Friday, June 14, 2013

"அப்பா நான் உங்களை அதிகம் நேசிக்கிறேன்!"


ஜூன் 3வது ஞாயிற்றுக் கிழமை தந்தையர் தினம்!

தன்னலமற்ற தியாகத்தோடு பிள்ளைகளை வளர்க்க பாடுபட்ட தந்தைக்கு, அவர்கள் பெற்றெடுத்த பிள்ளைகள் நன்றி செலுத்தும் நாள் தான் தந்தையர் தினம் (Father's Day). உலகம் முழுவதும் இந்தத் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 3வது ஞாயிற்றுக் கிழமைகளில் நன்றி பெருக்குடன் கொண்டாடப்படுகிறது.

பெற்ற தாயின் அன்புக்கு ஈடு இணை எதுவும் இல்லை என்பது உண்மைதான்.அதே நேரத்தில்,தந்தையின் தியாகத்தையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.ஒவ்வொரு தந்தையும்,தனது பிள்ளைகள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக கடினமாக உழைத்து பொருள் ஈட்டி,வாழ்வில் தன்னலமற்ற பல தியாகங்களை செய்து குழந்தைகளை நல்ல நிலைக்கு கொண்டு வருகிறார்கள்.

அப்படிபட்ட,தந்தைக்கு குழந்தைகள் நன்றி தெரிவிக்கும் நாள்தான் தந்தையர் தினம். இந்த தந்தையர் தினத்தை கொண்டாடுவதற்கு முதலில் வித்திட்டவர் டோட் என்ற ஒரு அமெரிக்க பெண்தான்.

வாஷிங்டன் நகருக்கு அருகே உள்ள ஸ்போக்கேன் என்ற ஊரைச் சேர்ந்த சோனோராவின் தந்தை வில்லியம் ஜாக்சன் ஸ்மார்ட்.இவரது தாய்,தனது 6-வது பிரசவத்தின் போது மரணமடைந்தார்.அப்போது,சோனோராவிற்கு வயது 16. ஆனால்,ஜாக்சன் ஸ்மார்ட்,தம் குழந்தைகளுக்கு தாய்ப்பாசம் ஏக்கம் வந்துவிடாதபடிக்கு,ஒரு தந்தையாக மட்டுமல்லாது,தாயுமாகி 6 பிள்ளைகளையும்  நின்று வளர்த்தெடுத்தார்.

தனது தந்தையின் இந்த பாசமும்,நேசமும் சோனோராவை அவர் வளர்ந்த பின்னர் நெகிழச் செய்து,அவரது தந்தை குறித்த பெருமிதம் கொள்ள வைத்தது.இந் நிலையில்தான்,1909 ம் ஆண்டுவாக்கில் தனது 27 வது வயதில்,அன்னையர் தினத்தன்று ஒரு கிறிஸ்தவ தேவாலயத்திற்கு சென்றார்.அங்கு, பாதிரியார் ஒருவர் அருள் உரை கூறிக் கொண்டிருந்தார்.

அதை பார்த்த சோனோராவுக்கு, "ஒரு குழந்தையின் வாழ்வில் அன்னையின் பங்கு எவ்வளவு இருக்கிறதோ,அதே போல தந்தையின் பங்கும் இருக்கும் போது,ஏன்? தந்தையர் தினமும் கொண்டாடக் கூடாது?" என்ற எண்ணம் உதித்தது.

அந்த எண்ணம் உதித்த கையோடு,சோனோரோ தந்தையர் தினத்தை கொண்டாடத் தொடங்கினார்.அதன் பின்னர், இது உலகம் முழுவதும் பரவியது.
1924-ம் ஆண்டு அமெரிக்கா ஜனாதிபதியாக இருந்த கால்வின் கூலிட்ஜ்,முதல் முதலில் தந்தையர் தினத்தை அங்கீகரித்தார்.பின்னர், 1972-ம் ஆண்டு ஜனாதிபதியாக இருந்த ரிச்சர்டு நிக்சன் என்பவர், ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 3-வது ஞாயிற்றுக்கிழமை 'தந்தையர் தினம்' கொண்டாடுவதை உறுதிப்படுத்தினார்.
அப்போதிருந்து,உலகம் முழுவதும் தந்தையர் தினம் கொண்டாடும் முறை வேகமாக பரவியது. 

பத்து மாதம் சுமக்க முடியவில்லை என்பதால், அதற்கு எல்லாம் சேர்த்து வைத்துதான் தந்தையானவர், தம்மால் இயலும் வரை தோளிலும் முதுகிலும் சுமக்கிறார் என்றால் மிகை இல்லை.இந்த நாளில் ஒவ்வொரு குழந்தையும், தங்களின் முன்னேற்றத்திற்கு தந்தை பட்டபாடு, தியாகத்தை நினைக்க வேண்டும்.முடிந்த பரிசு பொருளை தந்தைக்கு கொடுத்து நன்றி பாராட்டுங்கள்!

அதைவிட,"அப்பா நான் உங்களை அதிகம் நேசிக்கிறேன்!" என்ற நன்றி பெருக்கான அன்பு கலந்த வார்த்தையை சொல்லுங்கள்.அல்லது அதை அழகாக எழுதி வாழ்த்து அட்டையாக கொடுங்கள்..!

தந்தையின் அன்பு கிடைக்காமல் போவது,அன்னையின் அன்பைப் போலவே குழந்தையின் ஆளுமை,நடத்தையின் வளர்ச்சியில் அதிக பங்காற்றுகிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்!
==========================
நன்றி :விகடன். கொம்

அவளொரு பேரழகி




அவள் கூந்தல்...
கருப்பு புதைகுழி


அதன் நீளம்...
வட்டியோடு
வளர்ந்த அசல்


அவள் உச்சந்தலை வகிடு...
அடர்ந்த காட்டிற்குள்
அழைத்துச் செல்லும்
ஒற்றையடிப்பாதை


அவள் பொட்டு...
பாதைக்கு போடப்பட்ட
பூட்டு


அவள் நெற்றி...
விலைக்கு
கிடைக்காத வானவில்


அவள் விழிகள்...
குளத்தில் குளிக்கும்
குட்டி மீன்கள்


அவள் மூக்கு...
மூங்கில் தண்டில்,
நிலவில் அமைத்த
முக்கோண கூடாரம்


அவள் இதழ்கள்...
அதிகாலையில்
இறக்கிய பனங்-கள்


அவள் கன்னம்...
கலக்கி வைத்து
காத்துக்கிடக்கும்
தேன்-கிண்ணம்


அவள் கழுத்து...
ஒளிவீசும்
நிலவைத் தாங்கும்
ஒற்றைக்கால்
சுமைதாங்கி


அவள் மார்பகங்கள்...
படர்ந்து கிடக்கும்
பந்தலில்
மலரத் துடிக்கும்
மல்லிகை மொட்டுக்கள்


அவள் இடை...
மானுடர்கள்
வழுக்கி விழும்
மதுபானக்கடை


அவள் விரல்கள்...
கணு வைத்து
நறுக்கப்பட்ட
கரும்புத் துண்டுகள்


அவள் அங்கம்...
கோலாரில்
ஒளித்து வைத்த
மாசில்லா தங்கம்


அவள் உடல்...
வளைந்து செல்லும்
வைகையாற்றில்
உயிரைக் கொள்ளும்
நீர் சுழற்சி


அவள் பாதம்...
செடியில் உதிர்ந்த
பூக்களில் மீதம்


அவளொரு அழகி,
எட்டாவது அதிசயமாய்
எட்டிப் பார்க்கும்
பேரழகி..!
=================

அத்தனையும் என் ஞாபகத்தில்



பட்டாம் பூச்சிகள் நிறைந்த
உனது பட்டுப்பாவாடை 
குட்டைச் சட்டை

உன் கழுத்தோடு 
ராட்டினமாடும்
ரெட்டை ஜடை

உன் ஆள்காட்டி
விரலின் வழியே
பார்த்த அந்த
மேகக்குதிரை

அடிவானத்தில்
அரவணைத்துக் கொண்டே
பறந்துபோன அந்திநேர
மைனாக் குஞ்சுகள்

மழை ஓய்ந்த பொழுதும்
உன் விரல்கள் தீண்டி
என் மீது பொழியும்
நொடிப்பொழுது
செடி மழை

உன் உருவத்தைப்
பிரதி எடுத்து திரையிட்ட
செம்மண் நீர் சாலை

கையில் காலணியோடு
நடந்த
ஊற்றுநீர் கசியும்
அந்த ஒற்றையடிப்பாதை

உச்சியில் ஓட்டை
விழுந்த கறுப்புக்குடை

குடைக் கம்பியில் வடியும்
ஒருதுளி நீர்பட்டு
சிலிர்க்கும் உனது ஸ்பரிசம்

அந்த ஓட்டைக்
குடைக்கடியே நாம்

அத்தனையும்
என் ஞாபகத்தில்
ஒவ்வொரு மழைநாளிலும் !

--------------------
--------------------
நன்றி :காக்கை சிறகினிலே

அன்புடன்,
அகல்