Friday, January 18, 2013

மன்னிப்பை கற்றுக்கொடுங்கள்.. மன்னிக்கத் தெரிந்தவனே மனிதன்



 
தவறு செய்பவர்களையும், துரோகம் செய்பவர்களையும் நாம் மன்னிக்கிறபோது அவர்களுக்கு நன்மை நிகழ்கிறது என்றுதான் பொதுவாக என்ணுகிறோம். ஆனால், உண்மையில், மன்னிக்கப்படுபவர்களைவிட, மன்னிப்பவர்களே நன்மை அடைகிறார்கள். மற்றவர்களை மன்னிக்கும்போது நமக்குதான் நன்மைகள் நிகழ்கின்றன 

ஒருவர் செய்த தவறு உங்களை உறுத்துவதால்தான் அவர்மேல் கோபம் வருகிறது. அவரை மன்னிக்கும்போது உங்கள் மனம் லேசாகிறது. உங்கள் புன்னகை, தடையில்லாமல் பொங்குகிறது. கோபத்தில் இருந்த நாட்களைவிட கூடுதலாக வாழ்வில் வளங்களையும் வெற்றிகளையும் நீங்கள் பெறுகிறீர்கள்.
மிகக் கடுமையான விதிமுறைகளோடும் கோபத்தோடும் வாழ்கிற மனிதர்களின் மனதிலிருந்து எழுகிற அலைகள், எல்லோரையும் எட்டி நிற்கச் செய்பவை. உங்கள் மனம் மலர்ந்து, அதில் மன்னிப்பு என்கிற மணம் பரவுகிறபோது, அந்த நறுமணம் அனைவரையும் ஈர்க்கிறது. காரணம் தெரியாமலேயே பலரும் உங்கள்பால் ஈர்க்கப்படுகிறார்கள். அனைவராலும் விரும்பப்படுகிற மனிதராக நீங்கள் ஆகிறீர்கள். 

 

ஒருவரின் தகாத செயல் நடந்து முடிந்து நீண்ட காலம் ஆகியிருக்கலாம். ஆனால் அதுகுறித்த உங்கள் அதிர்ச்சியும், மனப்பொருமலும் தொடர்ந்து கொண்டே போகிறபோது நீங்களே துன்பத்திற்கு ஆளாகிறீர்கள். யாரோ செய்த தவறுக்கு நீங்கள் துன்பம் அனுபவிப்பது என்ன நியாயம்? அந்த மனிதரை மன்னிக்கிறபோது உங்களின் துன்பம் முடிவடைகிறது.

ஒரு சம்பவத்தில் அநியாயமாய் இழைக்கப்பட்ட அவமானம் என்பது, நம்மைப் பொறுத்தவரை ஒரு தகாத தண்டனை. திரும்பத்திரும்ப அந்த நினைவுச் சுழலுக்குள் சிக்கும் போதெல்லாம் நம்மை நாமே தண்டித்துக்கொள்கிறோம். அந்த சம்பவத்தை ஒருபாடமாக மட்டுமே பார்க்கிற பக்குவத்தை வரவழைத்துக் கொள்கிறபோதுதானே அதிலிருந்து அடுத்த கட்டத்தை நோக்கி நகர முடியும். நடந்துமுடிந்த சம்பவத்தை மாற்றமுடியாதே தவிர அடுத்து நாம் செய்வது மிகச்சிறந்த செயலாக அமையவேண்டுமல்லவா. அந்தச் செயல்தான் மன்னிப்பு.

சம்பந்தப்பட்டவரின் முகத்தைப் பார்த்து நீங்கள் உங்கள் மன்னிப்பைப் பிரகடனம் செய்யக்கூடத் தேவையில்லை. மனதுக்குள்ளேயே கூட மன்னிக்கலாம். சிறிது சிறிதாகவும் மன்னிக்கலாம். மனக்கண்முன் அவரைக் கொண்டுவந்து, அவர் செய்த தவறுகளையும் அதனால் உங்களுக்கேற்பட்ட உணர்வுகளையும் மானசீகமாகச் சொல்லி, இந்த சூட்டோடு அவரை மன்னிக்கிறபோது உங்கள் மனம் தெளிவடைகிறது. இதுவரை சுமந்த பாரத்தை இறக்கி வைத்த நிறைவு ஏற்படுகிறது.குழந்தைகளுக்கு சிறு வயதிலேயெ தெரியப்படுத்துங்கள்.வாழ்வில் வெற்றி பெறுவர்.
------------------------------------------------------
http://www.tamilparents.com/2011/08/say-to-sorry.html

No comments:

Post a Comment