Tuesday, December 18, 2012

தலைக்கவசம் மிக மிக அத்தியாவசியத் தேவை


                                         

படித்தவர்களும் சரி, படிக்காதவர்களும் சரி இருசக்கர வாகனங்கள் ஓட்டும் பெரும்பாலானோர் தலைக் கவசம் அணிவதில்லை. இருசக்கர வாகனங்கள் ஓட்டும் அனைவருமே கண்டிப்பாக தலைக் கவசம் அணிய வேண்டும். வேண்டாம் என்போர் ஆயிரம் காரணங்கள் சொல்வர். அறிவுடையோர் ஒவ்வொருவரும் தலைக் கவசத்தின் அவசியத்தை உணர்ந்து மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ள வேண்டும். 


 

                            
தலைக் கவசம் வேண்டாம் என்பதற்கு அவரவர் பல காரணங்களை சொல்கின்றனர். தலைமுடி கலைகிறது. தலையில் வேர்க்கிறது, பின்வரும் வாகனங்களின் ஒலி கேட்கவில்லை, தலை கழுத்து வலிக்கிறது என பல நொண்டிச் சாக்கு காரணங்கள்.
தினம் தினம் நடக்கும் சாலை விபத்துக்களில் தலைக்காயம் ஏற்பட்டு உயிரிழந்த உறவினர், நண்பர்களின் சொந்தங்களே தலைக்கவசத்தின் அவசியத்தை உணர்வதில்லை, தலைவிதியின் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு மீண்டும் தலைக்கவசம் இல்லாமல்தான் வாகனங்கள் ஓட்டுகின்றனர். 


                               

நான் ஓரமாகத்தான் ஓட்டுகிறேன், நிதானமாகத்தான் ஓட்டுகிறேன், மெதுவாகத்தான் ஓட்டுகிறேன் என்றெல்லாம் சொல்லலாம். செல்லும் வழியில் உள்ள சாலைகள், மற்ற ஓட்டுனர்கள், மேடு பள்ளங்கள், வேகத்தடுப்புகள் அனைத்தும் நல்லபடியாக இருக்கவேண்டுமே! 
சிறு கல் தடுக்கிவிடலாம், ஆடு, மாடு, நாய்கள் குறுக்கே வரலாம். திடீர் திருப்பங்கள், சாலையில் எண்ணெய் கசிவுகள், மணல் திட்டு்கள் ஆகியன சறுக்கிவிடலாம். விபத்துகள் நாம் எதிர்பார்த்து வருவதல்ல.

                        
எதிர்பாராமல் கீழே விழும்பொழுது மண்டையோட்டின் ஒரு புள்ளியில் (point) அடிபட்டாலும் கூட சிதறு தேங்காய் போல மண்டையோடு உடைவதுடன், அத்துடன் இணைந்த ரத்த குழாய்களும் தாறுமாறாக கிழிந்து, மூளைப்பகுதிக்குள் ரத்தக்கட்டு பெருகி மூளை செயல்பாட்டை இழந்துவிடும். மூளைச் சாவு ஏற்பட மிகுந்த வாய்ப்புண்டு. 


விபத்து நமக்கு ஏற்படாது, நான் சாக்கிரதையாகத்தான் ஓட்டுகிறேன் என்று அசட்டுத் தைரியம் கூடாது. நம் எதிரிலோ, பின்னாலோ ஓட்டுபவர்களும் அவ்வளவு எச்சரிக்கையாக வருவார்கள் என்பது நிச்சயமல்ல. இன்று வாகனம் ஓட்டும் நிறையப் பேர், மாணவர்களும் சரி, அலுவலகம் செல்வோரும் சரி, மற்ற தொழிலாளிகளும் சரி வேலைக்குப் போகுமுன்பும், வேலை முடிந்து வரும்பொழுதும் மதுவருந்தியே செல்கின்றனர். எனவே தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனங்கள் ஓட்ட எந்த விதமான காரணங்களோ, சால்ஜாப்புகளோ சொல்லக் கூடாது. 


 

           
விபத்தினால் ஏற்படும் இறப்பைத் தடுக்க இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம் மிக மிக அத்தியாவசியத் தேவை. நாம் ஆரோக்கியமுடன் வாழ 'தலைமுடியா, உயிரா' என்பதை நாம் அனைவரும் சிந்தித்துச் செயல்பட வேண்டும்.

No comments:

Post a Comment