Saturday, June 8, 2013

அம்மா... கடலம்மா... : இன்று உலக கடல் தினம்




உணவு பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் வாழ்க்கையின் அனைத்து நிலைகளுக்கும், ஆதாரமாக கடல் விளங்குகிறது. கடலில் இருந்து வளிமண்டலத்துக்கு தண்ணீர் பயணித்து, பின் மழையாக நிலப்பகுதியில் விழுகிறது. ஆறுகள் வழியாக சென்று மீண்டும் கடலில் கலக்கிறது.

கடல் மற்றும் கடல்சார் உயிரினங்களையும் பாதுகாப்பது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஜூன் 8ம் தேதி, உலக கடல் தினம் கடைபிடிக்கப்படுகிறது. "அனைவரும் இணைந்து கடலை பாதுகாப்போம்' என்பது இந்தாண்டு இத்தினத்தின் மையக் கருத்து. பூமி, ஒரு பங்கு நிலத்தாலும் மூன்று பங்கு நீராலும் சூழப்பட்டுள்ளது. பூமியில் 70 சதவீதம் தண்ணீரால் சூழப்பட்டுள்ளது. பூமியில் உள்ள மொத்த தண்ணீரின் அளவில், 97 சதவீதம் கடல் நீராக உள்ளது. இதனால் வானில் இருந்து பார்த்தால், பூமி ஊதா நிறத்தில் காணப்படும். கடலால் மனிதர்களுக்கு பல வழிகளில் நன்மை கிடைக்கிறது. நாம் சுவாசிக்கும் ஆக்சிஜனில் 70 ----முதல் 80 சதவீதம் கடல் மூலமாக கிடைக்கிறது. நமக்குத் தேவையான குடிநீரும் கடல் மூலம் தான் கிடைக்கிறது. கடல் மூலம் அதிகமான வணிகத் தொடர்பு நடந்து வருகிறது.

நூறு கோடி :


கடலில் நூறு கோடி நுண்ணியிரிகள் வாழ்வதாக அறிவியலாளர்கள் மதிப்பிட்டுள்ளனர். தவிர பவளப்பாறைகள், பனிப்பாறைகள் ஆகியவையும் கடலில் உள்ளன. கடல்வாழ் உயிரினங்களில் சமநிலையை ஏற்படுத்துவதில் சுறா மீன்கள் முக்கிய பங்கு வகுக்கின்றன. ஆனால், ஆண்டுக்கு 7 கோடியே 30 ஆயிரம் சுறா மீன்கள் கொல்லப்படுகின்றன. உலகில் 10 கோடி பேர் உணவு, வருவாய்க்கு கடலை நம்பி உள்ளனர். 52 சதவீத மீனவர்களுக்கு கடலில் தான் வாழ்க்கையே உள்ளது. 20 சதவீதம் பேர் ஓரளவிற்கும், 19 சதவீதம் பேர் மறைமுகமாகவும் கடல் மூலம் பயன்பெறுகின்றனர்.

பாதுகாப்பு அவசியம்:

கடந்த 20 ஆண்டுகளில், கடல்நீரின் மாசுபாடு அதிகரித்து வருகிறது. கழிவு நீர் கடலில் கலப்பது; எண்ணெய் கசிவு உள்ளிட்ட காரணங்களால் கடல்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன. இந்நிலையில் கடலை பாதுகாக்க முயற்சி எடுக்கவில்லையெனில், மனித வாழ்க்கைக்கே ஆபத்து ஏற்படும். 

**********நன்றி : தினமலர்

அறியாப்பருவக் காதல்



இது டீன் ஏஜில் உருவாகும் காதலை மட்டுமே குறிப்பது அல்ல. இருவரும் சேர்த்து தனித்து வாழ தகுதிபெறாத காதலே அறியாப்பருவக் காதல் எனப்படுகிறது. இந்த வயதில்தான் கண்டிப்பாக எல்லா மனிதர்களும் காதலில் விழுகிறார்கள். மனசுக்குப் பிடித்தவர்கள் என்று எவரையாவது அடையாளம் கண்டுகொள்கிறார்கள். காதல் என்பதை உயிரினும் மேலாக நினைப்பார்கள். ஆனால் இந்தக் காலக்கட்டத்தில் காதலில் ஒரு மிகப்பெரிய குறை இருக்கும். 

அதாவது இன்று தான் பார்க்கும் ஓர் அழகி அல்லது அழகனைவிட சிறப்பாக இன்னொருவரைப் பார்க்க நேர்ந்தால், காதல் அப்படியே அவர் பின் ஓடிவிடும் அதுவரை இருந்த காதல் ஒத்துவராது என தனக்குள் முடிவு கட்டிவிட்டு அடுத்தக் காதலில் இறங்கிவிடுவார்கள். 

தன் மனதில் தோன்றும் ஆசைகள் அனைத்திற்கும் உருவம் கொடுக்க நினைப்பார்கள். தன்னிடம் என்னென்ன தகுதிகள் இருக்கின்றன என்பதை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல், எதிரே இருப்பவரின் தகுதியினை மட்டுமே பார்ப்பார்கள். 

தனக்குப் பாடம் எடுக்கும் ஆசிரியர், ஆசிரியை, சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு விரர்கள் என காதலிக்கும் நபர்கள் இயல்பு வாழ்க்கையில் இல்லாதவர்களாகவும் இருப்பார்கள். 

இப்படிப்பட்ட நபர்களை மற்ற பிரிவில் சேர்க்காமல், மிக எளிதான வாழ்வினை சமாளிக்க முடியாதவர்கள் என்ற பிரிவில் அறிவியலாளர்கள் சேர்த்துவிடுகிறார்கள். 

காதலை அல்லது காதலனை வாழவைப்பதற்கு அடிப்படைத் தேவையான வருமானம், மன உறுதி, உடல் உறுதி போன்றவை இல்லாதவர்கள் எல்லாம் இந்த வகையில் வருவார்கள். 

பணம் சம்பாதிக்காதவர்களுக்கு காதல் வரக்கூடாதா எனக் கேட்கலாம். காதல் வருவதற்கு வருமானம் தடையாக இருக்காது. 

ஆனால் நாம் காதலில் வெற்றி பெறுவதைப் பற்றியும், திருமணம் முடிப்பது பற்றியும், அதற்குப் பின்னரும் வாழ்நாள் முழுவதும் காதல் தொடர்வதற்கான வழி சொல்லிக் கொண்டிருப்பதால், வருமானம் இல்லாதவர்கள் காதலின் அடுத்தக் கட்டத்தை தொடமுடியாது என்பதுதான் நிஜம். 

எப்படி ஒரு டீன் ஏஜ் வயதில் திருமனம் என்பது ஏற்றுக்கொள்ளப்படாதது என்பதில் சமூகம் உறுதியாக இருக்கிறதோ, அப்படியே காதலில் விழுந்த ஆண் அல்லது பெண்ணிடம் வாழ்வதற்கு ஆதாரத் தேவையான வருமானம் இல்லாத பொழுது, அந்தக் காதலும் ஏற்றுக்கெள்ளப்படாது. 

வருமானம் இல்லாதவர்களும் டீன் ஏஜ் வயதினரும் காதல் செய்ய முழுத் தகுதி பெற்றவர்கள். காதல் செய்ய தகுதி படைத்தவர்கள் எனும் பொழுது காதலிக்கப்படவும் இவர்களுக்கு உரிமை இருக்கிறது. ஆனால் வெற்றி? 

டீன் ஏஜ் வயதில் காதல் என்பதை சட்டமும், சமூகமும் ஏற்றுக்கொள்ளாது. 

அதேபோல் வருமானம் இல்லாதபட்சத்தில் காதலின் அடுத்தக்கட்டத்தை தொட சம்பந்தப்பட்டக் காதலர்களே விரும்பமாட்டார்கள். அதனால் டீன் ஏஜ் காதலர்கள் எல்லாம் இந்த அத்தியாயத்தோடு ஜோராக கைதட்டி விடைபெறலாம். இதுவரை வருமானம் இல்லை என்றாலும், வருமானத்திற்கு தீவிர முயற்சி எடுக்கும் காதலர்கள் தவிர, மற்றவர்களும் வெளியேறிவிடலாம்.


*******************
நன்றி : வேல்முருகன் .கை