Tuesday, November 6, 2012

யுஎஸ் தேர்தல்: எப்படி ஒட்டுப் போடுகிறார்கள்? அதிபரை தேர்வு செய்கிறார்கள்?

வாஷிங்டன்: கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளாக பரபரப்புகளை உருவாக்கி வந்த, உலகத்திலேயே காஸ்ட்லியான அமெரிக்கத் தேர்தல் இன்று முடிவுக்கு வருகிறது. பல மாநிலங்களில் ஏற்கனவே 'முன் வாக்குப் பதிவு' நிறைவு பெற்ற நிலையில், இன்று நாடெங்கிலும் முறைப்படி முழுமையான வாக்குப்பதிவு இந்திய நேரப்படி மாலை ஐந்தரை மணி அளவில் ஆரம்பமாகும்.

தேர்தல் முறை

அமெரிக்க அதிபர் பதவிக்கு நேரடியாக மக்கள் வாக்களித்து தேர்வு செய்கிறார்கள். ஆனாலும் நாடெங்கிலும் யாருக்கு அதிக வாக்குகள் கிடைத்தது என்ற எண்ணிக்கையின் அடிப்படையில் அதிபர் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை.
இந்தியாவில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை மத்திய அரசையும், பிரதமரையும் நிர்ணயிப்பது போல், அமெரிக்காவிலும் ஒவ்வொரு மாநிலத்திற்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் ‘அதிபர் தேர்தல் வாக்குகள்' (electoral votes) என்று இருக்கிறது.
மக்கள் ஆதரவு 50 சதவீத்ததிற்கு அதிகமாக இருந்தால் கூட ‘அதிபர் தேர்தல் வாக்குகளில்' தோல்வியுற்றவர்களும் உண்டு. மக்களின் பாப்புலர் வாக்குகள் கிடைக்காமல்' அதிபர் தேர்தல் வாக்குகளை பெற்று பதவியேற்றவர்களும் உண்டு. 2000ல் ஜார்ஜ் புஷ்க்கு மக்கள் ஆதரவு அல் கோர் ஐ விட குறைவாக இருந்தாலும், அதிபர் வாக்குகள் அதிகம் பெற்று வென்றார்.

அமெரிக்க பாராளுமன்றம்

அமெரிக்க பாராளுமன்றத்திலும் ‘செனட்' மற்றும்' மாநில உறுப்பினர்கள் (US Representatives) என இரு அவைகள் இருக்கின்றன. ஒரு மாநிலத்திற்கு இரு செனட்கள் என்று சரிசமமாக ஐம்பது மாநிலங்களுக்கும் சேர்த்து நூறு செனட் உறுப்பினர்கள். இந்தியாவில் மேலவை உறுப்பினர்களுக்கு சமம் என்று சொல்லலாம். ஆனால் 'செனட்' உறுப்பினர்கள் தேர்தலில் நேரடியாக மக்களால் தேர்வு செய்யப்படுகின்றனர்.
'காங்கிரஸ்மேன்' என்று அழைக்கப்படும் மாநில உறுப்பினர்கள், ஒவ்வொரு மாநிலத்தின் மக்கள் தொகை அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகின்றனர்.

கலிபோர்னியா

உதாரணம்... கலிஃபோர்னியாவுக்கு மக்கள் தொகை அடிப்படையில் 53 காங்கிரஸ்மேன்களும், 2 செனட் உறுப்பினர்களும் உண்டு. இந்திய பாராளுமன்ற மேல்சபை உறுப்பினர்கள் போல், அமெரிக்காவின் இரண்டு சபை உறுப்பினர்களும் சுழற்சி முறையில் ஆனால் நேரடியாக வாக்காளர்களால் தேர்ந்தெடுக்கப் படுகின்றனர்.
அதிபர் தேர்தல் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. கூடவே காங்கிரஸ்மேன் மற்றும் செனட் உறுப்பினர்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையினருக்கும் தேர்தல் நடைபெறும்.
அமெரிக்க மத்திய அரசைப் போலவே ஒவ்வொரு மாநிலத்திலும் ' மாநில செனட்', ‘ மாநில காங்கிரஸ்மேன்கள்' உண்டு. முதல்வருக்கு பதிலாக 'மாநில கவர்னர்' மாநிலத்தை நிர்வகிக்கிறார்.

அதிபர் தேர்தல் வாக்குகள்

காங்கிரஸ்மேன்கள் மற்றும் செனட் உறுப்பினர்களின் கூட்டுத்தொகை எண்ணிக்கை அந்தந்த மாநிலத்தின் 'அதிபர் தேர்தல் வாக்குகள்' என கணக்கிடப்படுகிறது.. ஆக, கலிஃபோர்னியாவுக்கு அதிபர் தேர்தலில் 55 வாக்குகள் உள்ளன. அமெரிக்க மா நிலங்களிலேயே அதிக அதிபர் வாக்குகள் கொண்ட மாநிலமும் கலிஃப்போர்னியா தான்.
பரப்பளவில் மிகப்பெரிய மாநிலமான அலாஸ்காவுக்கு 2 செனட்கள் 1 காங்கிரஸ்மேன் என்று மொத்தம் மூன்று வாக்குகள் தான். இப்படி ஐம்பது மாநிலங்களுக்கும் சேர்த்து மொத்தம் 538 ‘அதிபர் தேர்தல் வாக்குகள்' கணக்கிடப்பட்டுள்ளன.

அமெரிக்க கட்சிகள்

ஒபாமா ஜனநாயகக் கட்சி, ராம்னி குடியரசுக் கட்சி என இரு பெரும் கட்சிகள் சார்பில் போட்டியிடுகின்றனர். இது தவிர லிபேர்டேரியன் பார்ட்டி, க்ரீன் பார்ட்டி என உதிரிக் கட்சிகளும் உண்டு. அவைகள் சார்பாகவும் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். நம்ம ஊர் 'தேர்தல் மன்னன்' மாதிரி தான் அவர்களின் போட்டி.
ஆனாலும் இந்த கட்சிகளின் சார்பில் போட்டியிட்ட 'ரல்ஃப் நடேர்' போன்றவர்கள், சில சமயங்களில் குறிப்பிட்ட மாநிலங்களின் முடிவை மாற்றியமைத்ததும் உண்டு.
ஒவ்வொரு கட்சிக்கும் மாநிலக் கிளைகள் உண்டு, கிட்டத்தட்ட இந்திய கட்சி அமைப்புகள் போலவே அவை செயல்படுகின்றன. ஆனால் ஒரு பதவிக்கு போட்டியிட வேண்டும் என்றால் முதலில் உள்கட்சி தேர்தலில் நின்று வெற்றி பெறவேண்டும். 'காக்கஸ்' என்றும் 'ப்ரைமரி' என்றும் அவை அழைக்கப்படுகின்றன.

வாக்காளர்கள் பதிவு

அமெரிக்க குடியுரிமை பெற்றவர்கள் மட்டுமே தேர்தலில் வாக்களிக்கலாம். முன்னதாக வாக்குரிமை கேட்டு விண்ணப்பம் கொடுத்து பதிவு செய்ய வேண்டும். பெரும்பான்மையான மாநிலங்களில் விண்ணப்பத்தில் எந்த கட்சியை சார்ந்தவர் என்ற விவரத்தையும் சேர்த்துக்கொள்ளலாம்.
அதாவது நான் ஜனநாயக்கட்சி வாக்காளார் அல்லது குடியரசுக் கட்சி வாக்காளர் என்று அடையாளத்துடன் வாக்காளர் விண்ணப்பம் செய்யலாம். யார் யார் வாக்களித்துள்ளார்கள் என்ற விவரத்திலிருந்தே எந்த கட்சிக்கு எத்தனை வாக்குகள் பதிவாகியுள்ளன என்று அறிந்து கொள்ளலாம். சில மாநிலங்களில் கட்சி சார்பு விண்ணப்பங்கள் தடை செய்யப்பட்டுள்ளன.

வாக்குப் பதிவு

தேர்தல் நாளில், இந்தியா போல் விடுமுறை எல்லாம் கிடையாது. அலுவலகத்தில் சில மணி நேரத்திற்கு அனுமதி பெற்றுக்கொண்டு போய் ஓட்டு போட்டுக் கொள்ளலாம். அதனால் ‘ முன் வாக்குப் பதிவு' , ‘தபால் வாக்குகள்' என பிற வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன். மா நிலங்கள்தான் தேர்தலை நடத்தித் தரும். கவுண்டி (தாலுகா போல்) அலுவலகங்களில், மக்கள் தொகைக்கேற்ப வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும்.
சாதாரண வாக்குச்சீட்டு, வாக்கு எந்திரம் என அனைத்து வகை வாக்குச்சீட்டுகளும் அமலில் உள்ளன. அந்தந்த கவுண்டி நிர்வாகத்தைப் பொறுத்து இது அமையும். தேர்தல் முடிந்து வாக்குக்ளை எண்ணி முடிவு தெரிவிக்க வேண்டியது அந்த்ந்த கவுண்டி மற்றும் மாநிலங்களின் பொறுப்பு.


டாஸ்மாக் முதல் மாரிஜூனாவுக்கும் வாக்குச்சீட்டு

அதிபர் தேர்தல் 

டாஸ்மாக் முதல் மாரிஜூனாவுக்கும் வாக்குச்சீட்டு

அதிபர் தேர்தல் என்றதும் வாக்குச்சீட்டி ஒபாமா, ராம்னி பெயர் மட்டுமே இருக்கும், இரண்டில் ஒன்றை டிக் செய்யவேண்டும் என்று நினைத்தால் தவறு. அதிபர் தேர்வு தவிர, செனட், காங்கிரஸ்மேன் தேர்வுக்கும் வாக்குச்சீட்டில் இடம் உண்டு. அது மட்டுமல்ல உள்ளூர் பிரச்சனை முதல் மாநிலப் பிரச்சனை வரை மக்கள் தீர்ப்பு கேட்டு வாக்குச்சீட்டில் கேள்விகள் எழுப்பட்டிருக்கும்.
உங்கள் கவுண்டியில் ஒயின் ஷாப்கள் வேண்டுமா வேண்டாமா போன்ற கேள்விகள் முதல் ‘மாரிஜீனா போதைப்பொருளை சட்டபூர்வமாக அங்கீகரிக்கலாமா', 'ஒரே இனத்தவர் திருமணம் செய்ய தடை வேண்டுமா, வேண்டாமா' போன்ற விவகாரமான கேள்விகளும் இடம்பெறும்.
இந்த கேள்விகள் புதிதாக சட்டம் இயற்றுவதற்காகவும் இருக்கலாம் அல்லது ஏற்கனவே இயற்றப்பட்டுள்ள சட்டத்தை அங்கீகரிக்க அல்லது நிராகரிக்கவும் இருக்கலாம். மொத்தத்தில் ஆள்பவர்களை மட்டுமல்ல, தங்களுக்கு எது தேவை, தேவையில்லை என்பதையும் வாக்குச்சீட்டில் முடிவு செய்யும் உண்மையான ஜனநாயகம் எனலாம்.

அதிபர் வெற்றி எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது?

அதிபர் தேர்தல் வாக்குகள் எண்ணிக்கை ஏற்ப, ஒவ்வொரு கட்சியும் தங்கள் பிரதிநிதிகளை அந்தந்த மாநிலத்தில் ‘அதிபர் தேர்தல் வாக்காளர்கள்' என நியமனம் செய்கிறார்கள். தேர்தல் ஏஜெண்ட் என்று கூட சொல்லலாம்.
ஒரு மாநிலத்தில் எந்த அதிபர் வேட்பாளர் அதிக வாக்குகள் பெறுகிறாரோ, அவர் அந்த மாநிலத்தின் அனைத்து ‘அதிபர் தேர்தல் வாக்குகளையும்' பெறுகிறார். கலிஃபோர்னியாவில் ஒபாமா அதிக வாக்குகள் பெறும் போது 55 வாக்குகள் அவருக்கு கிடைக்கிறது. அவர் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட ‘அதிபர் தேர்தல் வாக்காளார்கள்' அடுத்து நடைபெறும் 'நடைமுறை அதிபர் தேர்தலில்' முறைப்படி அதிபரை தேர்ந்தெடுப்பார்கள் (இந்தியாவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரை தேர்ந்தெடுக்கும் நடைமுறை போல்).

'டை' வந்தால்...

ஒரு வேளை இருவருக்கும் சரிசமமாக 269 வாக்குகள் கிடைத்தால்? 'டை' எனப்படும் சரிசமமான வாக்குகள் கிடைத்தால் எப்படி முடிவு செய்வார்கள்?
காங்கிரஸ்மேன் அதிபரையும், செனட் உறுப்பினர்கள் துணை அதிபரையும் தேர்ந்தெடுப்பார்கள். இந்த தேர்தலில் அப்ப்டி ஒரு 'டை' ஏற்படுவதற்கான நான்கு விதமான வாய்ப்புகள் இருப்பதாகவும் ஒரு சாரார் கருதுகின்றனர்.
ஒருவேளை அப்படி ஏற்பட்டால், குடியரசு கட்சியினர் பெரும்பான்மையினராக இருக்கும் காங்கிரஸ்மேன் ராம்னியை அதிபராகவும், ஜனநாயகக் கட்சி செனட் உறுப்பினர்கள், தற்போதைய துணை அதிபர் பைடன் மீண்டும் துணை அதிபராகவும் தேர்ந்தெடுப்பார்கள்.

வெற்றிக் கணக்கு எப்படி?

தற்போதைய கருத்துக் கணிப்புகளின் படி, கலிஃபோர்னியா (55 வாக்குகள்), நியூயார்க்(29), இலனாய்(20), மிஷிகன்(26) உள்ளிட்ட ஜனநாயகக் கட்சி ஆதரவு மாநிலங்களில் 237 வாக்குகள் ஒபாமாவுக்கு உறுதியாக இருக்கின்றன.
அதேபோல் ராம்னிக்கு டெக்ச்ஸ்(38), ஜார்ஜியா(16), அரிசோனா(11) இன்டியானா(11) உள்ளிட்ட குடியரசுக் கட்சி ஆதரவு மாநிலங்களில் 206 வாக்குகள் உள்ளன. கடந்த முறை ஒபாமா கைப்பற்றிய குடியரசுக் கட்சி மாநிலமான வட கரோலினாவை ராம்னி இப்போது மீட்டுவிட்டார் என்றே சொல்லலாம்.
வெற்றி இலக்கான 270 ஐ தொடுவதற்கு கூடுதலாக, ஒபாமாவுக்கு 33 வாக்குகளும், ராம்னிக்கு 64 வாக்குகளும் தேவை.

ஒபாமா , ராம்னி வெற்றி பெறும் மாநிலங்கள்

கடைசியாக வந்துள்ள கருத்துக் கணிப்புகள், கடும் போட்டி நிலவும் 8 மாநிலங்களில், ஐயோவா(6), விஸ்கான்ஸின்(10) மற்றும் ஒஹயோ(18) ஒபாமாவுக்கு மிகவும் சாதகமான நிலைக்கு திரும்பியுள்ளன என்று தெரிவிக்கின்றன. 4 வாக்குகள் கொண்ட நியூ ஹாம்ஸ்ஷயர் மாநிலமும் ஒபாமா பக்கம் திரும்பியுள்ளது.
இந்த நான்கு மாநிலங்களிலும் வெற்றி பெற்றுவிட்டால், ஒபாமாவே மீண்டும் அதிபர்!
-தமிழ்.ஒன்இந்தியா ஸ்பெஷல்

No comments:

Post a Comment