Wednesday, September 25, 2013

தலை முதல் கால் வரை எல்லாத்துக்கும் வயசாகுது.....கவனிங்க!!!


              பளீச் என்று எரியும் பல்பாக இருந்தாலும்,  பைக்காக இருந்தாலும், வலுவாக இத்தனை மணி நேரம், இத்தனை நாள்தான் இயங்க முடியும். அதுபோலத்தான் நம் உடலும். உடலில் உச்சந் தலை முதல் உள்ளங்கால் வரை ஒவ்வொரு முக்கிய உறுப்புக்கும் தனித்தனி வயது உண்டு. 
பிரான்ஸ் மருத்துவ நிபுணர்கள் ஆய்வில் கிடைத்த ருசிகர தகவல்கள்:
மூளை:
            மூளையில் உள்ள நரம்பு உயிரணுக்களின் எண்ணிக்கை 10,000 கோடி; நமது ஒவ்வொரு எண்ணம், சொல், செயல்களுக்கு இவற்றின் கட்டளைகள் தான் காரணம். 20 வயது வரை தான் இதன் சுறுசுறுப்பு இருக்கும். 20 ல் இருந்து இதன் எண்ணிக்கை குறைய ஆரம்பிக்கும். 40 வயதில் இருந்து ஒரு நாளைக்கு 10,000 உயிரணுக்கள் வீதம் சரியும். நினைவாற்றல் உட்பட பல செயல்கள் செயலிழக்க இது தான் காரணம்.  
குடல்:
            குடலுக்கு 55 வயது வரை தான் முழு ஆரோக்கியம். அப்போது குடல், கல்லீரல், சிறுகுடல், இரைப்பையில் ஜீரணத்துக்கான நொதிநீர் சுரப்பது குறைய ஆரம்பிக்கும். இதனால், அஜீரணம், வயிற்றுப்பிரச்னை போன்றவை தலைகாட்டும்.  
மார்பகம்:
            பெண்களுக்கு மார்பகம் 35 வயதில் சுருங்க ஆரம்பிக்கும். அதன் தசைகள், கொழுப்புத்தன்மை குறைய ஆரம்பிக்கும்; அதனால், பருத்த மார்பகம் சுருங்க ஆரம்பிக்கும்.  
சிறுநீர்ப்பை:
             இது வயசாவது 65 ல் ஆரம்பிக்கிறது. 30 வயதில் 2 கப் சிறுநீர் தேக் வைக்கும் அளவுக்கு கொள்ளளவு இருக்கும்; 65 ல் ஒரு கப் தான் தேங்கும் அளவுக்கு சுருங்கி விடும்.   
நுரையீரல்:
             20 வயது வரை தான் முழுவீச்சில் இயங்கும். அதன் பின், இடுப்பு எலும்பு பகுதி நெருக்கிக்கொள்ள, நுரையீரல் சக்தி குறைந்து, மூச்சு , உள்ளிழுத்து வெளியேவிடும் அளவு குறையும். 40 வயசுக்கு மேல், சில அடிதூரம் நடந்தால் மூச்சு வாங்குவதற்கு காரணம் இது தான். 
குரல்:
            தொண்டையில் உள்ள லாரினக்ஸ் என்ற மெல்லிய திசுக்கள் நீடிக்கும் வரை தான் குரலில் இனிமை இருக்கும்.  65 வயதுக்கு பலவீனமாகி, குரல்  ‘கரகர’ தான்.  
கண்:
             பத்திரிக்கை படிக்கும் போதும், டிவி பார்க்கும் போதும் கண்களை இடுக்கி, பாடாய்ப்படுத்தி பார்ப்பர் சிலர்; அடடா, வயது 40 ஆகி விட்டது என்று புரிந்து கொள்ளலாம். அந்த வயதில் தான் பார்வை வலிமை குறைய ஆரம்பிக்கிறது.  

இருதயம்:
             ரத்தத்தை உள்வாங்கி, மற்ற உறுப்புகளுக்கு அனுப்பும் சக்தி படைத்தது இருதய பம்ப்; ரத்தத்தை விரைவாக அனுப்பும் நெகிழ்திறன் கொண்ட இந்த பம்ப், 40 வயதில் பலவீனமடைய ஆரம்பிக்கிறது. அதனால்,  மற்ற உறுப்புகளுக்கு ரத்தம் பாயும் வேகமும்  குறைகிறது.  
கல்லீரல்:
           இந்த ஒரு உறுப்பு மட்டும் தான் 70 வயது வரை சூப்பர் இயக்கத்துடன் உள்ளது.  குவாட்டரை நினைக்காதவரை  இதன் பலம் ஆண்டுக்கணக்கில் நீடிக்கும்.  
சிறுநீரகம்:
            ரத்தத்தை சுத்தப்படுத்தி பிரிக்கும் வேலையை இதன் ‘நெப்ரான்ஸ்’ என்ற திசுக்கள் செய்கின்றன. 50 வயதில் இது வலுவிழக்க ஆரம்பிக்கிறது.  

எலும்புகள்:
            25 வயது வரை தான் எலும்புகள் வலுவாக இருக்கும். அதன் பின் 35 ல் இருந்து பலவீனமடைய ஆரம்பிக்கும்.  
பற்கள்:
            எச்சில் ஊறும் வரை தான் பற்களுக்கு வலிமை. பாக்டீரியாக்களையும் விரட்டியடிக்கும். நாற்பது வயதில் எச்சில் ஊறுவது குறைய துவங்கும். அதனால் தான்  சிலரிடம் கப்ஸ்.  

தசைகள்:
            முப்பது வயதில் தசைகள் 0.5 முதில் 2 சதவீதம் வரை ஆண்டுக்கு குறைய ஆரம்பிக்கும். தினசரி பயிற்சி, உடல் உழைப்பு தான் இதில் இருந்து காக்கும்.  

தோல்:
            தோல்பகுதி, 25 வயதில் இருந்தே பலவீனமடைய ஆரம்பிக்கும்.  

தலைமுடி:
           முப்பது வயதில் இருந்தே தலைமுடி கொட்ட ஆரம்பிக்கும்;  வெள்ளை முடி தோன்றும்.

~~~~~~~~~~
தமிழ்வாசி பிரகாஷ்

No comments:

Post a Comment