Tuesday, November 20, 2012

கவிதை: இனிப்புத் தோப்பே...



னவுகளின் தாயகமே...
கவிதைகளின் புன்னகையே
வைரத் தேரே!..
கண்வளரும் பேரழகே...
கால்முளைத்த சித்திரமே
இனிப்புத் தோப்பே...
நினைவுகளை அசைக்கின்றாய்...
நெஞ்சுக்குள் நடக்கின்றாய்...
தேவ தேவி...
நின்றாடும் பூச்செடியே...
உன்பார்வை போதுமடி
அருகே வாடி.

பார்வைகளால் தீவைத்தாய்;
பரவசத்தில் விழவைத்தாய்;
தவிக்க வைத்தாய்!
ஊர்வலமாய் என்னுள்ளே
கனவுகளைத் தருவித்தாய்
சிலிர்க்க வைத்தாய்.
நேர்வந்த தேவதையே
நிகரில்லா என்நிகரே
உயிர்க்க வைத்தாய்.

யார்செய்த சிற்பம்நீ?
எவர்தந்த திருநாள்நீ?
மலைக்க வைத்தாய்.
உன்பிறப்பை உணர்ந்ததனால்
நீ பிறக்கும் முன்பாக
நான் பிறந்தேன்;
என் நோக்கம் அறிந்ததனால்
எனக்குப்பின் நீ பிறந்தாய்
இயற்கை வாழ்க!



ஒன்றுக்குள் ஒன்றாக
உயிர்கலந்து வாழத்தான்
வந்தோம் இங்கே;
இன்னுமேன் தயங்குகிறாய்
இருக்கின்ற வாழ்க்கையினை
 வாழலாம் வா!

-ஆரூர் தமிழ்நாடன்-

No comments:

Post a Comment