, மருந்தகங்களில் மாத்திரை வாங்கி விழுங்கவோ கூடாது. உடனடியாக அருகில் உள்ள பொது மருத்துவரை அணுக வேண்டும்.
மருத்துவமனைக்குச் சென்று ரத்த பரிசோதனை செய்து, என்ன வகையான காய்ச்சல் என்பதை அறிந்து, அதற்கேற்ப சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.
எப்போதும் கையில் ஒரு கர்ச்சீப் வைத்திருப்பது  அவசியம். தும்மல் வந்தாலோ, சளி வந்தாலோ கர்சீப் பயன்படுத்த வேண்டும்.
பொது இடங்களில் சளியை காறித் துப்பக் கூடாது. கர்ச்சீப்பை தினமும் நன்றாக வெந்நீரில் கழுவ வேண்டும்.
அடிக்கடி ஆவி பிடிக்க வேண்டும். ஆவி பிடிப்பது நுரையீரலுக்கு நல்லது. மிதமான சூட்டில் உள்ள வெந்நீரில் கல் உப்பு போட்டு, தொண்டையில் படுமாறு வாய்கொப்பளிப்பது தொண்டைப் புண்களை வராமல் தடுக்கும்.
மழைக்காலம் முழுவதும் ஒரே பெட்ஷீட், போர்வையைப்  பயன்படுத்தக் கூடாது. 15 நாட்களுக்கு ஒருமுறை பெட்ஷீட் மற்றும் போர்வையைத் துவைத்து,  உலர்த்திப் பயன்படுத்த வேண்டும்.
செயற்கை ரசாயனங்கள் கலந்த கொசுவத்தி, கொசுவத்தி திரவம் போன்றவற்றைத் தவிர்த்து, முடிந்தவரை மாலை நான்கு மணிக்கெல்லாம் ஜன்னல்களைப் பூட்டி, கொசுக்களை வீட்டுக்குள் வரவிடாமல் தடுப்பதே சிறந்த வழி.

நன்றி : விகடன்

Tuesday, November 3, 2015

தமிழ்த்தாயின் இஸ்லாமியப் புதல்வர்கள்


தமிழ்மொழியின் ஆக்கபூர்வமான செயல்பாடுகளில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டிருக்கிறார்கள் இஸ்லாமியர்கள்

இஸ்லாமியர்களுக்கும் இந்துக்களுக்கும் இடையே நிலவும் உறவுமுறையைப் பொறுத்தவரை இந்தியாவின் மற்ற பாகங்களில் இருந்து தமிழகம் வரலாற்றுபூர்வமாகவே வேறுபட்டு வந்துள்ளது. தமிழ்நாட்டின் வரலாற்றில் கடந்த 800 ஆண்டுகளாகச் சாதிகளுக்கு இடையே நடந்த மோதல்களைப் பற்றிய வரலாற்றுத் தகவல்கள் ‘வலங்கை இடங்கை போராட்டங்கள்’ என்று கல்வெட்டுகளிலும் பட்டயங்களிலும் பதிவாகியுள்ளன. ஆனால் இருவேறுபட்ட மதத்தைச் சார்ந்தவர்கள் தங்களுக்குள் பகை கொண்டு போராடினார்கள் என்ற தகவல்கள் மிகவும் குறைவு. ஏன் அத்தகைய தகவல்கள் இல்லை என்றே சொல்லிவிடலாம்.
தமிழக வரலாற்றில் இஸ்லாமியர்களைப் பற்றிய குறிப்புக்கள் கி.பி.12-ம் நூற்றாண்டில் இருந்தே பதிவாகியிருப்பதைக் காணமுடியும். 14-ம் நூற்றாண்டில் தோன்றிய ‘பல்சந்தமாலை’ என்ற சிற்றிலக்கியத்துடன் இஸ்லாமிய இலக்கியப் பதிவுகள் தமிழ் இலக்கியத்தில் இடம்பெறத் தொடங்கின. அடுத்த வந்த காலகட்டங்களில் பல்வேறு இஸ்லாமியப் புலவர்கள் தங்களுடைய மதம் சார்ந்த இலக்கியங்களை எழுத ஆரம்பித்தனர். ‘சீறாப்புராண’த்தைப் பாடிய உமறுப் புலவரைத் தமிழ் வரலாறு நன்கு அறியும்.

இந்து புராணங்களின் தாக்கம்

அதேநேரத்தில் இஸ்லாமிய மதம் சார்ந்த மிகச் சிறந்த புலவர்கள் பலர் இந்துமதம் சார்ந்த புராணங்களில் இருந்தும் தங்களுக்கான கதைப்பொருளை எடுத்து அற்புதமான பாடல்களை இயற்றியுள்ளனர். அத்தகையவர்களில் சையது முகமது அண்ணாவியார், கா. பீர்காதறொலி ராவுத்தர், இளையான்குடி ஸ்பெஷல் மேஜிஸ்திரேட்டும் சிவகங்கை தாலுகா போர்டு உறுப்பினருமான எம்.கே.எம். அப்துல்காதிறு ராவுத்தர், பிச்சை இப்ராஹிம் புலவர் போன்றவர்கள் குறிப்பிடத் தக்கவர்கள்.

சையது முகமது அண்ணாவியார் பாடிய மகாபாரத நூலின் பெயர் ‘சாந்தாதி அசுவமகம்’. மகாபாரதத்தில் உள்ள 14-ம் பருவத்துக் கதையை 4,104 பாடல்களில் இவர் பாடியுள்ளார். பாரதப்போர் முடிந்தவுடன் போரினால் ஏற்பட்ட மனக்கவலையை ஆற்றிக்கொள்வதற்காக தருமன் வியாசர் கூறியபடி அசுவமேதயாகம் செய்ததை விவரிக்கும் பகுதி இது. சாந்தம் என்றால் அமைதி, அசுவம் என்றால் குதிரை, மகம் என்றால் யாகம். எனவே இந்தப் பகுதிக்கு சாந்தாதி அசுவமகம் என்று இவர் பெயரிட்டுள்ளார்.

இப்புலவரைப் பற்றி கலைமாமணி கவி கா.மு.ஷெரீப் 1992-ல் சையது முகமது அண்ணாவியார் நினைவுமலரில் எழுதியுள்ள ஒரு பகுதியைத் தமிழ்ப் பல்கலைக் கழகப் பதிப்பில் மேற்கோள் காட்டுகின்றனர். “நான் அரசியலில் இருந்தபோது பேராவூரணிக்குக் கீழ்பால் உள்ள கொன்றைக்காடு எனும் ஊருக்குச் சென்றிருந்தேன். இரவு பொதுக்கூட்டத்தில் பேசிவிட்டு, ஒரு விவசாயி வீட்டின் முன்புறத்தில் படுத்திருந்தேன். 70 வயது உடைய ஒருவர் வந்தார். தனக்குள்ள சாரீரவளம் கூட்டிப் பாடிடலானார். அவர் பாடியது மகாபாரத்தில் உள்ள கர்ணனைப் பற்றிய நெடிய பாட்டு. “இது எந்தப் பாரதத்தில் உள்ளது?” எனக் கேட்டேன். “அதிராம்பட்டினம் அண்ணாவியார் பாடியது” என்றார். “தனிநூலா?” என்று கேட்டேன். “ஆமாம், கர்ணபருவம் என்ற பெயரில் இப்பொழுது நான் பாடிய அம்மானைப் பாடலை அவர்தான் பாடியுள்ளார்” என்று பகர்ந்தார். அத்துடன் அவர் நிற்கவில்லை. “எங்களின் (இந்துக்களின்) 18 புராணங்களையும் அம்மானை அம்மானையாக அண்ணாவியார் எழுதியுள்ளாரே உங்களுக்குத் தெரியாதா?” என்று கேட்டார். பாடியது இப்போதுள்ள அண்ணாவியார் அல்ல. இவருடைய பாட்டனார் (அவரும் இதே பெயர் உடையவர்தான்) எழுதியது. இந்த அண்ணாவியாருக்கே வயது 90-க்கு மேல். இவருடைய பாட்டனார் காலம் 100 ஆண்டுகளையும் தாண்டியது. அவ்வாறு இருந்தும் இன்றைக்கும் கிராமங்களில் அவர் பாடல் பாடப்படுகிறது. அந்த அண்ணாவியாரை ‘தெய்வம்’ என்று குறிப்பிட்டார் அந்த முதியவர். இவர் இந்துபுராணக் கதைகள் பலவற்றை அம்மானை என்ற இசைப்பாடல் வடிவத்தில் பாடியிருப்பதாகத் தகவல்கள் உண்டு. ஆயினும் இப்பொழுது அச்சில் கிடைக்கும் நூல் ‘மகாபாரத அம்மானை’ என்ற ஒன்றுதான். இந்நூல் ரோஜா முத்தையா நூல் நிலையத்தில் உள்ளது.

1904-ல் பாம்பன் பாலசுப்ரமணியசுவாமி கோவில் குடமுழுக்கு நடந்ததைச் சிறப்பித்து எம்.கே.எம். அப்துல்காதிறு ராவுத்தர் பாடிய ‘பாம்பன் பாலசுப்ரமணியசுவாமி கோவில் கும்பாபிஷேக வழிநடைச்சிந்து’ என்ற நூலைப் பற்றி மதுரை விவேகபாநு பத்திராதிபர் எம்.ஆர்.கந்தசாமி கவிராயர் புகழ்ந்து கூறியிருக்கிறார்.

கா. பீர்காதறொலி ராவுத்தர் 1868-ல் திருவாசகத்தைப் பதிப்பித்தார். அப்பதிப்பில் திருவாசகத்தின் முதல் பாடலாக உள்ள சிவபுராணம் என்பது பல பிரதிகளில் சிவபுராணத்து அகவல் என்று எழுதப்பட்டிருந்தது. திருவாதவூரர் புராணத்திலும் அகவல் என்றே இப்பகுதி குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு கூறுவது பொருந்தாது என்பதை யாப்பருங்கலவிருத்தி, தொல்காப்பியம் போன்ற நூல்களில் குறிப்பிட்டுள்ள பகுதியை மேற்கோளாகக் காட்டிய பீர்காதறொலி ராவுத்தர், தொல்காப்பியச் சூத்திரப்படி இப்பாடல் கலிவெண்பா என்று குறிப்பு எழுதினார். இந்தக் குறிப்பை பிற்காலத்தில் திருவாசகத்தைப் பதிப்பித்தவர்கள் ஏற்றுக்கொண்டார்கள்.

கருவாட்டுக் கடை பாடம்

திருச்சியைச் சேர்ந்த முத்துவீரப்ப உபாத்தியாயரின் மாணவர்கள் சுமார் 3 தலைமுறைகளாக தொல்காப்பியத்தைப் படித்தும் படிப்பித்தும் வந்தனர். அத்தகைய மாணவர்களில் குறிப்பிடத் தக்கவர் 1908-ல் மறைந்த பிச்சை இப்ராஹிம் புலவர். இவருடைய மாணவர்தான் சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற காப்பியங்களுக்குச் சிறந்த உரைகளை வரைந்த பெரும்புலவர் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் ஆவார்.
திருச்சி நகரில் பெரிய கருவாட்டுக்கடை முதலாளியாக இருந்த இப்ராஹிம் புலவர், பிஷப் ஹீபர் கல்லூரி நிர்வாகம் கேட்டு கொண்டதற்கு இணங்க அங்குள்ள மாணவர்களுக்குத் தமிழ்க் கற்பித்து வந்தார். ரா. ராகவையங்கார் போன்ற பெரும்புலவர்களே அவரது கருவாட்டுக் கடைக்கு வந்து பல செய்திகளைக் கேட்டுக்கொண்டதாகவும் அவ்வாறு வந்த புலவர்கள் பெரும்பான்மையோர் சைவர்கள் ஆகையால் தங்களுடைய மூக்கைப் பொத்திக்கொண்டு பாடம் கேட்டனர் என்றும் என்னுடைய ஆசிரியர் பாவலர் ச.பாலசுந்தரம் கூறியிருக்கிறார். (பேராசிரியர் ச. பாலசுந்தரம் தொல்காப்பியம் முழுமைக்கும் உரை எழுதி இருக்கிறார். இந்த உரையை கோபாலய்யர் போன்ற பெரும்புலவர்கள் பாராட்டி ஏற்றுக்கொண்டனர் என்பது குறிப்பிடத் தக்கது).

அள்ளித் தந்த கொடையாளர்கள்

சங்க இலக்கியங்களில் ஒன்றான குறுந்தொகை 1915-ம் வருடத்தில் சவுரிபெருமாள் அரங்கனார் என்ற பெரும்புலவரால் முதன்முதலாக வெளியிடப்பட்டது. குறுந்தொகைக்குப் பழைய உரை ஏதும் இல்லாததால் பதிப்பாசிரியரே நூல் முழுமைக்கும் சிறந்த உரை எழுதியுள்ளார். அத்தருணத்தில் வெகு சிலர் தனக்கு உதவி செய்ததையும் குறிப்பிட்டுள்ளார். அத்தகையவர்களுள் அவர் பணிபுரிந்த கல்லூரியின் முதல்வர் மஹம்மத் இப்ராஹிம் குரைஷி, குறிப்பிடத் தக்கவர்.
தமிழ்மொழியில் வியாச பாரதத்தை முழுமையாக மொழிபெயர்க்கச் செய்து (சுமார் 10,000 பக்கத்தில்) வெளியிட்டவர் ம.வீ. இராமானுஜாசாரியார். இவர் உ.வே.சாமிநாத அய்யருடன் கும்பகோணம் கல்லூரியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்துவந்தவர். 1903-லிருந்து 1933 வரை சுமார் 30 ஆண்டுகள் மகாபாரத மொழிபெயர்ப்பில் ஈடுபட்டு அதனை முழு மையாகச் செய்து முடித்தவர். அந்தக் காலகட்டங்களில் மிகப்பலரிடம் அவர் உதவிகளைப் பெற்றிருக்கிறார். அப்படி உதவி செய்தவர்கள் பலரையும் அவர் நன்றியுடன் தன் வனபர்வம் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். அவர்களில் இருவர் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர்கள். அதில் ஒருவர் ஆடுதுறையைச் சேர்ந்த தோல் வியாபாரி என்பது குறிப்பிடத் தக்கது.

இவ்வாறு இஸ்லாமியர்கள் பலர் தமிழ்மொழியின் பல்வேறு ஆக்கபூர்வமான செயல்பாடுகளில் பல்வேறு காலங்களில் தங்களுடைய ஆதரவையும் ஒத்துழைப்பையும் நல்கியிருக்கிறார்கள். கடந்த கால தமிழ்நாட்டின் வரலாற்றை முறையாகத் திருப்பி பார்ப்பவர்களுக்கு இது தெளிவாகப் புலப்படும்.

நன்றி :  தி இந்து

Monday, November 2, 2015

இலங்கைச் சிறுத்தை (Sri Lankan Leopard, Panthera pardus kotiya)


இலங்கைச் சிறுத்தை
SriLankaLeopard-ZOO-Jihlava.jpg
மிருகக்காட்சிச்சாலையில் உள்ள ஓர் இலங்கைச் சிறுத்தை
காப்பு நிலை
உயிரியல் வகைப்பாடு
திணை:விலங்கினம்
தொகுதி:முதுகுநாணிகள்
வகுப்பு:பாலூட்டிகள்
வரிசை:ஊனுண்ணி
குடும்பம்:பூனைப் பேரினம்
பேரினம்:பான்தெரா
இனம்:P. pardus
துனையினம்:P. p. kotiya
மூவுறுப்புப் பெயர்
Panthera pardus kotiya
தெரனியாகல, 1956
Srilankan leopard range.jpg
இலங்கைச் சிறுத்தைகளின் பரம்பல்
இலங்கைச் சிறுத்தை (Sri Lankan LeopardPanthera pardus kotiya) என்பது இலங்கையை தாயகமாகக் கொண்ட சிறுத்தைதுணையினமாகும். வனவிலங்கு வர்த்தகம், மனித-சிறுத்தை முரண்பாடு என்பவற்றால் இதன் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்து வருகிறது. இதனால் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம்இச்சிறுத்தை இனத்தை அருகிய இனம் என பட்டியலிட்டுள்ளது. 250 மேற்பட்ட எண்ணிக்கையில் இவை இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளன.
இலங்கைச் சிறுத்தை துணையினம் பற்றி முதன் முதலில் 1956 இல் இலங்கை விலங்கியலாளரான போலஸ் எட்வட் பீரிஸ் தெரனியாகலை என்பவரால் குறிப்பிடப்பட்டது.

பண்புகள்

இலங்கையில் காணப்படும் சிறுத்தைகள் ஏனைய நாடுகளில் காணப்படும் சிறுத்தைகளிலிருந்து பல விதங்களில் வேறுபடுகின்றன. இந்தியாச் சிறுத்தைகளிலிருந்து கடலினால் பிரிக்கப்பட்டிருப்பதனால் இலங்கைச் சிறுத்தைகள் வித்தியாசமான முறையில் கூர்ப்பு அடைந்திருப்பதாக விலங்கியலாளர்கள் கருதுகின்றனர். எனவே இவற்றை அவர்கள் உப இனமொன்றாகப் பாகுபடுத்தி உள்ளனர். இலங்கையில் மட்டுமே காணப்படும் உப இனமான இலங்கைச் சிறுத்தை பந்ரா பார்டஸ் கொட்டியா எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இலங்கைச் சிறுத்தைகள் பழுப்பு மஞ்சள் தோலில் கரும் புள்ளிகள், இந்தியாச் சிறுத்தையைவிட சிறிய, நெருக்கமாக ரோசா மலர்கள் போன்ற அமைப்பினைக் கொண்டு காணப்படும்.
இருபதாம் நூற்றாண்டில் ஏழு பெண் சிறுத்தைகளிடம் செய்யப்பட்ட ஆய்வின்படி, சராசரி எடை 64 lb (29 kg) ஆகவும், தலை முதல் உடல் வரையான சராசரி நீளம் 3 ft 5 in (1.04 m) ஆகவும், தலை முதல் வால் வரையான சராசரி நீளம் 2 ft 6.5 in (77.5 cm) ஆகவும் இருந்தது. 11 ஆண் சிறுத்தைகளிடம் செய்யப்பட்ட ஆய்வின்படி, சராசரி எடை 124 lb (56 kg) ஆகவும் இருந்தது.

சூழலியலும் நடத்தையும்


குன்றிலிருந்து கொட்டாவிவிடும் சிறுத்தை

இலங்கைச் சிறுத்தை
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                     இலங்கைச் சிறுத்தைகள் வருடத்தின் எந்தகாலத்திலும்இனப்பெருக்கத்தில்ஈடுபடக்கூடும். யால தேசிய வனத்திலுள்ள சிறுத்தைகள் சூன் - ஆகத்து, திசம்பர் - சனவரி காலத்திலும் உச்சமாக இனப்பெருக்கத்தில் ஈடுபடுவது அவதானிக்கப்பட்டுள்ளது. இலங்கைச் சிறுத்தையில் கர்ப்பகாலம் 98 – 105 நாட்களாகும். பொதுவான இவை இரு குட்டிகளையே ஈனுகின்றன. ஒரே சூலில் ஒன்று முதல் நான்கு வரையான குட்டிகள் ஈனப்படலாம். குட்டிகள் முதிர்ச்சி நிலையை அடைய 18 மாதங்கள் பிடிக்கும். ஒரே சூலில் அதிக எண்ணிக்கையான குட்டிகள் பிறக்கும் சந்தர்ப்பத்தில் சில குட்டிகளே பிழைத்து வளர்கின்றன.
யால தேசிய வனத்தில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வு இலங்கைச் சிறுத்தை மற்றைய சிறுத்தை துணையினங்களைவிட கூடி வாழும் இயல்பு குறைந்தவை என்கின்றன. பெண்களையும் குட்டிகளையும் தவிர்த்து, அவை தனியே வேட்டையாடுகின்றன. இருபால் விலங்குகளும் தத்தமது ஆட்சிப் பிரதேசத்தில் வாழ்கின்றன. பெண் சிறுத்தைகளின் சிறு பிரதேசத்தையும் சில ஆண் சிறுத்தைகளின் பிரதேசத்தையும் தன் பிரதேசமாக்கிக் கொள்கின்றன. அவை இரவில் வேட்டையாடுவதனையே விரும்புகின்றன. ஆனாலும் அவை பகலிலும் இரவிலும் வேட்டையாடக் கூடியன. தாம் கொன்ற இரைகளைச் மரங்களுக்கு அவற்றால் இழுத்துச் செல்ல முடியும். ஆனாலும், தமக்கு போட்டி இல்லை என்பதால் போதியயளவு இரை கிடைக்கும் என்பதாலும் குறைவாகவே மரங்களுக்கு இரையைக் கொண்டு செல்கின்றன. சிறுத்தைகள் உயர் ஊனுண்ணி என்பதால் தங்கள் இரையைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் இல்லை.
இலங்கைச் சிறுத்தை அந்நாட்டின் உயர் ஊனுண்ணியாகவுள்ளது. பல பூனைக் குடும்ப இனங்கள் போல் இதுவும் சிறிய பாலூட்டிகள்பறவைகள்ஊர்வன அத்துடன் பெரிய விலங்குகளையும் உணவாக் கொள்ளும். உலர் வலயத்தில் அதிகம் காணப்படும் இலங்கைப் புள்ளிமான் இதற்கு அதிகளவில் இரையாகின்றன. இது மரைகள், குரைக்கும் மான்கள், காட்டுப்பன்றிகள்குரங்குகள் என்பவற்றையும் உணவாகக் கொள்கின்றன.
மற்றைய சிறுத்தைகள் போன்றே இவையும் வேட்டையாடுகின்றன. ஒலி எழுப்பாமல், பதுங்கி இரைக்கு அருகில் சென்றதும் விரைவாக உச்ச வேகத்தில் தாக்குதல் நடத்துகின்றன. இரையின் தொண்டையில் கடிப்பதன் மூலம் அவற்றைக் கொல்கின்றன.

வாழிடம்


வில்பத்து தேசிய வனத்தில்இலங்கைச் சிறுத்தை
வரலாற்றளவில் இலங்கைத் தீவை தங்கள் வாழிடமாக இலங்கைச் சிறுத்தைகள் கொண்டுள்ளன. இவற்றின் வாழிட வகைகளை பின்வருவாறு 3 வகைகளாகப் பிரிக்கலாம்.
  • 1000 மிமி இற்கு குறைவான மழைவீழ்ச்சி கொண்ட வறள் வலயம்
  • 1000-2000 மிமி இற்கு இடைப்பட்ட மழைவீழ்ச்சி கொண்ட உலர் வலயம்
  • 2000 மிமி இற்கு அதிகமான மழைவீழ்ச்சி கொண்ட ஈர வலயம்
2001 முதல் 2002 வரையான ஆண்டுகளில், கடற்கரையை அண்டிய வறள் வலயத்தில் உள்ள யால தேசிய வனத்தில் "பகுதி I" இல் வளர்ந்த சிறுத்தை எண்ணிக்கை அடர்த்தி 100 km2 (39 sq mi) இற்கு 17.9 என கணக்கிடப்பட்டன. இவ் பகுதி I பெரிய கடற்கரை சமநிலத்தையும் மனிதனாலும் இயற்கையாகவும் உருவாக்கப்பட்ட நீர் கொள்ளும் இடங்களையும் ஊனுண்ணிகளுக்கான மிக அடர்த்தியான பகுதியாகவும் உள்ள இது 140 km2 (54 sq mi) ஆல் சுழப்பட்டது.

அச்சுறுத்தல்

சிங்கம், புலி போன்ற வலிமையில் கூடிய பெரிய ஊனுண்ணிகள் வாழும் நாடுகளில் சிறுத்தைகள் தம்உணவுக்காக அவற்றுடன் போட்டியிட வேண்டியுள்ளது. இப்போட்டி காரணமாக வலிமை கூடிய விலங்குகளால் சிறுத்தைகள் கொல்லப்படுவதும் உண்டு. இலங்கைக் காடுகளில் சிங்கம், புலி போன்றவை இல்லாமையினால் சிறுத்தைகளுக்கு அவ்வாறான போட்டி இல்லை. எனினும், மனிதன்சிறுத்தைகளின் பிரதான எதிரியாக மாறியுள்ளான். எனினும், இயற்கையான இரைகளுக்குத் தட்டுப்பாடு ஏற்படும்போது அவை மனிதக் குடியேற்றங்களை நாடிச் சென்று கால்நடைகளை கொன்று தின்கின்றன. இதனால் சிறுத்தைகளைக் கொல்வதற்கு மனிதன் நாடுகின்றான். மேலும், வனவிலங்கு வர்த்தகத்திற்காக சட்டவிரோத வேட்டையாடுவதால் (குறிப்பாக இந்தியாவிற்கு) இவை அச்சுறுத்தப்படுகின்றன.

பாதுகாப்பு


மிருகக்காட்சிசாலையில் ஓர் சிறுத்தை
சிறுத்தைத் தோலுக்கு கேள்வி இருப்பதனால் தோலைப்பெறுவதற்காகப் பெருந்தொகையான சிறுத்தைகள் கொல்லப்படுகின்றன. சேனைப் பயிர்ச்செய்கை, காடழித்தல்போன்றனவும் சிறுத்தைகளின் இயல்பான வாழ்க்கைக்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளன. இதனால் இலங்கைச் சிறுத்தைகளைப் பாதுகாக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம் (IUCN) இலங்கைச் சிறுத்தையை அருகிய இனமாகப் (அழிவுறும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ள விலங்காகப்) பிரகடனம் செய்துள்ளது. "காட்டுயிர் பாதுகாப்பு நம்பிக்கை" (Wildlife Conservation Trust) இலங்கை அரசாங்கத்துடன் நெருக்கமாக இலங்கைச் சிறுத்தை பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளது. இதற்காக இவ்வமைப்பு ஆய்வுகளைச் செய்துவருகிறது.[

கூண்டில் அடைப்பு

திசம்பர் 2011 இன்படி, உலகளாவிய மிருகக்காட்சிச்சாலையில் 75 இலங்கைச் சிறுத்தைகள் உள்ளன. ஐரோப்பிய அருகிய இனங்கள் நிகழ்ச்சித்திட்டம் 27 ஆண், 29 பெண், பால் தெரியாத 8 இலங்கைச் சிறுத்தைகளைக் கொண்டுள்ளது.

-கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.-

    வெள்ளி எறும்புகள் வாழும் பாலைவனம் சகாரா !


    சஹ்றா என்ற சொல்லுக்கு அரபு மொழியில் பாலைவனம் என்றே பெயர். அதனால்தான் இந்த பாலைவனத்துக்கும் சகாரா என்றே பெயர் வழங்கப்பட்டிருக்கக்கூடும். இதன் பரப்பளவு சுமார் மூன்றரை கோடி சதுர மைல்கள். இந்தப் பாலைவனம் லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் உருவாகி இருக்கக்கூடும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதற்கும் முன்னர் ஏரிகளும், ஆறுகளும் இங்கே இருந்தனவாம்.

    அல்ஜீரியா, தசாது, எகிப்து, எரித்திரியா, லிபியா, மாலி, மௌரிடானியா, மொரோகோ, நைகர், சூடான், தூனிசியா, மேற்கு சகாரா ஆகிய 12 நாடுகளைத் தொட்டு சகாரா பாலைவனம் விரிந்து பரந்துள்ளது. நதிகள் ஓடியதற்கான சான்றுகளும், அந்த நீர்நிலைகளில் முதலை உட்பட பல வகை மீன்கள் வாழ்ந்ததற்கான படிமச் சான்றுகளும் கிடைத்துள்ளன. அதனால் மீண்டும் 15-ஆயிரம் ஆண்டுகள் கழித்து மாற்றங்கள் ஏற்பட்டு, இந்த இடம் மீண்டும் பசுமை அடையும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

    தற்போதும்கூடப் பல ஆறுகள் குறிப்பிட்ட காலத்தில் உற்பத்தி ஆகி ஓடிக்கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் இவை ஆண்டு முழுவதும் ஓடாமல் வற்றிவிடும் போக்கைக் கொண்டவை. இங்கு ஓடும் வற்றாத நதிகள் நைகர் மற்றும் நைல் நதிகள்.

    பொதுவாக சகாரா உயிர் வாழ்க்கைக்கு உரிய இடமல்ல என்றாலும், சில நீர்நிலைகளை ஒட்டி மனிதர்களும், விலங்குகளும் வாழ்ந்துதான் வருகின்றனர். அதிக அளவு ஒட்டகங்களும், ஆடுகளும் மட்டுமே இங்கு மனிதர்களால் பயன்படுத்தப்படுகின்றன.

    இங்கு வாழும் மஞ்சள் நிற தேள் மிகுந்த நச்சுத் தன்மை கொண்டது என்றாலும், இது கொட்டி மனிதர்கள் இறப்பதில்லை. நரிகள் உண்டு. நீரில்லாமலேயே நீண்ட நாட்கள் வாழக்கூடிய ரிக், தாமா என்ற சிறு மான் வகைகளும் இங்கு உண்டு. சகாரா சிறுத்தைகளும் உண்டு. ஊர்வனவான பல்லிகள் மற்றும் மணல் விரியன்கள் காணப்படும் இந்தப் பிரதேசத்தில் பறவை இனத்தைச் சேர்ந்த நெருப்புக் கோழிகளும் உண்டு. வெள்ளி எறும்புகள் என அபூர்வ பெயர் பெற்ற எறும்புகள் சூடு தாங்காமல் இறக்கும் உயிரினங்களை உணவாக உண்டு மணலுக்கு அடியில் வாழ்ந்து உயிர் பிழைக்கின்றன.

    ன்றி :  தி இந்து