Wednesday, October 31, 2012

இதயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் செயல்கள்!!


இன்றைய காலத்தில் இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதிலும் ஒவ்வொரு வருடமும் இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை கணக்கிடும் போது, ஒவ்வொரு வருடமும் அவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இவ்வாறு இதய நோயால் அதிகம் பாதிக்கப்படுவதற்கு பெரும் காரணம் வாழ்க்கை முறை தான். எப்படியெனில் தற்போது நன்கு வசதியான வாழ்க்கை வேண்டுமென்பதற்காக பெரிய பெரிய கம்பெனிகளில் வேலைக்கு சேருகிறோம். அவ்வாறு சேருவதால், அங்கு கைநிறைய பணம் கிடைப்பதோடு, மனம் நிறைய அழுத்தமும், இறுக்கம் போன்றவையும் எளிதில் கிடைக்கிறது.
மேலும் கைநிறைய பணம் கிடைப்பதால் அந்த பணத்தை வைத்து, ஆடம்பரமாக வாழ்கின்றோம் என்பதை வெளிப்படுத்துவதற்கு, ஹோட்டல்களில் ஆரோக்கியமற்ற உணவுகளை வாங்கி சாப்பிடுவது, புதிய கலாச்சாரம் என்று பார்ட்டி ஏதேனும் நடந்தால் சிகரெட், மது போன்றவற்றை குடிப்பது, மற்றும் அதிக அளவில் உண்பதால் உடல் பருமன் அதிகரிப்பது, உடலில் சோம்பேறித்தனம் குடிப்புகுந்து உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது போன்ற காரணங்கள் உடலில் வராத நோயையும் காசை கொடுத்து வரவழைத்துக் கொள்கிறோம்.
அது போன்ற ஒரு சில செயல்களால் இதயம் அதிக அளவில் பாதிக்கப்பட்டு, நாளடைவில் மரணத்தை எதிர்கொள்கிறோம். ஆகவே இத்தகைய கொடுமையான செயல் நடைபெறாமல் இருப்பதற்கு, நாம் அன்றாடம் செய்யும் ஒரு சில பழக்கவழக்கங்களை மாற்றிக் கொண்டால், உடல் ஆரோக்கியத்துடன், இதயமும் ஆரோக்கியத்துடன் இருக்கும். இப்போது அந்த பழக்கவழக்கங்கள் என்னவென்று பார்ப்போமா!!!

புகைப்பிடித்தல்

ஒரு நாளைக்கு ஒரு சிகரெட் பிடிப்பது என்பது, இதயம் இரு மடங்கு அதிகமாக பாதிக்கப்படுகிறது என்பதற்கு அறிகுறி. மேலும் இந்த சிகரெட் இதயத்தில் நோயை ஏற்படுத்துவதோடு, புற்றுநோய் மற்றும் பல நுரையீரல்களில் நோய்களையும் ஏற்படுத்தும். ஆகவே இவற்றை தவிர்ப்பது நல்லது.

அதிக உணவு

உடல் பருமன் இதயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஏனெனில் உடல் பருமன் அடைவதற்கு அதிகமான அளவில் சர்க்கரை உள்ள உணவுகள், கலோரிகள் நிறைந்த உணவுகளை உண்பது மற்றும் உடற்பயிற்சி இல்லாதது பெரும் காரணமாகும். ஆகவே குறைவான அளவில் உணவை உண்டால், இதயத்தை ஆரோக்கியத்துடன் வைக்கலாம்.

பற்களின் ஆரோக்கியம்

பற்கள் ஆரோக்கியமற்று இருந்தால், சுவாசிக்கும் போது அசுத்தக் காற்றையே சுவாசிக்க முடியும். இதனால் அந்த அசுத்தக் காற்று இதயத்தில் ஒருவித அடைப்பை ஏற்படுத்தும். எப்படியென்று கேட்கிறீர்களா? ஏனெனில் ஈறுகளில் உள்ள பாக்டீரியாக்கள் இரத்த குழாய்களின் வழியே சென்று, சீரான இரத்த ஓட்டத்தை தடை செய்கிறது. இதனால் இதய ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது.

உடற்பயிற்சி

உடற்பயிற்சி இதயத்திற்கு ஆரோக்கியத்தை தான் தரும். ஆனால் அந்த உடற்பயிற்சியே அளவுக்கு அதிகமானால், இதயத்திற்கு அதிக அழத்தம் ஏற்பட்டு, மயக்கம் அல்லது சோர்வு போன்றவற்றை ஏற்படுத்தும். ஆகவே உடற்பயிற்சியை அளவோடு செய்தால், இதய ஆரோக்கியத்தை நீட்டிக்க முடியும்.

குறட்டை

தற்போது குறட்டை இல்லாமல் தூங்குபவர்களை காண முடியாது. அவ்வாறு தூங்கம் போது குறட்டை விடுபவர்களுக்கு, இதயத்தில் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஏனெனில் தூங்கும் போது குறட்டை விடுவதால், உடலில் இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. ஆகவே அந்த இரத்த அழுத்தத்தால் இதயம் பாதிக்கப்படுகிறது

மனஅழுத்தம்

இன்றைய காலத்தில் அனைவருமே ஒரு சில காரணங்களால் மன அழுத்தம், மன தளர்ச்சி, மன இறுக்கம் போன்றவற்றிற்கு ஆளாகின்றோம். இத்தகையவற்றில் இருந்து வெளிவருவது என்பது எளிதானது அல்ல. ஆனால் இவ்வாறு இருந்தால், இதயம் பெரிதும் பாதிக்கப்பட்டு, அதன் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.

தூக்கம்

ஒருவருக்கு தூக்கம் ஐந்து மணிநேரத்திற்கு குறைவாகவும், ஒன்பது மணிநேரத்திற்கு அதிகமாகவும் இருந்தால், உடலில் இரத்த அழுத்தம் மற்றும் மன அழுத்தம் அதிகரிக்கும். மேலும் இது கரோனரி நோயை அதிக அளவில் ஏற்படுத்தும் வாய்ப்பும் உள்ளது.

சோடா

அதிக வெயிலின் காரணமாக, அந்த வெயிலின் வெப்பத்தை தணிப்பதற்கு சோடாவை வாங்கி குடிப்போம். ஆனால் இவ்வாறு குடிப்பது இதயத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். அதிலும் இந்த சோடாவை தொடர்ந்து குடித்து வந்தால், பக்கவாதம் மற்றும் இதயத்தில் பல நோய்களை ஏற்படும்.

அதிகமாக டிவி பார்ப்பது

டிவியின் முன்பு அதிக நேரம் இருந்தால், இதயம் பெரிதும் பாதிக்கப்படும் என்று அமெரிக்கன் கல்லூரியில் நடந்த ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதிலும் ஒரு நாளைக்கு 4 மணிநேரத்திற்கு மேல் டிவியைப் பார்த்தால், பக்கவாதம் அல்லது இதயத்தில் அடைப்பு போன்றவை ஏற்படும் வாய்ப்பு அதிகரிப்பதோடு, விரைவில் மரணத்தையும் ஏற்படுத்தும் என்றும் கூறுகிறது.

No comments:

Post a Comment