Wednesday, December 26, 2012

ஒரு ஆசிரியை மனது வைத்தால்.......

ஒரு ஆசிரியை மனது வைத்தால்... மெட்ரிக்குலேஷன் பள்ளியை மிஞ்சும் அரசுப் பள்ளி!
 

                        



தொடக்கக்கல்வி ஆசிரியர்களான எங்களுக்கு, ஒவ்வொரு மாணவனின் வாழ்க்கையிலும் ' சுழி!' போட்டுவிட்ட திருப்தி வாழ்க்கை முழுவதும் இருக்கும். எங்களோட மாணவர்கள் எல்லாம் எதிர்காலத்துல பெரிய ஆட்களா வரும்போது, அவங்க ஏணியோட முதல் படியா நாங்க இருந்தோம்ங்கற சந்தோஷம், ரொம்ப அற்புதமானது இல்லையா?!"

- வார்த்தைகள் மிக அழகாகவும், கம்பீரமாகவும் ஒலிக்கின்றன சரஸ்வதியிடமிருந்து!

தமிழ்நாடு திண்டுக்கல் மாவட்டம், பழநியிலிருந்து ஏழு கிலோ மீட்டர் தொலைவிலிருக்கும் மானூர் ஊராட்சி தொடக்கப்பள்ளியின் தலைமையாசிரியை சரஸ்வதி. தான் இந்தப் பள்ளிக்கு மாற்றலாகி வந்த ஐந்தே வருடங்களில், மாவட்டத்தின் 'சிறந்த தொடக்கப்பள்ளி'யாக தனது பள்ளியைத் தரம் உயர்த்தியவர். அதற்கு அங்கீகாரமாக, பழனி கல்வி மாவட்டத்தின் தொடக்கல்வித் துறை, மாவட்டத்தின் '2010-11 கல்வியாண்டின் சிறந்த தொடக்கப்பள்ளி'க்கான அரசு விருதுக்காக பரிந்துரைத்துள்ளது. கூடவே, மாவட்டத்திலுள்ள அனைத்து ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளும், தங்களின் பயிற்சி பட்டறைக்காக இந்தப் பள்ளியையே நாடுகின்றன.

                             
'ஏய் வாத்திம்மா... எங்களையே அடிக்க வர்றியா...' என்று குருவுக்கான மரியாதையைக்கூட கொடுக்கத் தெரியாத முரட்டு கிராமப்புற மாணவர்கள்... சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களில் சமூக விரோத கூடாரமாகிப் போகும் பள்ளி... 'இந்த ஸ்கூலெல்லாம் லாயக்கில்ல... இங்கிலீசு மீடியத்துக்கு அனுப்புவோம்...' என்ற பெற்றோர்களின் மனநிலை... இத்தகைய சூழலில் இங்கே பொறுப்பேற்ற சரஸ்வதி, அத்தனைக்கும் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

"என்னோட பணிபுரியற ஆசிரியைகளும், ஆசிரியரும் இணைந்து செயல்பட்டதுக்கான பலன் இது!" என்று எல்லோருக்குமான அங்கீகாரத்தோடு ஆரம்பித்த சரஸ்வதி,

"2005-ம் வருஷம் இங்கே வந்தேன். விடுமுறை தினங்கள்ல வகுப்பறைகளை சமூகவிரோதிகள் பயன்படுத்திக்கிட்டிருந்தாங்க. பொருட்களும் திருட்டுப் போயிக்கிட்டிருந்துது. ஆசிரியர்கள், ஊர் மக்கள், பஞ்சாயத்து தலைவர்னு எல்லாரும் ஒண்ணு சேர்ந்து அதை எல்லாம் சரி செஞ்சோம்.



                                           
அடுத்ததா, மாணவர்கள் பக்கம் கவனத்தை திருப்பினோம். 'டிரெஸ்'கூட சரியா போட்டுட்டு வராத நிலைமையில இருந்தவங்ககிட்ட, பள்ளி பத்தின மரியாதையான, ஆர்வமான பிம்பத்தை ஏற்படுத்தினோம். 'நல்லா படிக்கணும், ஆசிரியர்களை மதிக்கணும்'ங்கற அடிப்படை புரிதலை அவங்களுக்கு ஏற்படுத்தவே ரொம்ப மெனக்கெட வேண்டி இருந்தது.

அடுத்தக் கட்டமா, யூனிஃபார்ம் கலர், டிசைன் இதையெல்லாம் கல்வித்துறை ஒப்புதலோடு மாத்தினோம். ஒரு கட்டத்துல, மாணவர்கள் எங்க வட்டத்துக்குள்ள வந்தாங்க, வளர்ந்தாங்க. இப்போ அதுக்கான பலனை மனதார உணர்றோம்" என்று பூரித்த சரஸ்வதி, பள்ளியின் செயல்வழிக் கற்றல் (ஏ.பி.எல்) முறை வகுப்புகளுக்கு நம்மை அழைத்துச் சென்றார்.

ஒவ்வொரு வகுப்புக்கும் வெளியேயும் மாணவர்கள் வரிசைப்படுத்தி அடுக்கியிருந்த ஸ்கூல் பேக்குகளும், காலணிகளும் அவ்வளவு நேர்த்தி! பள்ளி வளாகத்தில் எங்குமே குப்பைகளைக் காணமுடியவில்லை. எல்லாவற்றையும்விட ஹைலைட்... பள்ளியில் அவர்கள் நடத்தும் 'மாதிரி அமைச்சரவை'!

"எங்க பள்ளியில ஒவ்வொரு ஆசிரியையும் ஒவ்வொரு துறைக்கு 'அமைச்சரா' பொறுப்பேற்று வேலைகளைப் பகிர்ந்துக்கறோம். துறை சார்ந்த விஷயங்களை மாணவர்களோட மனசுலயும் பசுமரத்தாணி போல பதிய வைக்கிறோம்" என்றபடியே, "சுகாதாரத்துறை 'அமைச்சர்' ரேணுகா, சுகாதாரத்துறை 'இணை அமைச்சர்' சுகன்யாதேவி, வெளியுறவுத்துறை மற்றும் மின்துறை 'அமைச்சர்' கதிரவன், உணவுத்துறை 'அமைச்சர்' விஜயராணி, நீர்வளத்துறை 'அமைச்சர்' ரஸியா பேகம், விளையாட்டு மற்றும் நூலகத் துறை 'அமைச்சர்' சுமதி, பாதுகாப்புத்துறை 'அமைச்சர்' சாரதா, தோட்டக் கலைத் துறை 'அமைச்சர்' ஈஸ்வரி" என்று 'அமைச்சர்'களை நமக்கு அறிமுகப்படுத்தினார் சரஸ்வதி.

அவரைத் தொடர்ந்த சுகாதாரத்துறை 'இணை அமைச்சர்' சுகன்யாதேவி, "தர்மபுரி மாவட்டம், பெண்ணாகரம் யூனியன்ல இருக்கற மலை கிராமமான மழையூர்ல ஈராசிரியர் பள்ளியில வேலை பார்த்தவ நான். அதனால பின் தங்கின கிராமத்துப் பள்ளிகளோட நிலைமை எனக்கு ஏற்கெனவே பரிச்சயம். 'இதை எல்லாம் எப்படி சரிசெய்யப் போறோம்?'ங்கற மலைப்பு இல்லாம, முழு மனசோட அதுக்கான வேலைகள்ல என்னையும் இணைச்சுக்கிட்டேன்.

தமிழ் எழுத்துக்களையே சரியா எழுத தெரியாத நிலையில இருந்த பிள்ளைங்க, இன்னிக்கு ஆங்கில அறிவுலயும் சிறந்து விளங்கறதப் பார்க்கும்போது, ரொம்ப பெருமையா இருக்கு. எங்க ஹெச்.எம். வேலை நாட்கள்ல தினமும் மதியம் 1 - 2 மணி மற்றும், மாலை 4.30 - 5.30 மணிக்கு 'ஸ்போக்கன் இங்கிலீஷ்' வகுப்புகளை எடுக்கறாங்க. அதனால்தான் ஒரு 'மெட்ரிக்' பள்ளியோட தரத்தை எங்க பள்ளியில் கொண்டுவர முடிஞ்சுது!" என்று பெருமையோடு சொன்னார்.

இங்கே படிக்கும் மாணவர்களின் படிப்பு நின்று போவதற்கு, பொருளாதாரம் ஒரு தடையாக இருந்துவிடக் கூடாது என்பதற்காக அக்கறையோடு பல ஏற்பாடுகளை செய்திருக்கிறார் சரஸ்வதி. அதில் ஒன்று... வசதி, வாய்ப்புகளோடு இருக்கும் பழைய மாணவர்களை சேர்த்துக் கொண்டது. அந்த வகையில் இன்றைய மாணவர்களுக்கு இலவசமாக நோட்டு, புத்தகங்கள் வழங்கி வருகிறார் பழைய மாணவர் செந்தில்.

"இருபது வருஷத்துக்கு முன்ன இந்த ஸ்கூல்ல படிச்சேன். அன்னிக்கு ஸ்கூலோட நிலைமை ரொம்பவே மோசம். இப்போ ஆசிரியர்களால அங்க மிகப் பெரிய மாற்றங்கள் நடந்திருக்கு. அந்த சந்தோஷத்துல நானும் பங்கெடுத்துக்க என்னால ஆன பொருளாதார உதவிகளைச் செய்றேன்..." என்றார் செந்தில் அடக்கமான வார்த்தைகளில்.

மெட்ரிக்குலேஷன் பள்ளியிலிருந்து இடம் மாறி இங்கே சேர்ந்திருப்பவர்களில் ஒருவர் சாராதஸ்ரீன். அவருடைய தந்தை சம்சுதீன் நம்மிடம், "எங்க பூர்வீகமே இந்த ஊர்தான். பத்து பதினைஞ்சு வருஷத்துக்கு முன்ன இருந்ததைவிட இப்ப இந்த ஸ்கூல் நல்லாயிருக்கு. அதனாலதான் 'மெட்ரிக்' ஸ்கூல்ல படிச்சுட்டிருந்த எம்பொண்ண, இந்த ஸ்கூல்ல சேர்த்தோம்" என்று சொன்னார்.

மொத்தம் 345 மாணவ, மாணவியர் இங்கே படிக்கிறார்கள். "எங்க ஸ்கூல் சூப்பர் ஸ்கூல்தானே!" என்று அவர்கள் கேட்பதைப் போலவே...  அனைத்து பள்ளி மாணவர்களும் கேட்க முடியாதா என்ன? என்ன, 




அவள் விகடன் 28-ஜனவரி-2011

No comments:

Post a Comment