Monday, July 29, 2013

நிறம் என்ற திரை நீக்கி.,,,,




பெங்களூரில் சட்டக்கல்லூரி மாணவர் - 19 வயது - 
ஒரு பெரிய பென்சில் கம்பெனி மீது நுகர்வோர் மன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார். அவர் வாங்கிய கிரேயான் பெட்டியில் தோல் நிறம் என்று குறிப்பிடப்பட்ட கிரேயான், இளஞ்சிவப்பு நிறமாக இருந்திருக்கிறது.

அவர் குறை என்னவென்றால் இந்தியாவில்  பெரும்பான்மை மக்களின் நிறம் இளஞ்சிவப்பு அல்ல. அதனால் அந்த வர்ணனை உண்மைக்குப் புறம்பாக உள்ளதென்றும், மேலும் இளஞ்சிவப்பு நிறத்தை தோல் அல்லது சருமத்தின் நிறம் என்று குறிப்பிடுவது இனத்தின் அடிப்படையில் புண்படுத்துவதாக உள்ளதென்றும், இழிவுபடுத்துவதாக உள்ளதென்றும் கூறி நஷ்ட ஈடு கேட்டுள்ளார்.

இந்த வழக்கைத் தாக்கல் செய்யும் முன் அந்த நிறுவனத்திற்கு ஒரு கடிதம் எழுதி அந்த வர்ணனையை மாற்றி விடுங்களேன் என்று கேட்டிருக்கிறார். அதற்கு அவர்கள் இசைவாகப் பதிலளிக்கவில்லை.

இதற்காக ஒரு வழக்கா? இது கவனம் ஈர்க்கும் நடவடிக்கை என்றெல்லாம் முணுமுணுப்புகள் காதில் விழுகின்றன. அவர் வழக்கு ஜெயிக்கிறதோ, தோற்கிறதோ தெரியாது. அவர் எழுப்பியிருக்கும் விவாதத்தில் ஆழம் இருக்கிறது என்பதைப் பலவித கோணங்களிலிருந்து பார்க்கலாம். நிறங்களில் உயர்வு எது, மட்டம் எது? இந்த உயர்வு, தாழ்வு அடிப்படையில் பார்த்தோமானால் எப்படி எல்லாம் அதிர்வலைகள் கிளம்புகின்றன.

அமெரிக்காவில் "நீக்ரோ' என்று கறுப்பு நிறம் கொண்டவர்களை அழைக்கக்கூடாது. அது இழிவுபடுத்துவதான சொல். இப்பொழுது அவர்களை "ஆப்ரோ அமெரிக்கர்கள்' என்று அழைக்கிறார்கள். நிறத்தின் அடிப்படையில் அந்த இனமே அடிமையாகிப் போனது. அதை எதிர்த்தவர் ஆபிரகாம் லிங்கன். அதுபோலவே நிறம் சார்ந்த பிரிவினைக் கொள்கையை (அபார்தெய்ட்) எதிர்த்தவர் நெல்சன் மண்டேலா. தன் இன மக்கள் இந்த இழிவிலிருந்து விடுபடப் போராடியவர்.

ஆனால், நம் நாட்டில் வெண்மை ஆள்வதும், கருமை ஒதுக்கப்படுவதும் கண்முன்னால் பல சூழ்நிலைகளில் நடைபெறுகிறது. குழந்தை பிறந்தவுடன் ஆணா, பெண்ணா, அடுத்தது நிறம். அதேபோல திருமணங்களிலும் சிவப்பு நிறத்தவர்களுக்கு மதிப்பெண்கள் கூடும். இந்த நிறம் சார்ந்த பாகுபாடு நம் மனதில் ஊறிப்போன ஒன்று.




மொழி என்பது வலுவான ஆயுதம். நேராக அப்பட்டமாகச் சொல்லாமல் ஒரே சொல்லினால் பல விஷயங்களை மனதில் ஏற்றிவிடலாம். பிறகு தகர்க்க முடியாத அபிப்ராயங்கள் நிரந்தரமாக வேரூன்றிவிடுகின்றன.

""வெளுத்த உள்ளம்'' ""வெள்ளை உடையணிந்த தேவதைபோல'' இவை ஒருபுறம். ""கருத்த அச்சமூட்டும் உருவம்'' மறுபுறம். இதுபோன்ற சொல் சேர்க்கைகள் மேலாக ஒன்று கூறுகின்றன. ஆனால், சொல்லாது அடியில் புதைந்த பொருள் என்ன? வெண்மை என்றால் தூய்மை, நல்லது, விரும்பத்தக்கது, கருமை என்றால் அச்சமூட்டுவது, தீமை. சரியா? நாம் எல்லோரும் சிவந்த நிறம் படைத்தவர்கள் அல்லர், பெரும்பாலும் பழுப்பு அல்லது கருமை சார்ந்த நிறம்தான். அப்பொழுது நாமெல்லோரும் நல்லவர்கள் இல்லையா?

முன்பு வரும் சிறுவர்களுக்கான கதைகள். அங்கே அமரசிம்மன் என்று ஒரு அரசனிருப்பார்,அவர் வெள்ளை நிறமாகச் சித்திரிக்கப்பட்டிருப்பார். அவருக்கு விஷம் கொடுத்துக் கொல்ல முயற்சி செய்யும் அமைச்சர் தந்திரசேனன் பழுப்பு நிறமாக இருப்பார். எந்த வயதிலிருந்து இந்த நிற வேற்றுமை விஷம் ஏறுகிறது பாருங்கள்.

அமெரிக்காவில் ஒரு மாநிலத்தில் குழந்தைகளுக்கு ஒரு பரீட்சை வைத்தார்கள். சின்னக் குழந்தைகள் படிக்கும் வகுப்பு, அவர்களுக்கு சில பொம்மைகளைக் கொடுத்து இதில் எது நல்ல பொம்மை, எது கெட்ட பொம்மை என்று தேர்ந்தெடுக்கச் சொன்னார்கள். வெள்ளை நிற பொம்மைகளை நல்ல பொம்மைகள் என்றும், கறுப்பு நிற பொம்மைகளை கெட்ட பொம்மைகள் என்றும் குழந்தைகள் பிரித்தார்களாம்.

முதன்முதலாக டாக்டர் கென்னத் கிளார்க் என்பவர் 1939-ஆம் ஆண்டில் இந்தப் பரிசோதனையைச் செய்தார். 1950-ஆம் ஆண்டு மறுபடியும் அவரே இந்தப் பரிசோதனையைச் செய்து பார்த்தார். முடிவு மாறவில்லை.

2005-ஆம் ஆண்டில் கிரி டேவிஸ் என்பவர் திரும்பச் செய்து பார்த்தார். அதே குழந்தைகள் என்ன நிறமாக இருந்தாலும் அதே முடிவு. ஆண்டுகள் மாறலாம், பள்ளிக்கூடங்கள் மாறலாம், குழந்தைகள் மாறலாம். ஆனால், முடிவு மாறவில்லை. ஒபாமா அமெரிக்க அதிபராக இரண்டு முறைதான் வரட்டுமே, இந்த மூடத்தனமான வெறுப்பு இன்னும் போகவில்லை.

இங்கு மட்டும் என்ன, ""கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு'' எல்லாம் சும்மா. அதுவும் கதாநாயகர்களுக்கு மட்டும்தான். கதாநாயகிகள் வெள்ளையம்மாக்களாகத்தான் இருக்க வேண்டும். இது அடிப்படை இலக்கணம். இது மாறாது. திருமணம் நடக்க வேண்டிய வேளையில் சிவப்பு நிறத்திற்கு மதிப்பெண்கள் கூடும் என்றேன். வெள்ளையாக இருந்தால் வேலைகூட கிடைக்குமாம். தோலை வெளுக்க வைப்பேன் என்று உறுதி கூறும் களிம்பு விளம்பரங்களைப் பாருங்கள். இவ்வளவு விளம்பரங்கள் என்றால் எவ்வளவு விற்பனை ஆக வேண்டும். யாரும் தோற்கும் குதிரை மீது பணம் கட்ட மாட்டார்கள். ஒரு பெண் சோகமாக இருப்பாள். பின் அந்த அறிவுரைபெற்ற பின் டக் டக்கென்று மேனி சிவந்துவிடும். பிறகு எல்லாம் இன்பமயம். வேலை கிடைக்கும். திருமணம் நிச்சயமாகும். எல்லாம் எதனால்? அவள் படித்த படிப்பிற்கல்ல, அவள் தகுதிக்கல்ல, அவள் குணங்களுக்குமல்ல, அவள் நிறத்திற்கு.


உலகில் எத்தனை நிற மக்கள்! கிழக்காசியாவில் மஞ்சள் தோய்ந்த நிறம், அதிலும் வித்தியாசங்கள். ஆப்பிரிக்காவில் நல்ல கறுப்பு, சற்று லேசான கறுப்பு என்ற மாறுபாடுகள், பிறகு கோதுமை நிறம், வெளுத்த வெள்ளை, சிவந்த வெள்ளை, தந்த நிறம் இப்படி பல நிறங்கள் எல்லாம் தோலளவு ஆழந்தானே! அமெரிக்காவில் கறுப்பர் இன சமத்துவத்திற்காகப் போராடி உயிரை இழந்த மாபெரும் தலைவர் மார்டின் லூதர் கிங் ""எனக்கு ஒரு கனவு'' என்று ஒருமுறை சொற்பொழிவாற்றினார். அதில் சொல்வார் ""எனக்கு ஒரு கனவு - என் நாலு குழந்தைகள் வாழும் இந்நாட்டில் ஒரு நாள் வரும், அன்று அவர்கள் தோலின் நிறத்தின் அடிப்படையில் அல்லாது அவர்களின் குணங்களின் சாரத்தை ஒட்டி மதிப்பிடப்படுவார்கள்'' என்று. அங்கு 17-ஆம் நூற்றாண்டில் முதன்முதலாக கறுப்பு நிறத்தவர்கள் அடிமைகளாக வந்திறங்கினார்கள்.

பிறகு பருத்தித் தோட்டங்களில் ஊழியம் புரிய மேலும் வரவழைக்கப்பட்டார்கள். அங்கு இனப்பிரிவுடன் ஆண்டான்-அடிமை என்ற வேறுபாடு இருந்தது. இதேதான் தென்னாப்பிரிக்காவிலும். 


இங்குதான் ஒரு வயதானவர் தன் பெண்ணை அவள் கரிய திருமேனி கொண்ட மணாளன் அழைத்துச் சென்றதும் ""செங்கண்மால் தான் கொண்டு போனான்'' என்று தன்னைத் தேற்றிக்கொண்டார். அதுபோல மழை முகில்வண்ணம் கொண்ட அரசகுமாரனை ""அய்யோ இவன் வடிவென்பதை எப்படி வர்ணிப்பேன்'' என்று ஒரு கவி வியந்தார். இங்குதான் அமாவாசையை பௌர்ணமி என்று சொன்ன ஒரு பித்தர் பச்சை வண்ணமும் ஆகிய பெருமாட்டியே என்று பாடினார். அது... அது அவர்களுக்கு. நமக்கில்லையா?


******************
கட்டுரையாளர்:

உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி.
தினமணி,,

பொடி’ப் பயலே! (மூக்குப்பொடி பற்றிய ஒரு நல்ல பதிவு )

மக்களின் பழக்க வழக்கங்கள் காலங்காலமாக மாறிக் கொண்டே வருகின்றன. பழைய புத்தகங்களைப் படிக்கும் போதும் பழைய பாடல்களைக் கேட்கும் போதும் பழைய திரைப்பட்டங்களைப் பார்க்கும் போதும் அதைத் தெரிந்து கொள்ளலாம்.

மிகமிகப் பிரபலமாக இருந்த வழக்கம் பின்னாளில் மீண்டும் பிரபலமாகுவது சகஜம்தானே ..?  அப்படி வழக்கொழிந்
து மீண்டும் புத்துயிர் பெற்ற  பழக்கம்தான் பொடி போடுவது.

                                       

பொடி போடுவதென்றால் இட்டிலிக்கும் தோசைக்கும் தொட்டுக் கொள்ள மிளகாய்ப் பொடி போடுவதல்ல. நான் சொல்வது மூக்குப்பொடி பற்றி. கட்டை விரலாலும் ஆள்காட்டி விரலாலும் சிறிது கிள்ளியெடுத்து மூக்கில் பொடி போடும் பெருசுகள் இப்போது மிகமிகக் குறைந்து போய் விட்டார்கள்.ஆனால் சிறுசுகள் கூடி விட்டார்கள் நம்மூர்களில் .

ஒரு காலத்தில் இது மிகப்பிரபலமான பழக்கமாக இருந்திருக்கிறது. ரோசாப்பூ ரவிக்கைக்காரி திரைப்படத்தில் சந்தைக்குப் போகும் செம்பட்டையிடம் ஆப்பக்கடை பாட்டி பட்டியல் சொல்லும் போது அதில் மூக்குப்பொடி டப்பியும் இருக்கும்.

இவ்வளவு பிரபலமா
 மூக்குப்பொடி எதிலிருந்து செய்யப்படுகிறது? புகையிலையைக் காய வைத்து அதைச் சுண்ணாம்போடு போட்டு இடிப்பார்கள். நன்கு மைய இடிக்க இடிக்க அதில் கார நெடி கிளம்பும். அதை அப்படியே பயன்படுத்தினால் மூக்கு அறுந்துவிடும் என்பதால் நெய்யும் சேர்த்து இடிப்பார்கள்.

இப்படி மைய இடித்த பொடிதான் மூக்குப்பொடி. அடர்ந்த பழுப்பு நிறத்தில் இருக்கும். இந்தப் புகையிலைப் பொடி மூக்கு வழியாகச் சென்று மூளைக்கு ஒரு மந்தமான பரவச நிலையைக் கொடுக்குமாம். சிலர் பல்வலிக்கு மூக்குப்பொடி நல்ல மருந்தென்று சொல்வார்கள். மூக்குப்பொடியை எடுத்து வலிக்கின்ற பல்லில் வைத்தால் சற்று மரத்துப் போகும். அதைத்தான் மூக்குப் பொடி பல்வலியை நீக்குகிறது என்று தவறாக நினைக்கிறார்கள்.

பல்லில் வைக்கப்படும் மூக்குப் பொடி வாய் வழியாக உமிழ்நீரில் கலந்து வயிற்றுக்கும் செல்லும். இது கண்டிப்பாக கெடுதல்தான். மூக்குப்பொடியை எப்படிப் பயன்படுத்தினாலும் கெடுதல்தான். புற்றுநோயை உண்டாக்குவதில் மூக்குப்பொடியும் ஒரு முக்கிய காரணி என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

பொதுவாகவே மூக்குப்பொடி வாங்குகின்றவர்கள் நிறைய வாங்க மாட்டார்கள். கொஞ்சம் கொஞ்சமாக வாங்குவார்கள். நிறைய வாங்கினால் நாட்பட நாட்பட அதில் காரலும் நெடியும் குறைந்து போய்விடுவாம். அதனால்தான் வேண்டிய போதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக வாங்கிக் கொள்வார்கள்.

பொடி போட்டு வைப்பதற்கென்றே விதவிதமான சொப்புகள் செய்யப்பட்டன. வெள்ளிச் சொப்பில் பொடி போட்டு வைத்திருந்த பொடிப்பிரியர்களும் உண்டு. சொப்பு என்று நான் சொன்னாலும் பொடி டப்பா என்ற பெயர்தான் மிகப்பிரபலம்.
புதிதாகப் பொடி போடுகின்றவர்களுக்குத் தும்மல் வரும். பழகப் பழக மூக்கின் தசைகள் மரத்துப் போய் தும்மல் வராமல் போய்விடும். எத்தனையோ பழைய திரைப்படங்களில் மூக்குப் பொடியைத் தூவியதும் அங்கிருக்கும் எல்லாரும் தும்முவது போன்ற நகைச்சுவைக் காட்சிகளும் வந்திருக்கின்றன.

இப்படியெல்லாம் பிரபலமான மூக்குப்பொடியைக் கண்டுபிடித்தது இந்தியர்கள் என்றா நினைக்கிறீர்கள்? இல்லவே இல்லை. ஐரோப்பாவில் அரசல்புரலசால இருந்த பழக்கம் பிரபலமாகி உலகம் முழுவதும் பரவியது. 17ம் நூற்றாண்டை மூக்குப்பொடி நூற்றாண்டு என்றே சொல்லலாம். அந்த அளவுக்குப் பிரபலமாக இருந்திருக்கிறது.. மூக்குப்பொடி போட்டவர்களை மதத்தை விட்டு விலக்குவேன் என்று போப் சொல்லியும் கேட்காமல் மக்கள் மூக்குப்பொடியில் மூழ்கியிருந்திருக்கிறார்கள்.

18ம் நூற்றாண்டில் பொடிப்பழக்கம் பெரும்பழக்கமாக ஐரோப்பாவில் நிலை பெற்றிருந்திருக்கிறது. நெப்போலியனுக்கும் பொடி போடும் பழக்கம் இருந்ததாம். அப்போதிருந்த போப் பெனிடிக்ட் XIII க்கும் பொடி போடும் பழக்கம் இருந்திருக்கிறது. ஒரு நூற்றாண்டில்தான் எத்தனை மாற்றங்கள்! 17ம் நூற்றாண்டில் மூக்குப்பொடி போட்டால் மதவிலக்கம் செய்யப்படும் என்று வாட்டிகன் சொல்லியிருக்கிறது. அடுத்த நூற்றாண்டில் போப்பாண்டவரே பொடி போட்டிருக்கிறார். என்னே பொடியின் மகிமை!

எது எப்படியோ… இன்று  இந்தப்பழக்கம் மீண்டும் கூடியிருப்பது கவலையானதுதான் .  பலவிதமான உடல்நலக் கேடுகளை உண்டாக்கும் இது போன்ற புகையிலைப் பழக்கங்களை நாம் விலக்கவும் எதிர்க்கவும் வேண்டும்.


*****************

நன்றி 
ஜிரா

Wednesday, July 24, 2013

பெண்ணின் மனம்


முகநூலில் ரசித்தது................




எல்லா பெற்றோருக்கும் தங்கள் பெண்ணை ஒரு நல்ல இடத்தில் கட்டி கொடுக்க வேண்டும் என்ற கனவு நியாயமான ஒன்று தான்.. 

அவள் பெற்றோரும் அப்படித் தான்... மாப்பிள்ளைப் பார்க்க தொடங்கினர் , படித்த மாப்பிளை , நல்ல வேலையில் கை நிறைய சம்பாதிக்கும் ஒருவன், நல்ல குடும்பம், இருவருக்கும் இருவரையும் பிடித்தும் போனது, உடனே நிச்சயம் செய்துவிட்டனர் , 

தினமும் அழை பேசியில் இருவரும் தங்களைப் பற்றி பேச தொடங்கினர், இருவருக்கும் ஏற தாழ ஒரே மனப்பான்மை தான், இருவருக்கும் பொருந்தி போனது, திருமண நாள் நெருங்க நெருங்க வீட்டில் ஒரே பதட்டம், வேலைகள் தலைக்கு மேல் கிடந்தது, இருவர் வீட்டிலும் வேலைகள் துரிதமாக நடந்தேறியது..

நாளை திருமணம், அவள் லேசாக அவள் வீட்டை சுற்றிப் பார்த்தாள், தினமும் அவருடன் பேசியதில் தான் இந்த வீட்டை விட்டு செல்ல போகிறோம் என்று தெரியவில்லை, ஆனால் அன்று ஏதோ ஒன்றை இழக்க போகிறோம் என்று அவள் மனம் பரிதவித்தது. தாயையும், தந்தையையும் பார்த்தாள் எல்லோரும் வேலையில் இருந்தனர், அவள் வீட்டை ஒரு முறை சுற்றி வந்தாள், விரித்த கண்களோடு வீட்டை பார்த்தாள், கண்கள் சுருங்கிய பின்னர் ஓரத்தில் நீர் துளி சொட்டியது..



தங்கையின் புது துணி பரவசத்தில் அக்கா என்று ஓடி வந்தாள்.. அவளை பார்த்ததும் என்ன ஆச்சு அக்கா என்றாள், பூ வாங்கினால் கூட சமமாய் வெட்ட சொல்லி சண்டை போடும் அக்கா , இனி நான் யாருடன் சண்டை போடுவேன், இந்த சின்ன சின்ன மகிழ்ச்சிகளை விட்டுக் கொடுத்து விட்டு நான் செல்ல போகிறேனே என்று எண்ணினாள், , அடுப்படியில் பால் கொதித்து கொண்டிருந்தது , ஓடி சென்று அடுப்பை அனைத்து அம்மா பால் வெச்சிட்டு எங்க போனே என்று திட்டினால், அவளை பெற்றவள், அவளை வளர்த்தவள் என்றாலும் , அம்மா வை அடிக்கடி திட்டி விடுவதும், பின் கட்டி அணைப்பதும் இனி கிடைக்குமா? 

அப்பா யாருடனோ தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார், அவர் பக்கத்தில் சென்று அமர்ந்தாள், பேசிக் கொண்டே அப்பா இவளைப் பார்த்தார், அம்மா வை கொஞ்சம் கூப்பிடுமா என்று சொல்லி விட்டு மறுபடியும் பேச தொடங்கினர், இவள் எச்சிலையும் சோகத்தையும் தொண்டையில் விழுங்கி விட்டு எழுந்து அம்மா வை அழைத்து விட்டு, வீட்டின் வெளியில் உள்ள மாடிப்படியில் உட்கார்ந்தாள், எங்கிருந்தோ, அடியே உள்ள போ, கருத்துர போற நாளைக்கு கல்யாணத்த வெச்சிக்கிட்டு இங்க வந்து உட்காரா பாரு என்று எப்பொழுதும் எதையாவது சொல்லி கொண்டிருக்கும் பாட்டி, எரிச்சலுடன் பாட்டியிடம் எப்பொழுதும் பேசும் அவள் அன்று பாட்டி சொன்னதை கேட்காமல் பாட்டியை முறைத்துப் பார்த்தாள்,


முகம் அப்படியே அழுவது போல மாறியது, பாட்டி உடனே என்னடி என்ன ஆச்சு என்று பதட்டத்துடன் கேட்டாள், அழுகை அருவிப் போல் பொங்கியது உள்ளே ஓடி சென்று விரக்தியுடன் அம்மா அப்பா என்று கத்தினால் எல்லோரும் ஏதோ என்று பயந்துக்கொண்டு ஓடி வந்தனர், உடனே, அம்மா நான் போகமாட்டேன், இங்கேயே இருந்துடுறேன் , உங்களை விட்டு நான் எப்படி செல்வேன், அங்க எப்டி இருக்குமோ, எனக்கு பயமா இருக்கு, நான் போகலை என்று மெல்லிதாய் அழுதாள், 

உடனே அப்பாவின் மனம் அழுதது, அம்மா சமாதனம் சொன்னாள், அப்பாவுடன் அவ்வளவு நெருக்கம் இல்லாமல் இருந்தாலும் 
அப்பாவிற்கும் பெண்ணிற்கும் உள்ள அந்த பாசம் வார்த்தையில் வருணிக்க முடியாதது , 
தங்கை குலுங்கி குலுங்கி அழுதாள், அக்கா அழாதே கா மாமா உன்ன நல்லா பார்த்துபாறு கா என்று வெகுளி பேச்சில் சமாதானம் செய்தாள், அன்றிரவு அவளுக்கு பிடித்த அத்தனையும் சமைத்தாள் அம்மா, ஆனால் அவள் புண்பட்டு போயிருந்தாள்... 

நாளை திருமணம்... போகும் இடம் சொர்கமோ, இல்லையோ என்றெல்லாம் தெரியாது .. ஆனால் அவள் வாழ்ந்த ஒரு சொர்கத்தை விட்டு மட்டும் அவள் செல்ல போகிறாள். திருமணம் என்பது ஆண்களின் வாழ்வில் ஒரு நிகழ்வு, ஆனால் ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் அது மாற்றம்.... அவள் வாழ்ந்த வீட்டிலிருந்து அவளை வேரோடு பிடிங்கு எடுத்து மற்றொரு இடத்தில் நட்டு வைக்கும் விழா தான் திருமணம் , துளிர்ந்த பெண்களும் உள்ளனர், பட்டுப்போன பெண்களும் உள்ளனர் .... 

Pinterest- சமூக இணைய தளம்

சமூக தளங்களின் போட்டிகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே உள்ளது. பல போட்டிகள் இருந்தாலும் வாசகர்களுக்கு சிறப்பான வசதிகளுடன் வித்தியாசமாகவும் இருந்தால் கண்டிப்பாக வாசகர்களின் அமோக ஆதரவு அந்த இணைய தளத்திற்கு உண்டு என்பதை நிருபித்து காட்டியுள்ளது PINTEREST என்ற சமூக இணையதளம்.

பெரும்பாலான சமூக இணையதளங்களும் ஒரே மாதிரியான வசதிகளை Friends, Chatting, Sharing, like இப்படி ஒரே மாதிரியான கொண்டு இருக்கும். ஆனால் Pinterest சற்று வித்தியாசமானது. ஒரு போட்டோ ஆயிரம் வார்த்தைகளுக்கு சமம் என்பதை சரியாக பயன்படுத்தியுள்ள சமூக இணையதளம் Pinterest.



சிறப்பம்சங்கள்:

இந்த தளத்தில் நீங்கள் போட்டோ அல்லது வீடியோக்களை மட்டும் தான் பகிர முடியும். சாதாரண செய்திகளை பகிர முடியாது.
இந்த தளத்தின் தோற்றம் பெரும்பாலானவர்களை கவரக் கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த Pinterest தளத்தில் உங்கள் பிளாக்கில் உள்ள போட்டோக்களை நேரடியாக பகிர்ந்து உங்கள் பிளாக்கின் வாசகர்களை (Traffic) அதிகரித்து கொள்ளலாம்.
போட்டோ அல்லது வீடியோ பகிரும் பொழுது அதற்கு சம்பந்தமாக தனி தனி பிரிவுகளில் பகிரலாம். மொத்தம் 30 க்கும் அதிகமான வகைகள் இந்த தளத்தில் உள்ளது.
குறைந்த நாட்களிலேயே மாதத்திற்கு 21 மில்லியன் வாசகர்களை பெறும் சிறந்த சமூக இணையதளமாகும்.
ஆனால் இந்த சமூக இணையதளத்தில் நேரடியாக கணக்கு open செய்து உபயோகிக்க முடியாது. முதலில் இந்த தளத்தில் சென்று உங்கள் ஈமெயிலை கொடுத்து INVITE அனுப்ப வேண்டும். பிறகு அவர்கள் உங்களுக்கான உறுப்பினர் விவரங்களை மெயிலில் அனுப்புவார்கள். பிறகு தான் உங்களால் Pinterest தளத்தை உபயோகிக்க முடியும்.
உபயோகிப்பது எப்படி:
Approval கிடைத்தவுடன் இந்த தளத்தில் நுழைந்து Add என்பதை அழுத்தி வரும் window-வில் உங்களுடைய போட்டோ இணையத்தில் இருந்தால் Add a Pin என்பதையும், உங்கள் கணினியில் இருந்தால் Upload a Pin என்பதையும் அழுத்தி உங்களுடைய போட்டோவை தேர்வு செய்து உங்களுடையை போட்டோவை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளவும்.


இந்த சமூக இணையதள முகவரி - http://pinterest.com/

--
டெக் தமிழ் 

Wednesday, July 17, 2013

சக்தி ஜோதியின் மலர்தல்....

என்னை கவர்ந்த பெண் பதிவர்களில் சக்தி ஜோதி முக்கியமானவர் இவருடைய கவிதைகள் மனதுக்கு இலகுவானதாகவும் அருமையானதாகவும் இருக்கும் ....


மலர்தல்



நிலாவென
நான்
ஒளிர்வதாகக்  கூறுகிறாய்
சூரியனாய்  இருந்து  கொண்டு
 .
என்
நினைவின்   அடுக்குகளில்
எத்தனையோ  கதைகள்
பொதிந்துள்ளன 

நிலா இரவுகள்
அன்று  இருந்தது  போல்
இல்லை
 .
பால்யம்
கடந்த  இந்த  இரவுகளில்
.
பாட்டிகளின்
மரபில்
வந்து போன  இளவரசனாய்
 .
ஏழு  குதிரைகளில்
நீ
வருகையில்
 .
சூர்யகாந்தியாய்
மலர்கிறேன்
 .
நிலா ஒளிரும்  பொழுதிலும் .
---------------------
 நன்றி :சக்தி ஜோதி 

Thursday, July 11, 2013

உப்பு - சில தகவல்கள்


                



மனித குல வரலாற்றில் உப்புக்குத் தனி இடம் உண்டு. மனிதன் நெருப்பை உருவாக்க கற்றுக் கொண்டதை நாகரீக வளர்ச்சியின் ஆரம்பம் என்கிறார்கள். அதற்கு சற்றும் குறைவில்லாத முக்கியத்துவம் வாய்ந்தது மனிதன் உப்பை பயன்படுத்தத் தொடங்கியது. அதில் இருந்துதான் வேதியியல் என்ற விஞ்ஞானத்துறை தொடக்கம் பெறுகிறது.

***

உப்பு என்ற தமிழச் சொல்லுக்கு `சுவை' என்று பொருள். இனிப்பு, கசப்பு, துவர்ப்பு என்று சுவைகள் எல்லாம் உப்பு என்ற சொல்லை அடியாகக் கொண்டு பிறந்தவை. உப்பு தமிழர் வாழ்வியல் சார்ந்தது.'உப்பிட்டவரை உள்ளளவும் நினை', `உப்புப்போட்டுத்தான் சாப்பிடுகிறாயா?', `உப்புத் தின்னவன் தண்ணி குடிக்கணும்', `தின்ற உப்புக்கு துரோகம் செய்யலாமா?' என்பன போன்ற தமிழ் வழக்குமொழிகள் இதனை நன்கு உணர்த்தும்.

***

சமையலுக்கு பயன்படுத்தப்படும் உப்பை `வெள்ளுப்பு' என்பார்கள். செய்த வேலைக்கு மாற்றாக நெல்லும் (சம்பா), உப்பும் (அளம்) கொடுத்த வழக்கத்தால் தான் `சம்பளம்` என்ற சொல் பிறந்தது. ஆங்கிலத்தில் `சாலரி' என்ற சொல் `சால்ட்' என்பதன் அடியொற்றிப் பிறந்ததே! பயனற்ற வேலையை `உப்புப் பெறாத வேலை' என்று கூறுவார்கள்.

***


பழந்தமிழ் நாட்டுப் பொருளாதாரத்திலும், தமிழ்ப் பண்பாட்டிலும் உப்புக்கு தனி இடம் உண்டு. சுவையின் சின்னமாகவும், வளத்தின் ஆதாரமாகவும் உப்பு கருதப்பட்டது. இன்றும் பலரிடத்தில் புது மணமகள் கணவன் வீட்டிற்குள் நுழையும்போது ஒரு சிறு ஓலைக்கூடையில் உப்பை எடுத்துக் கொண்டே நுழையும் வழக்கமிருக்கிறது. அரிசி - உப்பு அன்பளிப்பாக வழங்குவோரும் உண்டு.

***

உப்பு உறவின் தொடர்ச்சியை குறிக்கும் குறியீடாகவும் விளங்குகிறது. ஒருவர் இறந்த ஒன்பது அல்லது பதினாறாவது நாளில் இறந்தார்க்குப் படைக்கும் உணவுகளை உப்பில்லாமல் செய்யும் வழக்கமும் தமிழர்களிடத்தில் இருக்கிறது. இறந்தாரோடு உள்ள தொடர்பை அறுத்துக் கொள்ளவே இப்படி செய்கிறார்கள். தன் உருவம் தெரியாமல் பிற பொருள்களோடு கலந்து பயன்தரும் உப்புபோல மனிதனும் பயன்பட வேண்டும் என்ற தத்துவமும் புழக்கத்தில் உண்டு.

***

உப்பு விளையும் களத்திற்கு அளம் என்று பெயர். சந்தைக்குரிய முக்கிய உற்பத்திப் பொருளாக உப்பு இருந்துள்ளது. உப்பை வண்டிகளில் ஏற்றிச் செல்பவர்கள் `உமணர்' எனப்பட்டனர். பெரிய உப்பளங்களுக்கு அரசர்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளதை ஏடுகளில் காணலாம். அவை பேரளம், கோவளம் என்று வழங்கப்பட்டன. சோழ, பாண்டிய அரசர்கள் உப்புத் தொழிலை அரசின் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.

***

உப்பு உலோகத்தை அரிக்கும் தன்மை கொண்டது. அதனால் மரவை எனப்படும் மரச்சட்டியிலும், கல்மரவை எனப்படும் மாக்கல் சட்டியிலும் வைத்து உப்பை பயன்படுத்தினார்கள். இப்பாத்திரங்கள் இப்போது பண்பாட்டு எச்சங்களாகி விட்டன. உப்பு நன்றி உணர்ச்சியின் அடையாளமாகவும் கருதப்பட்டது. `தின்ன உப்பினுக்கே நாசம் தேடுகின்ற விதுரா' என்று பாரதி பாடியிருக்கிறான்.

***

காந்தியடிகளின் உப்புச் சத்தியாகிரகமும், தண்டி யாத்திரையும் இந்திய வரலாற்றில் முக்கியமானவை. உப்பு வரிக்கு எதிரான இப்போராட்டங்கள் உப்பின் முக்கியத்துவத்தையும், உப்பு மக்கள் வாழ்வு தழுவியிருந்தது என்பதையும் குறிக்கும் வரலாற்றுச் சம்பவங்களாகும். `உப்புக்கு வரிபோடும் அரசும் ஓர் அரசா?' என்று கேள்வி எழுப்பி ஆங்கிலேய அரசு ஆளத் தகுதியற்றது என முழங்கினர் தேசியவாதிகள். உப்பு விடுதலை உணர்வையும் ஊட்டியிருக்கிறது அல்லவா!

**************

source : http://www.eegarai.net/t53179-topic

அனைத்து கோப்புகளையும் திறந்துபார்க்க ஒரே மென்பொருள்




கணினியில் பணியாற்றும் போது பல்வேறு விதமான ஆவணங்களை கையாளுவோம்,   மிகமுக்கியமாக வேர்ட், எக்செல், பிடிஎப், ஆடியோ, வீடியோ  என்பன போன்றஒருசில கோப்புகளின் வடிவமைப்புகளையே பெரும்பாலும் நாம் அதிகமாக பயன்படுத்தி வருவோம். இதுபோன்ற நம்மால் அதிகமாக பயன்படுத்தும் கோப்புகளுக்கென தனித்தனி மென்பொருட்களை நம்முடைய கணினியில் நிறுவி பயன்படுத்தி வருவோம். 

ஆனால் வேறுசில கோப்புகளை எப்போதாவது குறிப்பிட்ட தேவைக்காக மட்டுமே பயன்படுத்தி வருவோம். அதுபோன்ற கோப்புகளுக்கான உரிய மென்பொருளை நிறுவினால் மட்டுமே  அக்குறிப்பிட்ட கோப்பினை நம்மால் கையாள முடியும். இதனால் ஒரு சில ஆவணங்களை நம்மால் கையாள முடியாமலேயே போய்விட கூடிய சூழ்நிலையும் உண்டு. 

இதுபோன்ற சிக்கல்களை சமாளிக்க freeopener என்றொரு மென்பொருள் வழிவகை செய்கிறது. இந்த மென்பொருள் மூலமாக பல்வேறு விதமான வடிவமைப்புகளை  கொண்ட கோப்புகளை நம்மால் கையாள முடியும்.


இம்மென்பொருளை  http://www.freeopener.com/freeopener_setup.exe என்ற இதனுடைய இணையபக்கத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கணினியில் நிறுவிக்கொள்க. பின்னர் கணினியை ஒரு முறை மறுதொடக்கம் செய்க. 
அதன்பின்னர் இந்த பயன்பாட்டினை செயல்படுத்தி எந்த கோப்பினை திறக்கவேண்டுமோ அதனை திறந்து தேவையான பணிகளை செய்கஇந்த மென்பொருளானது PDF, DOC, AVI, DOCX, ZIP, JAR, XML, HTML, SWF, 7Z, PHP, XLSX, MKV, FLV, XLS, JPEG, TXT, PSD, WMV, CR2, CRW, GIF, MSG, NEF, TIFF, JPG, MOV, MP4, LOG, PNG, CS, INI, MPEG, MPG, CSS, MP3, CFG, HTM, BMP, JS, XLSM, WA, ICO, REG, DNG, ARW, MID, ORF, RAF, PEF, RESX, CF2, ERF, MEF, MRW, SR2, X3F என்பனபோன்ற 75 வகையான கோப்பு வடிவமைப்புகளை திறந்து படித்திட உதவுகின்றது இந்த மென்பொருளானது மேலும் கூடுதலாக ஆதரிக்ககூடிய கோப்புவடிவமைப்புகளை காண.http://www.freeopener.com/formats.html என்ற இணையபக்கத்திற்கு செல்க.


நன்றி: விகுப்பிக்வா வோர்ட்பிரஸ்

Wednesday, July 10, 2013

பல விருதுகளை வென்ற அதிக பயனுள்ள இலவச வீடியோ டவுன்லோடர் aTube Catcher

இணையத்தில் இருந்து மில்லியன் கணக்கான வீடியோக்களை முற்றிலும் இலவசமாக தரவிறக்கம் செய்ய கட்டணமில்லா இலவச மென்பொருள் உள்ளது. அதன் பெயர் aTube Catcher. இந்த மென்பொருள் மூலம் சமூக வீடியோ பகிர்வு இணைய தளங்களான MySpace™, Dailymotion™, Megavideo™, Yahoo™!, Metacafe™, Spike™, Megarotic™, Yahoo!™, Glob™o, RTVE™ மற்றும் பல ஆயிரக்கணக்கான தளங்களில் இருந்து வீடியோக்களை உங்கள் கணினி, மொபைல்,  IPAD, IPOD, PSP, GPS devices, MP4 Players, Android devices, DVD, VCD, MP3, Iphone போன்ற அனைத்து மல்டிமீடியா சாதனங்களுக்கும் தரவிறக்கம் செய்யலாம். 



3GP, 3G2, AVI, XVID, MP4, MP3, MP2, WMA, WMV, GIF, FLAC, WAV, PSP, MPG, VOB, OGG, MOV, AVI. போன்ற பல formatகளை சப்போர்ட் செய்யும் வகையில் இதன் கட்டமைப்பு உள்ளது.



இந்த மென்பொருள் மூலமாக எந்த விதமான third party software இல்லாமல் DVD/VCD யாக சிடியில் பதியலாம்.


screen recorder வசதி உள்ளது. இதன் மூலம் கணினி திரையில் நமக்கு தேவையானவற்றை ரெக்கார்ட் செய்யலாம். வீடியோ சாட்டிங், சினிமா பாடல்கள், ஆன்லைன் விவாதங்கள், ஆன்லைன் நேர்முக தேர்வுகள் என எல்லாவற்றையும் ரெக்கார்ட் செய்யலாம். 


MP3 பாடல்களை தரவிறக்கம் செய்ய தனியே ஒரு விண்டோ உள்ளது. இதில் search box இல் நமக்கு தேவையான பாடல்களின் குறிச்சொல்லை அளித்தால் அதற்கேற்ப பாடல்கள் சர்ச் ஆகும். இதில் நமக்கு தேவையான பாடல்களை மட்டும் தேர்வு செய்து தரவிறக்கம் செய்யலாம். கீழே படத்தில் ilaiyaraja songs என சர்ச் செய்துள்ளேன்.



இந்த மென்பொருள் சப்போர்ட் செய்யும் தளங்கள்:


இவ்வாறு இதன் வசதிகளை சொல்லிக் கொண்டே போகலாம். நீங்களும் பயன்படுத்தி பாருங்கள். இன்னும் நிறைய வசதிகளை அறிந்து கொள்வீர்கள். Multi language வசதி கொண்ட இந்த மென்பொருள் முற்றிலும் பாதுகாப்பான, இலவசமானது ஆகும்.

இந்த பயன்பாட்டை தரவிறக்கம் செய்ய http://atube-catcher.dsnetwb.com/video/download.html

இந்த மென்பொருள் பெற்றுள்ள விருதுகளை பார்க்க இங்கே கிளிக்கவும்.
http://atube-catcher.dsnetwb.com/video/content/banco-datos-Awards.html


.........................

நன்றி : ரசூலிப்ணுகோய ப்ளாக்ஸ்பாட்

யாஹூ மெயில் பயனாளர்களுக்கு ஒரு எச்சரிக்கை


சிலர் எண்ணலாம் யாரச்சும் Yahoo இப்பொழுதும் பாவிக்கிறார்களா என? ஆனால் பெரும்பாலானவர்கள் அதாவது 2008 தொடக்கம் இணையத்தில் இருப்பவர்களின் Default Email இப்போதும் yahoo தான். அவர்கள் மாற விரும்பினாலும் அவர்களால் முடியவில்லை. அப்படி yahoo Mail பாவிக்கும் ஒருவரா நீங்களும்? நிச்சயம் இப்பதிவு உதவும்.. இப்பதிவில் yahoo mail தொடர்பான சில சிக்கல்களையும் கட்டணம் செலுத்தாமல் Google போன்ற சேவைகளுக்கு மாறுவது பற்றியும் இரத்தின சுருக்கமாக காணுங்கள்.

அண்மையில் எனக்கும் என்  நண்பர்களுக்கும் நடந்த சம்பவங்களே இப்பதிவை எழுத வைத்தது.

நடந்தது என்ன?


 IELTS  கற்று கொண்டிருக்கும்   இவருக்கு அண்மையில் தான் பரீட்சை நடந்து முடிந்தது. இவரின்  Default Email ****@yahoo.com . இவரின் பரீட்சை திகதிகள் பற்றி மின்னஞ்சல் அனுப்ப பட்ட போது இவரால் மெயில் box இனை திறக்க முடியவில்லை. பின்பு  தான் புரிந்தது இலங்கைக்கான அவர்களின் servers செயல் இழந்து விட்டது. பின்பு ஒரு நாளின் பின்னர் தான் மீள இயங்க தொடங்கி இருக்கிறது.

இன்னொரு நண்பருக்கும் அப்படி தான்... அவரின் iPhone 5 இல் இன்று வரை yahoo  mail box இனை  configure செய்ய முடியவில்லை.

அதே போல எனக்கும் நடந்தது.. என் yahoo கணக்கு தானாகவே  நிரந்தரமாக அழிக்கப்பட்டு விட்டது. இன்றுவரை அவர்களுடன் தொடர்பு கொண்டும் அவர்கள் பதில் அளிக்கவே இல்லை. நல்ல வேளையாக அதன் inbox backup  ஒன்று இருந்ததால் அவற்றின் மூலம் பெரும்பாலான Email அனுப்புபவர்களை Gmail க்கு வரவைத்து விட்டேன்.

இவை எல்லாம் தொழில்நுட்ப பிழைகளே.. இவ்வாறு நடக்க என்ன காரணம்?? முன்பு கொடி கட்டி பறந்த Yahoo, Google இன் அபரிமிதமான வளர்ச்சியால் முடிங்கி விட்டது. என்றாலும் இயக்கிய படி தான் இருக்கிறது. இவர்களால் இவர்கள் மெயிலையே கட்டுபடுத்த முடியவில்லை. இது போதாது என்று ovi, nokia mail (இரண்டும் ஒன்று தான்) மெயில் சேவைகளையும் வாங்கி விட்டார்கள்..

Yahoo துரதிஷ்டவசமாக Email forwarding வசதியை இலவசமாக வழங்குவது இல்லை. இது கிடைத்தால் நீங்கள் Yahoo mail க்கு வரும் மின்னஞ்சல்களை இலகுவாக வேறு சேவைக்கு திருப்பி விடலாம்.

நாளை உங்களுக்கும் இப்படி மெயில் காணாமல் அல்லது திறக்க முடியாமல் போகலாம்.

 இதை தடுக்க என்ன செய்ய வேண்டும்?
முடிந்தவரை விரைவாக yahoo  இனை விட்டு வெளியேற வேண்டும்.

  1. நண்பர்களுக்கு புதிய மின்னஞ்சல் முகவரியை தெரிய படுத்துங்கள்.
  2. இணைய சேவைகளுக்கு இவர்களின் மின்னஞ்சலின் அடியில் இருக்கும் Update subscription link மூலம் சென்று புதிய முகவரியை பதியுங்கள்.


இதற்கும் மேலாக yahoo க்கு வரும் Mails களை திரட்ட gmx.com இல் சென்று ஒரு புதிய கணக்கை உருவாக்கி கொள்ளுங்கள். அதன் மூலம் உங்கள் yahoo கணக்கு உயிருடன் இருக்கும் வரை அதற்கு வரும் மின்னஞ்சல்கள் பாதுகாப்பாக gmx.com இலும் சேமிக்க படும்.

இதை விட வேறு சில வழிகளும் இணையத்தில் உண்டு... 
உங்களுக்கு பிடித்த ஏதோ ஒரு இலகுவான வழி மூலம் உங்கள் மின்னஞ்சல்களை பாதுகாத்து கொள்ளுங்கள்..

பொதுவாக Gmail சிறந்த ஒன்று. Hotmail இல் சில விசேட சேவைகள் கிடைக்கிறது..

.................................நன்றி :தமிழ்சிசி.காம்