Wednesday, May 22, 2013

அளவற்ற அருளாளன்….


அளவற்ற அருளாளன்…. நிகரற்ற அன்பாளன்..! “அல்லாஹ்வை அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன் என்கிறோம், என்றாலும் மனித மனம் அந்த அளவு என்ன என்று அளந்து பார்க்க முயல்வது இயல்புதானே? அந்த வகையில் உங்கள் விளக்கம் என்ன?” என்று கேட்டார் ஒரு நண்பர். “எந்த அளவு கோலைக்கொண்டு அளந்து பார்க்க நினைக்கிறீர்கள்? மனிதன் படைத்த ஸ்கேல், தராசு இவற்றாலா, அல்லது பிற அளவு கருவிகளைக்கொண்டா?  அவரிடம் திருப்பிக்கேட்டேன். அவர் பதில் பேசாமல் புன்முறுவலோடு என்னைக் கூர்ந்து பார்த்தார்.
பதில் பெறத்துடிக்கும் மாணவனின் துடிப்பையும், கற்றுத்தர முனையும் ஆசிரியரின் உயிர்ப்பையும் ஒருசேர அவரது கண்கள் என்னுள் பாய்ச்சின. என் கிளினிக்கில் ஒரு வாரத்துக்கு முன்பு நிகழ்ந்த உரையாடல் உடனே என் நினைவுக்கு வந்தது.
வெளி நாட்டில் தொழில் புரியும் என் நண்பர் அவர். அவரது மனைவியின் உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து தாயகம் வந்திருந்தார். என் பரிந்துரையில் மதுரை, சென்னை நகரங்களுக்கு விரிவான மருத்துவ ஆய்வுகளுக்கும் சிகிச்சைக்கும் சென்றுவிட்டு இரண்டு மாதங்கள் கழித்து சிறப்பு மருத்துவ நிபுணர்கள் கொடுத்த இரண்டு பெரிய கோப்புகளைச் சுமந்து கொண்டு அவர் வந்திருந்தார். அவரது மனைவிக்கு சிறுநீரக கோளாறு.
இரத்தத்திலிருந்து உடலுக்குத் தேவையற்ற – அப்படித் தேங்கினால், தீமை விழைவிக்கும் நச்சுப்பொருட்களை அப்புறப்படுத்தும் தனது தலையாய பணியிலிருந்து இரண்டு சிறுநீரகங்களும் முற்றிலுமாகத் தவறிவிட்டன. நோயாளி உயிர்வாழ வேண்டுமானால், அந்த நச்சுப்பொருட்களை செயற்கையாக வெளியேற்றியாக வேண்டும்! வாரம் இரு முறை அல்லது மும்முறை!
“ஒரு முறை அப்படி வெளியேற்றும் சிகிச்சை பெறுவதற்கு கிராமத்திலிருந்து அருகிலுள்ள மதுரை நகருக்குச் சென்று வர எவ்வளவு செலவு பிடிக்கலாம்?” – நண்பர் கேட்டார். “டாக்ஸிக்கு , போக வர 1300 – 1500 ரூபாய் ஆகலாம்; சிகிச்சை மற்றும் மருந்துகளுக்கு சுமார் 5000 …. இதர செலவுகள் தேவைக் கேற்ப” – “ஆக, வாரத்துக்கு 10,000 வச்சிருக்கனும்னு சொல்லுங்க” என்றார் நண்பர்.

“ஆம்! கஷ்டம்தான்!…. உங்கள் துணைவியாரின் ஹார்ட் நல்லபடியாக இருக்கிறது. சர்க்கரை கூட கட்டுக்குள் இருக்கிறது. உங்கள் உறவு வட்டத்தில் யாராவது ஒருவர் கிட்னியை ‘தானமாகக் கொடுத்தால், சிறுநீரக மாற்று  அறுவை சிகிச்சை  செய்துவிடலாம்!…. கொஞ்சம் அதிகம் செலவாகும்…. ஆனால், இது ஒரே செலவு…. ஆயுள் முழுக்க செயற்கைச் சிறுநீரகத்தின் மூலம் அழுக்கை அகற்றும் செலவோடு கணக்கிட்டு ஒப்பிட்டால், இது குறைந்த செலவு…. அதே நேரத்தில் சிறப்பான சிகிசசை!… யோசியுங்கள்” என்றேன். அவர் பதில் சொல்லாமல், எதையோ வெறித்தார். மனப்போராட்டத்தை முகம் பிரதிபளித்தது.
இறுக்கமான- தர்ம சங்கடமான நொடிகள் நகர்ந்தன. எப்படி அவருக்கு ஆறுதல் சொல்வது? எங்கிருந்து அதைத் தொடங்குவது? என்று யோசித்துக்கொண்டிருக்கும் போது, “கொஞ்சம் தண்ணீர் குடித்துக் கொள்ளவா?” என்று கேட்டுக்கொண்டு, மேஜை மீது இருந்த தண்ணீரை எடுத்துக் குடிக்க ஆரம்பித்தார்.
அவர் தன் வாய்க்குள் ‘பிஸ்மி’ சொல்வதை நான் கவனித்துவிட்டேன். அவர் தண்ணீர் குடித்து முடிக்கும் வரை காத்திருந்து விட்டு,   “பாய்! என்ன சொல்லி தண்ணீர் குடித்தீர்கள்?” என்றேன். “பிஸ்மி சொல்லி” “அதன் பொருள்?” -  “அளவற்ற அருளாளனும்… நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லஹ்வின் திருப்பெயரால்..” என்றார். “ரொம்ப மகிழ்ச்சி!.. அதை சற்றே திரும்பத் திரும்ப மனதில் கொண்டு வந்து யோசியுங்கள்….. உங்ளுக்குத் தெளிவு கிடைக்கும்… குழப்பம் மறையும்” என்றேன். அவர் புருவத்தை உயர்த்திப் பார்த்தார்.
“பாய்! உங்கள் மனைவிக்கு அவரது கிட்னி பழுது படும் வரை 45 வருடங்களாக ஒழுங்காகவே அது பயன் பட்டிருக்கிறது. அப்பணிக்காக அது ஒரு பைசாக் கூட உங்களிடமிருந்து வசூல் செய்யவில்லை. இல்லையா? இந்தப் பின்னணியில் கொஞ்சம் சிந்தியுங்கள் பாய்!…. இறைவன் நமக்குத் தந்திருக்கிற ஒவ்வொரு உறுப்பின் அருமையும் பெருமையும் அவ்வுருப்பு தன் செயல்திறனை இழக்கும் போதுதான் நமக்குப் புரிகிறது, இல்லையா?” அவர் இமைக்காமல் என்னையே பார்த்துக்கொண்டிருந்தார். ‘சும்மா’ ஒரு கணக்குப் போடுவோம்…. வாரம் 5000….. மாதம் 20,000…ஆண்டுக்கு சுமார் இரண்டரை லட்சம்… ஆக, 45 ஆண்டுகளுக்கு சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்புக்கு இந்த கிட்னி உழைத்து விட்டுத்தான் இப்போது ஓய்ந்திருக்கிறது – ஓய்வு பெற்றிருக்கிறது, இல்லையா? ‘
நண்பர் நிமிர்ந்து உட்கார்ந்தார். அந்த நேரத்தில் நான் அவரிடம் அவ்வளவு நீன்ட உரையாடலை வளர்ப்பதற்கு வேறு ஒரு காரணமும் இருந்தது. அவர் நல்லவர்; இனிய பண்பாளர்.. என்றாலும் வணக்க வழிபாடுகளில்.. … மார்க்க அனுஷ்டானங்களில் எல்லாம் அவ்வளவு செலுத்துபவர் அல்ல. நினைத்தால் தொழுவார். இஸ்லாத்தின் அனைத்து அடிப்படைக் கடமைகள் விஷயத்திலும் பொடுபோக்கானவர்தான். மனைவி, குழந்தைகளையும் கூட அவர் மாதிரியே தான் பழக்கியிருந்தார். நான் பேசப் பேச… நான் என்ன சொல்ல வருகிறேன் என்பதை முற்றிலுமாக  உள்வாங்கிக்கொண்ட  உணர்வை அவரது கண்கள் எனக்கு உணர்த்தி, மேலும் விளக்கமளிக்கும் தேவையை நிறுத்தின.
அவர் ஒரு பெருமூச்சை உதிர்த்துவிட்டுப் பேசத் தொடங்கினார். “யெஸ், டாக்டர்!… யூ ஆர் ரைட்!… ரொம்பச் சரியா சரியான நேரத்துல எனக்குப் பல உண்மைகளை உணர்த்திட்டீங்க.. ” நோ.. நோ! அல்லாஹ் உணர்த்திட்டான் என்று சொல்லுங்க” நான் அவரை அவசரமாகத் திருத்தினேன். அவரே சொன்னார்.” என் மனைவியோட கிட்னி செத்துப் போச்சுங்கறது வாஸ்தவந்தான்…. ஆனா, அவங்களுக்கு சிகிச்சை அளிக்க எனக்குப் பொருளாதார வசதியை அல்லாஹ் கொடுத்திருக்கான்….. அவங்களது ஹார்ட் ஆரோக்கியமானதா இருக்கு… உறவினர்கள் யாரும் கிடைக்கவிட்டாலும்,, காசு கொடுத்து கிட்னி வாங்கி செயற்கையாப் பொருத்திக்க அவகாசத்தையும் அல்லாஹ் தந்திருக்கான்..” ‘ரொம்பச் சரியாச் சொன்னீங்க…..
இந்தப்பின்னது ரொம்ப முக்கியமான விசயம்! எனக்குத் தெரிய எத்தனையோ பேர் காசு வச்சிருந்தும் உடல் நிலை மோசமாய் இருந்ததுனால ஸர்ஜரி பண்ணிக்க முடியாமப் போகுது” ஆமா டாக்டர்.., அல்லாஹ் எங்க மேல தன்னோட அளவு கடந்த பாசத்தைக் காட்டியிருக்கான்…அன்பால போஷிச்சிருக்கான்!……அருள்மழையைப் பொழிங்சிருக்கான்னுதான் சொல்லனும்” அல்ஹம்துலில்லாஹ்! இனிமேல் அவருக்கு உணர்த்த வேன்டியது என்ன பாக்கி?
கேள்வி கேட்ட என் நண்பருக்கு அந்த உரையாடலை விளக்கினேன். அவர் இஸ்லாத்தை அறிய முற்படும் அன்பர். முஸ்லிம்களோடு ஓர் அணுக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருப்பவர். அந்த என் பதிலில் அவர் எந்த அளவுக்கு திருப்தி கண்டார் என்பதை வெளிப்படையாகச் சொல்லவில்லைதான். என்றாலும், பான்டிச்சேரியிலிருந்து தஞ்சாவூர் வரைக்கும் அமைந்த எங்கள் உரையாடல் அவர் அந்த விளக்கத்தை ஏற்றுக்கொண்டார் என்பதை எனக்கு உணர்த்தியது.
********************************
http://chittarkottai.com

No comments:

Post a Comment