Monday, November 19, 2012

விமானிகளில் மூன்றில் ஒருவர் தூக்கத்தில் விமானம் ஓட்டுகின்றனர்: ஆய்வு முடிவில் அதிர்ச்சி தகவல்


விமானிகளில் மூன்றில் ஒருவர் தூக்கத்தில் விமானம் ஓட்டுகின்றனர்: ஆய்வு முடிவில் அதிர்ச்சி தகவல்


விமானத்தில் பயணம் செய்யும் பயணிகளின் உயிர், விமானிகளின் கையில்தான் இருக்கிறது. அவர்கள் கொஞ்சம் அசந்தாலோ அல்லது கவனம் சிதறினாலோ ஏற்படும் விளைவை எண்ணிப் பார்த்தாலே நடுக்கம் ஏற்படுகிறது. ஆனால் விமானிகளில் பலர் அரைத் தூக்கத்தில் விமானம் ஓட்டுகிறார்கள் என்பதை உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் ஆய்வு முடிவு அதைத்தான் சொல்கிறது.

ஆஸ்திரியா, ஸ்வீடன், ஜெர்மனி மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில், மூன்றில் ஒரு விமானிகள், நடுவானில் விமானம் கட்டுப்பாட்டுக்குள் வந்து சீராக சென்றுகொண்டிருக்கும்போது தூங்குவது கண்டறியப்பட்டுள்ளது. ஐந்தில் நான்கு விமானிகள் காக்பிட்டில் (விமானிகள் அறை) இருக்கும்போது சோர்வை சமாளித்துக்கொண்டு இருக்கின்றனர். 

விமானிகள் சங்கமான ஐரோப்பிய காக்பிட் அசோசியேசன் வெளியிட்ட இந்த ஆய்வு முடிவில், பெரும்பாலான விமானிகள் விமானம் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்போது அரைத் தூக்கத்திலோ அல்லது எழுப்பும் வரை முழு தூக்கத்திலோ இருப்பது தெரிய வந்துள்ளது. இத்தகவலை டெய்லி மெயில் வெளியிட்டுள்ளது. 

இங்கிலாந்து, நார்வே மற்றும் ஸ்வீடனில் நடத்திய ஆய்வில், 43 முதல் 54 சதவீத விமானிகள் நடுவானில் விமானம் பறந்துகொண்டிருக்கும்போது சோர்வு காரணமாக தானாகவே தூங்கியதாகவும், சக விமானி எழுப்பும் வரை தூங்கியதாகவும் தெரிவித்துள்ளனர். 

2010 முதல் 2012-ம் ஆண்டு வரை 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஐரோப்பிய விமானிகளிடம் நடத்தப்பட்ட இந்த சர்வே முடிவு வெளியான சில வாரங்களில், விமானத்தில் விமானிகள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள், வேலை நேரம், ஓய்வு தேவை ஆகியவை ஆய்வு செய்யப்பட்டு அதன் திட்டங்களை ஐரோப்பிய விமான பாதுகாப்பு ஏஜென்சி முன்மொழிந்துள்ளது

::::::::::::::::: மாலைமலர் ::::::::::::

64 நாட்கள் தொடர்ச்சியாக தூங்கிய 17 வயது பெண்



அமெரிக்காவைச் சேர்ந்த 17 வயது பெண் ஒருவர் தொடர்ந்து 64 நாட்கள் தூங்கியுள்ளார்.
அமெரிக்காவில் உள்ள பெனிசில்வேனியாவைச் சேர்ந்தவர் நிக்கோல் டெலியன்(17). அவர் தினமும் 18 முதல் 19 மணிநேரம் தூங்குவார். இதையடுத்து அவரது பெற்றோர் அவரை பல்வேறு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்றனர். அப்போது அல்லெகெனி பொது மருத்துவமனைக்கு சென்றபோது நிக்கோலை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு உறக்கம் தொடர்பான அரிய வகை நோய் உள்ளதை கண்டுபிடித்துக் கூறினர்.
ஸ்லீப்பிங் பியூட்டி சின்ட்ரோம் என்னும் குறைபாடு உள்ளவர்கள் வாரக் கணக்கில், மாதக் கணக்கில் ஏன் ஆண்டுக் கணக்கில் அதன் அறிகுறியின்றி இருப்பார்களாம். அவர்கள் நீண்ட நேரம் தூங்குவதோடு மட்டுமல்லாமல் குழந்தை போன்றும் நடந்து கொள்வார்கள். இந்த குறைபாட்டு் எதனால் ஏற்படுகிறது என்பது தெரியவில்லை.
நிக்கோல் தொடர்ந்து 64 நாட்கள் தூங்கியுள்ளார். அதனால் அவர் பிறந்தநாள், பண்டிகைகளை மிஸ் செய்துள்ளார். அவரது குடும்பத்தினர் முதன்முதலாக டிஸ்னி வேர்ல்டு சென்றது கூட தெரியாமல் தூங்கியுள்ளார்.

thanks::::::::: Greynium Information Technologies Pvt. Ltd.::::::::::::::::

12 ஆண்டுகளுக்கு முன்பு பதப்படுத்தப்பட்ட கருமுட்டை மூலம் இரட்டைக் குழந்தைகள் பெற்ற பெண்

Record-breaking twins born from eggs frozen 12 years ago

 12 ஆண்டுகளுக்கு முன்பு பதப்படுத்தப்பட்ட கருமுட்டை மூலம் கருத்தரித்த அர்ஜென்டினா பெண் ஒருவர் இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.
அர்ஜென்டினா நாட்டின் தலைநகரான பியூனஸ் ஏர்ஸைச் சேர்ந்தவர் மோனிகா ஜபோடாக்ஸ்னி(45). அவரது கணவர் கில்லர்மோ ஹூசக். இயற்கையாக கருத்தரிக்க முடியாத மோனிகா செயற்கை முறை மூலம் கருத்தரிக்க முயன்று பல தடவை தோல்வியையே சந்தித்தார். இனி தான் கருத்தரிக்கவே முடியாது என்ற நிலைக்கு வந்துவிட்டார்.
அப்போது கடைசி முறையாக செய்து பார்ப்போம் என்று மோனிகா தான் 33 வயதாக இருந்தபோது ஆய்வகத்தில் பதப்படுத்தி வைக்கப்பட்ட கருமுட்டை கடந்த ஆண்டு பயன்படுத்தினார். அவரது இறுதி முயற்சி இரட்டைப் பலனைக் கொடுத்தது. அவருக்கு கடந்த ஜனவரி மாதம் அறுவை சிகிச்சை மூலம் மெர்சிடீஸ், குவாடலூப் என்னும் பார்ப்பதற்கு அச்சு அசலாக ஒரே மாதிரியாக இருக்கும் இரட்டைக் குழந்தைகள் பிறந்தன.
இதற்கு முன்பு அதிகபட்சமாக 7 ஆண்டுகள் பதப்படுத்தப்பட்ட கருமுட்டையில் இருந்து தான் குழந்தை பிறந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆண்டுகள் ஆக ஆக கருமுட்டை சேதமடையலாம் என்னும் நிலைமையில் மோனிகா 12 ஆண்டுகள் பதப்படுத்தப்பட்ட கருமுட்டையில் இருந்து இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.
புற்றுநோயால் பாதிக்கப்படு குணமடைந்தவர்கள் மற்றும் வேலையில் கவனம் செலுத்த கர்பத்தை தள்ளிப்போடும் பெண்களுக்கு இந்த செய்தி ஒரு இனிய செய்தியாகும்.

::::::::::::::::::::thanks: Greynium Information Technologies Pvt. Ltd.::::::::::::

ஒரு குழந்தையின் இதயமும், சில துளி வாழ்க்கையும்……

கை.அறிவழகன்
little-things-photo
பெங்களூரின் அதிகாலைக் காற்று திறந்த கதவுகளின் வழியாக குளிரோடு வழிந்து கொண்டிருந்தது, திரும்பிய பக்கமெல்லாம் தென்படும் அலுப்பூட்டும் சுவர்கள், இரவெல்லாம் சுவர்களுக்குள் அடைபட்டுக் கிடந்து, வெளிறிய முகங்களோடு வேலைக்குப் போகும் மனிதர்கள்.
எங்கோ ஒரு வீட்டின் காலை அவசரத்தை உணர்த்தும் "குக்கர்" ஓசை, உறக்கம் கலைப்பதற்காகத் திரும்பிப் படுக்கும் நிறைமொழியின் அசைவுகள் என்று அந்த நாள் ஒரு வழக்கமான நாளாகவே இருக்கும் என்று நினைத்திருக்கும் போது அலைபேசி ஒலித்தது,
பெயர் இல்லை, யாராக இருக்கும் என்கிற குழப்பத்தோடு நாற்காலியில் இருந்து எழுந்து அலைபேசியை எடுப்பதற்குள் அழைப்பு நின்றிருந்தது. பதிவாகி இருந்த எண்ணுக்குத் திரும்ப அழைத்த போது கரகரத்த குரலில் மும்பை அலுவலக நண்பன் சாய்நாத் தயங்கியபடி "காலை நேரத்தில் தொந்தரவு செய்கிறேனா?" என்றபடி தொடர்ந்தான்.
"ஒரு உதவி செய்ய வேண்டும் ஹரிஷ்" (அறிவழகன் என்கிற பெயரின் வட இந்திய மொழியாக்கம்), "சொல்லுங்க சாய்நாத்", எனக்குத் தெரிந்த ஒரு நண்பரின் குழந்தைக்கு இதயத்தில் பெரிய ஓட்டை இருக்கிறது, அவர்கள் புட்டபர்த்தி மருத்துவமனைக்குச் சென்று கேட்டதில் அறுவை சிகிச்சை செய்யும் வசதி இல்லை என்று திருப்பி அனுப்பி விட்டார்கள், இப்போது பெங்களூரில் இருக்கிறார்கள், ஜெயதேவா மருத்துவமனையில் இலவச அறுவை சிகிச்சை செய்கிறார்கள் என்று யாரோ சொன்னார்களாம், அது குறித்து நீங்கள் முடிந்தால் விசாரித்து அவர்களுக்கு உதவ முடியுமா?". என்று நிறுத்தினான் சாய்நாத்,
"குழந்தை இப்போது எங்கே இருக்கிறது? என்ன வயது? என்று நான் கேட்டபோது சாய்நாத் சொன்னான் "இரண்டு வயது". அன்றைய காலை நொடி நேரத்தில் அவசரமயமாகிப் போனது. ஜெயதேவா மருத்துவமனையின் முகப்பில் அவர்கள் இருக்கிறார்கள், குழந்தையின் தந்தையின் அலைபேசி எண்ணை உங்களுக்கு நான் குறுஞ்செய்தியாக அனுப்புகிறேன், இயன்றால் அவர்களுக்கு உதவி செய்யுங்கள்" என்கிற சொற்களை என் காதுகளுக்குள் செலுத்தி விட்டு அலைபேசி அடங்கிப் போனது.
இரண்டு வயதுக் குழந்தைக்கு இதயத்தில் ஓட்டை, தாயும் தந்தையும் குழந்தையைத் தூக்கிக் கொண்டு ஊர் ஊராய் அலைகிறார்கள் என்பதை நினைத்துப் பாருங்கள், எத்தனை வலி நிரம்பிய பயணம் அது, வாழ்க்கை பரிசளித்த குழந்தையின் இதயத்தில் இருக்கிற ஓட்டையில் தேங்கிக் கிடக்கிற தங்கள் சுக துக்கங்களோடு அவர்களின் தவிப்பு கண்களில் நிழலாடியது,
இடைவெளியில் அலைபேசி எண்ணைக் குறுஞ்செய்தியாக அனுப்பி இருந்தான் சாய்நாத்.குழந்தையின் தந்தைக்கு அழைத்தபோது மராட்டி கலந்த ஹிந்தியில் "நாங்கள் ஜெயதேவா மருத்துவமனையின் முகப்பில் அமர்ந்திருக்கிறோம், விசாரணை அலுவலகம் ஒன்பது மணிக்குத் திறக்கும் என்று சொல்கிறார்கள், அதுவரை நாங்கள் இங்கேயே இருப்போம், உங்களைக் குறித்து சாய்நாத் சாப் சொன்னார்" என்றார். "சரி அங்கேயே இருங்கள், நானும் ஒன்பது மணிக்கு அங்கே வருகிறேன்" என்று சொல்லிவிட்டு கிளம்பத் தயாரானேன்.
ஜெயதேவா மருத்துவமனை நான் வசிக்கிற வீட்டில் இருந்து வெகு தூரமில்லை என்றாலும் பெங்களூரின் காலை நேரச் சாலைகள் பீதியூட்டும் நெருக்கடி மிகுந்தவை, சாகசங்கள், உரையாடல்கள் எல்லாம் முடிந்து ஜெயதேவா மருத்துவமனையின் வாயிலுக்குள் நுழைந்து நேரத்தைப் பார்த்த போது 9.20 ஆகிவிட்டிருந்தது, மீண்டும் ஒருமுறை அலைபேசியில் குழந்தையின் தந்தையை அழைத்து அவர்கள் இருக்கிற இடத்தை அடைந்த போது மருத்துவமனை தனது வழக்கமான இரைச்சலுடன் அன்றைய பொழுதைத் துவக்கி இருந்தது,
ஏக்நாத்தும் அவரது மனைவியும் எழுந்து வணக்கம் சொன்னார்கள், அந்த வணக்கத்தின் பின்னே ஒரு குழந்தையின் உயிரும், அதைக் காக்கும் வேண்டுதலும் நிரம்பி இருப்பதாக நான் உணரத் துவங்கினேன், இருவரும் மிக இளவயதுக்காரர்கள், ஏக்நாத்துக்கு மிஞ்சிப் போனால் இருபத்தைந்து வயது இருக்கக் கூடும், அவரது மனைவியோ இன்னொரு குழந்தையைப் போலிருந்தார்.
மராட்டிய மாநிலத்தின் ஊராகப் பகுதிகளில் நிகழும் இளவயதுத் திருமணங்களில் அதிகம் பாதிப்படைவது குழந்தைகள் தான் என்கிற உண்மை ஏனோ முகத்தில் அறைந்து நின்றது. குழந்தை ஒரு அழகிய மலரைப் போல உறங்கிக் கொண்டிருந்தாள், தன்னைச் சுற்றி நிகழும் போராட்டங்கள் ஏதும் அறியாதவளாக அவள் உறங்கிக் கொண்டிருந்தாள்.
அவள் அப்படி இருப்பதே நல்லது, வாழ்க்கையையும் அதன் வலியையும் மனிதர்கள் உணரத் துவங்கும் போது அவர்களுக்கு வயதாகி விடுகிறது, குழந்தைகள் வயதான மனிதர்களின் வலியைக் குறைக்க அனுப்பப்பட்ட அற்புத மலர்கள், அவர்கள் விடும் மூச்சுக் காற்றின் நறுமணங்களில் தான் அழுகிய வாழ்க்கையின் நாற்றம் கொஞ்சமேனும் மட்டுப்படுத்தப்படுகிறது.
Stone-Age-For-Kids
நாங்கள் பல்வேறு அலுவலர்களையும், மருத்துவர்களையும் அன்று சந்தித்தோம், கண்ணுக்குத் தெரியாத அந்தக் குழந்தையின் வலி குறித்து ஜெயதேவா மருத்துவமனை அத்தனை அக்கறை காட்டவில்லை, குறைந்தபட்ச செலவுத் தொகையைக் கட்டினால் மட்டுமே இங்கு அனுமதி கிடைக்கும் என்றும், அனுமதி கிடைத்த பிறகு குறைந்தது இருபது நாட்கள் காத்திருக்க வேண்டும் என்கிற மக்கள் தொடர்பு அலுவலர் சொன்னபோது அந்தப் பெற்றோரின் கண்கள் களைப்படைந்து உள்வாங்கியது போலிருந்தது.
பதினைந்து நாட்களுக்குள் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் தவறினால் உயிருக்கு எந்த வகையிலும் உறுதி அளிக்க முடியாது என்று மும்பை சியோன் மருத்துவமனை ஒரு குறிப்பு எழுதி அனுப்பி இருந்தது. நாராயண ஹ்ருதயாலயா மருத்துவமனை ஒன்றே எஞ்சி இருக்கும் வாய்ப்பு, இரண்டு மாடுகளையும், கொஞ்சம் நிலத்தையும் விற்று விட்டு இந்தக் குழந்தையின் உயிரைக் காப்பாற்றி விட வேண்டும் என்று தவிக்கிற அந்தப் பெற்றோரின் முன்னாள் நானும் ஒரு குழந்தையைப் போலச் சுற்றிக் கொண்டிருந்தேன்.
அவர்களின் கையில் நாற்பதாயிரம் ரூபாய் பணம் இருக்கிறது, குறைந்தது இந்த அறுவை சிகிச்சைக்கு இரண்டில் இருந்து மூன்று லட்சம் வரை செலவாகக் கூடும் என்று சந்தித்த மருத்துவர்கள் அனைவரும் சொல்லி இருந்தார்கள், நம்பிக்கை குறைந்து கொண்டே வந்தது. நம்பிக்கையிழந்த மனத்தைக் குழந்தையின் சிரிப்பும் விளையாட்டும் சிலிர்ப்பூட்டி சிறகுகள் பொருத்தியது.
எனது அலுவலகத்தின் இயக்குநருக்குத் தொடர்பு கொண்டு குழந்தையின் நிலை குறித்து நீண்ட நேரம் விளக்கி நீங்கள் உதவியே ஆக வேண்டும் என்று சொன்னவுடன் அவர் "அந்தப் பெற்றோரிடம் எவ்வளவு பணம் இருக்கிறது என்று கேட்டுச் சொல்" என்றார். அவர்களிடம் ஐம்பதாயிரம் ரூபாய் இருக்கலாம் என்றவுடன், நான் நிறுவனத்தின் சார்பில் ஐம்பதாயிரம் தருகிறேன், பிறகு இன்று மாலையில் முதலாளியிடம் பேசி அவரிடம் இருந்து ஏதேனும் உதவி பெற இயலுமா என்று முயற்சிக்கிறேன், நீ அவர்களோடு இருந்து உதவி செய் என்று சொல்லி விட்டு இணைப்பைத் துண்டித்தார்.
நம்பிக்கை வலுப்பெற ஆரம்பித்தது, ஏறத்தாழ ஒரு லட்சம் ரூபாய் வரை கையில் இருக்கிறது என்னுடைய வங்கிக் கணக்கில் இருக்கும் இருபதாயிரம் ரூபாயையும் சேர்த்து. சித்தி செச்சாரே என்கிற அந்த இரண்டு வயதுக் குழந்தை விளையாடிக் கொண்டும் சிரித்துக் கொண்டும் எங்களோடு பயணித்துக் கொண்டே இருக்கிறாள், நான் அவ்வப்போது அந்தக் குழந்தையின் இதயம் வழக்கமான குழந்தைகளை விடவும் மிக வேகமாகத் துடிப்பதை ஒரு விதமான கலக்கத்தோடு பார்த்தபடி பயணிக்க வேண்டியிருந்தது.
பள்ளியில் இருந்து சீருடைகளோடு திரும்பிக் கொண்டிருந்த எண்ணற்ற குழந்தைகளை வழி நெடுகப் பார்த்தபடி நாங்கள் நாராயண ஹ்ருதயாலயா மருத்துவமனைக்குள் நுழைந்தோம், பல்வேறு விசாரணைகள் மற்றும் சந்திப்புகளின் முடிவில் நாங்கள் கொலின் ஜான் என்கிற மிகப்பெரிய மருத்துவரின் இணை மருத்துவரைச் சந்தித்தோம்.
கௌரவ் செட்டி என்று அழைக்கப்படும் அவர் ஒரு மருத்துவருக்கான கனிவையும், புன்னகையையும் தன்னுடைய கடும் பணிச் சுமைகளுக்கு இடையே மறக்காமல் வைத்திருந்தார், ஒருவிதமான மன்றாட்ட மனநிலையில் என்னுடைய ஆற்றலை எல்லாம் பயன்படுத்தி அந்த மருத்துவரிடம் நான் ஏறக்குறைய அரை மணி நேரம் பேசினேன்.
இறுதியில் குறிக்கப்பட்டிருந்த இருந்த இரண்டு லட்சம் ரூபாயில் தன்னுடைய அறுவை சிகிச்சைக் கட்டணமான இருபத்து ஐந்தாயிரத்தை இந்தக் குழந்தைக்காக நான் வழங்குகிறேன் என்று தன்னுடைய முத்திரைத் தாளில் அவர் எழுதிக் கையெழுத்திட்டார்.
மேலும் சில சலுகைகளை வழங்கும்படி கட்டணச் சலுகைப் பிரிவுக்கும் அவர் குறிப்பு எழுதி இருந்தார். இறுதியாக மருத்துவமனை ஒரு லட்சத்து அறுபதாயிரம் ரூபாய் பணம் செலுத்தி நீங்கள் குழந்தையை அனுமதிக்கலாம் என்றும் இரண்டு மூன்று நாட்களில் அறுவை சிகிச்சை செய்யலாம் என்றும் சொல்லி முடித்தார்கள் கட்டணப் பிரிவு அலுவலர்கள். அன்றைய நாள் முடிவுக்கு வந்திருந்தது, மருத்துவமனை அருகிலேயே ஒரு சிறிய தங்கும் விடுதியில் அறையைப் பதிவு செய்து அவர்களை ஓய்வெடுக்கச் சொல்லி விட்டு வீடு திரும்பினேன்.
மனம் முழுவதும் சித்தி செச்சாரே என்கிற அழகிய மலர் போன்ற அந்தக் குழந்தையின் முகம் நிறைந்திருந்தது, இரவில் மகிழ்ச்சியும் மனித வாழ்க்கையின் மகத்துவமும் நிரம்பிய அந்த அழைப்பு எனது இயக்குனரிடம் இருந்து வந்தது, ஒரு லட்சம் தவிர்த்து மீதித் தொகையை நமது முதலாளி வழங்குவதாகச் சொல்லி இருக்கிறார், நீங்கள் நாளை அலுவலகத்தில் பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம், தனிப்பட்ட வாழ்க்கையில் கடுமையான பணச் சிக்கல்கள், நிதிச் சுமைகள் வந்த போதெல்லாம் நான் காத்து வைத்திருந்த நேர்மையும், கடும் உழைப்பும் என்னுடைய முதலாளிகளின் தவிர்க்க இயலாத தேவையாக இருந்ததன் பலனை இந்தக் குழந்தைக்காக நான் அறுவடை செய்து கொண்டேன்.
பொழுது வேகமாக புலர்ந்து விட்டிருந்ததோ இல்லை மனம் பொழுதை வேகமாய்ப் புலர வைத்திருந்ததோ தெரியவில்லை, குழந்தைகள் தொட்டிச் செடிகளை உடைத்து விட்டதற்காகப் பெற்றோர்களிடம் பணம் வசூலிக்கும் என் வீட்டு முதலாளி சிக்கிய யாரிடமோ தன்னுடைய பொருளீட்டு புராணம் பாடிக் கொண்டிருந்தார்.
அலுவலகம் சென்று நிதியாளரிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு மருத்துவமனை வந்த போது பதினோரு மணியாகி இருந்தது, குழந்தையைப் பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தி அறுவை சிகிச்சைக்கு உடல் தயாராக இருப்பதை உறுதி செய்து கொண்டு அனுமதிப் பிரிவில் "ஒரு லட்சத்து முப்பதாயிரம் ரூபாயைப் பெற்றுக் கொண்டு குழந்தையை அனுமதியுங்கள் மீதிப் பணத்தை நாளை கட்டுகிறோம்" என்று நான் சொன்னபோது அவர்கள் மறுத்தார்கள், மீதிப் பணத்தையும் இப்போதே கட்டினால் மட்டுமே அனுமதிக்க முடியும் என்று தங்கள் ஒழுங்கு விதிகள் சொல்வதாக அவர்கள் சில காகிதங்களைக் காட்டினார்கள்.
அந்தப் புதிய சிக்கலைச் சமாளிக்க என்னுடைய அதிகம் பயன் படுத்தப்படாத கடன் அட்டை துணைக்கு வந்தது, மீதிப் பணத்தை கடன் அட்டையில் இருந்து பெற்றுக் கொண்டு ஒப்புதல் சீட்டில் என்னைக் கையெழுத்திடச் சொன்னபோது பல புதிய பொருட்களை குடும்பத்திற்காகவோ, குழந்தைக்காகவோ வாங்கிய போதெல்லாம் இல்லாத நிறைவும், மகிழ்ச்சியும் அந்த அறையெங்கும் நிரம்பி இருந்தது. அனுமதிக்கப்பட்ட குழந்தையின் கூடவே ஒருவர் தங்கி இருக்க அனுமதிக்கப்பட்டதால் குழந்தையின் தாய் குறித்து அதிகம் கவலை இல்லை.
ஏக்னாத்தை வீட்டுக்கு அழைத்துச் செல்லலாம் என்கிற முடிவோடு குழந்தையை அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அறையில் விட்டு விட்டுத் திரும்பும் போது மருத்துவரின் சொற்கள் காதில் எதிரொலித்தன, "அறுவை சிகிச்சையின் போது குழந்தை பிழைப்பதற்கான வாய்ப்பு அறுபது விழுக்காடு வரையில் இருக்கிறது". அந்த சொற்களின் பின்னே ஒளிந்திருக்கும் மரணத்தின் முப்பது விழுக்காடு எனது கால்களையே தடுமாறச் செய்தது என்றால் பெற்றவர்களின் மனம் என்ன பாடுபடும், திரும்பி ஒருமுறை அந்தக் குழந்தையின் கள்ளங்கபடமற்ற சிரிப்பை உள்வாங்கினேன், ஏதோ ஒரு கோவிலில் இருந்து கொண்டு வந்திருந்த விபூதியை அந்தக் குழந்தையின் மேலே பூசிக் கொண்டிருந்தாள் அந்தத் தாய், அவளுக்குத் தெரியாது இங்கிருக்கும் மருத்துவர்களே இந்தக் குழந்தையைக் காக்கப் போகும் கடவுளரென்று…..
ஏக்நாத் வீட்டுக்கு வருவதற்கு மறுத்தார், "நான் இங்கேயே இருக்கிறேன் சார், என் மனைவிக்கு ஹிந்தியும் தெரியாது, மருத்துவர்கள் ஏதாவது சொன்னால் கூட அவரால் புரிந்து கொள்ள முடியாது" என்று பிடிவாதமாய்ச் சொன்னவரின் கண்களில் தனது குழந்தையைப் பிரிந்து வர முடியாத ஒரு தாயின் ஏக்கம் நிறைந்திருந்தது. மூன்றாம் நாள் காலையில் மீண்டும் மருத்துவமனைக்குச் சென்றபோது தனது அழுக்குப் பையோடு வாசலில் நின்றிருந்தார் ஏக்நாத் என்கிற அந்த பாசம் நிரம்பிய தந்தை.
இரவு "எங்கே உறங்கினீர்கள் ஏக்நாத்?" என்று கேட்டபோது எதிர்த் திசையில் இருந்த புதரை நோக்கிக் கையைக் காட்டினார், தன்னுடைய குழந்தை பிழைத்துக் கொள்ளும் என்றால் நான் இதை விடக் கொடிய வனப் பகுதியிலும் படுத்துறங்கத் தயாராக இருப்பதாகச் சொன்னபோது அவரது கண்களில் நீர் முட்டிக் கொண்டிருந்ததை என்னால் பார்க்க முடிந்தது. நான் வேறு பக்கமாய்த் திரும்ப முயற்சி செய்தேன், சொற்கள் முடிந்து போகிற கணங்களில் ஒரு துளிக் கண்ணீர் பேரிலக்கியமாகிறது, மிதமிஞ்சிய மகிழ்ச்சியிலும், மிதமிஞ்சிய கவலையிலும் மனிதர்களிடம் மீதமிருப்பது சில கண்ணீர்த் துளிகள் மட்டும்தானே.
அறுவை சிகிச்சை செய்வதற்கு இன்னும் இரண்டு மூன்று நாட்கள் கூட ஆகலாம் என்கிற செவிலியர்களின் சொற்களை நம்பி நான் அலுவலகம் திரும்பினேன், பிற்பகல் இரண்டு முப்பது மணிக்கு ஏக்நாத்திடம் இருந்து அழைப்பு வந்தது, "இன்றே அறுவை சிகிச்சை செய்கிறார்களாம் சார்", குழந்தைக்குக் காலையில் இருந்து ஏதும் கொடுக்க வேண்டாம் என்று சொல்லி இருக்கிறார்கள், நீங்கள் வந்தால் எங்களுக்கு ஆறுதலாய் இருக்கும் என்கிற அவரது குரல் உடைந்து நொறுங்கி இருந்தது.
dad-kid
அலுவலகத்தில் அனுமதி பெற்றுக் கொண்டு மருத்துவமனை வந்து சேர்ந்த போது குழந்தைக்குப் பச்சை நிறத்தில் ஆடை அணிவித்திருந்தார்கள், தங்கள் குறிப்புகளை எல்லாம் முடித்துக் கொண்ட பின்னர் குழந்தையை மருத்துவர்கள் கேட்டபோது அந்தத் தாய் தனது குழந்தையை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டு கொடுக்க மறுத்தார், "மேரா பச்சே, மேரா பச்சே" என்கிற அந்தத் தாயின் அழுகுரல் மருத்துவமனைகளின் சுவர்களில் பட்டு எதிரொலித்தது.
உயிர் வாழ்க்கையின் அடையாளமான உடலோடு மனிதன் போராடிக் கொண்டே இருக்கிறான், உடலை மையமாக வைத்து நடக்கிற இந்த வாழ்க்கை என்கிற விளையாட்டில் மனிதன் கடைசியில் என்றோ ஒருநாள் தோற்றுப் போயாக வேண்டும், ஆனாலும் விடாது போராடும் மனிதனின் துணிச்சலும், அவனது ஆற்றலும் அளவிட முடியாதது மட்டுமில்லை என்றாவது ஒருநாள் அவன் வெற்றி பெறுவதற்கான அவனது பயிற்சியாகவும் இருக்கக் கூடும்.
குழந்தை சித்திக்கு இது இறுதிப் படுக்கையாகவும் இருக்கக் கூடும், அவளது உடல் வாழ்க்கைப் போராட்டத்தில் இன்று வெற்றி பெறுமேயானால் இன்னும் அறுபது எழுபது ஆண்டுகள் எந்தச் சிக்கலும் இல்லாமல் உயிர் வாழ முடியும் என்கிற நம்பிக்கையே அந்தக் கணத்தில் மேலோங்கி இருந்தது. நாங்கள் காத்திருப்புப் பகுதியில் அமர வைக்கப்பட்டோம், அறுவை சிகிச்சை முடிந்த பிறகு ஒலிபெருக்கியில் நாங்கள் அழைக்கப்படுவோம்.
அந்த அறை முழுவதும் தந்தையை அனுப்பி விட்டுக் காத்திருக்கும் மக்களும், மக்களை அனுப்பி விட்டுக் காத்திருக்கும் பெற்றோரும் நிரம்பிக் கிடந்தார்கள், தங்கள் அன்பானவர்களின் பெயரை அந்த ஒலிபெருக்கி எப்போது சொல்லப் போகிறது என்று காத்துக் கிடக்கும் மனிதர்களிடையே காலம் கடத்துவது என்பது எத்தனை வலி மிகுந்ததாய் இருக்கிறது, பார்ப்பவர்களிடமெல்லாம் அவர்கள் நம்பிக்கையையும், நல்ல செய்திகளையும் எதிர்பார்க்கிறார்கள், நம்பிக்கையும், வலியும் நாற்காலிகள் எங்கும் நிரம்பி வழிகிறது.
நான்கு முப்பத்தைந்து மணிக்கு ஒலிபெருக்கியில் பெருகி வழிந்தது "சித்தி செச்சாரே" என்கிற அந்தப் பெயர், பெயரின் பாதிச் சொல் ஒலிபெருக்கியில் ஒட்டிக் கிடந்த போதே காணாமல் போயிருந்தார்கள் சித்தியின் பெற்றோர், சிக்கல் என்னவென்றால் என்னுடைய நுழைவுச் சீட்டும் அவர்களிடமே இருந்தது தான், நுழைவுச் சீட்டின்றி எங்கேயும் நுழைவதில் நம்மை (தமிழர்களை) விஞ்ச யார் இருக்கிறார்கள், சில சாகசங்கள் புரிந்து நானும் மூன்றாம் தளத்தை அடைந்தேன்.
காலுறைகள், நீல நிற அங்கிகளை அணிந்து கொண்டு நாங்கள் அந்த உயர் பாதுகாப்பு அறையின் நடைப்பகுதியில் நடக்கத் துவங்கியபோது சொற்களும், சூழலும் மறைந்து ஒரு மெல்லிய கயிற்றைப் போல ஏதோ ஒன்று கழுத்தை இறுக்குகிறது, எந்தச் சிக்கல்களும் இல்லாமல் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்ததாக கௌரவ் செட்டி என்கிற அந்தக் கடவுள் எங்களைப் பார்த்துச் சொல்கிறார், பெயரும் முகமும் மறைக்கப்பட்டு அவளருகில் நின்று உயிர்ப் பாதுகாப்பு எந்திரங்களை இயக்கியபடி குழந்தையின் பிஞ்சுப் பாதங்களை மெல்ல நகற்றும் அந்த இளம் மருத்துவரின் கரங்களில் ஒரு முத்தம் கொடுக்க வேண்டும் போலிருக்கிறது.
கடக்கும் செவிலியர்களின் தலையைச் சுற்றி ஒளிவட்டம் தெரிகிறது, நாங்கள் வெளியேறி மருத்துவமனை முகப்புக்கு வந்த போது அந்தக் குழந்தையின் தாய் என்னை பார்த்துக் கை கூப்புகிறார், உலகில் நான் பெற்ற மிகச் சிறந்த வணக்கம் அது, என்னுடைய வாழ்க்கையின் நாட்கள் முழுமைக்கும் அந்த வணக்கம் போதுமானதாகவும், நிறைவானதாகவும் இருக்கிறது. "மேரா பச்சே மில்கயா", மேரா பச்சே மில்கயா" (என் குழந்தை எனக்குக் கிடைத்து விட்டது) என்று கட்டிப் பிடித்து அழும் "ஏக்நாத்" என்கிற அந்தத் தந்தை தான் எத்தனை மேன்மையான மனிதன்.
universal_love____by_sundeepr
நன்றி மருத்துவர்களே (டாக்டர்.கொலின் ஜான் & டாக்டர் கௌரவ் செட்டி), இந்த விவசாயியின் குழந்தைக்காக உங்கள் கட்டணங்களை மட்டுமே இழந்தீர்கள், ஆனால், உலகின் மனசாட்சியில் இடம் பெற்றீர்கள். ஏக்நாத்திடம் விடைபெற்று வெளியே வருகிறேன் நான்,
உடல்களால் நிரம்பிய வாழ்க்கை வெளியெங்கும் பரவிக் கிடக்கிறது, இப்போது உயிர் ததும்ப அழுவதும், உயிர் ததும்பச் சிரிப்பதுமே எனக்கான இறுதி வாய்ப்பாக இருக்கிறது, இம்முறை என்னுடைய தேர்வு உயிர் ததும்ப அழுவது……..

***************


காதலாகிக், கசிந்துருகிப், பின் அட்டைப்பெட்டி சுமந்து………..


romantic-love-painting-wallpaper
உலகம் மிகப் பெரியதாக இருந்தபோது, நான் சிறுவனாக இருந்தேன், நான் பெரியவனாக வளர்ந்து பார்த்தபோது உலகம் மிகச் சிறியதாகி விட்டது. ஆம், என்னுடைய உலகம் மிகச் சிறியது, என்னுடைய உலகத்தில் இரண்டொரு சொற்களும், சில முத்தங்களுமே மீதமிருக்கின்றன, தத்துவங்கள், சித்தாந்தங்கள், கோட்பாடுகள், கட்சிகள், சாதிகள், மதங்கள் என்று தங்களின் மீது வண்ணம் பூசிக் கொண்டு இல்லாத பெரிய ஒரு உலகத்தை மனிதர்கள் கட்டி அமைத்திருக்கிறார்கள், நாளின் கடைசியில் அன்போடு பரிமாறப்படும் ஒரு தட்டுச் சோறும், ஒரு கோப்பைத் தேநீரும் தான் உலகம் என்பதை ஏனோ நாள் துவங்கும் போதினில் பலர் ஏற்றுக் கொள்வதில்லை, இயந்திரங்களும், ஊர்திகளும் பலரது உலகத்தைப் பெரிதாய் மாற்றி அமைக்கின்றன, ஓலைக் குடிசை ஒன்றின் வழியாய்ப் பயணிக்கும் காற்றும், குளிரூட்டப்பட்ட படுக்கையறையில் கிடந்தது புரளும் காற்றும் அதே இதழ்களையும், பருவ முத்தங்களையும் பார்த்து நாணிக் கொண்டு சாளரங்களின் வழியே தலை குனிந்து தப்பி விடுகின்றன. மிகப் பெரிய போர்களும், இனப் பேரழிவுகளும் ஒரு சில சொற்களில் தான் உருவாகிக் கிளைத்துத் துளிர்க்கின்றன. மனிதனின் ஆழ்மனதில் எப்போதும் இருக்கும் ஆசைகளும், வன்மங்களும் தான் இந்த உலகின் பெரும் துன்பங்களுக்கும், அழிவுகளுக்கும் காரணமாகி வரலாறாகி விடுகின்றன.
சில காலங்களுக்கு முன்னாள் ஒரு சின்னஞ்சிறிய கதை படித்தேன், காதல் அல்லது அன்பு என்றால் என்ன என்பது குறித்த சிக்கலான கேள்விக்குரிய விடையை மிக எளிமையாக அந்தக் கதை எனக்கு உணர்த்தியது, உலகம் மிகச் சிறியது என்கிற எளிய உண்மையை அந்தக் கதையின் வாயிலாக முற்றிலும் நம்பத் துவங்கினேன் நான். பகுதி நேரமாக அட்டை பெட்டிகளில் அடைக்கப்பட்ட வீட்டுப் பயன்பாட்டுப் பொருட்களை விற்கும் சிறுவன் ஒருவன் குறித்த கதை அது. அவன் பெயர் டேவிட்சன் ஸ்மித், ஏழ்மையின் பொருட்டு அவன் வீதிகளில் அலைந்து திரிகிறான், தனது பள்ளி நேரம் போகக் கிடைக்கும் காலத்தைத் தனது வயது முதிர்ந்த தாய், தந்தையர்க்காக நகர வீதிகளில் செலவிடுகிறான் அந்தச் சிறுவன், ஒரு நாளின் நண்பகலில் வயிற்றுப் பசி அவனை வாட்டி எடுக்கிறது, உணவு வாங்க வேண்டுமென்றால் இன்னும் இரண்டொரு பொருட்களையாவது அவன் விற்று முடிக்க வேண்டும், ஆனால், விற்பனை அவன் நினைத்ததைப் போல இருக்கவில்லை, பசியின் மயக்கத்தோடு அவன் ஒரு வீட்டின் கதவைத் தட்டுகிறான், ஒரு இளம்பெண் அந்த வீட்டின் கதவைத் திறந்து கொண்டு "என்ன வேண்டும்?" என்று கேட்கிறாள், குடிக்கக் கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா என்று அவளிடம் கேட்கிறான் அந்தச் சிறுவன், சிறுவனின் முகத்தில் இருக்கும் களைப்பையும், பசியையும் கண்டு கொண்டு உள்ளே செல்கிறாள் அந்தப் பெண், வரும் போது அந்தப் பெண்ணின் கைகளில் ஒரு கோப்பை நிறையப் பாலும், சில ரொட்டித் துண்டுகளும் இருக்கிறது, ஒரு புன்சிரிப்போடு அவனை அமர வைத்து உணவளிக்கிறாள் அந்தப் பெண். உணவு முடித்ததும் "இந்த உணவுக்காக நான் உங்களுக்கு எவ்வளவு தர வேண்டும்?" என்று அவளிடம் கேட்கிறான் அந்தச் சிறுவன், "இந்த வீட்டில் அன்பை நாங்கள் விலைக்கு விற்கக் கூடாதென்று அம்மா கண்டிப்புடன் சொல்லி விட்டுச் சென்றிருக்கிறார்" என்று அதே புன்முறுவலோடு பதிலளிக்கிறாள் அந்தப் பெண். "உன் பெயர் என்ன?" என்று விடைபெறும் போது கேட்கிறாள் அந்தப் பெண், "டேவிட்சன் ஸ்மித்" என்று சொல்லி விட்டு நடக்கிறான் அந்தச் சிறுவன்.
76529304
காலம் உருண்டோடி பத்துப் பதினைந்து மழைக்காலங்களையும் அசைக்க முடியாத மன உறுதியையும் அந்தச் சிறுவனுக்குக் காட்டியது, அந்தச் சிறுவனை அந்த இளம்பெண் மறந்து விடுகிறாள், ஆனால், பிணியும், மூப்பும் அந்தப் பெண்ணை அடிக்கடி நினைத்துக் கொள்ள கடும் நோய் வாய்ப்படுகிறாள் அந்தப் பெண், உள்ளூர் மருத்துவர்கள் கைகளை விரிக்கத் தனது நிலங்களை விற்று மருத்துவம் செய்யப் பெருநகரம் நோக்கி நகர்த்தப்படுகிறாள் அந்தப் பெண், பெருநகரத்தின் பொருளாசையோ அவள் நிலத்திற்கு ஈடாகி விடவில்லை, ஒரு மிகப்பெரிய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுப் பல மருத்துவர்களால் சோதனை செய்யப்படுகிறாள் அன்பு நிரம்பிய அந்தப் பெண். இந்த நோய்க்கான சிறப்பு மருத்துவரும், மருத்துவமனையின் சொந்தக்காரருமான ஒருவர் நாளை வருகிறார், அவரிடம் கேட்டுக் கொண்டு மேல் சிகிச்சையைத் தொடருவோம் என்று மருத்துவமனை சொல்லிவிட அந்த சிறப்பு மருத்துவருக்காக அந்தப் பெண்ணும் காத்திருக்கிறாள், மறுநாள் அங்கு வந்த சிறப்பு மருத்துவர் சில நாட்கள் தங்கி இருந்து அந்தப் பெண்ணுக்குச் சிகிச்சை அளிக்கிறார், பல பரிசோதனைகளுக்குப் பிறகு அந்தப் பெண்ணின் நோய்க்கான அறுவை சிகிச்சையைச் செய்து முடிக்கிறார், மிகப்பெரும் செலவு மிகுந்த அந்த அறுவை சிகிச்சைக்கான கடனுக்காகவே இனி நாம் உயிர் வாழ வேண்டும் என்கிற மன உளைச்சலில் வாடுகிறாள் அந்தப் பெண். ஆனால், உடல் நலம் பெறுகிறது, இறுதியாக வரப்போகும் தொகைக்கான குறிப்பை நோக்கி அந்தப் பெண் அச்சத்தோடு காத்திருக்கிறாள், அந்தக் குறிப்பும் வருகிறது, உறைக்குள் அடைப்பட்டிருந்த குறிப்பை கையில் எடுத்துப் பிரிக்கிறாள் அந்தப் பெண், அதில் இப்படி எழுதப்பட்டிருந்தது
" உங்கள் செலவு முழுவதும் ஒரு கோப்பைப் பாலினாலும், சில ரொட்டித் துண்டுகளாலும் அடைக்கப்பட்டு விட்டது" – டாக்டர்.டேவிட்சன் ஸ்மித்.
கண்ணீர் பெருக்கெடுக்க அந்த மருத்துவரைப் பார்க்க ஓடி வருகிறாள் அந்தப் பெண், தனது நகர வீதிகளில் அலைந்து திரிந்த அந்தச் சிறுவனைக் கண்டு கொண்டு அவள் விழி நனைக்கிறாள், தனது மென்மையான கரங்களால் அந்த விழியில் வழியும் நீரைத் துடைக்கிறான் அதே பழைய சிறுவன். எத்தனை எளிமையாகவும், அழகாகவும் அன்பை இந்தக் கதை விளக்கிச் சொல்கிறது.
சரி, இந்தக் கதைக்கும், காதலர் தினத்துக்கும் என்ன தொடர்பு என்று கேட்கிறீர்களா? நண்பர்களே???
1200042907708
நிறைய இருக்கிறது, இதே போல விலை மதிக்க முடியாத அன்பையும், நேசத்தையும் எல்லோரது வாழ்க்கையிலும் வழங்க சில மனிதர்கள் இருக்கிறார்கள், அவர்கள் தங்கள் நலனையும், வாழ்க்கையையும் பொருட்டாகக் கருதுவதில்லை, அவர்கள் நமது கண்களில் தென்படும் புன்னகைக்காகவே வாழ்கிறார்கள், அவர்கள் நமது பசியையும், உணவையும் பற்றியே தாங்கள் பட்டினியாக இருக்கும் போதும் சிந்தனை செய்கிறார்கள். பள்ளித் தேர்வுக்கான கட்டணத்தைக் கேட்டபோது பைகளைத் தடவிப் பார்த்து என்னைத் தனது மிதிவண்டியில் ஏற்றிக் கொண்டு நீண்ட தொலைவு பயணித்து யாரோ ஒருவரிடம் எனக்குத் தெரியாமல் கடன் வாங்க முயன்ற அப்பா, தனது மகனின் குடல்வால் அறுவை சிகிச்சையின் போது அழுது புரண்டு ஊரைக் கூட்டிய அம்மா என்று நம்மைச் சுற்றிலும் சில மனிதர்கள் வாழ்கிறார்கள், எனது முகத்தில் தெரியும் சுருக்கங்களை வைத்தே எனது தேவை என்னவென்று இன்று வரை கண்டறியும் தந்தையின் அன்புக்கு என்னிடம் விலை இல்லை, அண்ணி இல்லாத நேரங்களில் அண்ணனுக்குச் சமைத்து வைத்துக் காத்திருக்கும் தம்பியின் அன்புக்கு என்னிடம் விலை இல்லை. இப்படி நம்மைச் சுற்றி உலகம் சில எளிய சமன்பாடுகளில் முடிந்து போகிறது உலகம், பொன்னையும், பொருளையும் நோக்கி ஓடும் பல மனிதர்களின் முகத்தில் இருந்து தொலைந்து போயிருக்கிற வாழ்க்கையை நான் கண்டிருக்கிறேன். ஒரு அன்பான முத்தத்தையும், மிக அழகான சொல்லையும் எதிர் கொள்ளாமலேயே சில மனிதர்கள் இறந்து போகிறார்கள். அவர்களின் வாழ்க்கை முற்றுப் பெறாத தொடராக வீதிகளில் அலைகிறது.
காதலின் வலிமை இரண்டு இணை ஆடைகளோடும், இரண்டு நூறு ரூபாய்த் தாள்களோடும் என்னையும் ஒரு பெருநகரத்தை நோக்கி விரட்டியது, சாதியும், அதன் கோரமும் எல்லாக் காதலர்களையும் விரட்டியது போலவே என்னையும் விரட்டத் தவறவில்லை, அப்போது காலை நீட்டிப் படுக்க முடியாத ஒரு அறையில் வாழ்க்கையைச் சொல்லிக் கொடுத்தாள் ஒரு சின்னஞ்சிறு பெண், ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து இரவு எட்டு மணி வரையில் பக்கத்தில் இருக்கும் ஒரு அட்டைப்பெட்டித் தொழிற்சாலையில் வேலை செய்து உயிர் வாழ்வதற்கான உணவு செய்திருக்கிறாள் அந்தச் சின்னப் பெண், தன்னுடைய உணவைப் பற்றி அவள் ஒரு போதும் கவலைப்பட்டதில்லை, ஏதுமற்ற அத்தனை இரவிலும் ஏதாவது ஒன்றைச் சமைத்து செய்து என் மனதில் நிறைந்து இருக்கிறாள் ஒரு சின்னப் பெண், வேலை தேடி நான் செல்லும் போதெல்லாம் அவளிடம் எங்கிருந்து முளைத்து வரும் பணம் என்கிற மந்திரம் குறித்து அவள் இது வரையில் என்னிடம் சொன்னதில்லை, கடைசியாக அவளிடம் இருந்த கொலுசு காணாமல் போயிருப்பது குறித்துப் பின்னொரு நாளில் அறிந்து கொள்வேன் நான்.
taj-mahal56
காதல் பரிசுப் பொருட்களிலும், முத்தங்களிலும் இருக்கும் என்பதை மாற்றி அது அட்டைப் பெட்டிகளையும், இன்னும் பல கடும் வேலைகளையும் செய்யும் தனது கரங்களில் கூட இருக்கும் என்று எனக்குக் கற்றுக் கொடுத்தவள் அந்தச் சின்னப் பெண், அவள் என்னை நேசித்ததற்குப் பதிலாகப் பல நாட்கள் வறுமையையும், பசியையும் தான் அவளுக்குக் கொடுத்திருக்கிறேன், ஆனாலும், அது நான் கொடுத்தது என்று மகிழ்ச்சியோடு அந்தப் பரிசுகளை ஏற்றுக் கொண்டிருக்கிறாள் அந்தச் சின்னப் பெண். நகைகளையும், உடைகளையும் கேட்கும் பல பெண்களுக்கு நடுவில் அவள் வாழ்ந்திருந்தாலும் என்னிடம் அவள் கேட்டது எல்லாம் ஒரு சின்னப் புன்னகையும், சில முத்தங்களும் மட்டும்தான். தந்தையின் உடல் நலம் குன்றி அவர் படுக்கையில் இருந்தபோது ஒரு மகளைப் போல அவரருகில் இருந்து பலருக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தவள் அந்தச் சின்னப் பெண். வாழ்க்கையை, அதன் சுவையை பல்வேறு புற ஆற்றல்களுக்கு நடுவில் என்னிடம் இருந்து பிரித்து விடாமல் காத்தவள் அந்தச் சின்னப் பெண்தான், கடினமான பல நாட்களை மிக எளிமையாக எதிர் கொண்டு என்னை அழித்து விடாமல் காத்தவள் அந்தச் சின்னப் பெண்தான். இனி வரும் என் தலைமுறைகள் என்ன சாதியென்று யாரும் கேட்க முடியாதபடி குழப்பம் செய்தவள் அந்தச் சின்னப் பெண் தான். பல அரசுகள் இந்த தேசத்தில் போட்ட சட்டங்களால் நிகழ்த்த முடியாத ஒன்றை இரண்டு குடும்பங்களின் எதிர்ப்பை உடைத்து இந்த சமூகத்திற்கு உரக்கச் சொன்னவள் அந்தச் சின்னப் பெண்.
நான் இலக்கியத்தை விடவும், என் மொழியை விடவும், என் இனத்தை விடவும், இன்னும் எல்லாவற்றை விடவும் அவளை நேசிக்கிறேன், ஏனென்றால் என்னுடைய இலக்கியம் எனக்குள் இருந்து பிரிந்து விடாமல் காத்தவள் அவள், ஏனென்றால் என்னுடைய மொழி எனக்குள் இருந்து அழிந்து விடாமல் போற்றியவள் அவள், ஏனென்றால் என் இனத்தின் துன்பங்களைக் கண்டு நான் துவளும் போதெல்லாம் எதிர் கொள்ளப் புதிய ஆயுதங்களை எனக்கு வழங்கியவள் அவள். இப்போது சிந்தனைகளாலும், உடலாலும் கொஞ்சம் வளர்ந்திருக்கிறாள் அந்தச் சின்னப் பெண். எனக்கு அவள் “மனைவி” என்று எல்லோரும் சொல்லுகையில், நான் சொல்கிறேன், அவள் தான் இந்த பூமியை பூக்கள் சொரிந்து அலங்கரிக்கும் “காதல்” என்று, எளிய சமன்பாடுகளில் எல்லாக் கோட்பாடுகளையும் அடைத்து விடும் “புரிதல்” என்று, தன் புன்னகையால் இந்த உலகைக் காக்கும் “தாய்மை”யும், “பெண்மை’யுமென்று…………….நீங்கள் என்ன சொல்கிறீர்கள்???

நடிகனின் பயணம்!


-இளங்கோ


பிரிக்க முடியாதது-திரைப்பட ரசனையும்,ரசிக மனோபாவமும்! என சொல்லுமளவுக்கு இந்திய மனங்களில் திரைப்படங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது....பல மொழி பேசும் மக்கள் வாழ்ந்தாலும் தங்கள் மொழி படங்களில் நடிக்கும் கதாநாயகர், தங்கள் குடும்பங்களில் ஒருவராக,புனிதராக கருதுவதாகவே உள்ளது இந்திய குடும்பங்கள்...இதில் கல்வியறிவில் முதன்மை மாநிலமாக திகழும் கேரளமும் விதிவிலக்கல்ல...

முன்னணி நட்சத்திரங்களான மோகன்லாலும்,மம்மூட்டியும் மலையாள மனங்களை கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கு மேலாக ஆக்கிரமித்துக் கொண்ட  இனிய கள்வர்கள்தான்..... இதில் மோகன்லால், ரஜினியை போல துரு துரு கதாபாத்திரங்களின்  வழி அங்கு சூப்பர் ஸ்டாராக இருக்கிறார் என்றால் சிவாஜியைப் போல,கமலைப்போல புதிய முயற்சிகளை மேற்கொண்டு தனது கம்பீர நடிப்பின் மூலம் இதயங்களில் நிரம்பியவர் மம்மூட்டி...

அதனால்தானோ என்னவோ 'மம்முக்கா' என செல்லமாய் அழைக்கிறார்கள் சேர நாட்டு மக்கள்....
அவரின் கம்பீரமே பெரும்பாலான சமயங்களில் மக்களில் இருந்து கொஞ்சம் தள்ளி வைத்து பார்க்கும் பெரும்பான்மை கருத்தியலை உருவாக்கியும் உள்ளது. ஆனால் அவரின் இதயமோ சராசரி மனிதனையும் நேசிக்கும் உயர்ந்த பண்பு கொண்ட "எளிய மனிதர்களின் நண்பன்" என பறைசாற்றுகிறது 'மூன்றாம் பிறை' எனும் 128 பக்கங்கள் கொண்ட நூல்....

தனது வாழ்வனுபவங்களை தாய்மொழியான  மலையாளத்தில் 'காழ்ச்சப்பாடு' எனும் நூலாக எழுதியிருந்தார் நடிகர் மம்மூட்டி..அதை அழகிய பதத்தில் , மனதிற்குள் சென்றபின் நறுமணம் வீசும் மலர்களாய் மலர செய்யும் எளிய நடையில் கே.வி.சைலஜா தாய்த்தமிழில் மொழிபெயர்த்த நூல் தான் 'மூன்றாம் பிறை'...

பிரபலங்கள் என்றாலே ஈர்ப்பு இருக்கும்,அதிலும்  அவர்களின் வாழ்க்கையை தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் அளவில்லாத ஆர்வமும்,குறுகுறுப்பும் இயல்பிலேயே இணைந்துருக்கும். அந்த ஆர்வத்திற்கு தீனி போட்டுள்ளது இந்நூல்... நூறு பேர்களை அடித்து ஊரை காப்பாற்றும் கதாநாயகனாக வருபவர்கள் நிஜத்திலும் அதே பில்ட் அப்பை காட்டிகொள்வார்கள்.எந்தவித போராட்ட தகுதியும்,மக்களை நேசிக்கும் மாண்பும் இல்லாமலே அவர்களை ஆளவும் துடிப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் மத்தியில் தான் 'ஆக்சன் பாபு' அத்யாயத்தில் தான் பயந்ததை ஒப்புகொள்கிறார் நூலின் கதாநாயகன்..'வெறுமை' பகுதியில் முதியோர்களை நேசிக்கும் அவசியத்தை வலியுறுத்துகிறார்...

தான் திரைக்கு வருவதற்கு முன் வழக்கறிஞராக சில காலம் பணி புரிந்துள்ள மம்முக்கா அதன் அனுபவங்களை பேசும்போது மெய் மறக்கிறார்...நூலின் 6 வது பகுதி 'மூன்றாம் பிறை'யில் விவாகரத்து விசயமாக வழக்குமன்றதிற்கு (கோர்ட் ) வந்த முதிய ஜோடிகளின் காதலை ஸ்லாகித்து பேசுகிறார். குடும்ப உறவுகளின் நிர்பந்தத்தால் ஜீவனாம்சம் வேண்டி மனைவி வழக்கு போட்டுருந்தாலும் இருவருக்கும் இடையிலான காதல் அளவில்லாமலே இருக்கிறது...வழக்குமன்றத்தில் எதிரெதிரே நின்றுகொண்டு இருக்கும் அவர்கள் கண்களால் பருகி,இதயத்தால் பேசிக்கொள்ளும் காட்சியை விவரிக்கும் போது அவர்கள் மீதும்,தாய் பால் போன்ற தூய வடிவிலான காதலின் மீதும் மம்முக்கா கொண்டு இருக்கும் காதல் வெளிபடுகிறது...அது அவரை ஒரு கவிஞனை போல பேச வைக்கிறது....

'அன்பையும்,உணர்வுகளையும் கொண்டு மட்டுமே இணைக்கப்பட்ட இந்த பந்தத்தை அவர்களோடு எந்த பினைப்புமற்ற  நீதி மன்றத்தால் தகர்த்தெறிய முடியாது' என்கிறார் அழகாய்...

'துயரத்தின் பாடலிலோ'"விம்மித் ததும்பும் மனதோடு சாய்ந்துக் கொள்ள ஒரு தோள் தேடி வருபவர்களை வார்த்தைகளால் நீவி விடவும்,அவர்களின் கொதிக்கும் மனவேதனையில்  விழும் ஒரு துளி குளிர்ந்த நீராயாவது மாற வேண்டும்" என தோழமை பகிர்கிறார்.

சில மொழிகள் கற்று இருந்தாலும் தாய் மொழி மலையாளம் மீதுள்ள பற்று அவரின்  எண்ணங்களில், வார்த்தைகளில் வெளிப்படுகிறது .'வீ ஆர் மலையாளிஸ்' பக்கத்தில் ஆங்கில மோகத்தில் மலையாள மக்கள் வீழ்ந்துகொண்டு இருக்கும் அவலத்தை வேதனையோடு சுட்டிக்காட்டுகிறார். இந்த உலகமயம், நுகர்வு மோகத்தை தூண்டி,ஆங்கில மொழி பேசுவதை பேண்டசி கலாச்சாரமாய் உருவாக்கி  ஒவ்வொரு தேசிய மொழியையும் சிதைத்தே வருகிறது என்பதற்கு இதுவும் ஓர் சாட்சி...

'கம்யூட்டரில்'  பாலியல் இச்சையை தூண்டும் ஒரு கருவியாகவும் கணினி மாறியுள்ளது என தகப்பனாய் ஐயப்படுகிறார்.ஆனால் மிஸ்டர் மம்முக்கா! இச்சை தூண்டும் பாலியல் காட்சிகளின் ஊற்றுகண்ணே திரைப்படங்கள் தான் என்பதை புரிந்துதானே இங்கே பேசுகிறீர்?!!

நட்பு,அன்பு,காதல்,சமூகம்,மதம் என அனைத்தையும் பேசுகிறார்...

எல்லோருக்கும் எல்லாம் சமமாய் கிடைக்கவேண்டுமெனும் கம்யூனிசத்தை தன் மதத்தின் வழி வழியுறுத்துகிறார்...

ஒரு மொழிபெயர்ப்பு நூலின் பலம் என்பது அந்நூலின் ஆன்மாவை சிதைக்காமல் பதிவு செய்யும் அழகியலில் உள்ளது...மம்முக்கா நேரடியாக நம் மனதோடு மனதாகவே  ஒரு நண்பனாக,சகோதரனாக,குடும்பஸ்தனாக பேசுவதை போன்ற பிரக்ஞையை உருவாக்குகிறது மொழிபெயர்ப்பு...எழுத்தாளர் சைலஜா அவர்களின் முந்திய, முதல் மொழிபெயர்ப்பு நூலான 'சிதம்பர ரகசியமும்' இப்படி பட்ட அழகியலை கொண்டவையே.(அந்நூலை பற்றியும் எழுத வேண்டும்)..கையில் மாட்டிகொண்ட புது வளையல்களை சோப்பு நுரை போட்டு தடவி மெதுவாய்,இலகுவாய் உருவி வளையல்களை கழட்டுவார்கள்...அப்படி ஒரு இலகுவாய்,மிருதுவாய் நம் மனதில் கருத்துக்களை  பதிய வைக்கிறது சைலஜா அவர்களின் மொழிபெயர்ப்பு...ஒரே நடையில் படிக்க வைத்துவிட்டால் அது சிறந்த நடை கொண்ட நூல் என்பது எண்ணின் குருட்டு பாடம். அப்படிப்பட்ட எழுத்துக்களை கொண்டுள்ளதே  இவரின் மொழிபெயர்ப்பின் சிறப்பு.... 23 பகுதிகளாக பிரிந்துள்ள மம்முக்காவின் உணர்வின் மொழியை நெஞ்சோடு நெஞ்சாக கொண்டு பிணைத்துள்ளார்  சைலஜா.

பேருந்து ஜன்னலோர பயணத்தில், நம்மை கடந்து போகும் பசுமை,வறட்சி,காற்று,மழை சாரல்,வெப்பத்தின்  வீச்சு இவைகளை நாம் நுகர்வதை போன்றே மம்முக்காவின் உணர்வுகள் இங்கே நம் பயணத்தில் சுவை சேர்க்கிறது என்றால் சீரான வேகத்தில் பயணத்தை சுகமாக்கும் ஓட்டுனரை போல மம்முவின் வாழ்வனுபவங்களை சீரான வேகத்தில் நமக்கு பரிசளிக்கிறார் மொழிபெயர்ப்பாளர் சைலஜா.

'உங்கள் பெயரென்ன?'என்ற சாதாரண கேள்விக்கு கூட நீண்ட யோசனையுடன் 'பாஸ்' சொல்லிவிட்டு அந்தரங்கத்தை  பாதுகாக்கும் தமிழ் திரை நடிகர்களுக்கு மத்தியில் வெளிப்படையாக பேசும் மம்முக்கா நிஜ கதாநாயகர் தான்.

அவரின்   வாழ்க்கை வரலாறாக இல்லாமல், அவரை புரிந்துகொள்ள உதவும் அவரின் அனுபவ தொகுப்பாக உள்ள  'மூன்றாம் பிறை'..வாசிப்பவர்களுக்கு வளர்பிறை தான்.....


விண்வெளியில் புதிய பால் மண்டலம் கண்டுபிடிப்பு



This image shows the massive galaxy cluster MACS J0647+7015. Insets at left show three magnified views of the young dwarf galaxy MACS0647-JD (NASA / ESA / M. Postman / D. Coe / STScI / CLASH Team)

விண்வெளியில் மிக தொலைவில் புதிய பால் மண்டலத்தை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதற்கு மாக்சோ 647- ஜெ.டி. எனெ பெயரிட்டுள்ளனர். விண்வெளி தோன்றி 42 கோடி ஆண்டுகளுக்கு பின் இந்த புதிய பால் வெளி மண்டலம் தோன்றியிருக்கலாம் என கருதப்படுகிறது.

இது பூமியில் இருந்து 1330 கோடி ஒளி ஆண்டுகள் தொலையில் உள்ளது. இதன் அகலம் 600 ஒளி ஆண்டுகள் தொலைவுக்கும் குறைவாக இருப்பதால் மிகசிறிய பால் மண்டலம் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

சூரியன், பூமி உள்ளிட்ட கோள்கள் அமைந்துள்ள பால்வெளி மண்டலம் 1 லட்சத்து 20 ஆயிரம் ஒளி ஆண்டுகள் தொலைவு அகலமானது. நாசாவின் ஹப்பிள் மற்றும் ஸ்பிட்சர் தொலைநோக்கிகள் மற்றும் அறிவியல் இதழான நேச்சர் அமைத்துள்ள தொலைநோக்கியை ஒருங்கிணைத்து மேற்கொண்ட ஆய்வில் இந்த புதிய பால்வெளி மண்டலத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.

:::::::::::::::::::::மாலைமலர்::::::::::::::: 

என்ன பண்ணாலும் வயிறு குறையமாட்டீங்குதா?



இந்த காலத்தில் உடல் எடைப் பற்றிய பிரச்சனைகள் அதிகம் உள்ளன. சிலர் உடல் எடை அதிகவில்லை என்ற கவலையுடன் இருக்க, மற்றும் சிலருக்கு உடல் எடை குறையாமல் அவஸ்தைப்படுகின்றனர். மேலும் சிலர் உடல் எடை அதிகரிப்புடன் தொப்பையையும் சேர்த்துக் கொண்டு, அவற்றை குறைக்க பெரும் முயற்சி எடுக்கின்றனர். இத்தகைய பிரச்சனைகள் வருவதற்கு காரணம் நமது பழக்கவழக்கங்கள், வாழ்க்கை முறை போன்றவை தான் முக்கிய காரணங்களாக உள்ளன. இருப்பதிலேயே மிகவும் கடினமான ஒரு செயல் என்னவென்றால் தொப்பையைக் குறைப்பது தான். இதனால் உடல் அழகு மட்டும் கெடுவதில்லை, உடலில் நீரிழிவு, இதய நோய் மற்றும் புற்றுநோய் போன்றவற்றை வரவழைத்து கெடுத்துவிடுகின்றன.
இவை அனைத்திற்குமே வேறு யாரும் காரணமில்லை, நாமே தான் காரணம். மேலும் அந்த வகையான நோய்கள் வருவதற்கு தொப்பையுடன், ஆரோக்கியமற்ற உணவுகள், அதிக வேலைப் பளு, ஹார்மோன் மாற்றங்களும் ஒரு வகையில் காரணங்கள் தான். அதிலும் இன்றைய அவசர காலத்தில் எந்த செயலையுமே சரியான நேரத்தில் செய்ய முடியாமல், உடலை பாழாக்கிக் கொள்கின்றோம்.
சரியான ஆரோக்கியமற்ற உணவுகள், உடலுக்கு ஒரு நாளைக்கு போதிய சத்துக்கள் கிடைக்காமல் இருப்பது, குறைவான தூக்கம், கெட்ட பழக்கவழக்கங்கள் என இதற்கான காரணங்களைச் சொன்னால் சொல்லிக் கொண்டே போகலாம்.
எனவே என்னவெல்லாம் செய்தால், உடல் எடை அதிகரிக்காமலும், தொப்பை போடாமலும் தடுக்க முடியும் என்பதைப் பற்றி பார்ப்போமா!!!



பழங்கள் மற்றும் காய்கறிகள்

பழங்கள் மற்றும் காய்கறிகளில் உடலுக்கு தேவையான வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ளன. ஆகவே அவற்றை கண்டிப்பாக தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதிலும் தினமும் குறைந்தது 4-5 பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிட வேண்டும்..

உணவு நேரம்

எந்த வேளையிலும் உணவை தவிர்க்கக்கூடாது. மேலும் அவ்வாறு உண்ணும் உணவையும் சரியான நேரத்தில் சாப்பிட வேண்டும். இல்லாவிட்டால், அதிகமான பசியெடுத்து, உண்ணும் உணவும் அதிகமாகிவிடும். பின் உடலில் உள்ள மெட்டபாலிக்கின் அளவு குறைந்து, உடல் எடை குறையாமல், தொப்பை அதிகரித்துவிடும். சொல்லப்போனால், சாப்பிடாமல் இருந்தால் தான், உடலில் தொப்பை ஆரம்பமாகும்.

ஸ்நாக்ஸ்

ஸ்நாக்ஸ் ஏதேனும் சாப்பிட வேண்டும் என்று தோன்றினால், அதற்கு அவோகேடோ, பாதாம், ஆப்ரிக்காட், ஆப்பிள், முட்டை, தானியங்கள் போன்றவை தான் சிறந்தது. இதனால் அடிவயிற்றில் இருக்கும் கொழுப்புகள், இதில் உள்ள சத்துக்களால் கரைந்து குறைந்துவிடும்.

மனஅழுத்தம்

மனஅழுத்தம் கூட வயிற்றில் கொழுப்புக்கள் சேர்வதற்கு ஒரு காரணம். ஆகவே மனதில் அழுத்தம் ஏற்படாமல் ரிலாக்ஸ் ஆக இருப்பதற்கு யோகா, தியானம் போன்றவற்றை செய்வது நல்லது.

உறக்கம்

போதுமான உறக்கமும் வயிற்றில் உள்ள கொழுப்புக்களை குறைப்பதற்கு உதவும். எப்படியெனில் போதுமான தூக்கம் இல்லாவிட்டால், உடலில் உள்ள மெட்டபாலிசம் குறைய ஆரம்பிக்கும். பின் அந்த நேரத்தில் நாம் எந்த உணவை உண்டாலும், அவற்றை உடலானது முற்றிலும் உறிஞ்சி, உடல் எடையை அதிகரித்துவிடும்..

ஆல்கஹால்

ஆல்கஹால் குடிப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவற்றை பருகினால், உடலில் தேவையில்லாத கலோரிகள் அதிகரித்து, எடை அதிகமாவதுடன், தொப்பை வந்துவிடும்.

புத்தகம் மற்றும் டிவி

சாப்பிடும் போது புத்தகம் படித்தல், டிவி பார்ப்பது போன்ற செயல்களை செய்ய வேண்டாம். இதனால் நாம் உண்ணும் உணவின் அளவு, நம்மை அறியாமலேயே அதிகரித்துவிடும். பின் தொப்பை வராமல் என்ன செய்யும்?

உடற்பயிற்சி

உடலில் உள்ள கொழுப்புகளை குறைப்பதற்கு உடற்பயிற்சி மிகவும் இன்றியமையாதது. இதனால் உடலில் உள்ள மெட்டபாலிசத்தின் அளவு அதிகரிக்கும். அவ்வாறு மெட்டபாலிசத்தின் அளவு அதிகரித்தால், உடலில் உள்ள கொழுப்புகள் கரைந்துவிடும். உதாரணமாக, வாக்கிங், ஜாக்கிங், சைக்கிளிங், நீச்சல், டான்சிங் போன்றவை எடையை குறைக்க உதவும் சிறந்த உடற்பயிற்சிகள்.


THANKS:::::: Greynium Information Technologies Pvt. Ltd.:::::::::::::::::

இப்படியும் ஒரு நாட்டு அதிபர் இந்த உலகத்துல இருக்கிறார்.. நம்புங்கள் ப்ளீஷ்


இப்படியும் ஒரு நாட்டு அதிபர் இந்த உலகத்துல இருக்கிறார்.. நம்புங்கள் ப்ளீஷ்
பொதுவாக அரசியல் கட்சியில் சேர்ந்துவிட்டாலே ஆடம்பரமான அளப்பரை வாழ்க்கையை வாழத் தொடங்கிவிடுவர்...அரசுப் பொறுப்புக்கு போய்விட்டால் சொல்லவே வேண்டியது இல்லை..ஆனால் ஒரு நாட்டுக்கே அதிபராகிவிட்டாலும் எளிமையாக வாழுகிற ஒரு அதிசய மனிதரைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமா?


வண்டு முருகன்களின் வாலாட்டம்

ஒரு கட்சியில் வட்டச் செயலாளராகிவிட்டாலே நம்மூர் வண்டு முருகன்கள் சில்லு வண்டுகளெல்லாம் காட்டுற பந்தா இருக்கே.. அடேங்கப்பா... இந்தப் படத்தில் உள்ளவரை நன்றாகப் பாருங்கள்.. இவர் பெயர் ஹோஸே முயீகா. இவர் தென் அமெரிக்க நாடான உருகுவேயின் இப்போதைய அதிபர்.. இவர் எப்படியான வாழ்க்கை வாழ்கிறார் என்பதை அறிய அடுத்த பக்கங்களைப் புரட்டுங்கள்


உருகுவே அதிபராக முயீகா

2009-ம் ஆண்டு உருகுவே நாட்டு தேர்தலில் வெற்றி பெற்று அதிபரானார் ஹோஸே முயீகா. அப்போது இவர் அதிரடியாக அறிவித்த முதல் விஷயம்... அதிபருக்கான வழக்கமான மாளிகையே எனக்கு வேண்டாம் என்று சொல்லிவிட்டார்... அப்புறம் எங்க போனார்? மாளிகையை மட்டுமல்ல.. ஆள். அம்பு. சேனை என எந்த ஒரு பட்டாளத்தையும் வைத்துக் கொள்ளவில்லை.. உருகுவே நாட்டு அதிபராகிவிட்ட பிறகு அவர் வாழ்ந்த இடம் எங்கே தெரியுமா? நெக்ஸ்ட் பேஜ் கிளிக் செய்யுங்க


இங்கே ஒரு நாட்டு அதிபர் வசிக்கிறார்.

கோரைப் புற்கள் களையோடு களைகட்டி வளர்ந்திருக்க.. நட்ட நடுவே ஒரு தகரக் கொட்டகை... காயம்பட்ட ஒரு நாய்.. வீட்டுக்கு வெளியே காயப் போட்டிருக்கும் துணிமணிகள்... இங்குதான் உருகுவே நாட்டு அதிபர் முயீகா வாழ்ந்து வருகிறார்.... இவரது பாதுகாப்புக்கு 2 போலீசார் மட்டும் காவல்! இந்த வீட்டுக்கு குடிநீர் இணைப்பு கூட கிடையாது. கிணற்று தண்ணீரைத்தான் பயன்படுத்துகிறார்.


எதற்காக இப்படி ஒரு வாழ்க்கை?

'என் விருப்பத்தில் அடிப்படையில் நான் தேர்வுசெய்த வாழ்க்கை முறை இது. என்று சொல்கிறார் ஹோஸே முயீகா. இவர் வாழும் குடில் மனைவியின் பண்ணை நிலம்.. இங்கே மலர்களை கணவனும் மனைவியும் வளர்க்கின்றனர். 1960களில் கியூபா புரட்சி நடைபெற்ற போது தாமும் இடதுசாரியாகி 14 ஆண்டுகள் சிறையில் கழித்திருக்கிறார். இந்த கம்யூனிச சிந்தனை இப்போதும் கூடவே வந்திருக்கிறது


சம்பளத்தை என்ன செய்கிறார்?

உருகுவே அதிபர் என்ற பதவிக்காக இவருக்கு கிடைக்கும் 12 ஆயிரம் டாலரை என்ன செய்கிறார் தெரியுமா? இதில் 90 விழுக்காட்டை சமூக நலப் பணிகளுக்காக அள்ளிக் கொடுத்துவிடுகிறாராம். என் வாழ்க்கையின் பெரும்பங்கை இப்படியெ கழித்துவிட்டேன். இப்பொழுதும் இப்படித்தான் வாழ விரும்புகிறேன் என்றார் மூயிகா.


இவரோட சொத்து மதிப்பு என்ன?

உருகுவேயில் அதிபராக இருப்பவர் ஆண்டுதோறும் தமது சொத்து மதிப்பை வெளியிட்டாக வேண்டும். 2010ல் 1800 டாலர்தான் இவரது சொத்து. 1987ஆம் ஆண்டு வெளிவந்த வொக்ஸ்வாகன் பீடில் காருக்கான மதிப்பு. தற்போது தன் மனைவிக்கு சொந்தமான நிலம், டிராக்டர், வீடு ஆகியவற்றில் பாதியை சொத்தாகக் காட்டியிருக்கிறார். மொத்தமாக 2,15,000 டாலராம். இப்படியும் மனிதர்கள் அதிபர்களாக இருந்து ‘வரலாறு' படைக்கின்றனர்.

THANKS:::::: Greynium Information Technologies Pvt. Ltd.