Tuesday, August 27, 2013

செத்த பாம்பை அடிக்கும் வீரர்கள்..!!


                     

இருப்பதை இழந்து
அடிப்பவன் புகழ் பாடி
அடிமையாய் வாழ்பவனுக்கு,
ஆள்பவனின் பரிசு
அடியும் உதையும் மட்டுமே..!!!

என்ன இலக்கணத்தில்
மனிதனை கூறு போடுகிறான்
அரியாசனம் அமர்ந்தவன்..!!
அவன் அகமகிழ்ந்து இன்புற
இவன் புறத்தை துன்புறுத்தி
வேடிக்கை பார்க்கிறான்..!!

கூத்துக்கட்ட வந்தவனை
கூடி நின்று கை தட்ட வைத்து,
கூத்துப் பார்க்க போனவனை
கூனிக் குறுக வைத்து
கோமாளி ஆக்க பார்க்கின்றனர்
இக்காலத்து முதலாளிகள்..!!

சாண் ஏறினால் தானே
முழம் வழுக்கும்,
முக்காடு போட்ட
பண முதலைகள் அழியும் வரை
சாணும் ஏற முடியாது
முழமும் பார்க்க முடியாது..!!

வளைந்து வணக்கம் போட
வலுவிழந்த நம் முதுகு
இருக்கும் வரை,
குனிய குனிய குத்துகின்ற
அதிகார மேல் வர்க்கம்
இருக்கத்தான் செய்யும்...!!!

உடல் சோர்ந்து,
முகம் தோய்ந்து,
நாவறண்டு,
நரம்பு தளர்ந்து,
தோல் சுருங்கி
தொடை ஒடுங்கி
செத்த பாம்பு போல 
துடிக்கும் மக்களை அடித்தே
தங்களை வீரன் என்கின்றனர்,
ஆளும் அதிகார மக்கள்..!!!


 ** ~~~~~~~~~~~~~~ **

நன்றி : மனோ ரெட் 
Mano Red