Thursday, August 2, 2012

பதக்கம் கிடைக்காத ஆத்திரத்தில் கடையை சேதப்படுத்திய ஆஸ்திரேலியா துடுப்பு படகு வீரர் கைது!

லண்டன்: 
லண்டன் ஒலிம்பிக் போட்டியில் துடுப்பு படகு போட்டியில் பதக்கம் கிடைக்காத ஆத்திரத்தில் கடையை சேதப்படுத்திய ஆஸ்திரேலிய வீரரை, போலீசார் கைது செய்தனர்.
லண்டன் ஒலிம்பிக் போட்டியில் நேற்று துடுப்பு படகு போட்டி நடைபெற்றது. இதில் ஆண்களுக்கான குழு துடுப்பு படகு போட்டியின் இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா உட்பட 8 அணிகள் பங்கேற்றன. இதில் ஆஸ்திரேலிய அணிக்கு பதக்கம் எதுவும் கிடைக்கவில்லை.
இதில் அதிருப்தியடைந்த ஆஸ்திரேலிய அணியை சேர்ந்த ஜோஷ்வா பூத் என்ற வீரர், சுரே டவுன் என்ற இடத்தில் இருந்த கடையின் முன்பகுதியை தாக்கி சேதப்படுத்தினார். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இதனால் அவமானமடைந்த ஜோஷ்வா, காவல் நிலையத்தில் உள்ள சுவரில் தனது தலையை மோதி கொண்டார்.
இதில் காயமடைந்த அவர், அங்கே மயங்கி விழுந்தார். இதையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, நாளை மீண்டும் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட உள்ளார்.
இது குறித்து ஆஸ்திரேலியா அணியை தலைமையேற்று நடத்தும் நிக் கிரீன் என்பவர் கூறியதாவது,
இன்று அதிகாலையில் 3.30 மணி அளவில் எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. இதில் எங்கள் அணியை சேர்ந்த வீரர் ஒருவர் பிரச்சனையில் சிக்கியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆஸ்திரேலிய துடுப்பு படகு அணியை சேர்ந்த ஜோஷ்வா, தோல்வி அடைந்த ஆத்திரத்தில் கடையின் முன்பகுதியை சேதப்படுத்திய குற்றத்திற்காக போலீசாரால் கைது செய்யப்பட்டதாக தெரியவந்தது.
போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்ட அவர், காயமடைந்ததால் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஜோஷ்வா தற்போது சிகிச்சை முடித்து தனது குடியிருப்பு பகுதிக்கு திரும்பி உள்ளார். நாளை காவல் நிலையத்திற்கு அவர் மீண்டும் செல்ல உள்ளார். அப்போது நடந்த சம்பவங்கள் குறித்து ஜோஷ்வாவிடம், போலீஸ் விசாரணை நடைபெறும் என்றார்.

No comments:

Post a Comment