Friday, December 14, 2012

ஒரு கொடுங்கோலனின் மரணம்!

                                             

32 ஆண்டுகள் இந்தோனேசியாவின் சர்வாதிகாரியாக கொடுங்கோல் ஆட்சிப் புரிந்தவன் சுகார்த்தோ!
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் துணையோடு சுமார் 15 லட்சம் கம்யூனிஸ்ட்டுகளையும் - கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவாளர்களையும் அழித்தொழித்தவன்.
கடைசிக்காலத்தில் நுரையீரல், சிறுநீரகம் உள்ளிட்ட உடலின் அனைத்து பாகங்களும் செயலிழந்து சிகிச்சை பலனளிக்காமல் தனது 86வது வயதில் ஞாயிறன்று ஜகார்த்தாவில் மரணமடைந்தான்.

                              
1920-களில் இந்தோனேசியாவில் உதயமான கம்யூனிஸ்ட் கட்சி படிப்படியாக வளர்ந்தது. உலகப்போர்கள் காலத்திலும், அதைத்தொடர்ந்து இந்தோனேசிய சுதந்திரப் போராட்டத்திலும் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக தீரத்துடன் போராடிய இந்தோனேசிய கம்யூனிஸ்ட் கட்சி, 1960 காலத்தில் உலகிலேயே அதிகாரத்தில் இல்லாத மிகப்பெரும் கம்யூனிஸ்ட் கட்சியாக உருவெடுத்தது. நாளுக்கு நாள் இந்தோனேசிய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் செல்வாக்கு அதிகரித்தது.
இது, இந்தோனேசியாவின் முதல் ஜனாதிபதியும், இடதுசாரிகள் - வலதுசாரிகள் - ஏகாதிபத்திய சக்திகள் - ராணுவ அதிகாரிகள் என அனைவருக்கும் ‘நல்லவராக’ செயல்பட முனைந்த சுகர்னோவுக்கும், இந்தோனேசிய வலதுசாரி பிற்போக்கு சக்திகளுக்கும், இந்தோனேசியாவை ஆசியாவில் தங்களது முக்கிய தளமாக கைப்பற்ற துடித்து வந்த அமெரிக்காவுக்கும் பெரும் சவாலாக இருந்தது.

                             
இந்தோனேசிய கம்யூனிஸ்ட் கட்சியை வளரவிட்டால், இந்தோனேசியா மட்டுமின்றி ஒட்டுமொத்த ஆசியாவும் கம்யூனிஸ்ட் பூமியாக மாறிவிடும் என்று அஞ்சிய அமெரிக்க ஏகாதிபத்தியம், தனது நாசகர உளவு அமைப்பான சிஐஏ-வை ஏவிவிட்டது.
அதிபர் சுகர்னோவுக்கு எதிராக சிஐஏ துணையுடன், ராணுவ கலகம் நடத்தப்பட்டது.
அப்போது இந்தோனேசிய ராணுவத்தில் மேஜர் ஜெனரல் பதவி வகித்த சுகார்த்தோ, ராணுவ மற்றும் அரசியல் நிலையற்ற தன்மையை பயன்படுத்தி ராணுவத் தளபதி பதவியை கைப்பற்றினார். அதைத்தொடர்ந்து பெரும் ராணுவக் கலகம் கட்டவிழ்த்துவிடப்பட்டது.
1965 அக்டோபர் 18ந்தேதி ராணுவ வானொலிகள் அதிகாரத்தை கைப்பற்றியதாக அறிவித்தன. அதைத்தொடர்ந்து இந்தோனேசிய கம்யூனிஸ்ட் கட்சி உடனடியாக தடைசெய்யப்படுகிறது என்று முதல் அறிவிப்பாக சுகார்த்தோ வெளியிட்ட பிரகடனம், இந்தோனேசிய அரசியல் வரலாற்றில் என்றும் அழியாத கருப்புப் புள்ளியாக பதிவானது.


                              
இந்தோனேசிய கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்ட உடன் கட்சியின் உறுப்பினர்கள், ஊழியர்கள், ஆதரவாளர்கள் மற்றும் கட்சியை ஆதரிப்பவர்கள் என கருதப்பட்ட சீன வம்சா வளியைச் சேர்ந்த இந்தோனேசியர்கள் என ஒருவர் விடாமல் அனைவரையும் கொன்று குவிக்கப்பட்டனர். அந்தக்காலத்தில் இந்ததேனேசிய கடல் எல்லையில் பிடிக்கப்பட்ட பல சுறா மீன்களின் வயிற்றில் எண்ணற்ற மனித மண்டை ஓடுகளும். தலைகளும் கிடைத்தன. அவைகள் அத்தனையும் கம்யூனிஸ்ட்டுகளின் தலைகள்! உலகிலேயே மிகக் குறுகிய காலத்தில் 15 லட்சம் கம்யூனிஸ்ட்டுகளை நரவேட்டையாடி இட்லருக்கும் மேல் நான் கொடூரமானவன் என்பதை அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு பணிந்து சேவகம் புரிந்த சொறிநாய்தான் இந்த சுகார்த்தோ!

                        
கிட்டத்தட்ட ஓராண்டுக்கும் மேலாக இந்தோனேசிய கம்யூனிஸ்ட்டுகளும் கம்யூனிஸ்ட் ஆதரவாளர்களும் தேடித் தேடி அழிக்கப்பட்டனர்.
1965 லிருந்து 1968 வரை கிட்டத்தட்ட 15 லட்சம் பேர் கொல்லப்பட்டதாக வரலாறு தெரிவிக்கிறது. அதுமட்டுமின்றி இந்தோனேசியாவின் தீவுப்பகுதிகளான பாபுவா, ஏக் மற்றும் கிழக்கு தைமூர் (இது தற்போது தனி நாடாகிவிட்டது) ஆகிய பகுதிகளில் சுகார்த்தோவின் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடிய 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள், ராணுவத்தை ஏவி படுகொலை செய்யப்பட்டனர்.
சுகார்த்தோவை எதிர்த்தவர்கள் அனைவரும் கொடூரமாக கொல்லப்பட்டனர்.
1965லிருந்து 1997 வரை 32 ஆண்டுகள் ராணுவ பலத்துடன் சர்வாதிகாரம் நடத்தி வந்த சுகார்த்தோவின் ஆட்சிதான் 20ம் நூற்றாண்டில் உலகிலேயே மிகக்கொடூரமான, மிக மிக ஊழல் மலிந்த ஆட்சியாக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டது.
சுகார்த்தோவால் கிட்டத்தட்ட அழிக்கப்பட்ட இந்தோனேசிய கம்யூனிஸ்ட் கட்சியின் பல தலைவர்கள் இன்றைக்கும் தலைமறைவாக பல்வேறு நாடுகளில் வாழ்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

                                             

1997ல், சுகார்த்தோவின் பலம் குன்றத்துவங்கிய காலகட்டத்தில், அவரை எதிர்த்து அரசியலுக்கு வந்த முதல் ஜனாதிபதி சுகர்னோவின் மகள் மேகவதி சுகர்னோபுத்ரிக்கு மக்கள் செல்வாக்கு அதிகரிக்கத் துவங்கியது. இதைத்தொடர்ந்து அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.
இத்தகைய கொடூரமான - மனிதவிரோதி - ஊழல் பேர்வழி மிக அமைதியான முறையில் மரணமடைந்தது வருத்தமளிக்கிறது. இவனை நடுரோட்டில் நிற்க வைத்து சித்திரவதை செய்து கொன்றிருக்க வேண்டும். வரலாறு இதுபோன்ற சுகார்த்தோக்களுக்கு எதிர்காலத்தில் பாடம் கற்பிக்கும் என்று நம்புவோம்!


source:   http://santhipu.blogspot.com/2008/01/blog-post_28.html

ஒரு கோப்பை மனசு...



‘மனமிருந்தால் மார்க்கமுண்டு’ என்பார்கள். அதாவது மனம் தெளிவாக இருந்தால் வழி ண்டு என்பதுதான் இதன் பொருளாகும். மனமானது தூசி படிந்த கண்ணாடியாக இருக்குமானல், காணும் பிம்பத்திலும் தெளிவிருக்காது. மனக்கண்ணாடி தெளிவாக இருக்க வேண்டுமானால், அது நம் கையில்தான் இருக்கிறது. மூச்சுப்பயிற்சி, யோகா போன்றவை இதற்கு உதவும். உடல்நலத்திற்கு எப்படி பயிற்சி அவசிமானதோ அதுபோல மனநலத்திற்கும் பயிற்சி முக்கியமானது.
                                                              
                       
‘மனசே.. ரிலாக்ஸ்…’ எனச்சொல்வது எதற்கென்றால், மனமானது எப்போதும் ஒருவித பதற்றத்திலேயே இருகிற காரணத்தால்தான்.பதற்றத்தைத் தவிர்க்க வேண்டும் என்பவர்கள், மனதை முதலில் அமைதிப் பூங்காவாக ஆக்க வேண்டும். மன அமைதி நிலையில்தான் வாழ்வின் பிரச்சினைகளுக்கு வழி பிறக்கும்.
‘மனம் ஒரு குரங்கு’ என்றனர். முன்னோர். ஆகவே, அக்குரங்கை ஆட்டி வைப்பது நம் கையில்தான் உள்ளது. இந்த வித்தையை கற்றுக்கொண்டால் போதும். அனைத்தையும் நாம் அடைய முடியும்.

                                                      
இதில் கற்றுக்கொள்வது என்பது உள்வாங்குவதின் இன்னொரு வடிவம்தான். ஆம் நன்கு படித்து முதல் மதிப்பெண் வாங்கிய மாணவர்களுக்கு அடிப்படையாக இருந்ததெல்லாம் இந்த உள்வாங்கும் திறன்தான். எந்த அளவிற்கு விஷயங்களை நீங்கள் உள்வாங்குகிறீர்களோ, அந்த அளவிற்கு உயர்ந்து விடுகிறீர்கள். எதையுமே திறந்த மனத்துடன் அணுகினால் சாதிப்பது சுலபம்.
                                                   
ஜென் கதை ஒன்று. குருவிடம் சீடன் ஒருவன் வந்து தான் நிறைய விஷயங்களைக் கற்றிருப்பதாகவும், சில விஷயங்களை மட்டும் தங்களிடம் கற்றுக்கொள்ள வந்திருப்பதாகவும் கூறினான். குரு சற்று நேரம் அமைதியாக இருந்தால். பிறகு, அவனை நோக்கி, ‘இதோ இந்தக் கோப்பையில் தேநீரை ஊற்று” என்றார். ஆனால், கோப்பை நிறைய தேநீர் ஏற்கனவே இருந்தது. சீடன் தயங்கினான். குரு சிரித்தபடி சொன்னார்,
நிரம்பிய கோப்பையில் தேநீரை ஊற்ற முடியாது. அதுபோல உன்னுள்ளும் எனது செய்திகள் நுழையாது. போ முதலில் உன் மனக்கோப்பைக் காலி செய்துவிட்டு வா!” என்றார்.
நிறைய எண்ணக் குப்பைகளால் நாமும் நிறைந்திருந்தால் எதையுமே நாம் உள்வாங்கிக்கொண்டு,செயல்படமுடியாது.
ஆகவே, மனக் கோப்பையை காலியாக வையுங்கள். பிறகு பாருங்கள்.. ஒவ்வொரு நாளும் ஆனந்தத்தைப் பருகுவீர்கள்.

வெற்றியும் இன்பமும்..!


                                    

உங்களுக்கு இனிப்பு பிடிக்குமா? காரம் பிடிக்குமா? என்று கேட்டால், இனிப்புதான் பிடிக்கும் என்று எல்லாருமே சொல்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.
இனிப்பை விட காரத்தை அதிகமாக விரும்புகின்றர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
ஆனால், நீங்கள் ஆனந்தமாக இருக்க விரும்புகிறீர்களா, அழுதுகொண்டு இருக்க வேண்டுமானாலும் கேளுங்கள். வருவது ஒரே பதிவாகத்தான் இருக்கும்.
“ஆனந்தமாக”
ஆனால், எப்போதும் ஆனந்தமாக இருப்பது எப்படி என்பதுதான் பலருக்கு புரியாத புதிராக இருகிறது; விளங்காத விஷயமாக இருக்கிறது.
இவர்கள், ஒரு விஷயத்தை முதலில் தெரிந்து கொள்வது நல்லது.
                                    
எப்போதும் ஆனந்தமாக இருப்பது என்றால், எப்போதும் “சந்தோஷமான விஷயங்களே நடந்து கொண்டிருக்க வேண்டும். சந்தோஷமான மனிதர்களே வந்து சந்திக்க வேண்டும். சந்தோஷமான செய்திகளையே அவர்கள் சொல்ல வேண்டும் எதிர்பார்த்ததெல்லாம் நடக்க வேண்டும்; எதிர்பார்த்த நேரத்திலேயே நடக்க வேண்டும்…”
- இப்படியெல்லாம் ஆசைப்படுவதுதான் அடிப்படைத் தவறு. இப்படி நடக்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் மட்டும் போதாது. அதற்கேற்றபடி நாம்தான் திட்டமிட்டு காரியங்களை நடத்திச் செல்ல வேண்டும்.
முன்யோசனை, திட்டம், உழைப்பு இத்தனையும் இதற்குத் தேவை.
இங்கேயும் ஒரு கொக்கி இருக்கிறது.
நமது தரப்பிலிருந்து, அல்லது எதிர்பாரத இடத்திலிருந்து கூட, இடைஞ்சல்கள், எதிர்ப்புகள் தாமதங்கள், ஆகியவை முளைப்பதை தவிர்க்க முடியாது.
எதிர் தரப்பிலிருந்து, அல்லது எதிர்பாராத இடத்திலிருந்துகூட, இடைஞ்சல்கள், எதிர்ப்புகள், தாமதங்கள், ஆகியவை முளைப்பதை தவிர்க்க முடியாது.
அங்கேதான் நாம் அடிபடுகிறோம். அல்ல்ல்படுகிறோம். வாழ்கை இனிமையாக இல்லையே என்று வருத்தப்படுகிறோம். நிகழ்வுகள் போலவே, மனிதர்களிடமும் நாம் நிறைய எதிர்பார்க்கிறோம்.
                                          
மற்றவர்கள் நம்மிடம் இப்படி நடக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். அதாவது,
“நன்றாக வரவேற்க வேண்டும், நன்றாக உபசரிக்க வேண்டும், கேட்டவுடன் தந்து விட வேண்டும், நமக்காக விட்டுக்கொடுத்துவிட வேண்டும், நாம் சொல்லை அப்படியே ஏறுக்கொள்ள வேண்டும்” என்றெல்லாம் எதிர்பார்க்கிறோம்.
ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள். இது எவ்வளவு அறிவீனமான எதிர்பார்ப்பு.
மற்றவர்கள் என்றால் யார்?
அவர்களும் நம்மைப்போலவே, ஆசைகளும், தேவைகளும், தேடல்களும், உணர்வுகளும் பதவி கர்வமும் உடைய மனிதர்கள் தானே!
நாம் எதிர்பார்ப்பது போல்தானே அவர்களும் எதிர்பார்ப்பார்கள்?
                                    

அதைத்தான் மறந்துவிடுகிறோம். உணர்ந்து கொள்ள மறுக்கிறோம். ஏற்றுக்கொள்ளத் தயங்குகிறோம்.
அதுதான் பிரச்னை.
இதற்கென்ன செய்யலாம்?
நமது பொறுப்புகளை உணர்ந்து இலக்குகளைத் தீர்மானித்து, அதற்கான காரியங்களையும் கடமைகளையும் அந்தந்த நேரங்களில் சிறப்பாகச் செய்து வருவது முதல்கட்ட முயற்சி.
எதிர்ப்படும் ஏமாற்றங்கள், தடைகள், தாமதங்கள், இவைகளால் வேகம் குறைந்தாலும், வீரியம் குன்றாமல், முன்னிலும் முனைப்பாக, துடிப்பாக, ஊக்கத்துடன் செயல்படுவது இரண்டாம் கட்ட முயற்சி.
அப்போதுதான் வெற்றி என்பது நம் விழிகளில் தெரியும்.
சரி, வெற்றி மட்டுமே ஒருவனுக்கு ஆனந்தத்தை அளித்து விடுமா?
ஒரு பழமொழி கேள்விபட்டிருப்பீர்கள்.
“மெத்தையை வாங்கலாம். தூக்கத்தை வாங்க முடியாது.”
ஆம். வெற்றியே காணாத மனிதர்கள் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள். அவர்கள் ஆனந்தமாக இல்லையா என்ன?
இருக்கிறார்கள்.
காரணம், அவர்களின் பார்வை; அவர்களின் பக்குவம்.

                            
வாழ்வைப்பற்றிய அர்களின் கோட்பாடுகள் என்ன?
இருப்பதில் திருப்தியடை.
இருப்பதை முழுமையாக அனுபவி.
இல்லாததில், தகுதிக்கேற்றவைகளை அடையமுயற்சி விடும்.
தகுதியற்றவைகளுக்கு ஏங்காதே.
இழந்தவைகளை ஈடுசெய்து விடலாம் என்று நம்பு.
காலம் கனியும் என்று காத்திரு.
பாதகம் செய்தாரை பழிவாங்க எண்ணாதே.
நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று நம்பு.
ஒருவன் செய்யும் உதாசீனம், உலகமே செய்யும் உதாசீனம் அல்ல.
தோல்விகளும் அவமானங்களும் இறைவன் அளிக்கும் இன்னொரு வாய்ப்புகள்.
தொல்லைகள் வந்தாலும் அதில் நல்லதும் இருக்கும்.
மற்றவர்களின் தவறுகளை மன்னித்து விடு.
தகுதிக்கு மீறி எதிர்பார்க்காதே.
எல்லோரையும், எப்போதும் திருப்திப்படுத்த முடியாது.
சக்திக்கேற்றபடி பிறருக்கு உதவு.
தவறுகள், மனிதர்க்கு சகஜம்.
இடர் என்று எதிர்பட்டால் “எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது” என்று முடங்காதே.
என்னதான் நல்லது நடந்தாலும், பிறருடன் ஒப்பிட்டு, இருக்கிற இன்பத்தைத் தொலைத்து விடாதே.
சுருக்கமாக,
இன்பத்தைத் தேடும் முயற்சியில், துன்பத்தில் சிக்காதே.
ரோஜாவை ரசிப்பது இன்பம். முட்களைப் பார்த்து முகஞ்சுளிப்பது துன்பம்.
ஆக, இன்பம் சுரப்பது இதயத்தில். சுரக்க வைப்பது, எதையும் எப்படிப்பார்ப்பது, எப்படி எடுத்துக்கொள்வது எனும் பக்குவம் வேண்டும்.

மௌனம் என்னும் மந்திரமொழி..!


வார்த்தைகள் இல்லாத புத்தகம் மௌனம். ஆனால், வாசிக்க, வாசிக்க இதற்குள் வாக்கியங்கள். மௌனம் என்பது வெளிச்சம். நம்மை நாமே இதற்குள் தரிசிக்கலாம். மௌனம் என்பது இருட்டு. எல்லாத்துன்பங்களையும் இதற்குள் புதைக்கலாம். மௌனம் என்பது மூடி! இதை தயாரித்து விட்டால் எல்லா உணர்ச்சிகளையும் இதற்குள் பூட்டி வைக்கலாம். இதுவரை உலகம் சொல்லாத உண்மைகளை இது போதிக்கும்.  மௌனம் என்பது தவம். இதில் ஆழ்ந்தால் அமைதி நிச்சயம்.
                                                 
“மௌனம் என்பது வரம்” நம்மிடம் நாமே பெறுவது. இன்பம், துன்பம் இரண்டையும் மௌனம் கொண்டு சந்தித்தால் எப்போதும் இதயம் இயல்பாக இருக்கும். இதழ்களை இறுக மூடி நாம் நமக்குள் இறங்குவோம்!”
எங்கோ, எப்பொழுதோ படித்திதயத்தை வருடிய வரிகள், உலகத்திலேயே நமக்குப் பிடித்த குரல் நமது குரல்தான். நமக்குப் பிடித்த பேச்சு நமது பேச்சுதான். அதனால் நாம் பேச ஆரம்பித்தால் மணிக்கக்காகப் பேசிக்கொண்டே இருக்கிறோம். ஒரு வரியில் பேச வேண்டியதை ஒன்பது வரிகளில் பேசுகிறோம். நாம் பல சமயம் யாரிடம் பேசுகிறோம், எதற்காகப் பேசுகிறோம எந்த இடத்தில் பேசுகிறோம் எனபதைப் பற்றியே சிந்திப்பதில்லை. நமக்குத் தெரிந்ததை பேச வேண்டும் என்பது, மட்டுமே நமது இலக்கு. புத்திசாலி மற்றவர்களைப் பேசவிட்டு,, மௌனம் சாதித்து, தேவையான பொழுது மட்டும் பேசி பேசுபவர்களின் நட்பைப் பெறுகிறான். பேசுவதால் நம் இருப்பை பிறர்க்கு உணர்த்துகிறோம். நாம் ஒரு நாளில் பேசுகிற பேச்சை ஒலிநாடாவில் பதிவு செய்து அதையே நாம் கேட்டால் சில நேரங்களில் வருத்தப்படுவோம். நமது நாக்கு ஈரமுடையது.
                                          
             
இரட்டை நாக்கு உடையவர்களை உலகம் நம்புவதில்லை. பொய் சொல்ல முயன்றால் சுற்றியுள்ள பற்கள் நாக்கைக் கடிக்கும். பொய் பேசியபின் பிறர் அறியாமல் நாக்கைக் கடித்துக்கொள்கிறோமல்லவா? அதிகம் பேசாதவனை உலகம் விரும்புகிறது. அளந்து பேசுபவனை உலகம் மதிக்கிறது. 
மௌனத்தின் வெளிப்பாடுகள் பல. கல்யாணப் பெண்ணின் மௌனம் சம்மதமாகிறது. கரை கடந்த இன்பத்தில் மனிதன் மௌனிக்கிறான். துன்பத்தின் உச்சியில் மௌனமே பேசுகிறது.
இது அவசர உலகம். இயந்திர கதியில் மனிதர்கள். வாய்க்கும் வயிறுக்கும் போராட்டம். நின்று, நிலைக்க நேரமில்லை, வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது. வாரம் ஒரு முறை தினசரிக் காலண்டரில் ஞாயிறன்று ஆறு நாட்களைச் சேர்த்து கிழிக்கிறோம். தேவை நிம்மதி. தேவை மன அமைதி. தேவை மகிழ்ச்சி. இது மௌன தவத்தால் கிட்டும்.
                          
மௌன தவம் செய்பவன் தன்னைத்தானே சுய பரிசோதனை செய்து கொள்கிறான். அவனது புறக்கதவுகள் மூடி அக்கதவுகள் திறக்கின்றன.  தனது நிறை, குறைகளை அவன் ஆராய்கிறான். அவனது பேராசை நிறை மனமாகிறது. சினம் பொறைமாயக மாறுகிறது. கடும்பற்று ஈகையாகிறது. முறையற்ற பால்கவர்ச்சி கற்பாக மாறுகிறது. வஞ்சம் மன்னிப்பாகிறது. அவன் அனைத்தையும் சமன் செய்து சீர்தூக்குகிறான். அவனது தன் முனைப்பு, அகந்தை அகன்று தான் பரம்பொருளின் அம்சம் என உணர்கிறான். முடிவு வாழ்க்கை கல்வியில் தேர்ச்சி.
ஜான்கேஜ் என்பவர் “மௌனம்” என்ற புத்தகத்தில் எழுதுகிறார், எந்த சப்தமும் வராத ஒரு அறையை ஆக்ஸஃபோர்டு பல்கலைக்கழகத்தில் உருவாக்கினார்கள். கேஜ் அதில் நுழைந்ததும் இரண்டு சப்தங்களைக் கேட்டார். ஒன்று இருதயம் இயங்குகிற சப்தம். அதாவது இரத்த ஓட்டத்தின் சப்தம். (Cardiac Echo) மற்றொன்று மனம் வேலை செய்கிற சப்தம். கேஜ் ஆச்சரியமாகச் சொன்னார். “இதுவரை நான் இந்த சப்தங்களைக் கேட்டதேயில்லை.”
 உன் வார்த்தைகளிலேயே மிக அழகானது எது? உதடு திறகாமல் பதில் சொன்னது மொழி. ஓசை இல்லாமல் பதில் சொன்னது மொழி, வார்த்தை இல்லாமல் பதில் சொன்னது மொழி.
“மௌனம்”