Friday, December 20, 2013

மறை நீர் (Virtual water)

                      A4 layout

பாட்டிலில் அடைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட ஒரு லிட்டர் குடிநீரின் சராசரி விலை ரூ.50.  இது நமக்கு தெரியும். ஆனால், எத்தனைப் பேருக்கு மறை நீர் (Virtual water) விலை தெரியும்?

மறை நீர் என்பது ஒருவகை பொருளாதாரம். மொத்த உள்நாட்டு உற்பத்தியை (Gross domestic product) ஒரு நாட்டின் பணத்தைக் கொண்டு மதிப்பிடுவதுபோல ஒரு நாட்டின் நீர் வளத்தை கொண்டு மதிப்பிடும் தண்ணீர் பொருளாதாரம் இது. இதை கண்டுபிடித்தவர் இங்கிலாந்தை சேர்ந்த பொருளாதார வல்லுநர் ஜான் ஆண்டனி ஆலன். இந்த கண்டுபிடிப்புக்காக ‘ஸ்டாக்ஹோம் வாட்டர் -2008’ விருது பெற்றவர்.

ஒரு பொருளுக்குள் மறைந்திருக்கும் கண்ணுக்கு தெரியாத நீர் - இதுவே மறை நீர். இது ஒரு தத்துவம், பொருளாதாரம். ஒரு மெட்ரிக் டன் கோதுமை 1,600 கியூபிக் மீட்டர் தண்ணீருக்கு சமம் என்கிறது மறைநீர் தத்துவம். மறை நீர் என்பதற்கு ஆலன் தரும் விளக்கம், “கோதுமை தானியத்தை விளைவிக்க நீர் தேவை. ஆனால், அது விளைந்தவுடன் அதை உருவாக்கப் பயன்பட்ட நீர் அதில் இல்லை. ஆனால், அந்த நீர், கோதுமை தானியங்களுக்காகத்தானே செலவிடப்பட்டிருக்கிறது அல்லது மறைந்திருக்கிறது. இதுவே மறை நீர். கோதுமை தேவை அதிகம் இருக்கும் ஒரு நாடு, ஒரு மெட்ரிக் டன் கோதுமையை இறக்குமதி செய்யும்போது, அந்த நாடு 1,600 கியூபிக் மீட்டர் அளவுக்குத் தனது நாட்டின் நீரைச் சேமித்துக்கொள்கிறது'' என்கிறார் ஆலன்.

புத்திசாலி நாடுகள்!

நீரின் தேவையையும் பொருளின் தேவையையும் துல்லியமாக ஆய்வுசெய்து அதற்கு ஏற்ப உற்பத்தி, ஏற்றுமதி, இறக்குமதி கொள்கைகளை வகுக்க வேண்டும். சீனா, இஸ்ரேல் மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் அப்படித்தான் செய்கின்றன. சீனாவின் பிரதான உணவு பன்றி இறைச்சி. ஒரு கிலோ பன்றி இறைச்சி உற்பத்திக்கான மறை நீர் தேவை 5,988 லிட்டர். அதனால், சீனாவில் பன்றி உற்பத்திக்கு கெடுபிடி அதிகம். ஆனால், தாராளமாக இறக்குமதி செய்துகொள்ளலாம். ஒரு கிலோ ஆரஞ்சுக்கான மறை நீர் தேவை 560 லிட்டர். சொட்டு நீர் பாசனத்தில் கோலோச்சும் இஸ்ரேலில் ஆரஞ்சு உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கு கெடுபிடிகள் அதிகம். இவ்விரு நாடுகளும் ஒவ்வொரு பொருளுக்குமான மறை நீர் தேவையைத் துல்லியமாகக் கணக்கிட்டு அதன்படி ஏற்றுமதி, இறக்குமதி கொள்கைகளை வகுத்துள்ளன.

முட்டையினுள் இருக்கும் ஒரு கிராம் புரோட்டீனுக்கு 29 லிட்டர் மறை நீர் தேவை. ஒரு கிலோ பிராய்லர் கோழிக் கறி உற்பத்திக்கான மறை நீர் தேவை 4325 லிட்டர்.


                  A3 print

பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் 
ண்டுக்கு லட்சக்கணக்கான கார்களைத் தயாரித்து அவர்கள் நாடு உட்பட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றன. ஏன்? அவர்களின் நாடுகளில் அவற்றை உற்பத்தி செய்ய முடியாதா? இடம்தான் இல்லையா? உண்டு. இங்கு மனித சக்திக்கு குறைந்த செலவு என்றால், நீர்வளத்துக்கு செலவே இல்லை. 1.1 டன் எடை கொண்ட ஒரு கார் உற்பத்திக்கான மறை நீர் தேவை நான்கு லட்சம் லிட்டர்கள்.


ஒரு எருமை அல்லது மாட்டின் ஆயுள்கால மறை நீர் தேவை 18,90,000 லிட்டர். 250 கிலோ கொண்ட அக்கால்நடையில் இருந்து ஆறு கிலோ தோல் கிடைக்கும்.

ஒரு கிலோ தோலை பதனிட்டு அதனை செருப்பாகவோ கைப்பையாகவோ தயாரிக்க 17,000 லிட்டர் மறை நீர் தேவை.

 ராக்கெட் தயாரிக்கும் வல்லரசுகளுக்கு ஜட்டி தயாரிக்க தெரியாதா? 250 கிராம் பருத்தி உற்பத்திக்கான மறை நீர் தேவை 2495 லிட்டர்கள். ஒரு ஜீன்ஸ் பேண்ட் தயாரிக்க 10,000 லிட்டர் மறை நீர் தேவை.

தண்ணீருக்கு எங்கு கணக்கு?

ஒரு பொருளின் விலை என்பது அதன் எல்லா செலவுகளையும் உள்ளடக்கியதுதானே? அப்படி எனில், பெரும் நிறுவனங்கள் எல்லாம் தண்ணீருக்கு மட்டும் ஏன் அதன் விலையை செலவுக் கணக்கில் சேர்ப்பது இல்லை. ஏனெனில், நம்மிடம் இருந்து இலவசமாகத் தண்ணீரைச் சுரண்டி நமக்கே கொள்ளை விலையில் பொருட்களை விற்கின்றன அந்நிறுவனங்கள்.

இப்படி எல்லாம் முட்டையில் தொடங்கி கார் வரைக்கும் கணக்கு பார்த்தால் நாட்டின் வளர்ச்சி என்னவாவது? நாம் என்ன கற்காலத்திலா இருக்கிறோம் என்கிற கேள்விகள் எழாமல் இல்லை. கண்ணை மூடிக்கொண்டு பொத்தாம்பொதுவாய் ஏற்றுமதி, இறக்குமதி செய்ய வேண்டாம் என்கிறது மறை நீர் பொருளாதாரம்.

மறை நீருக்கு மதிப்பு கொடுத்திருந்தால் உலகின் பணக்காரர்களிடம் பட்டியலில் என்றோ இடம் பிடித்திருப்பான்  விவசாயி. 


# thehindu

Friday, December 6, 2013

தமிழில் 'ஆஃப்லைன் அகராதி'யை இலவசமாக வழங்கும் இ-கலைவன்!



(டவுன்லோடு இணைப்பு கீழே)

இணையத்தில் உலா வரும் தமிழர்களுக்கும், தமிழ் மாணவர்களுக்கும் உதவும் நோக்கத்தில் ஆஃப்லைனிலேயே இயங்கக்கூடிய ‘ஆங்கிலம் - தமிழ்' அகராதி மென்பொருளை உருவாக்கி இருக்கிறார், திருப்பூரைச் சேர்ந்த சேகர். 

தொழில்நுட்பத் துறையைக் கல்வி நிலையத்தில் படிக்காமல், தனது முயற்சிகளால் தாமாகவேத் தேடிப் பயின்று, இளம் மாணவர்களுக்கு கற்றுதரும் அளவுக்கு முன்னேறி இருக்கிறார், இந்த 40 வயது இ-கலைவன். கோவை - சரவணம்பட்டியில் குமரகுரு கல்லூரிக்கு அருகில், 'இ-கலை' கணினி என்ற தொழில்நுட்ப பயிற்சி மையம் ஒன்றையும் நடத்தி வருகிறார்.

ஓர் ஆண்டு காலம் முழுமையாக உழைத்து, இவர் யுனிகோடில் உருவாக்கி இருக்கும் அகராதியின் பெயர் - ‘களஞ்சியம் அகராதி'. 

ஆன்லைனிலும், தொழில்நுட்ப உலகிலும் தாம் கடந்து வந்த பாதையை விவரித்த சேகர், ‘‘நான் பிறந்த ஊர் போத்தம்பாளையம் என்னும் குக்கிராமம். எந்த அடிப்படை வசதிகளும் இல்லாத எங்கள் நெசவு குடும்பம் திருப்பூருக்கு குடிபெயர்ந்தது. அங்கு ஆங்கிலம் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அறிவை கற்றுக்கொள்ளும் சூழ்நிலை ஏதுவாக இல்லை. இந்நிலையில் வானொலியிலும், பத்திரிகைகளிலும் வரும் அறிவியல் சம்பந்தமான் கட்டுரைகளை கேட்டும், படித்தும் ஆராய்ந்தும் திறமையை வளர்த்துக்கொண்டேன்.

எங்கள் கிராமத்து பள்ளியில் நாங்கள் ஆசிரியர்கள் வந்தால் "காலை வணக்கம் ஐயா'' என்றும், அட்டென்டன்ஸ் எடுக்கும்போது "உள்ளேன் ஐயா" என்றும் 10 வருடங்கள் பழகிய நாக்கு, நகரத்துக்கு வந்து “Good morning Sir”, "Present Sir”-ருக்கு பழக பல மாதங்கள் ஆகிவிடும். அந்தப் பள்ளி மாணவர்களிடம் கேட்டால் அவமானமாகிவிடும் என்பதால் அவர்களிடமும் கேட்கமாட்டோம். Dictionary என்பது படிக்கும் காலம் வரை ஒரு சிலருக்கு மட்டுமே கிடைக்கும். காரணம் அப்பொழுதெல்லாம் வாத்தியார் எழுதி கொடுக்கும் நோட்டு புத்தகங்கள்தான் வீட்டில் வாங்கி தருவார்கள். அதில் Dictionary இருக்காது.

கிராமத்தில் உள்ளவர்களுக்கு எப்படி தொடங்கவேண்டும், எப்படி படிக்க வேண்டும் என்று விளக்கமளிக்கூடியவர்கள் குறைவாக உள்ள காரணத்தால், மாணவர்கள் புரியாமல் படிப்பதனால் கால விரயத்துடன் படித்தது பயனற்றதாக ஆகிவிடுகிறது. அதைப் போக்க அனைத்தும் அடங்கிய எளிமையான ஒரே ஒரு நூல் தமிழில் இருந்திருந்தால் பயனுள்ளதாக இருந்திருக்கும்.

ஆங்கிலத்தில் கணினி, மருத்துவம் மற்றும் தொழில் நுட்ப அறிவுள்ள புத்தகங்கள் ஏராளம். அவற்றில் வரும் வார்த்தைகளை புரிந்துகொள்வது மாற்று மொழிக்காரர்களுக்கு அதிலும் தமிழ் மொழி கொண்டவர்களுக்கு எப்போதுமே சவால்தான். இன்னும் நிறைய பேருக்கு உச்சரிப்பில் "Message”- “மெஜேஜ்'' ஆகிவிடும், “Fan" - “ஸ்பேன்" ஆகிவிடும். 

இன்றைய கணினி பயன்பாட்டில் இணையத்தில் இருந்து ஏராளமாக நமக்கு வேண்டிய புத்தகங்களை PDF, EBUP போன்ற கோப்புகளில் இலவசமாக Download செய்து கொண்டு படிக்கலாம். ஆனால், இங்கும் பிரச்னை வார்த்தைகளுக்கான பொருள்தான். இணையம் இருந்தால் இணையத்தில் தேடிக்கொள்ளலாம். அதில் நமது கவனமும், நேரமும் வீணாகும். இன்டர்நெட்டில் எலி பிடிக்கபோய் குரங்கை பிடித்து வருவோம்.

பத்தாவது வரை தமிழில் படித்தேன். அதுவரை தமிழில் கற்றதால் ஆங்கிலம், அறிவியல் கணினி சம்பந்தபட்ட வார்த்தைகள் மிகப் புதிதாகக இருந்தன. அதற்கு விளக்கம் தேடி நூலகம் சென்று படிப்பேன். இருந்தபோதும் ஒரு முழுமையாக என் தேடல்களுக்கான தீர்வுகள் கிடைக்கவில்லை. இதை அனைத்தையும் ஒரே இடத்தில் கொண்டு வர வேண்டுமென்ற என்னுடைய கனவு கணினியில் சாத்தியம் என்பது புரிந்தது. இது சம்பந்தமான தேடல்களில் கணினி மொழிகளை பலவற்றையும் கற்றுக் கொள்ளும் ஆர்வம் பிறந்தது.

நான் கணினியில் புரோகிராமிங் கற்றுக்கொள்ள PDF கோப்புகளில் உள்ள ஆங்கில புத்தகங்களை படிக்கும்போது ஏற்பட்ட இடர்கள் ஏராளம். “For loop”, “If condition”-க்கு எல்லாம் பொருள்தேடியவன் நான். இதைப்போன்ற இடர்பாடுகள் தமிழில் படிப்பவர்களுக்கு இருக்கக்கூடாது என்று அவர்களுக்கு பயன்படும் வகையில் ஒரு மென்பொருளை உருவாக்கவேண்டும் என்கிற எண்ணம் உதித்தது. English-English ஏராளமான அகராதிகள் உண்டு. ஆனால், தமிழில் ஒரு சிலவே உண்டு. அவையும் கால மாற்றத்திற்கு ஏற்ப ஒருங்கு குறிக்கு (Unicode) மாற்றமடையவில்லை, அது தவிர, புதிய Windows 7, Windows 8 போன்ற நவீன இயங்கு தளங்களில் இயங்காது. தமிழில் Unicode அகராதிகள் ஆன்லைனில் உண்டு. ஆனால் Desktop-ல் இயங்கும் அகராதி இல்லை. இதன் விளைவாக உருவானதுதான் ‘களஞ்சியம் அகராதி'.

என்னுடைய கணினி அனுபவ அறிவைப் பார்த்து ஒரு சில மென்பொருள் கம்பெனிகள் அழைத்தபோதும், எனக்கு ஆங்கில அறிவு போதிய அளவு இல்லாமையால் அந்த வாய்ப்புகள் தவறிவிட்டன. என்னைப் போல சிரமப்படும் மாணவர்களுக்கு என்னால் இயன்ற வரையில் HTML, CSS, Javascript, Java, C, C# , SQL, Animation, Electronics மற்றும் Embedded Project போன்றவற்றை தமிழில் மாணவர்களுக்கு கற்றுத்தருகிறேன்.

கல்வியில் உயர்ந்த சமுதாயமே உலகின் உயர்ந்த சமுதாயம். அந்த உயர்ந்த நோக்கோடு தான் தமிழக அரசு அனைத்து மாணாக்கர்க்கும் மடிக்கணினி தந்துள்ளது. அதனால் மாணவர்களின் அறிவு மிகவும் மேம்பாடு அடையும். அதற்கு கூடுதல் உந்து சக்தியாக இருக்க கல்வி பயன்பாட்டிற்கான இந்த களஞ்சியம் அகராதி இலவசமாக இணையத்தில் Download செய்துகொள்ளலாம்.

இன்றைய இளைஞர்களுக்கும், இளைஞிகளுக்கும் படிப்பதற்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. அதேபோல் படிப்பை கெடுப்பதற்கும் நிறைய வாய்ப்புகள் உள்ளன. இருந்தாலும் நம் ஒவ்வொருவருக்கும் இந்த சமுதாயத்திற்கும், உலகிற்கும் செய்ய நிறைய கடமைகள் இருக்கின்றன என்பதை கருத்தில் கொண்டால் வெற்றியடைவது என்பது நிச்சயம். இந்த உலகில் வெறும் 2% மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மீதி 98% Dark Mater-ராக இன்னும் கண்டுபிடிக்கபடாமல் உள்ளன. அதில் வருங்காலத்தில் தமிழகத்தின் கண்டுபிடிப்பின் பங்கு அதிகமாக இருக்கட்டும்.

எனக்கு பிடித்த பொன்மொழி உங்களுக்கும் நிச்சயம் பிடிக்கும். "என்னை தலை குனிந்து படி, உன்னை தலை நிமிரச் செய்வேன்- என்று சொன்னது புத்தகம்."

இந்த உலகம் என்பது நமக்கு சொந்தமல்ல. இதை நம் எதிர்கால சந்ததியிடம் இருந்து கடன் வாங்கியுள்ளோம். அதை பத்திரமாக, நாம் அனுபவிக்கும் இத்தனை வசதிகளுடனும் அவர்களுக்கு ஒப்படைக்க வேண்டும். அதுதான் நம் ஒவ்வொருவருக்கும் இருக்கும் இப்போதுள்ள தலையாய கடமை. எனவேதான் எனது ஆஃப்லைன் அகராதியை இலவசமாகவே வழங்குகிறேன்'' என்றார் சேகர்.

களஞ்சியம் அகராதியின் சிறப்புகள்: 

* ஒருங்குகுறி (Unicode) கொண்டு உருவாக்கப்பட்டது.

* 2 லட்சத்துக்கும் மேற்பட்ட தனிப்பட்ட வார்த்தைகளுக்கான பொருள் கொண்டது.

* 40 லட்சத்துக்கும் மேற்பட்ட பொருள் தரும் இணைப்பு வார்த்தைகள்.

* ஆங்கிலம் - தமிழ், ஆங்கிலம் - ஆங்கிலம், தமிழ் - தமிழ் மற்றும் பல்கலைகழகக் பேரகராதி ஆகிய அனைத்து அகராதிகளையும் உள்ளடக்கியது.

* 3000-க்கும் அதிகமான படங்கள்.

* உலக நாடுகளின் கண்டம், வரைபடம், கொடி கொண்டது.

* தமிழில் (Built-in Tamil Typing) தட்டச்சு செய்து வார்த்தைகளுக்கு பொருள் தேடும் வசதி.

* தமிழிலும், ஆங்கிலத்திலும் படித்துச் சொல்லும் (LH-Michelle & LH-Michael).

* கணினியில் எங்கிருந்தும் ஒரு வார்த்தையை தேர்வு செய்துகொண்டு Shortcut key (Ctrl + ~) அழுத்தினால் வார்த்தைக்கான பொருள் கிடைக்கும்.

* தானியக்க இருமொழித் தேடுதல் (Automatic encoding)

* புதிய வார்த்தை, பொருள் மற்றும் படங்களை பயனாளரே இணைத்து கொள்ளும் வசதி.

* Free Software (இலவச மென்பொருள்)

* தமிழில் முதல் மேஜைபயன்பாட்டு (Windows Desktop) ஒருங்குகுறி (Unicode) அகராதி.

* Destop-ல் விரும்பிய வார்த்தைகளை விரும்பிய வண்ணங்களில், எழுத்துருக்களில் அமைத்துக் கொள்ளலாம்.

* Windows XP, Windows 7, Windows 8 சார்ந்த இயங்கு தளங்களில் இயங்கும்

சேகர் உருவாக்கியுள்ள களஞ்சியம் அகராதியை டவுன்லோடு செய்ய க்ளிக்க வேண்டிய இணைப்பு -http://www.ekalai.com/kalanjiam/download/

நன்றி கல்வி-விகடன்

Thursday, December 5, 2013

என் காதல் கணவா

 


அத்தை மகனே என் மாமனே 
என் பிள்ளையின் தகப்பனே 

நீ வேடிக்கை பார்க்கையில் 
நான் விதையாக இருந்தேன் 

நீ விளையாடும் பருவத்திலே 
நான் வேடிக்கைப் பார்த்தேன் 

நீ விறுவிறுப்பாய் வளர்ந்திடவே 
நான் விளையாடித் திரிந்தேன் 

நீ வில்அம்பாய் காதல் பார்வை வீச 
நான் விறுவிறுப்பாய் வளர்ந்தேன் 

நீ விசிய காதல்அம்பில் மனைவியாக்க 
நான் காதல் பார்வையை ரசித்து கரைந்தேன் 

நீவாழ்வின் விதையை உற்பத்தி செய்ய 
நான் மனைவியென உன்னுள் மூழ்கிபோனேன் 

நீ விதைத்த விதை வேரூன்ற பாடுபட 
நான் விதைக்கு பதியமிட்டு மகிழ்ந்தேன் 

நீ பாடுபட்ட விதை விருட்சமாக வளர்ந்திட 
நான் விதைக்கும் உனக்குமாய் வாழ்ந்தேன் 

நீ விதையுமற்று விருட்சமுமற்று என்னைகாக்க 
நான் விசும்பல்களாய் உன்னுள் உறங்கிப்போனேன் 

நீ நான் என்பதெல்லம் நீதானென்று மாற்றம்பெற 
என்னையே நான் உண்ணுள்கண்டு மடிசாய்ந்தேன் 

கல்லறையிலும் கைபிடித்தபடி கண்ணுறங்குவேன் 
நீ என்னுடனிருப்பாய் என் காதல் கணவா ... 


---------------
...கவியாழினி..

Wednesday, December 4, 2013

இணையத்தில் பின்னப்படும் பூதாகர மாயவலைகள்..!..


                           


எந்த ஒரு புதிய தொழில்நுட்பம் வந்தாலும் அதை முதலில் தங்களுக்குச் சாதகமாக ஆக்கிக்கொள்பவர்கள் கெடுமதி படைத்தவர்கள் தான். அவர்களது கிரிமினல் மூளைதான் அந்தத் தொழில் நுட்பத்தின் சாத்தியக்கூறுகளை முழுவதுமாக ஆராய்ந்து முதலில் புரிந்துகொள்ளும். இணையமும் சமூக வலைத்தளங்களும் இதற்கு விதிவிலக்கல்ல.

இணையத்தை வணிகத்துக்காக முதலில் பயன்படுத்திக்கொண்டவர்கள் போர்னோ படங்களை விற்றவர்கள்தான். எண்ணற்ற ஆபாச வலைத்தளங்கள் உருவாகின. ஒரு கட்டத்தில், அதிக ஹிட்கள் பெறும் முதல் இருபது தளங்கள் அனைத்துமே போர்னோ தளங்களாக இருந்தன. பின்னர், கிரெடிட் கார்டு மூலம் மாதாமாதம் சந்தா பெறும் தளங்களாக ஆனவையும் இவைதான். அதன் பின்னர்தான் நியாயமான வணிக நிறுவனங்கள் பலவும் தம் பொருள்களை விற்பதற்கும் சேவைகளைத் தருவதற்கும் இணையத்தைப் பயன்படுத்திக்கொள்ள ஆரம்பித்தன.




அதேபோல, நைஜீரிய ஏமாற்று வித்தைகளையும் குறிப்பிடவேண்டும். ஏதோ ஓர் ஆப்ரிக்க நாட்டின் சர்வாதிகாரி பல நூறு மில்லியன் டாலர்களை விட்டுவிட்டுச் சென்றுவிட்டதாகவும், அதைக் கைப்பற்ற உங்கள் உதவி தேவைப்படுகிறது என்றும், அந்த சர்வாதிகாரியின் துணைவி அன்புடன் உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருப்பார். ஒரே ஒரு சின்ன பிரச்சினை.. முதலில் நீங்கள் கொஞ்சம் பணத்தை ஒரு குறிப்பிட்ட வங்கி எண்ணுக்கு அனுப்பவேண்டும். பல நூறு மில்லியன் டாலரில் நம் பங்கு கணிசமாக வரும்போது கொஞ்சம் பணத்தைப் பற்றி ஏன் கவலைப்படுவானேன் என்று சிலர் பணத்தை அனுப்பியும் விடுவார்கள். இப்படித் தொடங்கி இன்னும் பல நூறு ஏமாற்று வித்தைகள் இணையத்தில் உலா வருகின்றன.

மற்றொரு பக்கம், இணையத் தேடு பொறிகள் சர்வசக்தி வாய்ந்தவையாக ஆனபோது, ‘சர்ச் இன்ஜின் ஆப்டிமைசேஷன்’ என்னும் கருத்து முக்கியத்துவம் பெறத் தொடங்கியது. கூகுளில் நீங்கள் ஒரு விஷயத்தைத் தேடும்போது ஒரு லட்சம் சுட்டிகள் கிடைக்கும். ஆனால் முதலில் வரும் சில சுட்டிகளைத் தாண்டி நீங்கள் போகமாட்டீர்கள். எப்படி முதல் சில சுட்டிகளில் ஒன்றாக நாம் வருவது என்ற நோக்கில் பலரும் தத்தம் இணையப் பக்கங்களில் சிறுசிறு மாற்றங்களைச் செய்யத் தொடங்கினர். இதைத் தடுக்கும் நோக்கில் கூகுள் போன்றோர் தங்கள் தேடுதல் அல்காரிதத்தில் பல மாற்றங்களைச் செய்து, உண்மையிலேயே உபயோகமான தளங்கள் மட்டும் முதலில் வருமாறு பார்த்துக்கொண்டனர். ஆனாலும் இந்தத் திருடன் - போலீஸ் விளையாட்டு இன்னும் தொடர்ந்து நடக்கிறது.




இதுபோன்ற தகிடுதத்தங்கள் ஒருபுறம் இருக்க, இப்போது சமூக வலைத்தளங்கள் குறித்து வெளியே கசியும் சில செய்திகள், இணைய ஊடகவெளி மீது நாம் வைத்திருக்கும் நம்பிக்கையைச் சிதைக்கும்வண்ணம் உள்ளன. ஓர் இந்திய இணையதளம் வெளியிட்டுள்ள ஸ்டிங் ஆபரேஷன் இதுகுறித்து பல குறிப்புகளை நமக்குத் தருகிறது.

ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற தளங்களை சாதாரண மக்கள் தங்கள் கருத்துகளைச் சொல்லும் களமாகவும் நண்பர்களுடன் உரையாடும் இடமாகவும் வைத்திருக்கின்றனர். இது ஒருவிதத்தில் மக்களாட்சி முறைக்கு வலு சேர்க்கும் விதமாகவும் உள்ளது. ஆனால் பல அரசியல்வாதிகளும் தொழில் நிறுவனங்களும் இவற்றை வேறு கண்களுடன் பார்க்கின்றனர். அரசியல், தொழில் போட்டிகளைச் சமாளிக்கவும் எதிரிகளை ஒழிக்கக் காய் நகர்த்தவும் இணையத்தைப் பயன்படுத்த இவர்கள் முன்வந்துள்ளதாகத் தெரிகிறது. இவர்களுக்கு உதவுவதற்கு என்றே பல இணைய மார்க்கெட்டிங் நிறுவனங்களும் முளைத்துள்ளன.




ட்விட்டரில் கணக்கு வைத்திருக்கும் இந்திய அரசியல்வாதிகளில் பாஜகவின் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியையும் காங்கிரஸின் மத்திய அமைச்சர் சசி தரூரையும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். இவர்களுடைய ட்விட்டர் கணக்கில் இவர்கள் சொல்வதையெல்லாம் முறையே 28.8 லட்சம் பேரும் 19.8 லட்சம் பேரும் பின்பற்றுகிறார்கள். ஆனால் இப்படிப் பின்பற்றுவர்கள் எல்லோருமே உண்மையானவர்கள்தானா? ட்விட்டர் ஆடிட் போன்ற சில தளங்கள், இம்மாதிரியான அரசியல்வாதிகளைப் பின்பற்றும் பல கணக்குகள் போலியானவை என்கின்றன. அதாவது அவை உண்மையான மனிதர்களாக இல்லாமல் வெறும் மாயக் கணக்குகளாக இருக்கலாம்.

ட்விட்டரில் பின்பற்றுவோர் எண்ணிக்கையை அதிகரிக்கவென்றே மாயக் கணக்குகளை விலைக்கு விற்க பல ஏஜென்சிகள் இருக்கின்றன என்று தெரியவந்துள்ளது. இந்த ஏஜென்சிகள் ஒளிந்து மறைந்தெல்லாம் இயங்குவதில்லை. வெளிப்படையாகவே இவர்களைத் தேடிக் கண்டுபிடிக்கலாம். ஸ்டிங் ஆபரேஷன் சொல்லும் தகவலும் இதுதான்.

நிழல் உலக தாதா ஒருவரைச் சந்தித்து ‘என் தொழில்முறை எதிரியுடைய ஃபோட்டோவும் முகவரியும் இவைதான். இவரைப் போட்டுத்தள்ளிவிடு, இந்தா பணம்’ என்று ஒருவர் சொல்வதைப்போல, ஒரு தொழிலதிபர் ஓர் இணைய மார்க்கெட்டிங் ஏஜென்சியை அணுகி பிசினஸ் பேசலாம். பணம் கைமாறும். அந்த இணைய மார்க்கெட்டிங் ஏஜென்சி, அந்தக் குறிப்பிட்ட தொழிலதிபருடைய நிறுவனத்தின் ட்விட்டர் அக்கவுன்ட்டை ஒரே நாளில் சில ஆயிரம் மாயக் கணக்குகள் பின்பற்றுமாறு செய்வார்கள். அவர்களுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் வரும் தகவல்களுக்கெல்லாம் சில மாயக் கணக்குகள் பொய் லைக்குகள் போட்டுக்கொண்டே இருக்கும்.




அதோடு விடமாட்டார்கள். எதிரி நிறுவனம் பற்றிப் பொய் வதந்திகளைப் பரப்பும் ஓர் இணையதளம் இரவோடு இரவாகத் தோன்றும். ஊர் பேர் போடாமல் தெருவில் ஒட்டப்படும் கண்டன போஸ்டர்போல அல்லது அலுவலகத்துக்கு வரும் மொட்டைக் கடுதாசிபோல. பின்னர், மாயக் கணக்குகள் இந்தப் பொய்த் தகவல்களை ட்விட்டரிலும் ஃபேஸ்புக்கிலும் பரப்பும். எல்லாவற்றுக்கும் ஒரு குறிப்பிட்ட விலை உண்டு.

இந்தத் தகவல்களை உண்மை என்று நம்பும் உண்மையான பலரும்கூட இவற்றை ஃபேஸ்புக்கில் லைக் செய்து, ட்விட்டரில் ரீட்வீட் செய்து மேலும் மேலும் பரப்புவார்கள். மின்னஞ்சல்மூலம் பல்லாயிரம் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வார்கள்.

இன்று, ஓர் அரசியல்வாதியின் பிம்பத்தைக் கட்டி எழுப்புவது முதல், ஒரு முழு அரசியல் பிரச்சாரத்தையுமே இணையத்தின் மெய்நிகர் உலகில் செய்துவிட முடியும். அந்த அரசியல்வாதிக்கென்று ஓர் இணையதளத்தையும் ட்விட்டர், ஃபேஸ்புக் கணக்குகளையும் தொடங்குவதிலிருந்து இந்தப் பிரச்சாரம் ஆரம்பிக்கும். பின்னிருந்து இயக்கும் மார்க்கெட்டிங் ஏஜென்சியின் உதவியால் அரசியல்வாதியின் இணைய பிம்பம் வலுவாகிக்கொண்டே போகும். அவர் அனைத்தைப் பற்றியும் கருத்து சொல்வார். அறிக்கைகள் விடுவார். அவரது எதிரிகள் குறித்து இணையத்தில் வம்பும் வதந்தியும் பெருகும். இதன் நீட்சியாக அவர் தேர்தலில் ஜெயித்தாலும் ஜெயிக்கலாம்.

இவற்றையெல்லாம் புலன்விசாரித்து, உண்மையைக் கண்டுபிடிப்பது சாத்தியமே. ஆனால் நேரம் ஆகும். அந்த நேரத்தில் தேர்தலே நடந்து முடிந்துவிடலாம்.

கெடுமதியாளர்கள் கையில் சிக்கிச் சின்னாபின்னமாகும் சமூக வலைத்தளங்கள் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட நேரிடும். ஒரு கட்டத்தில் யார் உண்மை பேசுகிறார்கள், யார் பொய் பேசுகிறார்கள் என்பதே தெரியாமல் போய்விடும்.

நிஜ வாழ்க்கையில்கூட எதை நம்பலாம் என்ற தெளிவு நம்மிடம் ஓரளவுக்கு இருக்கிறது. ஆனால் இணைய வாழ்க்கையில் எதை நம்புவது என்று தெரியாமல் தடுமாறும் நிலையை நோக்கி நாம் சென்றுகொண்டிருக்கிறோம். பயன்படுத்துவதற்கு எளிமையாக உள்ள இணையம், சாதாரண மக்களைவிட கிரிமினல் எண்ணம் கொண்டவர்களுக்குச் சாதகமாக ஆகிவிடுமோ என்ற அச்சம் எழுகிறது!


-----------------நன்றி : திரு .பத்ரி சேஷாத்ரி

Tuesday, December 3, 2013

“மௌத்து” இல்லை என்று சொல்லிடுங்கள் ...??

                      

01/12/2013 வீரகேசரி வார வெளியீட்டில் பிரசுரிக்கப்பட்ட கவிதை இது ..

ஆக்கம் : நவாஸ் நுஷ்மியா (கலாவெவ )




“மௌத்து” இல்லை என்று சொல்லிடுங்கள் ...??

ஏழடுக்கு மாளிகை கட்டப் போறேன்...... தரை முழுதும் பளிங்கு கல் பதிக்கப் போறேன்.....

ஏழை வந்தால் நான் ஈவிரக்கமின்றி விரட்டப் போறேன்.......

கழுத்து வரை பணம் சம்பாதிக்கப் போறேன்....... கருமியாய் அதை செலவழிக்கப் போறேன்........

எவனுக்கும் அஞ்சாமல் வாழப் போறேன் ........... நான் சோம்பலை வளர்த்து குறட்டை விட்டு தூங்கப் போறேன் .........

என்னை விட யாரும் முன்னேறாமல் தடுக்கப் போறேன்......... பொறாமையினை என் மனதில் விதைக்கப் போறேன்......

எட்டுத் திசையும் என்னைப்பற்றி சொல்லப் போறேன் ....... ஊர் முழுதும் என் பெருமை பாடப் போறேன்....

புறம் பேசி நானும் திரியப் போறேன் ......... மற்றவரை குறை கூறி தூற்றப் போறேன்................

மமதை கொண்டு நடக்கப் போறேன்.......... நான் பாரினில் -பொறுமை தொலைத்து முரடனாய் வாழப் போறேன் ....



இத்தனையும்- நான் செய்திடப் போறேன் .. என்னிடம் “மௌத்து” இல்லை என்று சொல்லிடுங்கள்.......?????


--------------------------------------

“மௌத்து” உண்டு என்றெண்ணி மறுமைக்காய் நாம் உழைத்து இறையருள் பெற்று ஈருலகிலும் வெற்றி பெறுவோம் .....

Sunday, December 1, 2013

மின்னஞ்சல் முகவரியில் @ என்ற சின்னம் எப்படி வந்தது…?


        

ஒவ்வொருவருடைய மின் அஞ்சல் முகவரியிலும் “@” என்ற சின்னம் வருவது யாவரும் அறிந்ததே. இந்தச் சின்னம் எப்படிப் புழக்கத்தில் வந்தது?மின் அஞ்சல் முகவரியில் முதன் முதலாக இந்த @ சிம்னத்தை உபயோகித்தது “ரே டாம்லின்ஸன்” (Ray Tomlinson) என்னும் ஒரு கம்ப்யூட்டர் பொறியாளர். இவர் 1971ஆம் ஆண்டு முதலில் தனக்குத் தானே ஒரு மின் அஞ்சலை இந்தச் சின்னத்தை உபயோகித்து அனுப்பிக்கொண்டார்.

ஏன் இவர் இந்தச் சின்னத்தை தேர்ந்தெடுத்தார்? 

அவர் சொல்கிறார், ” கீ போர்டில் அக்கரையுடன் பார்த்தேன் எவருடைய பெயரிலிலும் வராததும், குழப்பம் விளைவிக்காததுமாக சின்னம் இருக்கிறதா என்று, பின் இதைத் தேர்ந்தெடுத்தேன்.” என்று சொன்னார்.

இந்த @ சின்னம் கம்ப்யூட்டர் கீ போர்டில் எப்படி இடம் பெற்றது? 

மொழி வல்லுனர்கள், எப்படி என்பதில், ஒத்துப்போகவில்லை. சிலர் நினைத்தனர், மத்திய காலத்தில் (Early Middle ages), துறவிகள் கையெழுத்துப் ப்ரதிகளை சிரமத்துடன் படிக்கும்பொழுது லத்தீன் மொழி வார்த்தை “ad”, “at” or “towards” or “By” என்று பல அர்த்தங்களைக் கொண்டிருப்பதைக் கண்டனர்.

அநேக வல்லுனர்கள் இந்த @ சின்னம் சமீப காலத்தில், அதாவது 18ஆம் நூற்றாண்டில் புழக்கத்திற்கு வந்ததுதான், பொருட்களின் விலையை குறிப்பிட ஏற்பட்டதுதான் என்று வாதாடினர். அதாவது உதாரணமாக 10 பென்சுக்கு 5 ஆப்பிள் (“5 apples @ 10 pence.” ).மற்றும் ஒரு மொழி வல்லுனர், ஆராய்ச்சியாளர் Denis Muzerelle சொல்கிறார், இது ஃப்ரெஞ்ச், ஜெர்மானிய, வியாபாரிகள் எழுத்து “a”யை வேகமாக உச்சரிக்கும் பொழுது ஏற்பட்ட திரிபு என்கிறார்.

ஆனால் ஜூலை மாதம் 2000 ஆண்டில் இத்தாலிய ஆரய்ச்சியாளர் ஒருவர், இந்த சின்னம் @ 14ஆம் நூற்றாண்டின் வியாபார தஸ்தாவேஜுகளில் இந்தக் குறி காணப்படுவதைக் கண்டுபிடித்தார். இந்தச் சின்னம் ஒரு அளவை the “anfora,” or jar குறிக்க உபயோகிக்கப்பட்டது என்றார்.

Giorgio Stabile 1492ஆம் வருடத்திய லத்தீன் – ஸ்பானிஷ் அகராதியில் “anfora” என்பது “arroba” ( ஒரு நிறுவளளவை) என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்பதைக் கண்டுபிடித்தார். ஆகையால், 1885ல் வியாபரரீதியான “a” (the “commercial a”) முதல் மாடலான அண்டர்வுட் தட்டச்சு மெஷினில் சேர்க்கப்பட்டது இயற்கையே.

80 வருடங்களுக்குப் பிறகு அங்கிருந்து ஸ்டாண்டெர்ட் கம்ப்யூட்டர் கேரக்டரில் (Such as ASCII) இடம் பெயர்ந்துவிட்டது. (It’s therefore natural that, in 1885 the “commercial a” was included on the keyboard of the first model of Underwood typewriter and from there migrated into the standard set of computing characters (such as ASCII) 80 years later. )

தற்போதைய பிரச்சனை இந்த @ சின்னத்தை எப்படி உச்சரிப்பது?

ஸ்பானியர்கள் இதை “arroba” என்றும், ஃப்ரெஞ்ச்காரர்கள் “arobase.” என்றும், அமெரிக்கர்களும், பிரிட்டிஷாரும் “at-sign.” என்றும், ஜெர்மானியர் (“at-Zeichen”), என்றும், எஸ்தோனியர் (“ஐt-mஐrk”) என்றும், ஜப்பானியர் (“atto maak”). என்றும் உச்சரிக்கிறார்கள்.

ஆயினும், அதிகமான பாஷைகளில், இந்த சின்னம், பலதரப்பட்ட உருவகம், பொதுப்படையாக, பிராணிகளுக்கு ஒப்பிட்ப்படுகிறது. ஜெர்மானியர், ஃபின்ஸ், ஹங்கேரியன், போல்ஸ், தெற்கு ஆப்பிரிக்கர்கள், இந்தச் சின்னத்தைக் குரங்க்கின் வாலாகப் பார்க்கிறர்கள். மற்றும் சிலர் நத்தைக்கு ஒப்பிடுகிறார்கள். இப்படியாகப் பலவிதம்.

------------------------
NEWYARL