Wednesday, September 25, 2013

குறும்பு SMS - நீங்களும் அனுபியிருகிங்களா?




         ஏதாவது ஒரு கடவுளின் பெயரைப் போட்டு, அந்தக் கடவுளுக்கான மந்திரங்களையும் குறிப்பிட்டு வரும் குறுஞ்செய்தியை 10 பேருக்கு அனுப்பி வைத்தால் 24 மணி நேரத்தில்  நல்ல காரியம் கிட்டும். "அசட்டையாக இருந்து அழித்துவிட்டாலோ, அனுப்பாமல் விட்டாலோ அவ்வளவுதான். சோதனை தொடங்கிவிடும்'.  ஒரு காலத்தில் துண்டுப்பிரசுரமாக வந்த இந்தச் செய்தி, இப்போது நவீன அறிவியல் வளர்ச்சிக்கேற்ப "நன்கு வளர்ந்து' செல்போன்களில் குறுஞ்செய்திகளாக வரத் தொடங்கியிருக்கின்றன.       

               ஏதாவதொரு சாமியாரின் பெயரைப் போட்டு, "இத்தோடு உங்களின் கஷ்டகாலம் நீங்கியது, இவர் உங்களை ரட்சிப்பார். இந்தச் செய்தியை 20 பேருக்கு அனுப்பி வையுங்கள். அடுத்த 30 நிமிஷங்களில் நல்லது நடக்கும், நம்புங்கள்' இதுவும் ஒரு வகை.    பள்ளி, கல்லூரித் தேர்வுக் காலங்களில் "சீசன்ஸ் கிரீட்டிங்ஸ்' போலவே ஒரு குறுஞ்செய்தி உண்டு. ஏதாவதொரு கடவுளின் பெயருடன் "ஐ லவ் யு' சேர்த்து, "இந்தக் குறுஞ்செய்தியை 10 பேருக்கு அனுப்பிவைத்தால் பரீட்சையில் தேர்வாகிவிடலாம்'.  பயந்து போய் தன்னிடமுள்ள அத்தனை எண்களுக்கும் இவற்றை அனுப்பிவைக்கும் பரிதாபமான மாணவ, மாணவிகள் ஏராளம். படிக்கிற நேரத்தில் குறுஞ்செய்தி அனுப்பி அவர்களிடமிருந்து பதில், வசவு எல்லாவற்றையும் வாங்கிக் கட்டிக் கொண்டு தேர்வு எழுதும் அறைக்குச் சென்றால்...?  

             அடுத்து அறிவியல்பூர்வமான அச்சுறுத்தல் (!) "சில செல்போன் எண்களைக் குறிப்பிட்டு அவற்றிலிருந்து வரும் அழைப்புகளை சட்டை செய்யாதீர்கள். அவற்றை எடுத்துப் பேசினால், வைரஸ் உங்களின் செல்போன்களுக்குள் புகுந்து, செயலிழக்கச் செய்துவிடும்' என்ற குறுஞ்செய்தி பலரையும் அச்சுறுத்தியது.  அந்தக் குறுஞ்செய்தியில், பலருக்கும் இதை அனுப்பி வையுங்கள். யாரும் பாதிக்கப்படக் கூடாது என்ற "அக்கறை' வேறு. அந்தச் செய்தியிலிருந்த எந்தவொரு எண்ணும் செயல்படாத எண் என்பது தொடர்பு கொண்டு பார்த்தால்தான் தெரியும். வைரஸ் பயம் காரணமாக எவரும் இந்தப் பரிசோதனையில் ஈடுபடுவதில்லை.  "அறிவியல்' என்றவுடன் சுலபமாக நம்பி விடுகின்றனர். ஏனென்றால், நம்மில் கணினி வைத்திருப்பவர்களுக்கு "சாஃப்ட்வேர் வைரஸ்', "ஹார்டுவேர் வைரஸ்' ஏற்கெனவே அறிமுகம். 

             இன்னும் சில குறுஞ்செய்திகள், "இரவு 11 மணி முதல் 12 மணி வரை விண்ணிலிருந்து செல்போன்களைத் தாக்கும் கதிர்கள் இறங்குகின்றன. அந்த நேரத்தில் செல்போன்களை அணைத்து வையுங்கள். மறக்காமல் (யாம் பெற்ற இன்பம், பெறுக இவ்வையகம்) நண்பர்களுக்கு இந்தச் செய்தியை அனுப்பிவையுங்கள்' என்கிறது.  இதுபோன்ற குறுஞ்செய்திகள் இன்னும் வலுவைச் சேர்த்துக் கொள்வதற்காக ஏதாவது ஒரு பிரபல ஆங்கில நாளிதழையும் துணைக்கு அழைத்துக் கொள்கின்றன. "மேலும் விவரங்களுக்கு நேற்றைய நாளிதழைப் பாருங்கள்- நாசா அறிவித்திருக்கிறது'. சம்பந்தப்பட்ட நாளிதழில் பணியாற்றுவோருக்கே இந்த குறுஞ்செய்திகள் செல்லும்போது அவர்களுக்கும் பேரதிர்ச்சி.

                இன்னொன்று, ஏதாவதொரு வலைப்பூவின் முகவரியைப் போட்டு வரும் குறுஞ்செய்திகள். "அறிமுகப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் அந்த வலைப்பூவின் உரிமையாளர் உங்களின் செல்போனுக்கு ரூ. 72.81 பைசா "டாப் அப்' செய்வார். அடுத்த இரு நிமிஷங்கள் கழித்து கணக்கிலுள்ள மீதித் தொகையைச் சரிபாருங்கள்'. சரிபார்த்தால் என்ன இருக்கும்? எதுவும் இருக்காது. இதுவரை இருந்த தொகையும் குறுஞ்செய்தி அனுப்பிய வகையில் கழிந்து காலியாகியிருக்கும். 

              எங்கிருந்து இவை வருகின்றன என்பதை அத்தனை சுலபமாகக் கண்டறிந்து நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை. ஏனென்றால், நமக்கு வரும் செய்தி கட்டாயம் நமக்குத் தெரிந்தவர்கள், உறவினர்களாலேயே அனுப்பி வைக்கப்படுகிறது. அதிகபட்சம் அவர்களைக் கடிந்து கொள்ளத்தான் முடியும். அவர்களுக்கும் கிட்டத்தட்ட நண்பர்கள்தான் அனுப்பிவைக்கின்றனர். இப்படியே விசாரித்து, விசாரித்துச் சென்றாலும் அனுமார் வாலைப் போல நீள்கிறது விசாரணை.  ஒரு கட்டத்தில் விசாரணை துண்டித்துப் போய்விடும். ஏனென்றால், பெரும்பாலானவர்கள் வந்த குறுஞ்செய்தியை சேமித்து வைத்திருப்பதில்லை. ஏதாவதொரு செல்போனில் அது வந்த வழி அழிந்து போயிருக்கும்.  வியாபார நோக்கில் சில தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களே இதுபோன்ற குறுஞ்செய்திகளைப் பரப்புகின்றன என்ற குற்றச்சாட்டையும் உறுதி செய்ய முடியவில்லை. 

               மக்களின் நம்பிக்கை, மூடநம்பிக்கை, அவநம்பிக்கை எல்லாவற்றையும் பயன்படுத்தி செய்யப்படும் இதுவும் ஒருவகையில் மோசடிதான்.   ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும். நமக்கு வரும் செய்திகளை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்கு அனுப்பிவைப்பது அபத்தம் மட்டுமல்ல, அநாகரிகமும்கூட. பெரும்பாலான இளைஞர்கள் பொழுதுபோக்காகவே இதைச் செய்கின்றனர்.  அடுத்து பரிதாபப்படுபவர்களுக்காக. குறுஞ்செய்தியின் தொடக்கமே, "அசட்டையாக இருந்து அழித்துவிடாதீர்கள்' என்பதுதான். 

        "இருதய அறுவைச் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 2 வயதுக் குழந்தைக்கு மருத்துவச் செலவுக்காக நிதி தேவைப்படுகிறது. இந்தக் குறுஞ்செய்தியை நண்பர்களுக்கு அனுப்பிவைத்தால் போதும். அதன்மூலம் தலா பத்து பைசா பாதிக்கப்பட்டுள்ள குழந்தைக்குச் சென்றடையும்'.÷இப்படி எத்தனை பத்து பைசாக்கள் சேரும்? திட்டமிட்டு செய்யப்படும் இந்த வியாபார உத்தியை எப்போதுதான் புரிந்து கொள்ளப் போகிறோம்.  

             அடுத்து பாசத்துக்காக... "ஐ லவ் மை மம்மி'. இதை நண்பர்களுக்கு அனுப்பிவைத்தால் அம்மா - மகள் உறவு, அம்மா - மகன் உறவு செழிக்குமாம். குறுஞ்செய்தி அனுப்பினால் இந்த உறவுகள் செழிக்குமா என்ன? 

~~~~~~~~~~~~
தமிழ்வாசி பிரகாஷ்

No comments:

Post a Comment