Saturday, June 22, 2013

பக்கத்து வீடுகள்.....!!!!




நம்மிலும் அதிகமாய் 
நம்மைத்தெரிந்தவர்களாய் 
பக்கத்துவீட்டுக்காரர்களே 
இருக்கிறார்கள்....!!! 

திருமணங்களின் போது 
மணமக்கள் மீதான நம்பிக்கைகளை 
பக்கத்து வீடுகள்தான் தருகின்றன....! 

ஊருக்குள் எது நடந்தாலும்... 
சுவாரசியம் பிசகாமல்; 
சுடச் சுடச்சேதி சொல்வதில்....; 
நாலு சுவருக்குள் முடிந்த 
நம் வீட்டுச் சண்டைகளை.... 
தெருவெல்லாம் நாறடிப்பதில்.... 
பக்கத்துவீடுகள்தான்; 
காலம் காலமாய்... 
முதலிடத்திலிருக்கின்றன...!!! 

''அவன் என்னமா கொழுத்திருக்கான்....'' 
நீயும் இருக்கியே ; ஒல்லிக்குச்சி.....!!'' 
''அவள் என்னமா படிக்கிறாள் '' 
'நீ.......??? கழுத...கழுத....!!!' - என 
வாழ்க்கை நெடிகிலுமான ஒப்பீடுகள் 
பக்கத்துவீட்டோடுதான் 
எப்போதும் நடக்கின்றன....!!! 

கடையைப்புரட்டி... 
காசைக்கொட்டி... 
வாங்கிய சேலை; 
வடிவாய்த்தானிருந்தது....! 
பக்கத்து வீட்டுக்காரியின் 
சேலையைப் பார்க்கும்வரை....!!! 

செத்துப்போனவன்... 
பிணவாடை அடிக்கிறவரை... 
பக்கத்துவீட்டுச் சங்கதிகள்.... 
யாருக்கும் தெரிவதில்லை- மேலை நாடுகளில் !!! 
நம் சின்ன அழுகுரலில் 
ஊரே திரளும்.... 
உதவிக்கு ஓடும் - நமது வீடுகளில்...!!! 

என்ன நடக்குது.... 
யார் வருகிறார்கள்....???? 
ம்ம்...இன்றைக்கு மீன் கறி - என 
பலரின் அகழ்வாராய்ச்சி.. 
பக்கத்து வீடுகளுக்குள்தான.! 

வீட்டோடு உடம்பு ....... 
காதும் கண்களும்; 
அடுத்தவன் வீட்டுக்குள் மேய்ந்தபடி.....! 

எது எப்படியோ; 
எவருக்கும் தெரிவதில்லை...! 
வேடிக்கை எனும் பெயரில் 
இவர்கள் வாழ்ந்து கொண்டிருப்பது 
பக்கத்து வீட்டானின் வாழ்க்கை என....!!!! 
வாழாமலும் ,வளராமலும் 
பாழ்பட்டுக் கிடக்கிறது......... 
இவர்களுக்கான வாழ்க்கை....!!!!


Raheema Faizal

No comments:

Post a Comment