Tuesday, June 18, 2013

சுத்தம் காத்து சுகாதாரம் பேணுக...!



சுத்தம் பேணுவதில்... இப்போதெல்லாம் எவ்வளவோ முன்னேற்றம் தெரிந்தாலும் இன்னமும் பொது இடங்களில் அதை பலர் பின்பற்றுவதில்லை. பஸ் ஸ்டாண்டில்.... மற்றும் பலர் வந்து போய்கொண்டிருக்கும் இடங்களில்.... வெற்றிலை போட்டு துப்புவதும், மூக்கை சிந்தி போடுவதும்.... நீங்களே மனச தொட்டு சொல்லுங்க... யாராச்சும்... பஸ்ஸ்டாண்ட்ல... பயம் இல்லாம உக்கார முடியுமா?? நடுரோட்டில் நடந்து போகும் போது தான் சிலர்.. காறி துப்புவாங்க.. அதையும்... எதிரில் வரும் சக மனிதனின் மேலே விழுந்து விடுமோன்னு ஒரு அபிப்பிராயம் கூட இல்லாம துப்பிட்டு போய்ட்டே இருப்பாங்க...!

இன்னும் சில பேர்... பஸ்-ல், ரயிலில் போகும் போது ஜன்னல் ஓரமா உக்காந்து கிட்டு... அவுக சாப்பிட்டு முடிச்சதும்... ரெம்ப பொறுமையா... ஜன்னல் வழியா கைய வெளிய விட்டு... எச்சில் கைய கழுவுவாங்க..! அது அடிக்கிற காத்துல.. அடுத்தடுத்த கம்பார்ட்மன்ட்-ல இருக்குற அத்தனை பேருக்கும்.. அபிசேகம் பண்ணி விடும்!





சின்ன விசயங்களில் நாம் கவனம் செலுத்தி வந்தால் பல உபாதைகளில் இருந்து தப்பிக்க முடியும்.. உதாரணமா, என் அப்பா அடிக்கடி சொல்ற விஷயம், குடிக்கும் நீர் தவிர, எது சாப்பிட்டாலும் உடனே வாய் கொப்பளித்து விடுவது.. பற்களில் வரும் பல வித பிரச்சினைகளை சரி செய்து விடும். இன்று வரை, பின்பற்றுகிறேன்.. எந்த விதமான பல் பிரச்சினைகள் இன்றி!

இன்னொரு விஷயம்... நான் சுத்தமாக வெறுப்பது.. திறந்த வெளிகளில்....பஸ் நிறுத்தங்களில் விற்கப்படும் உணவுப் பொருட்களை வாங்கி உண்பது! நீங்க நல்லா கவனிச்சு பாருங்க... வந்து போகிற.. அத்தனை பேருந்தில் இருந்தும் வெளிப்படும்.. புகை எல்லாம் அடிச்சு.. காற்றில் பறக்கும் தூசிகளும் மேலே பட்டு... இதுக்கு மேல வந்து உக்காரும் பூச்சிகள்.. வேறு! தயவு செய்து.. இப்படி திறந்த வெளிகளில் விற்கும் பதார்த்தங்களை வாங்காதீங்க! (இப்போது எவ்வளவோ முன்னேற்றம் இருந்தாலும் இன்னும் சில பேர் இப்படி வெளியே கவனமில்லாது வாங்கி உண்ணத் தான் செய்கிறார்கள்)

எங்கே வெளியூர் சென்றாலும் எளிமையான உணவு பொருட்களை உடன் எடுத்துச் செல்வது நல்லது! ரயில்களில் இடையில் வந்து விற்கப்படும் உணவு பதார்த்தங்களில் சுத்தம் எதிர்பார்க்க முடியாது தான்...! குறிப்பாக எண்ணெய் பலகாரங்கள்... கூடவே கூடாது! அப்படி ஒருவேளை, உங்களுக்கு உணவு எடுத்து வர வசதி படவில்லை என்றால்.. குறைந்த பட்சம்.. பழங்கள்.. பிஸ்கட் இந்த மாதிரி எதாச்சும் சாப்பிடுவது மேல்!

அடுத்து நான் பார்த்து ரொம்ப வருத்தப்படும் விஷயம்... குப்பைத் தொட்டி தவிர எல்லா இடத்திலும் குப்பை எறிதல்! எந்த இடம்ன்னு பாக்கறது இல்லை.. கையில் உள்ள குப்பையை அங்கயே எரிந்து விடும் சிறந்த குணம்...நம்மில் பலருக்கு உண்டு..! வெளி நாடுகளில்.. போயி. அப்படி ரோடுகளில் குப்பை போட முடியுமாங்க? இல்ல.. நீங்க போட்டா தான் சும்மா விட்டுருவாங்களா? பப்ளிக் லிட்டெரிங்..ன்னு சொல்லி.. பைசா வசூல் பண்ணிருவாங்க. (அதாங்க ஃபைன் போட்டிருவாங்க). 




அது ஏன்.. நமக்குன்னு வரும் போது மட்டும் எதையும் ஃபாலோ பண்றதில்லை..! வேதனையான விஷயம் தான்!

நம்ம ஊர்ல பெரியவங்க அப்பவே சொல்லி வச்சிருக்காங்க.. "கந்தை ஆனாலும்... கசக்கிக் கட்டு", "கூழ் ஆனாலும் குளித்துக் குடி..."ன்னு! இதுக்கு விளக்கம்.. ஊருக்கே தெரியும்.. இருந்தாலும் சொல்றேன்.. உடுத்துற துணி கிழிஞ்சு இருந்தா கூட பரவாயில்லை.. ஆனா அழுக்கா இருக்கக் கூடாது.. அதனால சுத்தமா துவைத்து கட்டுன்னு சொல்றாங்க..! அதே போல தான்.. குடிப்பது கஞ்சியோ, கூழோ பரவாயில்லை.. ஆனா அதையும் சுத்தமா குளிச்சிட்டு சாப்பிடுன்னு.. சொல்றாங்க!

சில கடைகளில், டீ கிளாஸ் கழுவுவதைப் பார்க்க நேர்ந்தால்.. ஜென்மத்துக்கும் வெளியில் டீ, காபி குடிக்க மாட்டோம்...! அம்புட்டு சுத்தமா கழுவுவாங்க! ஒரு பக்கெட் தண்ணீர் வைத்து ஓராயிரம் கிளாஸ்.. கழுவி சாதனை புரிவாங்க. சின்ன குழந்தைகளுக்கு இளம் வயதில் இருந்தே... சில விசயங்களை சொல்லிக் கொடுத்தோமானால், காலத்துக்கும் அவங்களுக்கு நன்மையா இருக்கும்.. எப்போ, எங்க வெளில போயிட்டு வந்தாலும் கைய சோப்பு போட்டு கழுவ சொல்றது.... அப்புறம் எந்த பொருள் சாப்பிடறதா இருந்தாலும், கைய சுத்தமா கழுவிட்டு சாப்பிடறது.... காலை எழுந்ததும்..., இரவு படுக்கும் முன்பும்... இரு வேளையும் பல் துலக்குவது... இந்த மாதிரி இப்பவே சொல்லித் தரலாம்!

" நாடு... என் வீடுன்னு" சொல்றோம்.. சொல்றதோட சரி... அதை எத்தனை பேர் செய்றாங்க..?? சொல்றதொட நில்லாமல்.....நம்ம வீட்டை எப்படி பேணி சுத்தமா பாதுகாப்போமோ.. அதே போல நம் நாட்டையும் நினைத்தாலே... சுபீட்சம் அடைய முடியும்!

(பி.கு: திறந்த வெளிகளில், பஸ் நிறுத்தங்களில்.. வியாபாரம் செய்து பிழைக்கும் ஏழை வியாபாரியின் பிழைப்பை கெடுப்பதல்ல என் நோக்கம். அவர்களும், சுத்தமாக வைத்திருந்தால்... அவர்கள் உட்பட... அனைவருக்கும் நலம்)

காசு பணம் ஆயிரம் சம்பாதிச்சு.... என்னங்க புண்ணியம்??? நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்...!!! சுத்தம் பேணி... நம்மைக் காத்து....நம் சுற்றமும் காக்க!!!

=====================
http://anbudanananthi.blogspot.com/2011/10/blog-post_15.html

No comments:

Post a Comment