Thursday, August 2, 2012

பாங்காக்கில் தமிழ் முஸ்லிம் சங்கத்தின் இஃப்தார் நிகழ்ச்சி

Bangkok Tamil Muslim Association பாங்காக்: தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிலுள்ள தமிழ் முஸ்லிம் சங்க பள்ளியில் பல வகை உணவுப் பதார்த்தங்களுடன் தினமும் இஃப்தார் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் காயல்பட்டினத்தைச் சார்ந்த மக்களும் பெருந்திரளாகக் கலந்து கொள்கின்றனர்.
பாங்காக் தமிழ் முஸ்லிம் சங்கத்தின் வரலாற்றுச் சுருக்கம்:

ஏறக்குறைய 40 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த நாட்டைத் துறந்து, உழைத்துப் பொருளீட்டும் உயர்வான எண்ணத்தில் நூற்றுக்கும் சற்று குறைவான தமிழ் பேசும் முஸ்லிம் சகோதரர்கள் அமைதி தவழும் சியாம் என்றழைக்கப்படும் தாய்லாந்தின் தலை நகரமாம் பாங்காக்கில் தொழில் செய்து வந்தார்கள். அப்போது நமது இளைஞர்கள் ஒருவருக்கொருவர் சந்தித்துக்கொள்ள, கருத்து பரிமாறிக் கொள்ள இனிய மாலைப்பொழுதுகளை இன்புற கழிக்க ஒரு பொது இடமின்றி தவித்தனர். பெரும்பாலான சமயங்களில் ஹோட்டல் லாபிகளில் அமர்ந்து நாட்டு நடப்புகள்,தொழில் விஷயங்களை பேசிக் கொள்வார்கள்.
அப்போது சிலோம் சாலையில் அமைந்திருந்த ராமா ஹோட்டல், விக்டோரியா, நாராய் லாபிகளில் அமர்ந்து கருத்துகளைப் பரிமாறினர். காயல்பட்டனம் ஹாஜி ஹெச்.எம். செய்யது உமர், ஹாஜி எஸ்.எம். கலீல், கீழக்கரை ஜனாப் ஐ.எம் .ஜாபிர், சி.ஹா எனும் சின்ன ஹமீது, ஜமால் முஹம்மது, அப்துல் காதர் ஆகியோர் நமக்கென்று ஒரு அமைப்பு வேண்டும் என்று பேசி அப்போதைய மூத்த பிரமுகர்கள் கீழக்கரை குளோபல் டாக்டர் பி.ஆர்.எல். அபூபக்கர் ஹாஜி, சைய்யது சதக்கத்துல்லாஹ், தரங்கம்பாடி காசீம் மரைக்காயர், காரைக்கால் ஜக்கரியா மரைக்காயர், சாலிஹ் மரைக்காயர், முஸ்தபா மரைக்காயர், ரவூஃப் நானா, டி.எஸ்.முஹம்மது ஷா, அம்பகரத்தூர் ஹாஜி எம்.எம்.அப்துல்லாஹ், எம்.எம்.மாலிக் ஹாஜி, ஏ.எம்.செய்யது ஹாஜி ஆகியோர்களை சந்தித்து நமக்கென்று ஒரு சங்கம் தேவை என்று வலியிறுத்தினர்.
தன்னலமற்ற சேவைகளை ஊக்குவிப்பதில் முதலிடம் வகிக்குமிவர்கள் அனைவரும் ஆலோசனை செய்து முறையாக தமிழ் முஸ்லிம் சங்கத்தை நிறுவினார்கள். வரலாற்றுச் சிறப்புமிக்க அதன் முதல் கூட்டத்தை 04.04.1975 அன்று சிலோம் நாராய் ஹோட்டலில் ஏற்பாடு செய்து துவக்க விழாவிற்கு சிராஜீல் மில்லத் அல்ஹாஜ் ஏ.கே.ஏ. அப்துஸ்ஸமது எம்.ஏ., எம்.பி. அவர்களை அழைத்து வாழ்த்தி சிறப்புரையாற்றச் செய்தனர்.
பாங்காக் தமிழ் முஸ்லிம் சங்கத்தின் முதல் தலைவராக கீழக்கரை குளோபல் டாக்டர் ஹாஜி பி.ஆர்.எல். அபூபக்கர் அவர்களும், செயலாளராக தரங்கம்பாடி காசீம் மரைக்காயர் அவர்களும் இதர நிர்வாகிகளும் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
இடம்:
நிர்வாகிகள் பொற்ப்பேற்ற பின்னர் சங்கம் செயல்படுவதற்காக எம்.டி.எஸ். மரைக்காயர் என்றழைக்கப்படும் மு.தம்பி சாஹிப் அவர்கள் ஜெனரல் போஸ்ட் ஆபீஸ் அருகிலுள்ள தனது சொந்த இடத்தை வாடகை ஏதுமின்றி சங்கம் நடத்த கொடுத்து உதவினார்கள்.
சங்கப்பதிவு:
அரசாங்க விதிமுறைப்படி சங்கத்தை பதிவு செய்ய வேண்டிய பொறுப்பை ஹாஜி சீர்காழி டி.எஸ். முஹம்மது ஷா அவர்கள் ஏற்றுக் கொண்டார். அவர்களுக்குத் தேவையான உதவிகளை காரைக்கால் ஏ.எம். ஜக்கரிய்யா மரைக்காயர் அவர்கள் தனது அலுவலகத்தில் வைத்து செய்து கொடுத்து வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சங்கத்தின் முதல் சொந்தக் கட்டிடம்:
எம்.டி.எஸ். கட்டிடத்தில் செயல்பட்டு வந்த சங்கம் பின்பு தலைமை தபால் நிலையத்திற்கு எதிரிலுள்ள ஏ.இ. நானா கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது. பின்பு சங்கத்திற்கென்று சொந்த கட்டிடம் தேவையென்று உணர்ந்து 1977ம் ஆண்டு புதிய கட்டிடம் வாங்கப்பட்டது.
புதிய பள்ளிவாசலின் தோற்றம்:
சங்கத்தின் உறுப்பினரகளால் புதிய பள்ளிவாசல் கட்டப்பட வேண்டுமென்ற கோரிக்கை ஏற்கப்பட்டு பாங்காக் தமிழ் முஸ்லிம் சங்கத்தின் உறுப்பினர்களிடம் மட்டுமின்றி, வெளிநாடுகளில் வாழும் தமிழ் பேசும் முஸ்லிம் மக்களிடமும் தாராள நிதியுதவி பெறப்பட்டு நீடூர் ஹாஜி ஸலாஹுத்தீன் அவர்கள் பாங்காக் தமிழ் முஸ்லிம் சங்கத் தலைமைப் பொறுப்பை அலங்கரித்த காலத்தில், அல்லாஹ் உதவியால், ஹிஜ்ரீ 1427 ஷஃபான் முதல் நாள் கி.பி. 2006ம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதியன்று புதிய பள்ளிவாசல் கட்டி முடிக்கப்பட்டு வக்பு செய்யப்பட்டது.
காயலரின் பங்களிப்பு:
தற்போது பள்ளியின் தலைவராக நமதூரைச் சேர்ந்த வாவு ஹாஜி எம்.எம்.சம்சுதீன் அவர்களும், துணைச் செயலாளராக அல் ஹாபிழ் அல் ஆலிம். எம்.ஏ.அபுல் ஹஸன் ஷாதுலி அவர்களும், நிர்வாகக்குழு உறுப்பினர்களாக மு.ஹ.செய்து முஹம்மது சாலிஹ் அவர்களும், மு.அ.முஹம்மது செய்து அவர்களும் சிறப்புற பணியாற்றி வருகிறார்கள்.
இஃப்தார் ஏற்பாடுகள்:
ரமலான் மாத்தில் நோன்பாளிகள் நோன்பு திறப்பதற்கு தினமும் காயல் நோன்புக் கஞ்சி, சமோசா ரோல், பழ வகைகள், ரோஸ் மில்க், இளநீர் கடற்பாசி மற்றும் மஃரிப் தொழுகைக்குப் பிறகு சூடான காயல் தேனீரும், தராவீஹ் தொழுகைக்குப் பிறகு சூடான பால், சிற்றுண்டி வழங்கப்படுகிறது.
பாங்காக் தமிழ் முஸ்லிம் சங்க பள்ளிவாசலில் தினமும் நடைபெறும் ஐவேளைத் தொழுகை, ரமலான் தராவீஹ், இஃப்தார், கியாமுல் லைல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை www.bangkok-mosque.com என்ற இணையதள முகவரியில் வீடியோவாக காணலாம். ஜிபிஆர்எஸ் வசதி கொண்ட செல்போனில் ஈகிள்ஐ என்ற மென்பொருளைப் பயன்படுத்தி, ஒளி/ஒலியுடன் பெற்றுக்கொள்ளலாம்

No comments:

Post a Comment